25.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, அதிமேலான அந்தஸ்தைக் கோருவதற்கு, நினைவு யாத்திரையில் போதையுற்றிருங்கள். இது ஆன்மீகத் தூக்குமேடையாகும்; உங்களின் புத்தி உங்கள் வீட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி:
ஞானத்தைக் கிரகிக்க முடியாத புத்தியைக் கொண்டவர்களின் அறிகுறி என்ன?

பதில்:
அவர்கள் அற்ப விடயங்களுக்கும் குழப்பமடைகின்றார்கள். ஒருவரால் எந்தளவிற்கு அதிகமாகத் தனது புத்தியில் ஞானத்தைக் கிரகிக்க முடிகின்றதோ, அந்தளவிற்கு அதிகச் சந்தோஷத்தை அவர் அனுபவம் செய்வார். உலகம் இப்பொழுது கீழிறங்கிச் செல்ல வேண்டும், அதனூடாக இழப்பே ஏற்படும் என்ற ஞானத்தை உங்கள் புத்தி கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் என்றுமே குழப்பமடைய மாட்டீர்கள்; நீங்கள் சதா சந்தோஷமாக இருப்பீர்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கிருந்து இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். கடவுளே அதிமேலானவர் என அழைக்கப்படுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஆத்மாக்களின் புத்தியின் யோகம் வீட்டிற்குச் செல்ல வேண்டும். எவ்வாறாயினும், இதை அறிந்துள்ள புத்தியைக் கொண்ட எந்தவொரு மனிதருமே உலகில் இல்லை. சந்நியாசிகள் கூட பிரம்ம தத்துவத்தைத் தங்களின் வீடாகக் கருதுவதில்லை; தாங்கள் பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலக்க விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர், எனவே, அது அவர்களைப் பொறுத்தவரை வீடாக இருக்க முடியாது. ஒருவர் ஒரு வீட்டிலேயே வசிக்கின்றார். குழந்தைகளாகிய உங்களின் புத்தி அங்கேயே இருக்க வேண்டும். ஒருவர் தூக்குமேடையில் தொங்குவதைப் போன்றே, நீங்களும் இப்பொழுது ஆன்மீகத் தூக்குமேடையில் ஏறுகின்றீர்கள். அதிமேலான தந்தை வந்து, உங்களை அதிமேலான வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார் என்பதை உள்ளார்த்தமாக நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். அதிமேலான பாபா எங்களை அதிமேலான அந்தஸ்தைக் கோர வைக்கின்றார். இராவண இராச்சியத்தில் அனைவரும் சீரழிந்தவர்களாகவே உள்ளனர். அம்மக்கள் மேன்மையானவர்கள், இவர்களோ சீரழிந்தவர்கள். அவர்கள் தாங்கள் அதியுயர்ந்தவர்களாக இருப்பது பற்றி அறிந்திருக்கவில்லை. அதியுயர்ந்தவர்களாக இருந்தவர்களும் அதிதாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் பற்றி எதனையும் அறியார்கள். ஒரேயொரு கடவுள் மாத்திரமே அதிமேலானவர் என அழைக்கப்படுகின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். உங்களின் புத்தி மேல் நோக்கிச் செல்கின்றது. அவர் பரந்தாமவாசி. ஆத்மாக்களாகிய நாங்களும் அவ்விடத்துவாசிகளே என்பதை எவரும் புரிந்துகொள்வதில்லை. நாங்கள் எங்களின் பாகங்களை நடிப்பதற்காகவே இங்கு வருகின்றோம். இது எவரது எண்ணங்களிலும் புகுவதில்லை. அவர்கள் தங்களின் சொந்த வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் நினைவு யாத்திரையில் போதையுற்றிருக்கும்பொழுதே அதிமேலானவர்கள் ஆகுவீர்கள். நினைவின் மூலமே நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரவேண்டும். உங்களுக்குக் கற்பிக்கப்படுகின்ற ஞானத்தை நீங்கள் மறந்து விடக்கூடாது. சிறு குழந்தைகளால் கூட அதைக் கூறமுடியும். எவ்வாறாயினும், குழந்தைகள் யோகம் எனும் விடயம் பற்றிப் புரிந்துகொள்ள மாட்டார்கள். பல குழந்தைகளால் நினைவு யாத்திரையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. நாங்கள் மிக உயரத்திற்குச் செல்கின்றோம்! அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம் என்பன உள்ளன. பஞ்ச தத்துவங்களும் இங்கேயே உள்ளன. அவை சூட்சும லோகத்திலோ அல்லது அசரீர்p உலகிலோ இருப்பதில்லை. தந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார், இதனாலேயே அவர் ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். பல சமயநூல்களைக் கற்பதே ஞானத்தைக் கற்பதென மக்கள் நம்புகின்றனர். அவர்கள் அதிகளவு பணம் சம்பாதிக்கின்றனர். சமயநூல்களை வாசிப்பவர்கள் அதிக மரியாதையைப் பெறுகின்றனர். எவ்வாறாயினும், அதில் மகத்துவம் கிடையாதென்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். ஒரேயொரு கடவுள் மாத்திரமே அதிமேலானவர். அவர் மூலம் நாங்கள் அதிமேலான சுவர்க்கத்தை ஆட்சிபுரிபவர்கள் ஆகுகின்றோம். சுவர்க்கம் என்றால் என்ன, நரகம் என்றால் என்ன? 84 பிறவிகளின் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது? உங்களைத் தவிர உலகிலுள்ள வேறு எவரும் இதை அறியார். இவை அனைத்தும் கற்பனையே என அவர்கள் கூறுகின்றனர். அத்தகைய மக்கள் இக்குலத்திற்கு உரியவர்கள் அல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்; நீங்கள் மனந்தளரக்கூடாது. அது அவர்களின் பாகங்களில் இல்லையென்பதும், எனவே அவர்களால் எதையும் புரிந்துகொள்ள முடியாதென்பதும் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தலை நிமிர்ந்து நிற்கின்றீர்கள். நீங்கள் அதியுயர்ந்த உலகில் உள்ளபொழுது, அதிதாழ்ந்த உலகைப் பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள். அதிதாழ்ந்த உலகிலுள்ளவர்கள் அதியுயர்ந்த உலகைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். அது சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. வெளிநாட்டில் உள்ளவர்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும், அவர்கள் சுவர்க்கம், வைகுந்தம் போன்ற பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். இஸ்லாமியர்கள் பாகிஸ்ற் (சுவர்க்கம்) பற்றிப் பேசுகின்றனர், எனினும், தாங்கள் எவ்வாறு அங்கு செல்லலாம் என்பதை அவர்கள் அறியாதுள்ளனர். நீங்கள் இப்பொழுது அதிகளவு புரிந்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். அதிமேலான தந்தை எங்களுக்கு அதிக ஞானத்தைக் கொடுக்கின்றார். இந்நாடகம் ஓர் அற்புதமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாடகத்தின் இரகசியங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் இது வெறும் கற்பனையே எனக் கூறுகின்றனர். இவ்வுலகம் தூய்மையற்றது என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். இதனாலேயே மக்கள் கூவியழைக்கின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். தந்தை கூறுகின்றார்: 5000 வருடங்களுக்கு ஒருமுறை வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது. பழைய உலகம் புதியதாக வேண்டும், இதனாலேயே நான் வர வேண்டும். நான் ஒவ்வொரு சக்கரத்திலும் வந்து, குழந்தைகளான உங்களை அதிமேலானவர்கள் ஆக்குகின்றேன். தூய்மையானவர்கள் அதியுயர்ந்தவர்கள் என்றும், தூய்மையற்றவர்கள் அதிதாழ்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றனர். இவ்வுலகம் புதியதாகவும், தூயதாகவும் இருந்தது; அது இப்பொழுது தூய்மையற்றதாக உள்ளது. நீங்களும் இவ்விடயங்களை வரிசைக்கிரமமாகப் புரிந்துகொள்கின்றீர்கள். தங்கள் புத்தியில் இவ்விடயங்களைக் கொண்டிருப்பவர்களால் சதா சந்தோஷமாக இருக்க முடியும். இது அவர்களின் புத்தியில் இல்லாதுவிட்டால், எவராவது எதையாவது கூறும்பொழுதோ அல்லது ஏதாவது இழப்பு ஏற்பட்டாலோ, அவர்கள் குழப்பம் அடைகின்றனர். பாபா கூறுகின்றார்: இச்சீரழிந்த உலகம் இப்பொழுது முடிவடைய வேண்டும். இது பழைய உலகமாகும். மக்கள் மிகவும் சீரழிந்தவர்களாகி விட்டனர். எவ்வாறாயினும், எவருமே தன்னை மிகவும் சீரழிந்தவராகக் கருதுவதில்லை. பக்தர்கள் எப்பொழுதும் தலை வணங்குகின்றனர். நீங்கள் சீரழிந்த எவருக்கும் தலை வணங்குவதில்லை. நீங்கள் தூய்மையான ஒருவருக்கே தலைவணங்குகின்றீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் ஒருபொழுதும் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். பக்தர்கள் மாத்திரமே அவ்வாறு செய்கின்றனர். தந்தை உங்களைத் தலைகுனிந்து நடக்குமாறு ஒருபொழுதும் கூறுவதில்லை. இல்லை, இது ஒரு கல்வியாகும். நீங்கள் இறைதந்தையின் பல்கலைக்கழகத்தில் கற்கின்றீர்கள், எனவே நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும்! நீங்கள் (இறை) பல்கலைக்கழகத்தில் உள்ளபொழுது போதையை அனுபவம் செய்வதாகவும், பின்னர் வீட்டிற்குச் சென்றதும் அந்தப் போதை இல்லாமல் போய் விடுவதாகவும் இருக்கக்கூடாது. நீங்கள் வீட்டிலும் இந்தப் போதையைக் கொண்டிருக்க வேண்டும். இங்கு, சிவபாபாவே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இவர் கூறுகின்றார்: நான் ஞானக்கடல் அல்ல. இந்த பாபா (பிரம்மா) ஞானக்கடல் அல்ல. நதிகள் கடலிலிருந்தே தோன்றுகின்றன. ஒரேயொரு கடலே உள்ளது, பிரம்மபுத்திரா நதியே மிகப்பெரிய நதியாகும். பெரிய நீராவிக் கப்பல்கள் பல கடலிற்குள் பிரவேசிக்கின்றன. ஏனைய இடங்களிலும் கூட பல நதிகள் உள்ளன. இங்கு மாத்திரமே அவர்கள் தூய்மையாக்கும் கங்கைகளைப் பற்றிப் பேசுகின்றனர். வெளிநாடுகளிலுள்ள நதிகள் எதனையும் பற்றி அவர்கள் ஒருபொழுதும் இவ்வாறு கூறுவதில்லை. நதிகளே தூய்மையாக்குபவையாக இருந்தால், அப்பொழுது ஒரு குருவை ஏற்க வேண்டிய தேவையில்லை. மக்கள் நதிகளுக்கும், ஏரிகளுக்கும் அதிகளவில் தடுதாறித் திரிகின்றனர்! சில இடங்களில் ஏரிகள் மிகவும் அழுக்காக உள்ளன, கேட்கவே வேண்டாம்! அவர்கள் அங்குள்ள சேற்றை எடுத்துத் தங்கள் மீது பூசிக்கொள்கின்றனர். அவை அனைத்தும் கீழிறங்குவதற்கான வழிமுறைகளே என்பது இப்பொழுது உங்கள் புத்தியில் புகுந்துள்ளது. அம்மக்கள் அதிகளவு அன்புடன் அங்கு செல்கின்றனர். இந்த ஞானத்தால் உங்கள் கண்கள் திறந்துள்ளன என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். உங்களின் மூன்றாவது ஞானக்கண் இப்பொழுது திறந்துள்ளது. ஓர் ஆத்மா மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளபொழுது, திரிகாலதரிசி என அழைக்கப்படுகின்றார். ஆத்மாவிடம் முக்காலங்களினதும் ஞானம் உள்ளது. ஓர் ஆத்மா ஒரு புள்ளியே; எவ்வாறு நீங்கள் ஓர் ஆத்மாவைக் கண்களுடன் காண்பிக்க முடியும்? இவ்விடயங்கள் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். நீங்கள் மூன்றாவது ஞானக் கண்ணைக் கொண்டிருக்கும்பொழுது, திரிகாலதரிசியாகவும், திரிலோகநாதராகவும் ஆகுகின்றீர்கள்; நீங்கள் நாஸ்திகர்களிலிருந்து ஆஸ்திகர்கள் ஆகுகின்றீர்கள். முன்னர், நீங்கள் படைப்பவரையோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியோ அறிந்திருக்கவில்லை. தந்தையிடமிருந்து படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றி அறிந்துகொள்வதால், நீங்கள் இப்பொழுது ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். இது ஞானம் ஆகும். வரலாறும், புவியியலும், அத்துடன் கணக்குகளும் உள்ளன. அச்சா, ஒரு குழந்தை திறமைசாலியாக இருந்தால், நாங்கள் எத்தனை பிறவிகளை எடுக்கின்றோம் என்பதையும், அதற்கேற்ப, ஏனைய சமயத்தவர்கள் எத்தனை பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதையும் கணக்கிட்டுப் பார்க்க முடியும். எவ்வாறாயினும், தந்தை கூறுகின்றார்: அவ்விடயங்களையிட்டு உங்கள் தலையை அதிகம் மோதிக் கொள்ளாதீர்கள். உங்கள் நேரம் வீணாக்கப்பட்டுவிடும். இங்கு, நீங்கள் அனைத்தையும் மறந்து விட வேண்டும். அவ்விடயங்களைப் பற்றிப் பேச வேண்டிய தேவை இல்லை. நீங்கள் எவருமே அறிந்திராத, படைப்பவரான தந்தையை இனங்காணச் செய்;கின்றீர்கள். சிவபாபா பாரதத்தில் மாத்திரமே வருகின்றார். அவர் நிச்சயமாக வந்து சிலவற்றைச் செய்கின்றார்; இதனாலேயே அவர்கள் அவரின் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றனர். காந்தியும், ஏனைய புனிதர்களும் வந்து சென்றதால், அவர்களின் முத்திரைகளை உருவாக்கியுள்ளார்கள். அவர்கள் குடும்பத் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான முத்திரைகளையும் உருவாக்குகின்றனர். நீங்கள் பாண்டவ அரசாங்கத்திற்குச் சொந்தமானவர்கள் என்ற போதையை இப்பொழுது கொண்டுள்ளீர்கள். இது சர்வசக்திவான் பாபாவின் அரசாங்கம் ஆகும். இது உங்களின் அரசாங்க இலச்சினை (உழயவ ழக யசஅள) ஆகும். வேறு எவருமே இந்த அரசாங்க இலச்சினை பற்றி அறியார். நீங்கள் விநாச காலத்தில் அன்பு நிறைந்த புத்தியைக் கொண்டுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். நாங்கள் தந்தையைப் பெருமளவில் நினைவுசெய்கின்றோம். தந்தையை நினைவுசெய்வதால் நாங்கள் அன்புக் கண்ணீர் சிந்துகின்றோம். பாபா, நீங்கள் அரைக் கல்பத்திற்கு எங்கள் துன்பம் முழுவதையும் நீக்குகின்றீர்கள். வேறெந்தக் குருமார், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரையும் நினைவுசெய்ய வேண்டிய தேவை இல்லை. ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யுங்கள். அதிகாலை நேரம் மிகவும் சிறந்தது. பாபா, இது உங்களின் மகத்தான அற்புதம்! நீங்கள் ஒவ்வொரு 5000 வருடங்களும் எங்களை விழித்தெழச் செய்கின்றீர்கள். மனிதர்கள் அனைவரும் அசுரத்தனமான கும்பகர்ணனின் உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றனர், அதாவது, அவர்கள் அறியாமை என்ற இருளில் உள்ளனர். இது பாரதத்தின் புராதன யோகம் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். அவர்கள் கற்பிக்கின்ற ஹத்தயோகம் போன்ற ஏனைய அனைத்தும் சரீரத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வெறும் அப்பியாசமேயாகும். நீங்கள் இப்பொழுது உங்கள் புத்தியில் முழு ஞானத்தையும் கொண்டுள்ளீர்கள், எனவே, நீங்கள் சந்தோஷமாக உள்ளீர்கள். நீங்கள் இங்கு வந்து, எவ்வாறு பாபா உங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டுகின்றார் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். சிலர் புத்துணர்ச்சியடைகின்றனர், ஆனால் அவர்கள் வெளியில் சென்றவுடன் அந்தப் போதை மறைந்து விடுகின்றது; அது வரிசைக்கிரமமாகும். பாபா விளங்கப்படுத்துகின்றார்: இவ்வுலகம் தூய்மையற்றது. மக்கள் கூவியழைக்கின்றனர்: “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்”, ஆனால் அவர்கள் தங்களைத் தூய்மையற்றவர்களாகக் கருதுவதில்லை. அதனாலேயே அவர்கள் தங்கள் பாவங்களைக் கழுவுவதற்காகச் செல்கின்றனர். எவ்வாறாயினும், பாவங்களைச் சேர்ப்பது சரீரமல்ல. தந்தை வந்து, உங்களைத் தூய்மையாக்கி, கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தைப் பெற்றுள்ளீர்கள். பாரதம் சுவர்க்கமாக இருந்தது, அது இப்பொழுது நரகமாகி விட்டது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். ஒருவர் விகாரத்தினுள் விழும்பொழுது, அவர் தோல்வியடைகின்றார், எனவே, அது அவர் நரகத்தினுள் வீழ்ந்து விட்டதைப் போன்றதாகும். அவர் ஐந்தாவது மாடியிலிருந்து வீழ்ந்து, பின்னர் 100 மடங்கு தண்டனையை அனுபவித்தாக வேண்டும். எனவே, தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பாரதம் மிக மேன்மையானதாக இருந்தது, அது இப்பொழுது மிகவும் சீரழிந்து விட்டது. நீங்கள் இப்பொழுது மிகவும் விவேகமானவர்கள் ஆகுகின்றீர்கள். மனிதர்கள் மிகவும் விவேகமற்றவர்கள். பாபா இங்கு உங்களை மிகவும் போதையடையச் செய்கின்றார், ஆனால் நீங்கள் வெளியில் சென்றதுமே அந்தப் போதை குறைவடைந்து, சந்தோஷமும் பறந்து சென்று விடுகின்றது. ஒரு மாணவன் கடினமான பரீட்சையில் சித்தியெய்தும்பொழுது, அவரது போதை குறைவடைகின்றதா? அவர் கற்று, சித்தியெய்தி, உயர்ந்த நிலையை அடைகின்றார். இப்பொழுது உலகின் நிலைமையைப் பாருங்கள்! அதிமேலான தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் அசரீரியானவர். ஆத்மாக்களாகிய நீங்களும் அசரீரியானவர்கள்; நீங்கள் உங்களது பாகங்களை நடிப்பதற்காகவே இங்கு வந்திருக்கின்றீர்கள். தந்தை மாத்திரமே வந்து, நாடகத்தின் இரகசியங்களை விளங்கப்படுத்துகின்றார். இந்த உலகச் சக்கரமானது நாடகம் என்றும் அழைக்கப்படுகின்றது. அந்நாடகங்களில் ஒருவர் நோய்வாய்ப்படும்பொழுது, அவரை நீக்கிவிட முடியும். இது ஓர் எல்லையற்ற நாடகம். இது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் மிகச்சரியான முறையில் உள்ளது. நீங்கள் உங்களின் பாகங்களை நடிப்பதற்காகவே இங்கு வருகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். நாங்கள் எல்லையற்ற நடிகர்கள். நாங்கள் சரீரங்களை ஏற்று, பாகங்களை நடிக்கின்றோம். பாபா வந்துவிட்டார். இவை அனைத்தும் உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். எல்லையற்ற நாடகம் உங்களின் புத்தியில் இருக்க வேண்டும். நீங்கள் எல்லையற்ற உலக இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். எனவே, நீங்கள் அதற்கேற்ப முயற்சி செய்வதும் அவசியமாகும். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கலாம், ஆனால் நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் பலர் முதிய வயதில் தங்களைப் பராமரிப்பதற்கு ஒருவர் தேவை என்பதால், சகவாசத்திற்காகத் திருமணம் செய்கின்றனர். பின்னர் அவர்கள் உயிலெழுதி (றடைட) வைக்கின்றனர். அவர்கள் தங்களின் சகபாடிக்காகச் சிலவற்றையும், புண்ணியத்திற்காகச் சிலவற்றையும் விட்டுச் செல்கின்றனர். அங்கு விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஒரு காதலியும், அன்பிற்கினியவரும் விகாரத்திற்காக ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்பதில்லை. அவர்கள் பௌதீகமான அன்பைக் கொண்டுள்ளனர். நீங்கள் ஆன்மீகக் காதலிகள், நீங்கள் ஒரேயொரு அன்பிற்கினியவரையே நினைவுசெய்கின்றீர்கள். காதலிகளான உங்கள் அனைவருக்கும் ஒரேயொரு அன்பிற்கினியவரே உள்ளார். நீங்கள் அனைவரும் அவரையே நினைவுசெய்கின்றீர்கள். அவர் மிக அழகானவர்! அந்த ஆத்மா அழகானவர்; அவர் என்றென்றும் அழகானவர். நீங்கள் இப்பொழுது அவலட்சணமானவர்களாகி விட்டீர்கள், எனவே அவர் உங்களை அவலட்சணமானவர்களிலிருந்து அழகானவர்களாக மாற்றுகின்றார். தந்தை உங்களை அழகானவர்கள் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இங்கு பலர் எத்தகைய எண்ணங்களுடன் அமர்ந்திருக்கின்றார்கள் என்பது எவருக்கும் தெரியாது. ஒரு பாடசாலையிலும் அவ்வாறேயாகும். அங்கு அமர்ந்திருக்கும்பொழுது, புத்தியானது திரைப் படங்களை நோக்கியும், நண்பர்களை அல்லது வேறு திசைகளை நோக்கியும் திசை திருப்பப்படுகின்றது. ஆன்மீக ஒன்றுகூடல்களிலும் அவ்வாறேயாகும். இங்கும் அவ்வாறேயாகும். அது அவர்களின் புத்தியில் பதிவதில்லை, எனவே, அவர்கள் அந்தப் போதையை அனுபவம் செய்யாததுடன், தாங்களும் கிரகிக்கவோ மற்றவர்களையும் கிரகிக்கத் தூண்டவோ முடியாத நிலையிலுள்ளனர். பல புத்திரிகள் தங்களைச் சேவை செய்வதில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகின்றனர், ஆனால், அவர்களுக்குச் சிறு குழந்தைகளும் உள்ளனர். பாபா கூறுகின்றனர்: குழந்தைகளைப் பராமரிப்பதற்காக ஒரு பணிப்பெண்ணை நியமியுங்கள். உங்களால் பலருக்கும் நன்மை பயக்க முடியும். நீங்கள் திறமைசாலியாக இருந்தால், உங்களை ஏன் ஆன்மீகச் சேவை செய்வதில் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது? உங்களின் ஐந்து அல்லது ஆறு குழந்தைகளையும் பராமரிப்பதற்காக ஒரு பணிப்பெண்ணை நியமியுங்கள். இப்பொழுது தாய்மாரின் முறையாகும். நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் முன்னணியில் சென்றால், தனது மனைவி முன்னே சென்று சந்நியாசிகளையும் கூட தோற்கடித்து விட்டாள் என உங்கள் கணவன் நினைப்பார். தாய்மார்களாகிய நீங்கள் லௌகீகத்தினதும், பரலோகத்தினதும் பெயரை நிச்சயமாகப் புகழடையச் செய்வீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் புத்தியிலிருந்து அனைத்தையும் அகற்றி விடுங்கள். உங்கள் நேரத்தை வீணாக்குகின்ற விடயங்களைச் செவிமடுக்கவோ அல்லது பேசவோ தேவையில்லை.

2. கற்கும்நேரத்தில், உங்கள் புத்தி ஒரேயொரு தந்தையுடனான யோகத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். புத்தி எங்கும் அலைபாயக்கூடாது. அசரீரியான தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்ற போதையைப் பேணுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லையற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதுடன், சேவை செய்யும்பொழுது, பற்றற்றறவராகவும், தந்தையிடம் அன்பானவராகவும் இருக்கின்ற, ஓர் உலகச் சேவையாளர் ஆவீர்களாக.

ஓர் எல்லையற்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பவரே, ஓர் உலகச் சேவையாளர் ஆவார். அத்தகைய சேவையாளர் சேவை செய்யும்பொழுது, எப்பொழுதும் பற்றற்றவராகவும், தந்தையிடம் அன்பானவராகவும் இருப்பார். அவர்கள் சேவையில் பற்றைக் கொண்டிருக்க மாட்டார்கள், ஏனெனில் சேவைக்கான பற்றும் ஒரு தங்கச் சங்கிலி போன்றதேயாகும். அந்தப் பற்று உங்களை எல்லையற்றதிலிருந்து எல்லைக்குட்பட்டதற்கு எடுத்துச் செல்கின்றது. ஆகவே, நீங்கள் சரீரங்களினதும், இறை உறவுமுறைகளினதும், சேவைக்கான வசதிகளினதும் விழிப்புணர்விலிருந்து பற்றற்றவராகவும், தந்தையில் அன்பானவராகவும் இருக்க வேண்டும், அப்பொழுது நீங்கள் ஓர் உலகச் சேவையாளராக இருக்கின்ற ஆசீர்வாதத்தைப் பெறுவதுடன், சதா தொடர்ந்தும் வெற்றியைப் பெறுவீர்கள்.

சுலோகம்:
ஒரு விநாடியில் வீணான எண்ணங்களுக்கு ஒரு நிறுத்தத்தை இடுகின்ற ஒத்திகைகளைக் கொண்டிருப்பதால், நீங்கள் சக்திநிறைந்தவர்கள் ஆகுவீர்கள்.