15-04-2021 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்


இனிய குழந்தைகளே, தந்தையைப் போன்று கருணைநிறைந்தவர்களாகி, இப்பாதையை ஏனைய பலருக்கும் காண்பியுங்கள். இரவுபகலாகச் சேவையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளே, தைரியமானவர்கள் ஆவர்.

கேள்வி:

உங்கள் பாக்கியத்தை மேன்மையானதாக்குவதற்கான பிரதான அடிப்படை யாது?

பதில்:

நினைவுயாத்திரை ஆகும். நீங்கள் நினைவில் நிலைத்திருக்கும் அளவுக்கேற்பவே, நீங்கள் உங்கள் பாக்கியத்தை மேன்மையானதாக்குகிறீர்கள். உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்துக்காக அனைத்தையும் செய்யும்பொழுது, தொடர்ந்தும் தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாக்கியம் தொடர்ந்தும் மேன்மையானதாகும்.

பாடல்:

நான் என்னுடைய பாக்கியத்தை எழுப்பிவிட்டு, வந்துள்ளேன்.

ஓம் சாந்தி. குழந்தைகள் பிறக்கும்பொழுது, தங்கள் கர்மத்துக்கேற்ப, தங்கள் பாக்கியத்தைத்; தங்களுடன் கொண்டு வருகிறார்கள். சிலர் செல்வந்தப் பெற்றோர்களுக்குப் பிறக்கிறார்கள், ஏனையோரோ ஏழைப் பெற்றோருக்குப் பிறக்கிறார்கள். ஒரு வாரிசு வந்துவிட்டார் என்பதைத் தந்தை புரிந்துகொள்வார். அவர் எவ்வளவுக்குத் தானமளித்துள்ளார், அவர் எவ்வளவுக்குப் புண்ணியம் செய்துள்ளார் என்பதற்கேற்பவே, ஒவ்வொருவரும் ஒரு பிறவியைப் பெறுகிறார்கள். தந்தை ஒரு கல்பத்தின் பின்னர் மீண்டும் ஒருமுறை வந்து, இனிமையிலும் இனிமையான, அன்பிற்கினிய, நீண்டகாலம் தொலைந்து, இப்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் உங்களுடன் உங்கள் பாக்கியத்தைக் கொண்டுவந்துள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் அறிவீர்கள். நீங்கள் உங்களுடன் சுவர்க்க இராச்சியமாகிய உங்கள் பாக்கியத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள். இது மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்பவர்களுக்கும், தந்தையை நினைவுசெய்பவர்களுக்கும் பொருந்துகிறது. பாக்கியம் நினைவுடன் தொடர்புபட்டுள்ளது. நீங்கள் பிறவியெடுத்துள்ளதனால், தந்தையின் நினைவு இருக்க வேண்டும். நீங்கள் அதிக நினைவைக் கொண்டிருக்கும்பொழுது, உங்கள் பாக்கியம் உயர்வாக இருக்கும். இது அத்தகையதோர் இலகுவான விடயம்! நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன்முக்தியைப் பெறுகிறீர்கள். நீங்கள் சந்தோஷ தாமமாகிய உங்கள் பாக்கியத்தை அடைவதற்கே வந்துள்ளீPர்கள். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் முயற்சி செய்கிறீர்கள். எவ்வாறு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்பதைப் பார்ப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே பார்க்க வேண்டும். மம்மா, பாபா, சேவாதாரிக் குழந்தைகள் முயற்சி செய்வதைப் போன்றே, நீங்களும் அவர்களைப் பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள். நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கும்பொழுது, அது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் அறிமுகத்தையும் உள்ளடக்க வேண்டும். ரிஷிகள் அல்லது முனிகளில் எவரும் படைப்பவரினதோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதோ ஞானத்தைக் கொடுக்க முடியாது. இப்பொழுது உங்கள் புத்தி முழுச் சக்கரத்தையும் அறிந்துள்ளது. உலகில் எவரும் தந்தையையோ அல்லது ஆஸ்தியையோ அறியார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையையும், உங்கள் பாக்கியத்தையும் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் நிச்சயமாக உங்கள் சரீரத்தின் ஜீவனோபாயத்துக்காகச் செயல்களைச் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் இல்லறத்தையும் பராமரிக்க வேண்டும். பந்தனத்திலிருந்து விடுபட்ட எவரும் மிகச்சிறந்த சேவையைச் செய்ய முடியும். குழந்தைகள் இல்லாதவர்களுக்குச் சேவை செய்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால், ஒரு பெண்ணுக்குத் தனது கணவன், குழந்தைகள் என்னும் பந்தனம் உள்ளது. அவருக்குக் குழந்தைகள் இல்லாவிட்டால், அவர் பந்தனத்திலிருந்து விடுபட்டுள்ளார். அது ஓய்வு ஸ்திதியில் இருப்பதாகும். அப்பொழுது, முக்திதாமத்துக்குச் செல்வதற்குச் சகவாசம் தேவையாகும். பக்திமார்க்கத்தில், அவர்கள் சாதுக்கள் போன்றோரினதும், துறவறப்பாதையில் இருப்பவர்களினதும் சகவாசத்தைப் பெறுகிறார்கள். துறவறப்பாதையில் இருப்பவர்களால், எவரையும் இல்லறப் பாதையின் ஆஸ்தியைப் பெற வைக்க முடியாது. குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே மக்களை அவ்வாறு செய்ய வைக்க முடியும். தந்தை உங்களுக்குப் பாதையைக் காண்பித்துள்ளார். அமர்ந்திருந்து, பாரதத்தினதும், 84 பிறவிகளினதும் வரலாறையும், புவியியலையும் கூறுங்கள். பாரத மக்கள் மாத்திரமே 84 பிறவிகளை எடுக்கிறார்கள். இது ஒரு பிறவிக்கான கேள்வி மட்டுமல்ல. சூரிய வம்சத்துக்குரியவர்கள், பின்னர் சந்திர வம்சத்துக்கும், பின்னர் வைசிய வம்சத்துக்கும் செல்கிறார்கள்; அது வரிசைக்கிரமமானதாகும். அவர்கள் ஒரு தொட்டிலில் ஆட்டுகின்ற ஸ்ரீ கிருஷ்ணரே, பாரதத்தின் முதலாம் இலக்க இளவரசர் ஆவார். அவர்கள் இரண்டாம் இலக்கத்தவர்களைத் தொட்டிலில் ஆட்டுவதில்லை, ஏனெனில் கலைகள் குறைவடைகின்றன. முதலாம் இலக்கமே வழிபடப்படுகிறார். ஒரு கிருஷ்ணர் இருக்கிறாரா அல்லது இரண்டு அல்லது மூன்று கிருஷ்ணர்கள் இருக்கிறார்களா என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. கிருஷ்ணரின் வம்சம் உள்ளது என்பதை எவரும் அறியார். முதலாம் இலக்கம் மாத்திரமே வழிபடப்படுகிறார். வரிசைக்கிரமமாகப் புள்ளிகள் பெறப்படுகின்றன. ஆகவே, முயற்சி செய்யப்பட வேண்டும்: நான் ஏன் முதலாம் இலக்கத்தைப் பெறக்கூடாது? மம்மாவையும் பாபாவையும் பின்பற்றி, அவர்களின் இராச்சியத்தைக் கோருங்கள். நன்றாகச் சேவை செய்பவர்கள் ஒரு நல்ல குடும்பத்தில் ஒரு சக்கரவர்த்திக்குப் பிறப்பார்கள். அங்கு, சக்கரவர்த்தியும், சக்கரவர்த்தினியும் மாத்திரமே இருக்கிறார்கள். அவ்வேளையில் உள்ள அரசர்களுக்கும் அரசிகளுக்கும் அத்தகைய பட்டங்;கள் கிடையாது; அவர்கள் பின்னரே வருகிறார்கள். அவர்கள் துவாபரயுகத்தில் தூய்மையற்றவர்கள் ஆகும்பொழுது, பெரும் சொத்துக்கள் உள்ளவர்கள், அரசரின் பட்டத்தைப் பெறுகிறார்கள். ஒரு சக்கரவர்த்தியின் அந்தஸ்து குறைவடைகிறது, அது மறைந்துவிடுகிறது. பக்தி மார்க்கம் ஆரம்பிக்கும்பொழுது, செல்வந்தர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் வேறுபாடு; இருக்கிறது. இப்பொழுது, குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே சிவபாபாவை நினைவுசெய்து, அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைக் கோருகிறீர்கள். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில், மக்கள் அமர்ந்திருந்து, சமயக் கதைகளைக் கூறுகிறார்கள். மனிதர்கள் மனிதர்களுக்குப் பக்தியைக் கற்பிக்கிறார்கள். அவர்களால் ஞானத்தைக் கொடுக்கவோ அல்லது சற்கதியை அருளவோ முடியாது. வேதங்கள், சமயநூல்கள் போன்றன பக்தி மார்க்கத்துக்கு உரியவையாகும். ஞானத்தின் மூலம் மாத்திரம் சற்கதி உள்ளது. மக்கள் மறுபிறவியில் நம்பிக்கை வைக்கிறார்கள். இடையில் எவராலும் வீடு திரும்ப முடியாது. இறுதியில் மாத்திரமே தந்தை வந்து, திரும்பவும் அனைவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அந்த ஆத்மாக்கள் அனைவரும் எங்கு சென்று வசிப்பார்கள்? ஒவ்வொரு சமயமும் தனது சொந்தப் பிரிவைக் கொண்டுள்ளது. இதுவும் விளங்கப்படுத்;தப்பட வேண்டும். ஆத்மாக்களின் விருட்சமும் உள்ளது என்பதை எவரும் அறியார். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் முழு விருட்சத்தினதும் ஞானம் உள்ளது. ஆத்மாக்களின் விருட்சமும், உயிருள்ளவர்களின் விருட்சமும் உள்ளன. நீங்கள் உங்கள் பழைய சரீரங்களை நீக்கிவிட்டு, வீடு திரும்புவீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களைச் சரீரத்திலிருந்து வேறுபட்டவராகக் கருதுவது என்றால், மரணித்து வாழ்வதாகும். நீங்கள் மரணிக்கும்பொழுது, முழு உலகமே உங்களுக்கு மரணிக்கிறது. அப்பொழுது நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்ற அனைவரையும் விட்டு நீங்குகிறீர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், முழுக் கற்பித்தல்களையும் பெற்று, ஓர் அந்தஸ்துக்கான உரிமையையும் கோருங்கள், பின்னர் நீங்கள் வீடு திரும்புவீர்கள். தந்தையை நினைவுசெய்வது மிகவும் இலகுவானதாகும். ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும், நீங்கள் அவருக்குத் தொடர்ந்தும் கூற வேண்டும்: சிவபாபாவை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். உறுதியான யோகிகளாக இருப்பவர்கள் விரைவில் மரணிப்பது நல்லதல்ல, ஏனெனில் அவர்களால் யோகத்தில் நிலைத்திருக்கும்பொழுதே, ஆன்மீகச் சேவை செய்ய முடியும். அவர்கள் மரணித்தால், அவர்களால் சேவை செய்ய இயலாதிருக்கும். சேவை செய்வதனால், நீங்கள் தொடர்ந்தும் உங்கள் அந்தஸ்தை மேன்மையாக்குவதுடன், உங்களால் உங்கள் சகோதர, சகோதரிகளுக்குச் சேவை செய்யவும் இயலும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியையும் கோருவீர்கள். நாங்கள் ஒரு தந்தையின் குழந்தைகளாகிய, சகோதரர்கள் ஆவோம். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அவர் இதனை முன்னரும் கூறினார். உங்களால் எவருக்கும் விளங்கப்படுத்த முடியும்: சகோதர, சகோதரிகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள், நீங்கள் இப்பொழுது தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகி, சதோபிரதான் உலகத்துக்குச் செல்ல வேண்டும். நினைவுயாத்திரையின் மூலம் ஆத்மா சதோபிரதான் ஆக்கப்பட வேண்டும். நீங்கள் மிகச்சரியானதொரு நினைவு அட்டவணையை வைத்திருக்க வேண்டும். உங்களால் ஞானத்துக்கான அட்டவணையை வைத்திருக்க இயலாதுள்ளது. தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார். எவ்வாறு உங்கள் மீதுள்ள பாவச்சுமையை அகற்றுவது என நீங்கள் சோதிக்க வேண்டும். இதனாலேயே நினைவு அட்டவணை வைக்கப்பட்டுள்ளது. நான் எத்தனை மணித்தியாலங்கள் நினைவில் நிலைத்திருந்தேன்? நீங்கள் அசரீரி உலகை நினைவுசெய்வதுடன், புதிய உலகையும் நினைவுசெய்கிறீர்கள். குழப்பங்கள் வரவேண்டும். அதற்கான முன்னேற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அவர்கள் தொடர்ந்தும் குண்டுகளை உற்பத்தி செய்கிறார்கள். ஒருபுறம், அவர்கள் மரணத்தைக் கொண்டுவருவதற்கான பொருட்களைக் கண்டுபிடிக்கிறார்கள் என அவர்கள் கூறுகிறார்கள். மறுபுறம், அவர்கள் கூறுகிறார்கள்: மரணத்துக்கான எதையும் உற்பத்தி செய்ய வேண்டாம். அவர்கள் அபாயகரமான பொருட்களையும் கடலுக்கடியில் வைத்திருக்கிறார்கள். அவை கடலிலிருந்து (நீர்மூழ்கிகளில்) மேலே வந்து, குண்டுகளைப் போட்டுவிட்டு, பின்னர் மீண்டும் மூழ்கிவிடும். அவர்கள் தொடர்ந்தும் அத்தகைய விடயங்களை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த விநாசத்துக்காகவே, அவை அனைத்தையும் செய்கிறார்கள். மரணம் நேர்முன்னிலையில் உள்ளது. பல்வேறு பாரிய மாளிகைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். சிலரின் செல்வம் மண்ணுக்கடியில் புதைந்து விடும். யுத்தம் நிச்சயமாக நடைபெறும். அவர்கள் அனைவரினதும் சட்டைப்பைகளை வெறுமையாக்க முயற்சிசெய்கிறார்கள். அங்கு பல திருடர்கள் செல்கிறார்கள். அவர்கள் யுத்தத்தில் அதிகளவைச் செலவழிக்கிறார்கள். அவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். கட்டடங்கள் போன்ற அனைத்தும் வீழும். குண்டுகள் போன்றவை போடப்படும்பொழுது, உலகின் முக்காற்பங்கு அழிக்கப்படும். காற்பங்கு மாத்திரமே எஞ்சியிருக்கும். பாரதமே காற்பங்காகும், இல்லையா? ஏனைய அனைத்தும் பின்னரே வருகிறது. பாரதத்தின் பாகம் மாத்திரமே எஞ்சியிருக்கும். அனைவரும் மரணிக்க வேண்டும். ஆகவே, நாங்கள் ஏன் .தந்தையிடமிருந்து எங்கள் முழு ஆஸ்தியையும் கோரக்கூடாது? இதனாலேயே தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்கள் லௌகீக உறவினர்களுக்கான உங்கள் பொறுப்பையும் பூர்த்திசெய்ய வேண்டும். உங்களுக்குப் பந்தனங்கள் இல்லாவிட்டால், பாபா உங்களுக்கு ஆலோசனை கூறுவார்: நீங்கள் ஏன் சேவையில் மும்முரமாகக்கூடாது? நீங்கள் விடுபட்டிருக்கிறீர்கள், ஆகவே உங்களால் பலருக்கு நன்மையளிக்க முடியும். நல்லது, நீங்கள் வெளியே எங்கும் செல்லாதிருக்கலாம். நீங்கள் குறைந்தபட்சம் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்காகக் கருணைகொள்ள வேண்டும்! முன்னர், நீங்கள் கூறுவது வழக்கம்: பாபா, கருணை காட்டுங்கள்! இப்பொழுது உங்களுக்குப் பாதை காண்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தந்தை கருணைகாட்டுவதைப் போன்றே, நீங்களும் ஏனையோருக்குக் கருணை காட்ட வேண்டும். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சந்நியாசிகள் ஹத்தயோகம் செய்து, அதிகளவு முயற்சியைச் செய்கிறார்கள். இங்கு, நீங்கள் அதில் எதனையும் செய்வதில்லை. நீங்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டும், அதனால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதில் சிரமம் இல்லை. அது நினைவுயாத்திரையில் நிலைத்திருப்பதற்கான விடயமே. நீங்கள் அமரும்பொழுதும், நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும், உங்கள் பௌதீகப் புலன்களின் மூலம் அனைத்தையும் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் தொடர்புபடுத்துங்கள். அந்த அன்பிற்கினியவரின் உண்மையான காதலி ஆகுங்கள். அவரே கூறுகிறார்: ஓ காதலிகளே, ஓ குழந்தைகளே! பக்தி மார்க்கத்தில், நீங்கள் என்னைப் பெருமளவுக்கு நினைவுசெய்தீர்கள். இப்பொழுது அன்பிற்கினியவராகிய, என்னை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டுவிடும். நான் இதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன். இவ்விடயங்களிற் சில சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடவுளிடமிருந்து கீதையைச் செவிமடுப்பதனால், நீங்கள் ஜீவன்முக்தியைப் பெறுவீர்கள். மனிதர்களிடமிருந்து கீதையைச் செவிமடுப்பதனால், நீங்கள் பந்தன வாழ்க்கைக்குள் வந்துவிட்டீர்கள். நீங்கள் தொடர்ந்தும் ஏணியில் கீழிறங்கி வந்துள்ளீர்கள். நீங்கள் அனைத்து விடயங்களைப் பற்றியும் ஞானக்கடலைக் கடைய வேண்டும். உங்கள் புத்தியைப் பயன்படுத்துங்கள்! இதுவே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்ற புத்தியின் யாத்திரை ஆகும். வேதங்களையும், சமயநூல்களையும் கற்பதனால் அல்லது தபஸ்யா செய்வதனால் அல்லது வேள்விகளை வளர்ப்பதனால் பாவங்கள் அழிக்கப்பட மாட்டா. நீங்கள் கீழே வந்தீர்கள், நீங்கள் இப்பொழுது மேலே செல்ல வேண்டும். அதை அவர்களுக்கு ஒருவர் விளங்கப்படுத்தும் வரையில், எவராலும் ஏணியின் படத்திலிருந்து எதையும் புரிந்துகொள்ள முடியாதிருக்கும். இது ஒரு யானை எனச் சிறு குழந்தைகளுக்குப் படங்களைக் காண்பித்துக் கற்பிப்பதனால், அவர் ஒரு யானையைப் பார்க்கும்பொழுது, அவர் அந்தப் படத்தை நினைவுசெய்வார், அதேவிதமாக, இது புத்தியில் பிரவேசிக்கிறது. படங்களில் அவர்கள் சிறிய உருவங்களைக் காட்டுகின்றார்கள். வைகுந்தம் மிகவும் பெரிதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கு ஒரு பெரிய இராச்சியம் உள்ளது. அங்கு வைரங்களினாலும், இரத்தினங்களினாலுமான மாளிகைகள் இருக்கும். பின்னர் அவை அனைத்தும் மறைந்துவிடும். அனைத்தும் மறைந்துவிடும். வேறு எவ்வாறு இப்பாரதம் ஏழையாக இருக்க முடியும்? ஏழையிலிருந்து அது செல்வம் மிக்கதாகவும், செல்வம் மிக்கத்திலிருந்து ஏழையாகவும் ஆகவேண்டும். இந்நாடகம் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டது. இதனாலேயே ஏணியின் படம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. வருகின்ற புதியவர்களுக்கு விளங்கப்படுத்துவதனால், நீங்கள் அப்பயிற்சியை விருத்திசெய்வதுடன், உங்கள் வாய் திறக்கும். குழந்தைகள் சேவை செய்வதற்குத் தகுதிவாய்ந்தவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். பல நிலையங்களில், குழந்தைகள் பெருமளவு அமைதியின்மையைப் பரப்புகிறார்கள். அவர்களின் புத்தியின் யோகம் வெளியே அலையும்பொழுது, அவர்கள் சேதத்தை விளைவிப்பதுடன், சூழலையும் பாழாக்குகிறார்கள். அது வரிசைக்கிரமமானதாகும். ஆகவே தந்தை கூறுவார்: நீங்கள் கற்கவில்லை, இப்பொழுது உங்கள் நிலை இவ்வாறாகி விட்டது எனப் பாருங்கள்! நாளுக்கு நாள், நீங்கள் தொடர்ந்தும் அதிகக் காட்சிகளைப் பெறுவீர்கள். பாவம் செய்பவர்கள் தொடர்ந்தும் தண்டனை பெறுவார்கள். அப்பொழுது அவர்கள் கூறுவார்கள்: நான் காரணமின்றிப் பாவம் செய்தேன். நீங்கள் தந்தைக்குக் கூறி வருந்தும்பொழுது, அதை ஒரு சிறிதளவு குறைக்க முடியும். இல்லாவிட்டால், அது தொடர்ந்தும் அதிகரிக்கும். அது தொடர்ந்தும் நடைபெறும். பின்னர், நீங்களே அதை உணர்ந்து கூறுவீர்கள்: நான் என்ன செய்ய முடியும்? என்னுடைய இப்பழக்கம் முடிவடையவில்லை. ஆகவே, சென்று வீட்டில் வசிப்பதே, மேலானதாகும். சிலர் மிகச்சிறந்த சேவையைச் செய்கிறார்கள். சிலர் அவச்சேவையையும் செய்கிறார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து தனது சேனையில் வீரமும், தைரியமும் உள்ளவர்களின் பெயர்களை உங்களுக்குக் கொடுக்கிறார். இங்கு யுத்தம் போன்றவற்றின் கேள்வியே கிடையாது. இவை எல்லையற்ற விடயங்களாகும். நிச்சயமாகச் சிறந்த குழந்தைகள் தந்தையால் புகழப்படுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் கருணைநிறைந்தவர்களாகவும், நன்மையளிப்பவர்களாகவும் ஆகவேண்டும். குருடர்களுக்கு ஓர் ஊன்றுகோல் ஆகுங்கள். அனைவருக்கும் பாதையைக் காண்பியுங்கள். தந்தையை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கூறப்பட்டுள்ளது: பாவாத்மாவும், புண்ணியாத்மாவும். பரமாத்மா அவரில் அமர்ந்திருக்கிறார் என்பதல்ல, அல்லது ஓர் ஆத்மா பரமாத்மா ஆகுகிறார் என்பதல்ல. அவை அனைத்தும் தவறானவையாகும். பரமாத்மாவினால் எப்பாவமும் சேகரிக்கப்பட மாட்டாது. அவருக்கு நாடகத்தில் சேவை செய்வதற்கான பாகம் உள்ளது. மனிதர்களே பாவாத்மாக்களாகவும், புண்ணியாத்மாக்களாகவும் ஆகுகிறார்கள். சதோபிரதானாக இருந்தவர்கள் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். தந்தை இவரின் சரீரத்தில் அமர்ந்திருந்து உங்களைச் சதோபிரதான் ஆக்குகிறார், ஆகவே நீங்கள் அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். இப்பொழுது தந்தை உங்கள் புத்தியை மிகவும் பரந்ததாகவும், எல்லையற்றதாகவும் ஆக்கிவிட்டார். எவ்வாறு இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். தந்தை பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து, பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களைத் தேவர்களாக ஆக்குகிறார். பின்னர் நீங்கள் மறுபிறவி எடுத்து, எணியில் கீழே வருகிறீர்கள். இப்பொழுது அவை அனைத்தும் திரும்பத் திரும்ப நடைபெற வேண்டும். தந்தை மீண்டும் ஒருமுறை பிரம்மாவினூடாக ஸ்தாபனையை மேற்கொள்கிறார். நீங்கள் யோகசக்தி மூலம் ஐந்து விகாரங்களையும் வெற்றிகொண்டு, உலகை வென்றவர்களாக ஆகுகிறீர்கள். யுத்தம் போன்றவற்றுக்கான கேள்வியே கிடையாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இபபொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. பந்தனத்திலிருந்து விடுபட்டவராகி, உங்களைத் தந்தையின் சேவையில் ஈடுபடுத்துங்கள். அப்பொழுது மாத்திரமே நீங்கள் உங்கள் பாக்கியத்தை மேன்மையானதாக ஆக்குவீர்கள். கருணைநிறைந்தவர்களாகி, ஏனைய பலருக்கும் பாதையைக் காண்பியுங்கள். குருடர்களுக்கு ஓர் ஊன்றுகோல் ஆகுங்கள்.
  2. உங்கள் சரீரத்திலிருந்தான பற்றுக்கள் அனைத்தையும் அகற்றி, மரணித்து வாழுங்கள், ஏனெனில் நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நோய்வாய்ப்படும்பொழுதும், ஒரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்.

ஆசீர்வாதம்:

உங்களுக்கும் பிறருக்கும் சேவை செய்வதன் மூலம் வெற்றியின் சொரூபம் ஆகுவீர்களாக.

நீங்கள் சேவை செய்ய செல்லும் போதெல்லாம், நீங்கள் அந்தச் சேவையை செய்வதுடன், இறுதியாக உங்களுடைய பழைய சம்ஸ்காரங்களையும் தகனம் செய்கிறீர்கள் என எப்பொழுதும் நினையுங்கள். உங்கள் சம்ஸ்காரங்களை நீங்கள் எந்தளவிற்கு அதிகளவு தகனம் செய்கிறீர்களோ அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் மரியாதையை பெறுவீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் தமது மனதினால் உங்களுக்கு வந்தனம் செலுத்துவார்கள். எவ்வாறாயினும் வெறுமனே வெளிப்படையாக மாத்திரம் அவர்கள் உங்களை வந்தனம் செய்வர்களாக அல்லாது தமது மனதினாலும் வந்தனம் செய்பவர்களாக அவர்களை ஆக்குங்கள்.

சுலோகம்:

எல்லையற்ற சேவை செய்யும் இலக்கைக் கொண்டிருங்கள், அப்பொழுது உங்கள் எல்லைக்குட்பட்ட பந்தனங்கள் அனைத்தும் துண்டிக்கப்படும்.


---ஓம் சாந்தி---