18-12-2020 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
இனிய குழந்தைகளே, ஒவ்வொரு நாளும் ஞானக்கடலைக் கடைந்தால் உங்கள் சந்தோஷத்தின் அளவு அதிகரிக்கும். நடந்து திரியும் போதெல்லாம் நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் என்பதை நினைவுசெய்யுங்கள். கேள்வி: சுய-முன்னேற்றமடைவதற்கான இலகுவான வழி என்ன? பதில்: சுய-முன்னேற்றமடைய நாளாந்த அட்டவணையை வைத்திருங்கள். உங்களை சோதித்துப் பாருங்கள்: நாள் முழுவதும் நான் ஏதேனும் அசுரத்தனமான செயல்களைச் செய்தேனா? மாணவர்கள் பதிவேட்டை வைத்திருப்பதைப் போன்று, உங்கள் தெய்வீகக் குணங்களுக்கான பதிவேட்டை குழந்தைகளாகிய நீங்கள் வைத்திருந்தால் தொடர்ந்தும் சுயமுன்னேற்றம் அடைவீர்கள். பாடல்: தொலைதூரவாசி அந்நிய தேசத்திற்கு வந்துள்ளார்….. ஓம் சாந்தி. தொலைதூர தேசம் எதுவென்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வெளி உலகில் உள்ள எந்த ஒரு மனிதருக்கும் இது தெரியாது. ஒருவர் எவ்வளவு பெரிய புத்திஜீவியாகவோ அல்லது பண்டிதராகவோ இருப்பினும், இதன் அர்த்தம் அவருக்குத் தெரியாது. கடவுள் என மக்களால் நினைவுகூரப்படும் தந்தை, நிச்சயமாக மேலே, அசரீர உலகில் உள்ளார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். வேறு எவருக்கும் இது தெரியாது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த நாடகத்தின் இரகசியத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆரம்பம் முதல் நடந்தவை அனைத்தும், இனி நடக்க இருப்பவை அனைத்தும் உங்கள் புத்திகளில் உள்ளது. இந்த உலகச் சக்கரம் எவ்வாறு தொடர்ந்தும் சுழல்கின்றது என்பதன் ஞானத்தை உங்கள் புத்திகளில் வைத்திருக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்கள் மத்தியில், நீங்கள் அனைவரும் வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கின்றீர்கள். ஞானக்கடலை நீங்கள் கடையாததால், உங்கள் சந்தோஷத்தின் அளவு உயர்வதில்லை. நீங்கள் அமர்ந்திருக்கும் போதும், நடக்கும் போதும், நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகள் என்பதை உங்கள் புத்திகள் நினைவுசெய்ய வேண்டும். ஆத்மாவாகிய நான், உலக சக்கரத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அறிவேன். நீங்கள் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள், ஆனால் உங்கள் புத்தி அசரீர உலகை நினைவுசெய்கின்றது. அதுவே ஆத்மாக்கள் வாழும் மௌனதாமமும், நிர்வாணாவுமான இனிய மௌன வீடாகும். குழந்தைகளாகிய உங்கள் புத்திகளில் இது மிக விரைவாக புகுகின்றது. வேறு எவருக்கும் இது தெரியாது. அவர்கள் பல சமயநூல்களை கற்று, செவிமடுத்த போதிலும் அவர்கள் அவற்றிலிருந்து சற்றேனும் நன்மையடைவதில்லை. அவை அனைத்தும் இறங்கும் பாதையை சேர்ந்தவையாகும். ஆனால் நீங்களோ இப்பொழுது மேலே ஏறுகின்றீர்கள். நீங்கள் வீடு திரும்புவதற்கான ஆயத்தங்களை செய்கின்றீர்கள். நாங்கள் இப் பழைய ஆடைகளை விட்டு விட்டு, வீடு திரும்ப வேண்டும். இதில் சந்தோஷம் உள்ளது. அரைக்கல்பமாக நீங்கள் வீடு திரும்புவதற்காவே பக்தி செய்தீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழே இறங்கிக் கொண்டிருந்தீர்கள். பாபா இப்பொழுது அனைத்தையும் மிகவும் இலகுவாக விளங்கப்படுத்துகின்றார். தந்தையான கடவுளே, உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற சந்தோஷத்தை குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இதனையிட்டு நீங்கள் மிகவும் சந்தோஷம் அடைய வேண்டும். தந்தை தனிப்பட்டமுறையில் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அனைவரதும் தந்தையான பாபா இப்பொழுது எங்களுக்கு மீண்டும் ஒருமுறை கற்பிக்கின்றார். அவர் எங்களுக்கு பல தடவைகள் கற்பித்துள்ளார். நீங்கள் முழு சக்கரத்தையும் சுற்றிய பின்னரே தந்தை வருகின்றார். தற்போது, நீங்கள் சுய தரிசன சக்கரதாரிகள் ஆவீர்கள். நீங்கள் விஷ்ணுதாமத்தின் தேவர்கள் ஆகுவதற்காக முயற்சி செய்கின்றீர்கள். உலகிலுள்ள வேறு எவராலும் உங்களுக்கு இந்த ஞானத்தை வழங்க முடியாது. சிவபாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும்! சமயநூல்கள் போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தை சேர்ந்தவை என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவை சற்கதிக்கானவை அல்ல. பக்தி மார்க்கத்தின் சம்பிரதாயங்களும் தேவையாகும். அளவயற்ற சம்பிரதாயங்கள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: நீங்கள் அவை அனைத்தினூடாகவும் தொடர்ந்தும் கீழேயே இறங்கிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் நீண்ட காலமாக சுற்றி அலைந்து திரிந்தீர்கள், இப்பொழுது மௌனமாக இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். இப்பொழுது உங்கள் அலைந்து திரிதல் அனைத்தும் முடிவடைந்துள்ளது. உங்களைத் தூய்மையாக்குவதற்கு இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு இதனை செய்வதற்கான வழியைக் காட்டுகின்றார். அவர் கூறுகின்றார்: என்னை நினைவுசெய்தால் நீங்கள் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுவீர்கள். அதன் பின்னர் நீங்கள் சதோபிரதான் உலகிற்குச் சென்று ஆட்சி செய்வீர்கள். தந்தை இந்தப் பாதையை ஒவ்வொரு கல்பமும், பல தடவைகள் உங்களுக்குக் காட்டியுள்ளார். உங்கள் சொந்த ஸ்திதியையும் நீங்கள் சோதித்து பார்க்க வேண்டும். மாணவர்கள் தம்மை திறமைசாலிகள் ஆக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள். அவர்கள் தமது கற்றலுக்கும், தமது நடத்தைக்குமான பதிவேடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். இங்கும், நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். உங்களையிட்டு நீங்கள் ஒரு நாளாந்த அட்டவணையை வைத்திருக்கும் போது, நீங்கள் அதிகளவு சுயமுன்னேற்றத்தைக் காண்பீர்கள். நான் இன்று ஏதேனும் அசுர செயற்பாடுகளைச் செய்தேனா? நான் ஒரு தேவன் ஆக வேண்டும். இலக்ஷ்மி நாராயணனுடைய படங்கள் உங்கள் முன்னிலையில் உள்ளன. அது மிகவும் எளிமையாதொரு படமாகும்! சிவபாபா ஆக உச்சியில் உள்ளார். அவர் பிரஜாபிதா பிரம்மாவின் ஊடாக உங்களுக்கு இந்த ஆஸ்தியை வழங்குவதால், சங்கமயுகத்தில் நிச்சயமாக பிராமணர்கள் இருக்க வேண்டும். தேவர்கள் சத்தியயுகத்தில் வாழ்கின்றார்கள், பிராமணர்கள் சங்கமயுகத்தில் வாழ்கின்றார்கள். சூத்திர குலத்தைச் சேர்ந்தவர்கள் கலியுகத்தில் வாழ்கின்றார்கள். பல்-ரூப வடிவத்தை உங்கள் புத்திகளில் நீங்கள் வைத்திருக்க வேண்டும். நாங்கள் இப்பொழுது உச்சி குடுமிகளான பிராமணர்கள். அதன் பின்னர் நாங்கள் தேவர்கள் ஆகுவோம். தந்தை பிராமணர்களாகிய எங்களைத் தேவர்கள் ஆகுவதற்காகக் கற்பிக்கின்றார்;. ஆகையால், நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். உங்கள் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் ஏதேனும் ஒரு தொழிலை செய்வதைப் போன்றே இங்கும் நீங்கள் யக்ஞத்திற்காக சேவை செய்ய வேண்டும். ஒருவர் சுகயீனமடைந்து, எந்தச் சேவையும் செய்ய முடியாதிருக்கும் போது, ஏனையோர் அவருக்கு சேவை செய்ய வேண்டும். ஒருவர் சுகயீனமடைந்து சரீரத்தை நீங்கிச் செல்லும் போது, அதற்காகத் துன்பப்பட்டு, அழுவதற்கான கேள்விக்கு இடமில்லை. நீங்கள் பாபாவின் நினைவில், முற்றிலும் மௌனமாக இருக்க வேண்டும். எந்தச் சப்தமும் இருக்கக்கூடாது. சடலத்தை அவர்கள் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது, ‘இராம நாமத்தையுடைவர் உங்களுடன் இருக்கின்றார்’ என அவர்கள் பெரும் சப்தமிடுகின்றார்கள். நீங்கள் எதனையும் கூறத் தேவையில்லை. நீங்கள் மௌனத்தின் மூலம் உலகத்தை வெற்றி கொள்கின்றீர்கள். அவர்களுடையது விஞ்ஞானம் ஆனால் உங்களுடையது மௌனமாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு கியானினதும் விக்கியானினதும் சரியான அர்த்தம் தெரியும். கியான் என்பது புரிந்து கொள்ளுதல், விக்கியான் என்றால் அனைத்தையும் மறப்பது, அதாவது ஞானத்திற்கும் அப்பால் செல்லுதல் ஆகும். ஆகையால் கியானும் (ஞானம்) அத்துடன் விக்கியானும் உள்ளது. நீங்கள் மௌனதாம வாசிகள் என்பதை ஆத்மாக்களாகிய நீங்கள் அறிவீர்கள். அத்துடன், ஞானமும் உள்ளது. நீங்கள் ரூப்பும் பசான்ட்டும் (ஞான இரத்தினங்களை பொழிகின்ற மௌன சொரூபங்கள்) ஆவீர்கள். பாபாவும் ரூப்பும் பசான்ட்டும் ஆவார். அவர் ரூப்பும், அத்துடன் அவரிடம் உலகசக்கரத்தின் முழு ஞானமும் உள்ளது. அவர்கள் ஒரு கட்டடத்திற்கு ‘விக்கியான் பவன்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தை முற்றிலும் புரிந்து கொள்ளாதிருக்கின்றார்கள். இக்காலத்தில், விஞ்ஞானம் துன்பத்துடன் சந்தோஷத்தையும் விளைவிக்கின்றது. அங்கே, சந்தோஷம், சந்தோஷம் மாத்திரமே உள்ளது. இங்கே, சந்தோஷம் தற்காலிகமானது. ஏனைய அனைத்தும் துன்பம், துன்பம் மாத்திரமே உள்ளது. மக்கள் தமது சொந்த வீடுகளில் சந்தோஷமற்றிருக்கின்றார்கள். எவ்வளவு விரைவில் தாம் மரணிப்போமோ, அந்தளவு விரைவாக தாம் இந்தத் துன்ப உலகில் இருந்து விடுதலை அடைய முடியும் என உணர்கின்றார்கள். பாபா உங்களை சுவர்க்க வாசிகள் ஆக்குவதற்கே வந்துள்ளார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குள் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். பாபா ஒவ்வொரு கல்பமும் எங்களை சுவர்க்க வாசிகள் ஆக்குவதற்காக வருகின்றார். ஆகையால், நீங்கள் நிச்சயமாக அத்தகைய தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். நீங்கள் இல்லறத்தில் வாழும் போது தூய்மை ஆகுங்கள். நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள் ஆவோம். இது அன்பான உறவுமுறையாகும். வேறு எவ்வகையான பார்வையும் இருக்கக் கூடாது. ஒவ்வொருவரின் சுகயீனமும், அந்த ஆத்மாவிற்கு ஏற்ப தனித்துவமாக உள்ளது. ஆகையால், அதற்கேற்பவே ஒவ்வொருவரும் ஆலோசனையைப் பெறுகின்றார்கள். சிலர் வினவுகின்றார்கள்: பாபா, இன்ன இன்ன சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்வது? பாபா விளங்கப்படுத்துகின்றார்: ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையேயான பார்வை என்றுமே தீயதாக இருக்கக் கூடாது. எந்தச் சண்டையும் இடம்பெறக்கூடாது. நான் ஆத்மாக்களான உங்களுடைய தந்தையாவேன். சிவபாபா பிரம்மாவின் சரீரத்தினூடாகப் பேசுகின்றார். ஆகையால், பிரஜாபிதா பிரம்மா சிவபாபாவின் மகனாவார். அவர் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்கின்றார். விஷ்ணு சத்தியயுகத்தைச் சேர்ந்தவர். தந்தை கூறுகின்றார்: உலகை புதிதாக ஆக்குவதற்காகவே நான் வந்து இவருக்குள் பிரவேசித்துள்ளேன். பாபா வினவுகின்றார்: நீங்கள் உலக சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி ஆகுவீர்களா? ‘ஆம் பாபா, ஏன் முடியாது?’ ஆம், ஆனால் நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். இது மிகவும் கடினமாகும். ஓ! ஆனால் கடவுள் உலக அதிபதிகளாக உங்களை ஆக்குகின்றார்! உங்களால் தூய்மையாக இருக்க முடியாதா? உங்களையிட்டு நீங்கள் வெட்கப்படவில்லையா? உங்கள் லௌகீகத் தந்தையுமே, எந்த தீய செயல்களையும் செய்யாதீர்கள் என்றே உங்களிடம் கூறுகின்றார். அந்த விகாரத்தினாலேயே தடைகள் ஏற்படுகின்றன. ஆரம்பம் முதல், விகாரத்தினாலேயே அத்தனை குழப்பங்களும் இருந்தன. தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, அந்த விகாரத்தை நீங்கள் வெற்றிகொள்ள வேண்டும். நான் உங்களைத் தூய்மையாக்கவே வந்துள்ளேன். ஏதேனும் ஒன்று சரியா, பிழையா அல்லது நல்லதா, கெட்டதா என்பதை நீங்களே தீர்மானிப்பதற்கான புத்தி, குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது. இலக்ஷ்மி நாராயணனே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். சுவர்க்கத்திலுள்ள மக்கள் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருக்கின்றார்கள். கலியுக மக்கள் குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றார்கள். இப்பொழுது இது இராவண இராச்சியம் என்பதை எவருமே புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் இராவணனின் கொடும்பாவியை ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றார்கள். அவனே எதிரியாவான். அவர்கள் தொடர்ந்தும் அவனது கொடும்பாவியை எரிக்கின்றார்கள், இருப்பினும் அவன் யார் என்பதை எவரும் அறியமாட்டார்கள். நாங்கள் அனைவரும் இராவண இராச்சியத்திற்கு உரியவர்கள். ஆகையால் நாங்கள் அனைவரும் நிச்சயமாக அசுரத்தனமானவர்களே. எவ்வாறாயினும், எவரும் தம்மை அசுரர் எனக் கருதுவதில்லை. பலரும் இது அசுரர்களின் இராச்சியம் எனக் கூறுகின்றார்கள்: அரசர்கள் எவ்வாறானவர்களோ பிரஜைகளும் அவ்வாறானவர்களே. எனினும், அவர்கள் இந்தளவையேனும் புரிந்து கொண்டிருக்கவில்லை. இராம இராச்சியமானது இராவண இராச்சியத்திலிருந்து வேறுபட்டது எனத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: என்னை வழிபடுகின்ற பக்தர்களுக்கும், ஆலயங்களில் தேவர்களை வழிபடுபவர்களுக்கும் இந்த ஞானத்தைக் கொடுங்கள். ஆனால் அத்தகையவர்களோடு அதிகளவு பிரயத்தனம் செய்யாதீர்கள். நீங்கள் ஆலயங்களில் பல பக்தர்களைக் காண்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரின் நாடித்துடிப்பையும் உணர வேண்டும். சில வைத்தியர்களினால் நாடித்துடிப்பை உணர்ந்து உடனடியாகவே உங்களுக்கு என்ன வியாதி உள்ளது என்பதைக் கூற முடியும். டெல்கியில் அஜ்மால் கான் என அழைக்கப்பட்ட மிகவும் பிரபல்யமான ஹோமியோபதி ஒருவர் இருந்தார். தந்தை உங்களை 21 பிறவிகளுக்கு என்றென்றும் ஆரோக்கியமாகவும் என்றென்றும் செல்வந்தனாகவும் ஆக்குகின்றார். இங்குள்ள அனைவரும் நோயாளிகள் அதாவது ஆரோக்கியமற்றவர்களாக இருக்கின்றார்கள். அங்கே, என்றுமே எந்த நோய்களும் ஏற்படுவதில்லை. நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமாகவும் என்றென்றும் செல்வந்தனாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் யோக சக்தியினால் உங்கள் புலனங்கங்களை வெற்றி கொள்கின்றீர்கள். உங்கள் புலனங்கங்கள் உங்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. பாபா கூறியுள்ளார்: மிகச்சரியான நினைவில் நிலைத்திருங்கள். ஆத்ம உணர்வில் நிலைத்திருந்தால் உங்கள் புலனங்கங்கள் உங்களை ஏமாற்ற மாட்டாது. இங்கேயே நீங்கள் அந்த விகாரங்களை வெற்றி கொள்கின்றீர்கள். அங்கே நீங்கள் என்றுமே தீய பார்வை கொண்டிருக்க மாட்டீர்கள். அங்கே இராவணனின் இராச்சியம் இருப்பதில்லை. அது வன்முறையற்ற தேவ தர்மம் ஆகும். அங்கே யுத்தம் போன்ற எந்த கேள்விக்கும் இடமில்லை. இதுவே இறுதி யுத்தமாகும். இதனூடாக சுவர்க்க வாசல் திறக்கப்படும். அதன் பின்னர் எந்த யுத்தமும் இடம்பெற மாட்டாது. இதுவே இறுதி யாகமாகும். அதன் பின்னர் அரைக்கல்பத்திற்கு எந்த யாகமும் இடம்பெற மாட்டாது. அனைத்து குப்பைகளும் இதில் அர்ப்பணிக்கப்படவுள்ளன. இந்த யாகத்தினூடாக விநாசத்தின் சுவாலைகள் வெளிப்பட்டு அனைத்தும் சுத்தப்படுத்தப்படும். குழந்தைகளாகிய நீங்கள் காட்சிகளை கண்டிருக்கின்றீர்கள். அங்குள்ள பழரசம் மிகவும் சுவையானதும் முதற்தரமானதும் ஆகும். நீங்கள் இப்பொழுது அந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதால் நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் நாமம் சிவசக்திகள் அதாவது பாரதத் தாய்கள் என்பதாகும். நினைவைக் கொண்டிருப்பதனூடாக மாத்திரமே நீங்கள் சிவனிடமிருந்து சக்தியை பெறுகின்றீர்கள். அலைந்து திரிதல் என்ற கேள்விக்கு இடமில்லை. பக்தி செய்யாதவர்களை அவர்கள் நாஸ்தீகர்கள் என நினைக்கின்றார்கள். ஆனால், தந்தையையோ படைப்பையோ தெரியாதவர்களே நாஸ்தீகர்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது ஆஸ்தீகர்கள் ஆகியுள்ளீர்கள். அத்துடன் நீங்கள் முக்காலத்தையும் அறிந்தவர்களாகவும் ஆகியுள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது மூவுலகையும் அறிந்துள்ளதுடன், முக்காலத்தையும் அறிந்திருக்கின்றீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் தந்தையிடமிருந்தே தமது ஆஸ்தியை பெற்றார்கள். நீங்கள் இப்பொழுது அவர்களைப் போன்றவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். சிவபாபாவே கூறுகின்றார்: நான் இவருக்குள் பிரவேசித்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். அல்லாவிடின், அசரீரியான என்னால் எவ்வாறு விளங்கப்படுத்த முடியும்? துண்டுதல்களினூடாகக் கல்வி கற்க முடியுமா? கற்பிப்பதற்கு ஒருவருக்கு வாய் தேவையாகும். இவரே கௌமுக்த் (பசுவின் வாய்) ஆவார். இவர் மூத்த தாய் ஆவார். அவர் ஒரு மனிதத் தாய் ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் உலக ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களை இவரினுடாக குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நான் திறமையான வழிமுறைகளை உங்களுக்குக் காட்டுகின்றேன். இதில் ஆசீர்வாதங்கள் என்ற கேள்விக்கு இடமில்லை. நீங்கள் எனது வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கப்படுகின்றது. இதில் கருணை என்ற கேள்விக்கு இடமில்லை. உங்களில் சிலர் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களை மீண்டும் மீண்டும் மறந்துவிடுவதால் எனக்கு கருணை காட்டுங்கள். ஓ! தந்தையை நினைவுசெய்ய வேண்டியது உங்கள் பணியாகும். நான் என்ன கருணையை உங்களிடம் கொண்டிருக்க முடியும்? என்னைப் பொறுத்தவரையில், நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள் ஆவீர்கள். நான் கருணை கொண்டிருக்க வேண்டுமாயின், அனைவருமே சிம்மாசனத்தில் அமரவேண்டும். எவ்வாறாயினும், நீங்கள் எவ்வளவு கற்கின்றீர்கள் என்பதற்கேற்பவே ஒரு அந்தஸ்தைக் கோருகின்றீர்கள். நீங்களே கற்க வேண்டும். தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். அதி அன்பிற்கினிய தந்தையை நினைவுசெய்யுங்கள். தூய்மையற்ற ஆத்மாக்களால் வீடு திரும்ப முடியாது. தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் என்னை எந்தளவிற்கு அதிகளவு நினைவு செய்கின்றீர்களோ, அந்த நினைவினூடாக, அதற்கேற்ப நீங்கள் தூய்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். ஒரு தூய ஆத்மாவினால் இங்கிருக்க முடியாது. நீங்கள் தூய்மையாகிய பின்னர் புதிய சரீரம் ஒன்று உங்களுக்குத் தேவையாகும். தூய ஆத்மா ஒருவர்; தூய்மையற்ற சரீரம் ஒன்றைப் பெறுதல் நியதிக்கு முரணானதாகும். சந்தியாசிகளும் விகாரங்களினூடாகவே பிறப்பெடுக்கின்றார்கள். தேவர்கள் விகாரத்தினூடாக பிறப்பெடுப்பதில்லை என்பதால் அவர்கள் துறவறத்தை மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. அவர்கள் மேன்மையானவர்கள். அவர்கள் சதா முற்றிலும் விகாரமற்ற உண்மையான மகாத்மாக்கள் ஆவார்கள். அங்கே இராவண இராச்சியம் இருக்க மாட்டாது. அது இராமரது (கடவுளின்) சதோபிரதான் இராச்சியமாகும். உண்மையில், நீங்கள் இராமர் என்றேனும் கூறக்கூhது. சிவபாபா என்பதே சரியாகும். அல்லவா? இதுவே குதிரை அர்ப்பணிக்கப்பட்ட, அழியாத உருத்திர ஞானயாகம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் உருத்திரன், சிவன் என எவ்வாறு அழைத்தாலும் இரண்டும் ஒன்றேயாகும். கிருஷ்ணரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சிவபாபா வந்து ஞானத்தைப் பேசுகின்றார். மக்கள் ஒரு யாகத்தை வளர்க்கும்போது, அவர்கள் களிமண்ணில் லிங்கத்தையும் சாலிகிராம்களையும் உருவாக்குகிறார்கள். அவர்கள் அவற்றை வழிபட்ட பின்னர் உடைத்துவிடுகிறார்கள். பாபா தேவர்களின் விக்கிரங்களின் உதாரணங்களைக் கொடுக்கின்றார். அவர்கள் தேவர்களின் விக்கிரங்களை அலங்கரித்து, அவர்களுக்கு உணவும் நீரும் படைக்கின்றார்கள். அதன் பின்னர் அவற்றை வழிபட்ட பின்னர் மூழ்கச் செய்கின்றார்கள்! அவ்வாறே, அவர்கள் சிவபாபாவினதும் சலிகிராம்களினதும் விக்கிரகங்களையும் மிகவும் அன்புடனும் சுத்தமாகவும் வழிபட்ட பின்னர் அவற்றை அவர்கள் உடைத்து விடுகின்றார்கள். அவை அனைத்தும் பக்தியின் விரிவாக்கமாகும். நீங்கள் எந்தளவிற்கு தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ அந்தளவிற்கு நீங்கள் அதிகளவு சந்தோஷமாக இருப்பீர்கள் எனத் தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் ஏதேனும் தவறுகள் செய்தீர்களா என பார்ப்பதற்கு ஒவ்வொருநாளும் இரவு நீங்கள் உங்கள் அட்டவணையை சோதித்துப் பார்க்க வேண்டும். உங்கள் காதுகளை நீங்களே முறுக்கிக்கொள்ள வேண்டும். ‘பாபா, நான் இன்று இந்தத் தவறை செய்தேன். தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்!’ பாபா கூறுகின்றார்: நீங்கள் உண்மையை எழுதினால், பாவத்தின் அரைவாசி மன்னிக்கப்படுகின்றது. தந்தை இங்கே அமர்ந்திருக்கின்றார். உங்களுக்கு நீங்கள் நன்மை செய்ய வேண்டுமாயின் நீங்கள் தொடர்ந்தும் அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். அட்டவணை ஒன்று வைத்திருப்பதனால், நீங்கள் அதிகளவு முன்னேற்றம் அடைவீர்கள். இதற்கு எந்தச் செலவும் இல்லை. நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர வேண்டுமாயின், உங்கள் ண்ணங்களினாலோ, வார்த்தைகளினாலோ, செயல்களினாலோ எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். எவரேனும் உங்களுக்கு ஏதாயினும் பிழையாகக் கூறினாலும் கேட்டும் கேட்காதிருங்கள். இந்த முயற்சியை செய்யுங்கள். குழந்தைகளாகிய உங்கள் அனைத்து துன்பத்தையும் அகற்றி, உங்களுக்கு சதா சந்தோஷத்தைக் கொடுக்கவே தந்தை வந்துள்ளார். ஆகையால், குழந்தைகளாகிய நீங்களும், இவ்வாறு ஆக வேண்டும். ஆலயங்களிலேயே அதிகளவு சேவை செய்ய முடியும். அங்கே சமயப்பற்றுள்ள பலரைக் காண்பீர்கள். பலரும் கண்காட்சிகளுக்கு வருகின்றார்கள். திருவிழாக்களிலும் கண்காட்சிகளிலும் செய்யும் சேவைகள் புரொஜக்டர்களினால் செய்யும் சேவையை விடவும் சிறப்பானதாகும். திருவிழாக்களுக்கு அதிகளவு செலவு செய்யப்படுவதால், நிச்சயமாக அதற்கேற்ப நன்மையும் இருக்கும். அச்சா. இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார். தாரணைக்கான சாராம்சம்: - எது சரி, எது பிழை என்பதன் வித்தியாசத்தை புரிந்து கொள்ளும் புத்தியை தந்தை உங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ளார். ஆகையால், இந்தப் புத்தியின் புரிந்துணர்வின் அடிப்படையில் தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். உண்மையான சகோதரன் சகோதரி என்ற அன்பு உங்கள் மத்தியில் இருக்கட்டும். என்றுமே ஒருவருக்கொருவர் தீய பார்வையைக் கொண்டிருக்காதீர்கள்.
- தந்தை உங்களுக்குக் கொடுக்கின்ற ஒவ்வொரு வழிகாட்டல்களையும் பின்பற்றுங்கள். நன்றாகக் கற்று உங்கள் மீது கருணை கொண்டிருங்கள். உங்கள் சுய முன்னேற்றத்திற்கான ஒரு அட்டவணையை வைத்திருங்கள். துன்பம் தரும் வகையான ஏதேனும் ஒன்றை யாரேனும் கூறினால், அதைக் கேட்டும் கேட்காதிருங்கள்.
ஆசீர்வாதம்: ஒரேயொரு தந்தையுடன் உறவுமுறைகள் அனைத்தையும் அனுபவம் செய்வதனால், களைப்பற்றவர்களாகவும் தடைகளை அழிப்பவர்களாகவும் ஆகுவீர்களாக. சகல உறவுமுறைகளையும் ஒரேயொரு தந்தையுடன் அனுபவம் செய்கின்ற குழந்தைகள் ஏனைய உறவுமுறைகள் அனைத்தையும் பெயரளவிலேயே கொண்டிருப்பார்கள். அவர்கள் சதா சந்தோஷ நடனம் ஆடுவதுடன், என்றுமே களைப்பை அனுபவம் செய்வதில்லை. அவர்கள் களைப்பற்றவர்கள். அவர்கள் தந்தையினதும், சேவையினதும் அன்பில் திளைத்திருக்கின்றார்கள். தடைகளினால் நின்று விடாது, அவர்கள் தடைகளை அழிப்பவர்கள் ஆவார்கள். ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் அனுபவம் செய்வதனால் அவர்கள் ஒளியாகவும் இலேசாகவும் (டபிள் லைட்) இருக்கின்றார்கள், ஆகையால் அவர்களுக்கு எந்த சுமையும் இருப்பதில்லை. அவர்களின் முறைப்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து விடுவதால், அவர்கள் முழுமையான ஸ்திதியை அனுபவம் செய்கின்றார்கள். அவர்கள் இலகு யோகிகள் ஆகியுள்ளார்கள். சுலோகம்: உங்கள் எண்ணங்களிலேனும், எந்தவொரு சரீரதாரியினால் கவரப்படுவதும் விசுவாசமற்றிருப்பதே ஆகும்.
---ஓம் சாந்தி---
|
|