27.11.20        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்த நாடகம் ஒரு விளையாட்டு என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இதில் நன்றி கூறுதல் என்ற கேள்விக்கே இடமில்லை.

கேள்வி:
எந்த பழக்கத்தைக் சேவை செய்கின்ற குழந்தைகளாகிய நீங்கள் சிறிதளவேனும் கொண்டிருக்கக் கூடாது?

பதில்:
எதையும் கேட்கும் பழக்கத்தையாகும். உங்களுக்கு தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களையோ அல்லது கருணையையோ கேட்கவேண்டிய தேவையில்லை. நீங்கள் எவரிடமும் பணம் கேட்கக் கூடாது. இரப்பதை விட மரணிப்பது மேலானது. நாடகத்திற்கேற்ப, முன்னைய கல்பத்தில் விதை விதைத்தவர்கள், மீண்டும் அதனைச் செய்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எதிர்காலத்திற்காக உயர்ந்த அந்தஸ்தை உருவாக்க விரும்புபவர்கள், அதை நிச்சயமாக செய்வார்கள். அவர்கள் நிச்சயமாக ஒத்துழைப்பார்கள். சேவை செய்வது உங்கள் கடமையாகும். நீங்கள் எவரிடமும் எதனையும் கேட்கக் கூடாது. ஞான மார்க்கத்திலன்றி, பக்தி மார்க்கத்திலேயே நீங்கள் எதையாவது கேட்கின்றீர்கள்.

பாடல்:
எனக்கு ஆதாரமளித்தவருக்கு, இதயம் “நன்றி” கூறுகின்றது...

ஓம் சாந்தி.
தந்தைக்கோ, ஆசிரியருக்கோ அல்லது குருவிற்கோ “நன்றி” என்று கூறுவது, குழந்தைகளாகிய உங்களிலிருந்து தோன்றக்கூடாது. ஏனெனில், இது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நாடகமென்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். “நன்றி” என்று கூறுவதற்கான கேள்வியே இல்லை. நாடகத்திற்கேற்ப குழந்தைகளாகிய நீங்கள் இதனைப் புரிந்து கொள்கின்றீர்கள். “நாடகம்” என்ற வார்த்தை குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் புகுகின்றது. “நாடகம்” என்ற வார்த்தையை நீங்கள் கூறியவுடனேயே, முழு நாடகமும் உங்கள் புத்தியில் புகுகின்றது. அதாவது குழந்தைகளாகிய நீங்கள் சுயதர்ஷன சக்கரதாரிகளாக ஆகுகின்றீர்கள். மூன்று உலகங்களும் உங்கள் புத்தியில் இருக்கின்றது: அசரீரி உலகம், சூட்சும உலகம், பௌதீக உலகம். நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றதென்பது உங்களுக்குத் தெரியும். தந்தை வந்து உங்களைத் திரிகாலதர்ஷியாக ஆக்குகின்றார். அவர் வந்து, உங்களுக்கு முக்காலங்களைப் பற்றியதும், மூவுலகங்களைப் பற்றியதும், உலகின் ஆரம்ப, மத்தி, இறுதியின் இரகசியங்களைப் பற்றியதுமான ஞானத்தைத் தருகிறார். காலமானது “கால்” என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த விடயங்களைக் குறித்துக் கொள்ளாமல், உங்களால் இவற்றை நினைவு செய்ய முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் பல கருத்துக்களை மறக்கின்றீர்கள். நாடகத்தின் கால அளவு உங்களுக்குத் தெரியும். நீங்கள் மூன்றாவது ஞானக் கண்ணை பெறும்போதே, நீங்கள் திரிநேத்ரியாகவும், திரிகாலதரிஷியாகவும் ஆகுகின்றீர்கள். நீங்கள் ஆஸ்திகர்களாக ஆகுவதே மிகவும் பிரதான விடயமாகும். இல்லாவிட்டால், நீங்கள் அநாதைகள். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். மாணவர்கள் தங்களுடைய புத்தியில் ஞானத்தை சதா கடைகின்றார்கள். இதுவும் ஞானமாகும். நாடகத்திற்கேற்ப, அதிமேலான தந்தை இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். உங்களுடைய உதடுகளில் மாத்திரமே 'நாடகம்" எனும் வார்த்தை தோன்றுகிறது. அதிலும் சேவை செய்வதிலே மும்முரமாக இருக்கும் குழந்தைகளிடத்திலிருந்து மாத்திரமே அது தோன்றுகிறது. நீங்கள் அநாதைகளாக இருந்தீர்கள் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரியும். இப்போது நீங்கள் அதிபதியான எல்லையற்ற தந்தையைக் கண்டுவிட்டதால், நீங்கள் பிரபுவிற்கும், அதிபதிக்கும்; உரியவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் முன்னர் எல்லையற்ற அநாதைகளாக இருந்தீர்கள். எல்லையற்ற தந்தையே உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். வேறு எந்தத் தந்தையாலும் உங்களுக்கு அத்தகைய சந்தோஷத்தைக் கொடுக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியிலே புதிய உலகும், பழைய உலகும் இருக்கிறது. எவ்வாறாயினும், மற்றவர்களுக்கு மிகச்சரியாக விளங்கப்படுத்துகின்ற ஆன்மீக வியாபாரத்திலே நீங்கள் உங்களை மும்முரமாக ஈடுபடுத்த வேண்டும். ஒவ்வொருவரும் அவரவரிற்கே உரிய சூழ்நிலைகளை கொண்டுள்ளார்கள். நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பவர்களால் மாத்திரமே விளங்கப்படுத்த முடியும். நினைவின் மூலமாகவே நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். தந்தையே சக்தி வாய்ந்த 'வாள்" ஆவார். குழந்தைகளாகிய நீங்கள் உங்களை சக்தியால் நிரப்ப வேண்டும். நீங்கள் யோக சக்தியால் உலகின் மீதான ஆட்சி உரிமையைப் பெறுகிறீர்கள். நீங்கள் யோகத்தின் மூலமாகவே சக்தியைப் பெறுகிறீர்கள், ஞானத்தின் மூலமாக அல்ல. ஞானம் உங்களுடைய வருமானத்தின் மூலாதாரம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. 'யோகம்" சக்தி எனப்படுகிறது. இரவிற்கும், பகலிற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. யோகமா, ஞானமா சிறந்தது? யோகம் பிரபல்யமானது. தந்தையின் நினைவே யோகம் ஆகும். தந்தை கூறுகிறார்: இந்த நினைவின் மூலமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதையே தந்தை வலியுறுத்துகிறார். ஞானம் இலகுவானது. கடவுள்; பேசுகிறார்: நான் உங்களுக்கு இலகுவான ஞானத்தைக் கூறுகின்றேன். நான் உங்களுக்கு 84 பிறவிகளின் சக்கரம் பற்றிய ஞானத்தைக் கூறுகின்றேன். இதிலே அனைத்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதிலே அதன் வரலாறும், புவியியலும் உள்ளது. ஞானமும், யோகமும் ஒரு விநாடிக்கானது. நான் ஓர் ஆத்மா, நான் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இதற்கு முயற்சி தேவை. நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்கும்போது, உங்கள் சரீரத்தை நீங்கள் மறந்திருப்பதைப் போன்றிருக்கும். ஒரு மணித்தியாலத்திற்காவது நீங்கள் சரீரமற்ற ஸ்திதியில் அமர்ந்திருந்தால் நீங்கள் அதிகளவு தூய்மையாகுவீர்கள். இரவில் மக்கள் உறங்கச் செல்லும்போது அவர்கள் ஆறு தொடக்கம் எட்டு மணித்தியாலங்களிற்குச் சரீரமற்;ற நிலைக்கு வருகிறார்கள். அந்நேரத்திலே அவர்கள் பாவச் செயல்களைச் செய்வதில்லை. ஆத்மா களைப்படைந்து உறங்கச் செல்கின்றார். அப்பொழுது அவர்களின் பாவங்கள் அழிகின்றது என்றில்லை. அது நித்திரையே ஆகும். அப்போது பாவங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. அவர்கள் நித்திரை செய்யாவிட்டால், தொடர்ந்தும் பாவங்களைச் செய்வார்கள். எனவே நித்திரையும் ஒரு பாதுகாப்பாகும். நாள் முழுவதும் வேலை செய்தபின், ஆத்மா 'நான் இப்போது நித்திரை கொள்ளப் போகிறேன்" எனக் கூறி சரீரமற்ற நிலைக்கு செல்கின்றது. நீங்கள் சரீரத்திலிருக்கும் போதே சரீரமற்றவர் ஆகவேண்டும். ஆத்மாவாகிய நான் இந்த சரீரத்திலிருந்து பற்றற்று இருக்கிறேன். நான் அமைதியின் சொரூபம். 'ஆத்மாவே சத்தியம், உயிர்வாழ்பவர், அமைதியின் சொரூபம்" எனும் ஆத்மாவின் இப்புகழை நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். 'சத்தியமும், உயிர் வாழ்பவரும்" என்பதே பரமாத்மாவின் புகழாகும். அவரே அமைதிக் கடலும், சந்தோஷக் கடலும் ஆவார். நீங்கள் அதிபதிகள் என அழைக்கப்படுகிறீர்கள். குழந்தைகளும் அதிபதிகள் என அழைக்கப்படுகிறார்கள். தந்தை தொடர்ந்து உங்களுக்கு நினைவிற்கான வழிமுறைகளைக் காட்டுகிறார். நீங்கள் நாள் முழுவதும் உறங்க வேண்டும் என்பதல்ல. இல்லை, நீங்கள் நினைவிலே நிலைத்திருந்து, உங்கள் பாவங்களை அழிக்க வேண்டும். இயன்றவரை, தொடர்ந்து தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தை உங்கள் மீது கருணை கொள்வதோ, உங்களுக்கு ஆசீர்வாதங்களை அருள்வதோ இல்லை. 'கருணை நிறைந்த சக்கரவர்த்தி" என்பது அவருடைய புகழேயாகும். உங்களைத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆக்குவதும் அவருடைய பாகமே ஆகும். பக்தர்கள் அவருடைய புகழைப் பாடுகிறார்கள். ஆனால் நீங்கள் இப்பொழுது அவ்வாறு பாடுவதில்லை, இதனாலேயே பாடல்கள் நாளுக்கு நாள் நிறுத்தப்பட்டு வருகின்றன. பாடசாலையிலே அவர்கள் பாடல்களைப் பாடுகிறார்களா? மாணவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். ஆசிரியர் வந்தவுடன், அவர்கள் எழுந்து நிற்கிறார்கள். பின்னர் அவர்கள் மீண்டும் அமர்கிறார்கள். தந்தை கூறுகிறார்: உங்களுக்குக் கற்பிக்கும் ஒரு பாகம் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, எனவே நான் உங்களுக்குக் கற்பிக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் அமர்ந்திருந்து செவிமடுக்க வேண்டும். உங்களுடைய வழிமுறைகள் உலகினுடையதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரு தந்தை தனது குழந்தைகளை எழுந்து நிற்கச் சொல்வாரா? இல்லை, அதை நீங்கள் பக்தி மார்க்கத்திலேயே செய்கிறீர்கள், இங்கு அல்ல. தந்தை தானே எழுந்து நின்று 'நமஸ்தே!" கூறுகிறார். பாடசாலைக்கு மாணவர்கள் காலதாமதமாக வந்தால், ஆசிரியர் அவர்களை வெளியே நிற்கச் செய்து தண்டிப்பார். இதனாலேயே நேரத்திற்கு வராமல் இருப்பதையிட்டு மாணவர்கள் பயப்படுகிறார்கள். இங்கு, பயம் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை தொடர்ந்து உங்களுக்கு விளக்குகிறார், நீங்கள் தொடர்ந்து முரளிகளைப் பெறுகிறீர்கள். அவற்றை நீங்கள் நாளாந்தம் கற்க வேண்டும். அவற்றை நீங்கள் நாளாந்தம் கற்கும் போது, நீங்கள் சமூகமளித்துள்ளதாக பதியப்படுவீர்கள். அல்லாவிடில், நீங்கள் சமூகமளிக்கவில்லை எனப் பதியப்படுவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு மிக ஆழமான கருத்துக்களை எடுத்துரைக்கிறேன். ஒரு முரளியை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் அக்கருத்துக்களைத் தவறவிட்டு விடுவீர்கள். இவ்விடயங்கள் புதியவை, உலகிலுள்ள வேறு எவருக்கும் இது தெரியாது. அவர்கள் உங்களுடைய படங்களைப் பார்க்கும் போது, வியப்படைகின்றார்கள். அவை எந்தப் புராணங்களிலும் குறிப்பிடப்படாதவை. கடவுள்; இப்படங்களை உருவாக்கினார்! இது உங்களுடைய புதிய கலைக் காட்சிக் கூடமாகும். இது தேவர்களாக ஆகவுள்ள பிராமண குலத்தவர்களுடைய புத்தியில் இருக்கும். “இது சரி” என்று அவர்கள் கூறுவார்கள். இதை நாம் முன்னைய கல்பத்திலே கற்றோம். எனவே நிச்சயமாக கடவுளே எமக்குக் கற்பிக்கிறார். பக்தி மார்க்கத்திலே உள்ள சமய நூல்களுக்குள் முதல் இலக்கத்திற்குரியது கீதையே ஆகும். ஏனெனில், இதுவே முதலாவது தர்மமாகும். அரைக் கல்ப்பதிற்குப் பின்னர், வேறு பல சமய நூல்கள் தோன்றுகின்றன. முதலாவதாக ஆபிரஹாம் வந்தார். அவர் தனியாக இருந்தார். பின்னர் ஒருவரிலிருந்து இருவரும், இருவரிலிருந்து நால்வரும் தோன்றினார்கள். ஒரு சமயத்தைச் சேர்ந்தவர்கள் 100,000 இலிருந்து 150,000 அளவினராக அதிகரிக்கும் போதே, அச்சமயத்திற்கான சமய நூல்கள் உருவாக்கப்படுகின்றன. சமயத்தில் அரைவாசியளவு வளர்ச்சியுற்ற பின்னரே சமய நூல்கள் எழுதப்படுகின்றன. சரியானதொரு கணிப்பு உள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு பெருமளவு சந்தோஷம் இருக்க வேண்டும். நாம் எமது ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து பெறுகிறோம். முழு உலகச் சக்கரத்தினதும் ஞானத்தைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பது உங்களுக்குத் தெரியும். இதுவே எல்லையற்ற வரலாறும், புவியியலும் ஆகும். அனைவருக்கும் கூறுங்கள்: வேறு எவராலும் உங்களுக்குக் கற்பிக்க முடியாத உலகின் வரலாறும், புவியியலும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகிறது. மற்றவர்களால் உங்களுக்கு உலகின் ஒரு வரைபடத்தைக் காட்டக் கூடியதாக இருந்தாலும்கூட, அவர்களால் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் எப்போது, எவ்வளவு காலத்திற்கு நீடித்தது என்பதைக் காட்ட முடியாது. ஒரேயொரு உலகம் மாத்திரமே உள்ளது. அவர்கள் பாரதத்திலே ஆட்சி செய்தார்கள், ஆனால் அவர்கள் இப்போது இல்லை. இவ்விடயங்கள் வேறு எவருடைய புத்தியிலும் இல்லை. ஒரு சக்கரத்தின் கால எல்லை நூறாயிரம் ஆண்டுகள் என அவர்கள் கூறுகிறார்கள். தந்தை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு அதிக சிரமம் கொடுப்பதில்லை. தந்தை கூறுகிறார்: நீங்கள் தூய்மையாக வேண்டும். பக்தி மாக்கத்திலே தூய்மை ஆகுவதற்காக நீண்ட காலமாக அலைந்து திரிந்தீர்கள். நீங்கள் அலைந்து திரிய ஆரம்பித்து 2,500 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். பாபா மீண்டும் உங்களுக்கு, உங்களுடைய இராச்சிய பாக்கியத்தைக் கொடுப்பதற்காக இப்போது வந்துள்ளார். இதை நீங்கள் நினைவு செய்கிறீர்கள். உலகம் நிச்சயமாக புதியதிலிருந்து பழையதாகவும், பழையதிலிருந்து புதியதாகவும் ஆகுகின்றது. நீங்கள் இப்போது பழைய பாரதத்தின் அதிபதிகள். நீங்கள் புதியதன் அதிபதிகளாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு புறத்திலே அவர்கள் பாரதத்தின் பெரும் புகழைப் பாடுகின்ற அதே வேளையிலே மறுபுறத்திலே அவர்கள் பாரதத்தை இகழ்கிறார்கள். உங்களிடம் இப்பாடல் உள்ளது. இப்போது என்ன நடக்கிறது என உங்களால் விளங்கப்படுத்த முடியும். மக்களை, இவ்விரு பாடல்களையும் கேட்கச் செய்யுங்கள். இராமரின் (கடவுளின்) இராச்சியத்திற்கும், இந்நேரத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டை நீங்கள் காட்ட முடியும். தந்தையே ஏழைகளின் பிரபு ஆவார். ஏழைகளின் புதல்விகள் மாத்திரமே பாபாவிடம் வருவார்கள். செல்வந்தரிடம் அவர்களுடைய சொந்த போதை இருக்கிறது. முன்னைய கல்பத்தில் வந்தவர்கள் மீண்டும் அவ்வாறு வருவார்கள். எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. சிவபாபா எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. தாதாவே கவலைப்பட வேண்டும். தான் முதல் தரமான தூய ஆத்மாவாக வரவேண்டும் என்ற சொந்தக் கவலை அவருக்குள்ளது. இதற்கு மறைமுகமான முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் உங்கள் அட்டவணையை எழுதும் போது இவருடைய முயற்சி மேலானது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். தந்தை எப்போதும் கூறுகிறார்: ஒரு தினக்குறிப்பேட்டை வைத்திருங்கள்! பல குழந்தைகள் தினக்குறிப்பேட்டை எழுதுகிறார்கள், ஒரு அட்டவணையை எழுதுவதன் மூலமாக பெருமளவு முன்னேற்றம் ஏற்படுகிறது. இந்த வழிமுறை மிகவும் நல்லது. எனவே, எல்லோரும் இதைச் செய்ய வேண்டும். ஒரு தினக்குறிப்பேட்டை வைத்திருப்பதன் மூலமாக நீங்கள் பெருமளவு நன்மை அடைவீர்கள். ஒரு தினக்குறிப்பேட்டைப் பேணல் என்றால் தந்தையை நினைவு செய்தல் என்பதாகும். அதிலே நீங்கள் எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்தீர்கள் என்பதை எழுத வேண்டும். முயற்சி செய்வதிலே தினக்குறிப்பேடு உங்களுக்குப் பெருமளவு உதவி செய்யும். இவ்விடயங்களைக் குறித்துக் கொள்வதற்கு பல நூறாயிரக் கணக்கான தினக்குறிப்பேடுகள் அச்சிடப்படுகின்றன. இதுவே குறித்துக் கொள்ளப்பட வேண்டிய பிரதான விடயமாகும். இதை நீங்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது. இதை நீங்கள் அவ்வப்போதே தினக் குறிப்பேட்டில் எழுத வேண்டும். இரவிலே நீங்கள் உங்கள் முழுக் கணக்கையும் எழுத வேண்டும். அப்பொழுது நீங்கள் நட்டம் அடைந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்வீர்கள், ஏனெனில் உங்களுடைய பல பிறவிகளின் பாவங்கள் இன்னும் அழிக்கப்படாமல் உள்ளன. தந்தை உங்களுக்குப் பாதையைக் காட்டுகிறார். உங்கள் மீது கருணை கொள்ளுங்கள்! ஓர் ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கிறார், அவர் உங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுப்பதில்லை. ஆசீர்வாதத்தையோ, கருணையையோ கேட்பதை விட இறப்பது மேல். நீங்கள் எவரிடமும் பணம் கேட்கக் கூடாது. இதைச் செய்வதற்கு குழந்தைகளாகிய உங்களுக்கு கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகிறார்: நாடகத்தின்படி, முன்னைய சக்கரத்திலே ஒரு விதை விதைத்து, தமது ஆஸ்தியைப் பெற்றவர்கள் மீண்டும் அவ்வாறு தாமாகவே செய்வார்கள். எந்தப் பணிக்கும் எவரிடமும் எதையும் நீங்கள் கேட்கக் கூடாது. ஒருவர் எதையும் செய்யாவிட்டால், அவர் எதையும் பெறமாட்டார். மக்கள் பெருமளவு தான தர்மம் செய்யும்போது, அவர்கள் அதன் பிரதி பலனாக எதையாவது பெறுகிறார்கள். அவர்கள் ஓர் அரசனுக்கோ, அல்லது ஒரு செல்வந்தக் குடும்பத்திலோ பிறக்கிறார்கள். எதையாவது செய்ய விரும்புபவர்கள், அதைத் தாமாகவே செய்வார்கள், நீங்கள் எவரிடமும் கேட்கத் தேவையில்லை. முன்னைய கல்பத்தில் அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ, நாடகம் அவர்களை மீண்டும் அதைச் செய்யத் தூண்டும். எதையும் கேட்கத் தேவையில்லை. 'சேவைக்காக பொக்கிஷக் களஞ்சியம் தொடர்ந்து நிரப்பப்படும்" என பாபா தொடர்ந்து சொல்கிறார். எனக்குப் பணம் தாருங்கள் என நான் குழந்தைகளிடம் கேட்கப் போவதில்லை. பக்தி மார்க்கத்து விடயங்கள், ஞான மார்க்கத்திலே தொடரக் கூடாது. முன்னைய கல்பத்தில் உதவியவர்கள் மீண்டும் அவ்வாறு செய்வார்கள். உங்களுக்காக நீங்கள் எதையும் கேட்கக்கூடாது! பாபா கூறுகிறார்: குழந்தைகளே, நிதி திரட்டுவதற்கு நீங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சந்நியாசிகளே இதைச் செய்கிறார்கள். பக்தி மார்க்கத்திலே மக்கள் ஒரு சிறு தொகையைக் கொடுத்தாலும், அவர்கள் அதன் பலனை ஒரு பிறவிக்குப் பெறுகிறார்கள். இங்கே, இது பல பிறவிகளுக்கானது. எனவே பிறவி பிறவியாக பலனைப் பெறுவதற்காக, இப்பிறவியிலே அனைத்தையும் கொடுப்பது நல்லது. இவருடைய பெயர் பொக்கிஷக் களஞ்சியத்தின் கள்ளங்கபடமற்ற பிரபு என்பதாகும். முயற்சி செய்வதன் மூலம், நீங்கள் வெற்றி மாலையிலே சேர்க்கப்படுவீர்கள்! பொக்கிஷக் களஞ்சியம் நிரம்பியதும், அனைத்துத் துன்பமும், சிரமங்களும் நீங்கிவிடுகின்;றன. அங்கு அகால மரணம் ஒருபோதும் இருப்பதில்லை. இங்கு, மக்கள் மரணத்திற்குப் பயப்படுகிறார்கள். ஏதாவது ஒன்று நிகழும்போது, அவர்கள் உடனே மரணத்தை நினைக்கிறார்கள். அங்கு உங்களுக்கு அவ்வாறான எண்ணங்கள் இருக்காது, ஏனெனில் நீங்கள் அமரத்துவமான உலகிலே இருப்பீர்கள். இது அழுக்கான மரண பூமியாகும். பாரதமே அமரத்துவமான பூமியாக இருந்தது, இப்போது அது மரண பூமியாக இருக்கிறது. இறுதி அரைக் கல்பம் உங்களுக்கு மிகவும் அழுக்கானதாக இருந்துள்ளது. நீங்கள் தொடர்ந்து கீழிறங்கி வந்துள்ளீர்கள். ஜெகத்நாத் ஆலயத்திலே அவர்கள் பல அழுக்கான விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். பாபா அனுபவம் நிறைந்தவர். அவர் எல்லா இடங்களிற்கும் பயணம் செய்துள்ளார். அவர் அழகியவரிலிருந்து அவலட்சணமானவராக ஆகியுள்ளார். அவர் ஒரு சிறு கிராமத்திலே வாழ்ந்து வந்தவர். உண்மையில், முழு பாரதமும் ஒரு சிறு கிராமமேயாகும், நீங்கள் கிராமத்து சிறுவர்கள். நீங்கள் இப்போது உலக அதிபதிகளாக ஆகிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் பம்பாயில் வாழ்பவர்கள் என நினைக்க வேண்டாம்! சுவர்க்கத்துடன் ஒப்பிடும்போது பம்பாய் எம் மாத்திரம்? எதுவுமே இல்லை! அதற்கு கல்லொன்றின் பெறுமதியேனும் இல்லை! அநாதைகளாக ஆகிவிட்ட கிராமச் சிறுவர்களாகிய நாம் இப்போது உலகின் அதிபதிகள் ஆகுகிறோம். எனவே அந்த சந்தோஷம் இருக்க வேண்டும்! அதன் பெயர் சுவர்க்கம் ஆகும். மாளிகைகளில் பல வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்படுகின்றன. சோமநாதருடைய ஆலயத்திலும் வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றிற்கும் முதலில் அவர்கள் சிவனுக்கு ஓர் ஆலயம் கட்டினார்கள். அவர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருந்தார்கள்! இப்போது பாரதம் ஒரு சிறு கிராமம் ஆகும்;. சத்திய யுகத்திலே அது மிகவும் செல்வச் செழிப்புடன் இருந்தது. உங்களைத் தவிர உலகிலுள்ள வேறெவருக்கும் இவ்விடயங்கள் தெரியாது. நீங்கள் கூறுகிறீர்கள்: நேற்று நாம் சக்கரவர்த்திகளாக இருந்தோம், இன்று நாம் பிச்சைக்காரர்களாக இருக்கிறோம். நாம் மீண்டும் ஒருமுறை உலகின் அதிபதிகள் ஆகுகிறோம். குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய பாக்கியத்;தின் மதிப்பை உணர்ந்து, நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். நாம் பல மில்லியன் மடங்கு அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு, உங்கள் சரீரத்தில் இருக்கும் போதே சரீரமற்றவர் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சரீரத்தை மறக்கும் அளவுக்கு நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள்.

2. ஞானத்தைக் கடைந்து ஆஸ்திகர்கள் ஆகுங்கள். முரளியை ஒருபோதும் தவறவிடாதீர்கள். முன்னேற்றத்திற்காக உங்கள் தினக்குறிப்பேட்டிலே உங்கள் நினைவு அட்டவணையைக் குறித்துக்கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம்:
ஞானத்தின் திறவுகோலினால் அளவற்ற பொக்கிஷத்தை அடைவதன் மூலம் சகல பொக்கிஷங்களாலும் நிறைந்தவர் ஆகுவீர்களாக.

சங்கமயுகத்தில், குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் ஞான திறவுகோலை பெறுகிறீர்கள், அதனைக் கொண்டே நீங்கள் உங்கள் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்கிறீர்கள். இந்தத் திறவுகோலை பயன்படுத்தி நீங்கள் விரும்பியளவு பாக்கிய பொக்கிஷங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் திறவுகோலை பெற்ற உடனேயே, நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிரப்பப்படுகிறீர்கள். நீங்கள் எந்தளவிற்கு சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியிருக்கிறீர்களோ, அதற்கேற்ப அந்தளவிற்கு நீங்கள் இயல்பாகவே சந்தோஷத்தைக் கொண்டிருப்பீர்கள். சந்தோஷ நீர்வீழ்ச்சியானது அநாதியாகவும் நிறுத்தவே முடியாதவாறும் ஓடிக்கொண்டே இருக்கும் அனுபவத்தைப் பெறுவீர்கள். எவ்வகையான பேற்றினதும் எக் குறைபாடும் இல்லாதவராக, நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருப்பவராக தோன்றுவீர்கள்.

சுலோகம்:
தந்தையுடன் நல்ல தொடர்பை கொண்டிருந்தால், நீங்கள் சகல சக்திகளதும் கரண்ட்டை தொடர்ந்தும் பெற்றுக் கொண்டிருப்பீர்கள்.