04.08.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்தப் பிரம்மாவே அமரத்துவ ரூபமான தந்தையின், நடக்கும், பேசும் சிம்மாசனமாவார். அவர் பிரம்மாவில் பிரவேசிக்கும்பொழுதே பிராமணர்களாகிய உங்களைப் படைக்கின்றார்.கேள்வி:
எந்த இரகசியங்களைப் புத்திசாலிக் குழந்தைகளால் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்குத் தெளிவாக விளங்கப்படுத்த முடியும்?பதில்:
பிரம்மா யார் என்பதையும், எவ்வாறு பிரம்மா விஷ்ணுவாக ஆகுகின்றார் என்பதையும் ஆகும். பிரஜாபிதா பிரம்மா இங்கேயே உள்ளார்; அவர் ஒரு தேவரல்ல. பிரம்மாவே பிராமணர்கள் மூலம் ஞான யாகத்தை உருவாக்கியுள்ளார். புத்திசாலிக் குழந்தைகளால் மாத்திரமே இந்த இரகசியங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் அவற்றை விளங்கப்படுத்த முடியும். குதிரைப் படையினரும், காலாட் படையினரும் இதையிட்டுக் குழப்பமடைகின்றனர்.பாடல்:
ஓம் நமசிவாய.ஓம் சாந்தி.
பக்தி மார்க்கத்தில் ஒரேயொருவரே புகழப்படுகின்றார். அவர்கள் அவரது புகழைப் பாடுகின்றனர். எனினும், அவர்கள் அவரை அறிந்திருக்கவோ அல்லது அவரது மிகச்சரியான அறிமுகத்தைக் கொண்டிருக்கவோ இல்லை. அவர்கள் அவரது புகழை மிகச்சரியாக அறிந்திருந்தால், நிச்சயமாக அதை விளங்கப்படுத்தியிருப்பார்கள். கடவுளே அதி மேலானவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரது படமே பிரதானமானது. பிரம்மாவின் குழந்தைகளும் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் பிராமணர்கள். பிராமணர்களான நீங்கள் மாத்திரமே பிரம்மாவை அறிவீர்கள்; வேறு எவரும் அவரை அறியமாட்டார்கள். இதனாலேயே அவர்கள் குழப்பமடைகின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: இவர் எவ்வாறு பிரம்மாவாக இருக்க முடியும்? பிரம்மா சூட்சும வதனத்தில் வசிப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், படைப்பு எதுவும் இடம்பெறாத, சூட்சும வதனத்தில் மனித குலத்தின் தந்தை இருக்க முடியாது. மக்கள் அதிகளவில் இதைப் பற்றி உங்களுடன் விவாதிக்கின்றார்கள். பிரம்மாவும், பிராமணர்களும் உள்ளனர் என்பதை நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும், இல்லையா? “கிறிஸ்து” என்ற வார்த்தையிலிருந்து “கிறிஸ்தவர் என்ற வார்த்தையும், “புத்தர்” என்ற வார்த்தையிலிருந்து “பௌத்தர்” என்ற வார்த்தையும், “ஏபிரகாம்” என்ற வார்த்தையிலிருந்து “இஸ்லாம்” என்ற வார்த்தையும் தோன்றியுள்ளதைப் போல், பிரஜாபிதா பிரம்மாவினால் பிராமணர்களும் மிகவும் பிரபல்யமானவர்கள். ஆதிதேவர் பிரம்மா உள்ளார். உண்மையில், பிரம்மாவை ஒரு தேவர் என அழைக்கக்கூடாது; அது தவறாகும். தங்களைப் பிராமணர்கள் என அழைத்துக் கொள்பவர்களிடம், பிரம்மா எங்கிருந்து வந்தார் என நீங்கள் கேட்க வேண்டும். அவர் யாருடைய படைப்பு? பிரம்மாவை உருவாக்கியவர் யார்? அவர்களில் எவராலும் அதை உங்களுக்குக் கூறமுடியாது. ஏனெனில், அவர்களுக்கு அது தெரியாது. சிவபாபா பிரவேசிக்கின்ற இரதமானது, முன்னர் இளவரசர் கிருஷ்ணராக இருந்த ஆத்மாவிற்குச் சொந்தமானது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். 84 பிறவிகளை எடுத்த பின்னர், அவர் பிரம்மா ஆகினார். அவர் எப்பெயருடன் பிறந்தாரோ, அது வேறுபட்டதாகும், ஏனெனில், அவர் ஒரு மனிதராவார். பின்னர், பாபா இவரில் பிரவேசித்தபொழுது, இவருக்குப் பிரம்மா எனப் பெயரிட்டார். இந்தப் பிரம்மாவே விஷ்ணுவின் ரூபம் ஆகுகின்றார் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்; அவரே நாராயணன் ஆகுகின்றார். அவரது 84 பிறவிகளின் இறுதியில் அவர் ஒரு சாதாரண இரதத்தில் உள்ளார். ஒவ்வோர் ஆத்மாவினதும் சரீரமே அவரவரின் இரதமாகும். அமரத்துவ ரூபமானவர், இந்த நடந்து, பேசும் சிம்மாசனத்தைக் கொண்டுள்ளார். சீக்கியர்கள் அமரத்துவ சிம்மாசனம் என அழைக்கப்படுகின்ற, சிம்மாசனத்தை உருவாக்கினர். இங்கு, அனைவரும் அமரத்துவ சிம்மாசனங்கள்; சகல ஆத்மாக்களும் அமரத்துவ ரூபங்களாவர். அதிமேலான கடவுளுக்கு ஓர் இரதம் தேவை, இல்லையா? அவர் ஞானத்தைக் கொடுப்பதற்காக இந்த இரதத்தினுள் பிரவேசித்து, அதில் அமர்ந்துகொள்கின்றார். அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவர் என அழைக்கப்படுகின்றார். அவர் படைப்பவரினதும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியதுமான ஞானத்தைக் கொடுக்கின்றார். ஞானம் நிறைந்தவர் என்றால், உள்ளேயிருக்கின்ற இரகசியங்கள் அனைத்தையும் அறிந்தவர் என்றோ, அனைத்தையும் அறிந்தவர் என்றோ அர்த்தமல்ல. சர்வவியாபகர் என்பதன் அர்த்தம் வேறுபட்டது, ஜனிஜனன்ஹார் என்பதன் அர்த்தமும் வேறுபட்டதாகும். மனிதர்கள் அனைத்தையும் குழப்பி, தங்கள் மனதில் தோன்றுவதையெல்லாம் கூறுகின்றார்கள். பிராமணர்களாகிய நீங்கள் அனைவரும் பிரம்மாவின் குழந்தைகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். எங்களது குலமே அதியுயர்ந்ததாகும். தேவர்கள் சத்தியயுகத்தின் ஆரம்பத்தில் இருந்தமையால், அவர்களையே அதிமேலானவர்களாக அம்மக்கள் கருதுகின்றனர். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிராமணர்களாவர். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவரும் இதைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்கள் பிரம்மாவைச் சூட்சும வதனத்தில் இருப்பதாகக் கருதுவதால், எவ்வாறு எவரும் இதைப் புரிந்துகொள்ள முடியும்? பூஜை செய்து, விஷேட தினங்களில் மக்களின் வீடுகளுக்கு உண்ணச் செல்கின்ற லௌகீக பிராமணர்கள், பிராமணர்களான உங்களிலிருந்து வேறுபட்டவர்கள். நீங்கள் விஷேட தினங்களில் உண்பதற்கென எவரது வீட்டிற்கும் செல்வதில்லை. பிரம்மாவின் இரகசியத்தை நீங்கள் இப்பொழுது மிகத்தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: ஏனைய அனைத்தையும் ஒருபுறம் வைத்துவிட்டு, நீங்கள் யார் மூலம் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையாகுவீர்களோ அந்தத் தந்தையை முதலில் நினைவுசெய்யுங்கள். அப்பொழுது நீங்கள் இவ்விடயங்கள் அனைத்தையும் புரிந்துகொள்வீர்கள். அவர்களுக்குச் சிறிதளவு சந்தேகம் வந்தாலும் தந்தையை விட்டு நீங்கிச் செல்கின்றார்கள். முதலாவதும், முதன்மையானதுமான விடயம் அல்ஃபாவும், பீற்றாவும் ஆகும். தந்தை கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நான் நிச்சயமாக ஒருவரில் பிரவேசித்தாக வேண்டும். அவர் ஒரு பெயரையும் கொண்டிருக்க வேண்டும். நான் வந்து, இவரை உருவாக்குகின்றேன். பிரம்மாவைப் பற்றி விளங்கப்படுத்துவதற்கு, உங்களுக்குப் பெருமளவு விவேகம் தேவை. குதிரைப் படையினரும், காலாட்படையினரும் இதையிட்டுக் குழப்பமடைகின்றனர். ஒவ்வொருவரும் தத்தமது ஸ்திதிக்கேற்ப விளங்கப்படுத்துகின்றனர். பிரஜாபிதா பிரம்மா இங்கேயே உள்ளார். அவர் பிராமணர்கள் மூலமே ஞான யாகத்தை உருவாக்குகின்றார். எனவே, பிராமணர்கள் நிச்சயமாகத் தேவைப்படுகின்றனர். பிரஜாபிதா பிரம்மாவும் நிச்சயமாக இங்கேயே இருக்கவேண்டும். அவர் மூலம் மாத்திரமே பிராமணர்கள் இருக்க முடியும். தாங்கள் பிரம்மாவின் குழந்தைகள் என பிராமணப் புரோகிதர்கள் கூறுகின்றனர். தங்கள் குலம் தொன்றுதொட்டு தொடர்ந்துள்ளதாக அவர்கள் நம்புகின்றனர். எனினும், பிரம்மா எப்பொழுது இருந்தார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள். பிரம்மாவின் குழந்தைகளே பிராமணர்களாவர். அம்மக்கள் தமது தந்தையின் தொழிலை அறியமாட்டார்கள். பாரதத்தில், முதலாவதாக பிராமணர்களே உள்ளனர். பிராமண குலமே அதியுயர்ந்தது. தங்கள் குலம் நிச்சயமாக பிரம்மாவிலிருந்தே தோன்றியதாக அந்தப் பிராமணர்கள் நம்புகின்றனர். எனினும், எப்பொழுது அல்லது எவ்வாறு அது தோன்றியது என்பதை அவர்களால் கூறமுடியாமலுள்ளது. பிரஜாபிதா பிரம்மாவே பிராமணர்களை உருவாக்குகின்றார் என நீங்கள் அறிவீர்கள்; அப்பிராமணர்கள் பின்னர் தேவர்களாக வேண்டும். தந்தை வந்து பிராமணர்களுக்குக் கற்பிக்கின்றார். பிராமண வம்சம் என்பது கிடையாது. பிராமணர் குலமே உள்ளது. சூரிய வம்சத்தில் உள்ளதைப் போன்று அரசர்களும், அரசிகளும் இருந்தால் மாத்திரமே ஒரு வம்சம் இருக்க முடியும். பிராமணர்களான உங்களில் எவருமே ஓர் அரசர் ஆகுவதில்லை. கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்குமென இரு இராச்சியங்கள் இருந்ததாக மக்கள் கூறுவது தவறாகும். அவர்களில் எவரிடமும் ஓர் இராச்சியம் இருக்கவில்லை. இப்பொழுது இது மக்களால் மக்களுக்கான அரசாங்கம் ஆகும். இது இராச்சியம் என அழைக்கப்படுவதில்லை; அவர்களிடம் கிரீடம் கிடையாது. முதலில், பாரதத்தில் இரட்டைக் கிரீடமணிந்த அரசர்களும், பின்னர் ஒற்றைக் கிரீடமணிந்த அரசர்களும் இருந்தனர் என்பதை பாபா விளங்கப்படுத்தியுள்ளார். இந்நேரத்தில், கிரீடமே கிடையாது. நீங்கள் இதை மிகத்தெளிவாக விளங்கப்படுத்தி, நிரூபிக்க வேண்டும். இந்த ஞானத்தை மிக நன்றாகக் கிரகித்துள்ளவர்களால் மிக நன்றாக விளங்கப்படுத்த முடியும். பிரம்மாவைப் பற்றி விளங்கப்படுத்துவதற்கு அதிகளவில் தேவைப்படுகின்றது. அவர்கள் விஷ்ணுவையேனும் அறியமாட்டார்கள். நீங்கள் இதையும் விளங்கப்படுத்த வேண்டும். வைகுந்தமானது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமான, விஷ்ணுதாமம் என அழைக்கப்படுகின்றது. கிருஷ்ணர் ஓர் இளவரசராக இருக்கும்பொழுது, தனது தந்தையே அரசர் என கூறுவார். கிருஷ்ணரின் தந்தை ஓர் அரசராக இருக்க முடியாது என்றில்லை. கிருஷ்ணர் ஓர் இளவரசர் என அழைக்கப்படுகின்றார்; எனவே அவர் நிச்சயமாக ஓர் அரசருக்கே பிறந்திருக்க வேண்டும். அவர் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்திருந்தால், அவரை ஓர் இளவரசர் என அழைக்க முடியாது. ஓர் அரசரின் அந்தஸ்திற்கும், ஒரு செல்வந்தரின் அந்தஸ்திற்குமிடையில் பகலுக்கும், இரவுக்குமிடையிலான வேறுபாடுள்ளது. கிருஷ்ணரின் தந்தையான அரசரைப் பற்றிய குறிப்பு எதுவும் கிடையாது. கிருஷ்ணரின் பெயரே அதிகளவில் போற்றப்படுகின்றது. அவரது தந்தையின் அந்தஸ்து அந்தளவிற்கு உயர்ந்ததாகக் கூறப்படுவதில்லை. அவரது அந்தஸ்து இரண்டாந் தரமானது. ஏனெனில், அவர் கிருஷ்ணருக்குப் பிறப்புக் கொடுப்பதில் ஒரு கருவியாகுகின்றார். அவரது ஆத்மா கிருஷ்ணரின் ஆத்மாவை விடவும் அதிகமாகக் கற்றார் என்றில்லை; இல்லை. கிருஷ்ணரே பின்னர் நாராயணன் ஆகுகின்றார். அவரது தந்தையின் பெயர் மறைந்து விடுகின்றது. அவர் நிச்சயமாக ஒரு பிராமணராகவே இருந்தார். எனினும், அவர் கிருஷ்ணரை விடவும் குறைவாகவே கற்றார். கிருஷ்ணரின் ஆத்மாவே அவரது தந்தையின் ஆத்மாவை விடவும் அதிகமாகக் கற்றார். இதனாலேயே அவரது பெயர் போற்றப்படுகின்றது. கிருஷ்ணரின் தந்தை யார்? எவருக்கும் இது தெரியாததாகவே உள்ளது. நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, இதை அறிந்து கொள்வீர்கள். அவர் இங்கேயே அவ்வாறு ஆகவேண்டும். இராதையின் பெற்றோரும் உள்ளனர். எனினும், இராதையின் பெயரே அவரது பெற்றோரை விடவும் அதிகளவில் போற்றப்படுகின்றது. ஏனெனில், அவரது பெற்றோர் குறைவாகவே கற்றதால், இராதையின் பெயர் அவர்களை விடவும் உயர்ந்ததாக ஆகுகின்றது. இவை குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டிய விபரமான விடயங்கள். அனைத்தும் எவ்வாறு நீங்கள் கற்கின்றீர்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. பிரம்மாவைப் பற்றி விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்கு விவேகம் தேவை. அவர் கிருஷ்ணராகி, பின்னர் 84 பிறவிகளை எடுக்கின்றார். நீங்களும் 84 பிறவிகளை எடுக்கின்றீர்கள். அனைவரும் ஒரே சமயத்தில் கீழிறங்குவதில்லை. இக்கல்வியில் முன்னிலையில் உள்ளவர்களே முதலில் கீழிறங்குவார்கள். அனைவரும் வரிசைக்கிரமமாகவே கீழிறங்குகின்றனர். இவை மிகவும் சூட்சுமமான விடயங்கள். குறைந்தளவு விவேகம் உள்ளவர்களால் இதைக் கிரகிக்க முடியாது. அவர்கள் வரிசைக்கிரமமாகவே திரும்பிச் செல்கின்றனர். நீங்கள் வரிசைக்கிரமமாகவே இடம்மாற்றப்படுகின்றீர்கள். இறுதியில், அத்தகையதொரு நீண்ட வரிசை உருவாகும். அவர்கள் சென்று, தத்தமது சொந்தப் பிரிவுகளில் வரிசைக்கிரமமாக அமர்ந்து கொள்வார்கள். ஒவ்வொருவரது இடமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நாடகம் மிகவும் அற்புதமானது, எனினும் எவரும் அதைப் புரிந்துகொள்வதில்லை. இது முட்காடு என அழைக்கப்படுகின்றது. இங்கு அனைவரும் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தை விளைவிக்கின்றனர். அங்கு, சந்தோஷம் இயற்கையானது, இங்கோ சந்தோஷம் செயற்கையானது. ஒரேயொரு தந்தை மாத்திரமே உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். இங்குள்ள சந்தோஷம் காகத்தின் எச்சத்தைப் போன்றதாகும். நாளுக்கு நாள் அனைவரும் தொடர்ந்தும் தமோபிரதான் ஆகுகின்றனர். பெருமளவு துன்பம் உள்ளது. அவர்கள் கூறுகின்றனர்: பாபா, மாயையின் புயல்கள் பல உள்ளன. மாயை குழப்பத்தைப் பயன்படுத்துகின்றாள். பெருமளவு துன்ப உணர்வு உள்ளது. சந்தோஷத்தை அருள்பவரின் குழந்தையாகிய பின்னரும் நீங்கள் ஏதாவது துன்ப உணர்வுகளைக் கொண்டிருந்தால், தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இது உங்கள் பெரும் கர்ம வேதனையாகும். நீங்கள் தந்தையைக் கண்டு விட்டதால், துன்ப உணர்வுகள் எதுவும் இருக்கக்கூடாது. யோக சக்தியால் உங்கள் கடந்த கால கர்மக் கணக்குகளை முடித்து விடுங்கள். யோக சக்தி இல்லாவிட்டால், தண்டனையை அனுபவிப்பதன் மூலம் அக்கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும். தண்டனையை அனுபவித்த பின்னர் ஓர் அந்தஸ்தைக் கோருவது நல்லதல்ல. நீங்கள் முயற்சி செய்தாக வேண்டும். இல்லாவிடில், நீதிமன்றத்தைச் சந்திக்க நேரிடும். பல பிரஜைகள் உள்ளனர். நாடகத்தின்படி, அனைவரும் கருப்பைச் சிறையில் பெருமளவு தண்டனையை அனுபவிக்கின்றனர். ஆத்மாக்கள் அதிகளவில் அலைந்து திரியவும் செய்கின்றனர். சில ஆத்மாக்கள் பெரும் தீங்கு விளைவிக்கின்றனர். ஒரு தூய்மையற்ற ஆத்மா வேறொருவரில் பிரவேசிக்கும்பொழுது, அந்நபர் பெருமளவு பிரச்சனைக்கு உள்ளாகுகின்றார். அத்தகைய விடயங்கள் புதிய உலகில் இடம்பெறுவதில்லை. நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குச் செல்வதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் அங்கு சென்று, புதிய மாளிகைகளைக் கட்டுவீர்கள். கிருஷ்ணர் பிறப்பெடுப்பது போன்று நீங்கள் ஓர் அரசனுக்குப் பிறப்பெடுப்பீர்கள். எவ்வாறாயினும், முதலில் அந்தளவு எண்ணிக்கையான மாளிகைகள் இருக்க மாட்டாது; அவை கட்டப்பட வேண்டும். அவற்றை உருவாக்குவது யார்? நீங்கள் யாருக்குப் பிறக்கின்றீர்களோ, அவர்களே கட்டுவார்கள். நீங்கள் ஓர் அரசனுக்குப் பிறப்பது நினைவுகூரப்படுகின்றது. என்ன நிகழவுள்ளது என்பதை நீங்கள் எதிர்காலத்தில் பார்ப்பீர்கள். பாபா இதை இப்பொழுது உங்களுக்குக் கூறமாட்டார்; அது பின்னர் ஒரு செயற்கையான நாடகமாகி விடும். இதனாலேயே பாபா உங்களுக்கு எதையும் கூறுவதில்லை. உங்களுக்குக் கூறுவது நாடகத்தில் நிச்சயிக்கப்படவில்லை. பாபா கூறுகின்றார்: நானும் ஒரு நடிகரே. எதிர்கால விடயங்களைப் பற்றி நான் முன்கூட்டியே அறிந்திருந்தால், பல விடயங்களை நான் உங்களுக்குக் கூறியிருப்பேன். பாபா அந்தர்யாமியாக இருந்திருந்தால், அவர் உங்களுக்கு முன்கூட்டியே கூறியிருப்பார். தந்தை கூறுகின்றார்: இல்லை, நாடகத்தில் நடப்பவற்றைத் தொடர்ந்தும் பற்றற்ற பார்வையாளர்களாக நீங்கள் அவதானிக்க வேண்டும். அதேசமயம், நினைவு யாத்திரையில் போதையுற்றிருங்கள். இதிலேயே சிலர் தோல்வி அடைகின்றனர். ஞானம் சற்று அதிகமாகவோ அல்லது சற்றுக் குறைவாகவோ இருக்க முடியாது. நினைவு யாத்திரையிலேயே சிலவேளைகளில் அதிக நினைவும், சிலவேளைகளில் குறைந்த நினைவும் உள்ளது. நீங்கள் பெற்றுள்ள ஞானம் எப்பொழுதும் உள்ளது. சிலவேளைகளில் நினைவு யாத்திரைக்கான உற்சாகம் உள்ளது, சிலவேளைகளில் அது இருப்பதில்லை. யாத்திரையில் தளம்பல் உள்ளது. நீங்கள் ஞானத்தின் மூலமாக ஏணியில் ஏறுவதில்லை. ஞானம் யாத்திரையாக இருக்க முடியாது. நினைவே யாத்திரையாகும். தந்தை கூறுகின்றார்: நினைவில் நிலைத்திருப்பதால் நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகும்பொழுது, பெருமளவில் ஏமாற்றப்பட்டு, பாவச் செயல்களைச் செய்கின்றீர்கள். காமமே கொடிய எதிரி. பலர் இதில் தோல்வியடைகின்றனர். பாபா கோபம் எனும் விடயத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. நீங்கள் ஞானத்தால் ஒரு விநாடியில் ஜீவன் முக்தியைப் பெறுகின்றீர்கள் என்றும், கடல்நீர் அனைத்தையும் மையாக்கினாலும் ஞானத்திற்கு முடிவு கிடையாது என்றும் ஞானத்தைப் பற்றிக் கூறப்படுகின்றது. அல்ஃபாவை நினைவுசெய்யுங்கள் என்றும் கூறப்படுகின்றது. “நினைவு செய்தல்” என்பதன் அர்த்தத்தை அவர்கள் அறியாதுள்ளனர். அவர்கள் கூறுகின்றனர்: எங்களைக் கலியுகத்திலிருந்து சத்தியயுகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்! பழைய உலகில் துன்பமே உள்ளது. எவ்வாறு பல கட்டடங்கள் மழையால் அழிந்து போகின்றன என்றும், எவ்வாறு பெருமளவு மக்கள் நீரில் மூழ்கிப்போகின்றனர் என்றும் உங்களால் பார்க்க முடியும்;. மழை போன்றவற்றால் இயற்கை அனர்த்தங்களும் ஏற்படும். அவையனைத்தும் தொடர்ந்தும் சடுதியாக நிகழும். மக்கள் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் விநாச காலத்தில் விழித்தெழுவார்கள். எனினும், அவர்களால் அப்பொழுது என்ன செய்ய முடியும்? அவர்கள் அனைவரும் மரணித்து விடுவார்கள். பூமியும் முழு விசையுடன் ஆட்டங் காணும். புயல்கள், மழை போன்றவை இருக்கும். குண்டுகள் போடப்படும். ஆனால் இங்கு, மேலதிகமாக உள்நாட்டு யுத்தமும் இருக்கும். ஏனெனில், “இரத்த ஆறு” நினைவுகூரப்பட்டுள்ளது. அடிதடிகளும், கொலைகளும் பெருமளவில் இருக்கும். அவர்கள் ஒருவர் மற்றவருக்கெதிராக வழக்குத் தொடுக்கின்றனர். எனவே, அவர்கள் நிச்சயமாக ஒருவரோடொருவர் சண்டை பிடிப்பார்கள். அவர்கள் அனைவரும் அநாதைகள், நீங்களோ பிரபுவிற்கும், அதிபதிக்கும் சொந்தமானவர்கள். நீங்கள் சண்டையிட வேண்டியதில்லை. பிராமணர்கள் ஆகுவதன் மூலம் நீங்கள் பிரபுவிற்கும், அதிபதிக்கும் சொந்தமானவர்கள் ஆகுகின்றீர்கள். ஒரு கணவனும், தந்தையும் பிரபுவும், அதிபதியும் எனக் கூறப்படுகின்றனர். சிவபாபாவே கணவன்மாருக்கெல்லாம் கணவர் ஆவார். ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்படும்பொழுது, அவர் கூறுகின்றார்: நான் எனது கணவனை எப்பொழுது சந்திப்பேன்? ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளேன். இப்பொழுது, நான் எவ்வாறு உங்களைச் சந்திக்கலாம்? சிலர் உண்மையை எழுதுகின்றனர், சிலர் அதிகளவில் மறைக்கின்றனர். அவர்கள் நேர்மையாக எழுதி, “பாபா, நான் இத்தவறைச் செய்துவிட்டேன். என்னை மன்னியுங்கள்!” எனக் கூறுவதில்லை. எவராவது விகாரத்தில் வீழ்ந்துவிட்டால் அவரது புத்தியால் எதையும் கிரகிக்க முடியாதுள்ளது. பாபா கூறுகின்றார்: நீங்கள் அத்தகைய கடுந்தவறு செய்தால், உங்கள் கதை முடிந்துவிடும். நான் உங்களை அழகானவர்கள் ஆக்குவதற்கே வந்துள்ளேன். எனவே, நீங்கள் ஏன் உங்கள் முகத்தை அழுக்காக்குகின்றீர்கள்? நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்களாயினும், ஒரு சில சதப் பெறுமதியான அந்தஸ்தையே கோருவீர்கள். இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. சிலர் தோற்கடிக்கப்பட்டு, பிறவி பிறவியாகத் தங்களது அந்தஸ்தை அழித்துக் கொள்கின்றனர். அவர்களிடம் கேட்கப்படும்: இந்த அந்தஸ்தைக் கோருவதற்காகவா நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள்? தந்தை (பிரம்ம பாபா) மிக மேன்மையானவர் ஆகும்பொழுது, குழந்தைகள் ஏன் பிரஜைகள் ஆகவேண்டும்? தந்தை சிம்மாசனத்தில் இருக்கும்பொழுது, அவரது குழந்தைகள் பணிப்பெண்களாகவும், வேலைக்காரர்களாகவும் ஆகுவது மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயம். இறுதியில் நீங்கள் அனைத்தினதும் காட்சிகளைப் பெறுவீர்கள். பின்னர், “நான் ஒன்றுமில்லாத விடயத்திற்காக அவ்வாறு செய்துவிட்டேன்!” என நீங்கள் அதிகளவில் வருந்த நேரிடும். சந்நியாசிகளும் பிரம்மச்சாரிகளாக உள்ளனர். விகாரமுடைய அனைவரும் அவர்களின் முன்னிலையில் தலைவணங்குகின்றனர். தூய்மைக்கு மதிப்பு உள்ளது. ஒருவரது பாக்கியத்தில் அது இல்லாது விட்டால், தந்தை அவருக்குக் கற்பிக்க வந்தாலும், அவர் தொடர்ந்தும் தவறுகள் செய்து கொண்டேயிருப்பார். அவர் தந்தையை நினைவுசெய்யக்கூட மாட்டார். எனவே, பல பாவங்கள் செய்யப்படுகின்றன. இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் மீது வியாழ சகுனம் உள்ளது. இவற்றை விட மகத்தான சகுனங்கள் வேறெதுவும் கிடையாது. இச்சகுனங்கள் தொடர்ந்தும் குழந்தைகளாகிய உங்களைச் சுற்றி வட்டமிடுகின்றன. அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்நாடகத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக அவதானியுங்கள். ஒரேயொரு தந்தையின் நினைவில் போதை கொண்டிருங்கள். நினைவு யாத்திரை மீது நீங்கள் கொண்டுள்ள உற்சாகம்; குறைவடைவதற்கு ஒருபொழுதும் அனுமதிக்காதீர்கள்.
2. இக்கல்வியில் ஒருபொழுதும் கவனயீனமாக இருக்காதீர்கள். உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்குவதற்கு, நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். தோல்வி அடைவதன் மூலம் பிறவிபிறவியாக உங்கள் அந்தஸ்தை அழித்து விடாதீர்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் “மன்மனபவ” எனும் மகத்தான மந்திரத்தின் மூலம் சதா ஒரு சந்;தோஷ சொரூபமாகவும், அனைத்துத் துன்பத்திற்கும் அப்பாலும் இருப்பீர்களாக.எவ்வகையான துன்பம் வரும்பொழுதும், அனைத்துத் துன்பமும் ஓடி விடுகின்ற, மகத்தான மந்திரத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் உங்கள் கனவுகளிலேனும் சிறிதளவு துன்பத்தையும் அனுபவம் செய்வதை அனுமதிக்காதீர்கள். உங்கள் சரீரம் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது பணத்தில் சில தளம்பல் இருந்தாலோ, எது நடப்பினும், உங்களினுள் துன்ப அலைகள் எதுவும் பிரவேசிப்பதை அனுமதிக்காதீர்கள். ஒரு கடலில் அலைகள் வந்து போகும், ஆனால் அந்த அலைகளுடன் எவ்வாறு விளையாடுவது என்பதை அறிந்துள்ளவர்கள் அதில் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடுவதைப் போன்று, அலைகளினூடாகப் பாய்ந்து செல்கின்றார்கள். எனவே நீங்களும் சந்தோஷ சொரூபங்களான, கடலின் குழந்தைகளாகையால், துன்ப அலைகள் வருவதை அனுமதிக்காதீர்கள்.
சுலோகம்:
நடைமுறை ரீதியில் ஒவ்வோர் எண்ணத்திலும் திடசங்கற்பம் எனும் சிறப்பியல்பை இடுங்கள், அப்பொழுது வெளிப்பாடு இடம்பெறும்.