10.04.21        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தூய்மையற்ற உலகுடனான அனைத்து உறவுமுறைகளையும் துண்டித்து, உங்களின் புத்தியைத் தந்தையொருவருடன் யோகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் மாயையால் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள்.

கேள்வி:
சர்வசக்திவானான தந்தை உங்களுடனேயே உள்ளபோதிலும்கூட, யக்ஞத்திற்குப் பல தடைகள் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

பதில்:
நாடகத்தின்படி, தடைகள் வந்தாக வேண்டும். ஏனெனில், இந்த யக்ஞத்திற்கு அசுரர்களால் தடைகள் ஏற்படுத்தப்படும்போதே பாவக் கலசம் நிரம்ப முடியும். இதனையிட்டுத் தந்தையால் எதுவும் செய்யமுடியாது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகள் வரவே செய்யும், ஆனால் நீங்கள் அவற்றையிட்டுப் பயப்படக்கூடாது.

பாடல்:
தாய் யார், தந்தை யார்?

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையின் கட்டளைகளைச் செவிமடுத்தீர்கள். நீங்கள் இவ்வுலகில் உங்களின் (லௌகீக) தாய், தந்தையுடன் பௌதீக மட்டத்தில் ஓர் உறவுமுறையை வைத்துள்ளீர்கள், ஏனெனில் சரீரத்தின் மூலமாக முதலில் தாயுடனும், பின்னர் தந்தையுடனும், அதன் பின்னர் நண்பர்கள், உறவினர்களுடனும் பற்று ஏற்படுகின்றது. எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: உங்களின் புத்தியின் யோகத்தை இவ்வுலக தாய், தந்தையிடமிருந்து துண்டித்துவிடுங்கள். இவ்வுலகுடன் மேலும் தொடர்புகள் வைத்திருக்காதீர்கள். ஏனெனில், அந்த உறவுமுறைகள் அனைத்தும் அழுக்கானவை, கலியுகத்திற்கானவை. ஜகத் என்றால் உலகம் ஆகும். தூய்மையற்ற உறவுகளுடனான உங்களின் யோகத்தை இத் தூய்மையற்ற உலகிலிருந்து துண்டித்து, என்னுடன் மாத்திரம் இணைத்துக் கொள்ளுங்கள், பின்னர் புதிய உலகுடன் இணைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் இப்பொழுது என்னிடம் வரவேண்டும். இது ஓர் உறவுமுறையை ஏற்படுத்திக்கொள்ளும் விடயமேயாகும். இதில் வேறு எதுவுமேயில்லை. இதில் எவ்வித சிரமமும் இல்லை. வழிகாட்டல்களைப் பெறுபவர்கள் ஓர் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்வார்கள். சத்திய யுகத்தில், உறவுமுறைகள் முதலில் நன்றாக உள்ளன, அவை சதோபிரதானானவை. பின்னர் நீங்கள் தொடர்ந்தும் கீழிறங்கும்போது, சந்தோஷ உறவுமுறைகள் குறைவடைகின்றன. இப்பொழுது இப்பழைய உலகுடனான சகல உறவுமுறைகளும் முற்றாகத் துண்டிக்கப்பட வேண்டும். தந்தை கூறுகின்றார்: என்னுடன் ஓர் உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள், சகல சரீர உறவுமுறைகளையும் துண்டித்துவிடுங்கள். விநாசம் நிகழ்ந்தாக வேண்டும். பரம பிதா, பரமாத்மா என அழைக்கப்படுகின்ற தந்தையும் நாடகத்தின்படி சேவை செய்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அவரும் நாடகத்தின் பந்தனத்தால் கட்டுப்பட்டுள்ளார். கிருஷ்ணரை சர்வசக்திவான் என மக்கள் நம்புவது போன்றே, கடவுளையும் சர்வசக்திவான் என நம்புகின்றனர். அவர்கள் கிருஷ்ணருக்கு சுயதரிசனச் சக்கரத்தைக் கொடுத்துள்ளனர். அதன் மூலம் அவர் அசுரர்களின் கழுத்தைத் துண்டித்ததாக அவர்கள் நம்புகின்றனர். எவ்வாறாயினும், தேவர்களால் வன்முறையான செயல்களைச் செய்ய முடியாதென்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்களால் அதைச் செய்ய முடியாது. தேவர்கள் அதிமேலான அஹிம்சை தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்கள் எனக் கூறப்படுகின்றது. எவ்வாறு அவர்கள் வன்முறையாளராக இருந்திருக்க முடியும்? மக்கள் தமது மனதில் தோன்றியதையெல்லாம் எழுதியிருக்கின்றார்கள். அவர்கள் சமயத்தை மிகவும் அவதூறு செய்துள்ளனர்! தந்தை கூறுகின்றார்: ஒரு மூட்டை மாவில் ஒரு துளி உப்பு இருப்பதைப் போன்றே சமய நூல்களில் உண்மை உள்ளது. உருத்திர ஞான யாகம் உருவாக்கப் பட்டதாகவும், அதற்கு அசுரர்கள் இடையூறுகளை விளைவித்ததாகவும், அப்பாவிப் பெண்;கள் தாக்கப்பட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது. அது மிகச் சரியாக எழுதப்பட்டுள்ளது. சமய நூல்களில் எது உண்மை, எது பொய் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். கடவுளே கூறுகின்றார்: இந்த உருத்திர ஞான யாகத்திற்கு நிச்சயமாகத் தடைகள் வரவே செய்யும். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடவுள் உங்களுடன் இருப்பதால், அவர் தடைகளை இல்லாமல் செய்துவிடுவார் என்றில்லை. அதனையிட்டுத் தந்தையால் என்ன செய்ய முடியும்? நாடகத்தில் அது நிகழ்ந்தாக வேண்டும். அவர்கள் அனைவரும் தடைகளை உருவாக்கும்போதே பாவக் கலசம் நிரம்ப முடியும். நாடகத்தில் நிகழவேண்டும் என நிச்சயிக்கப்பட்டவை மாத்திரமே நிகழும் எனத் தந்தை விளங்கப் படுத்துகின்றார். எங்களின் இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், அசுரர்களால் நிச்சயமாகத் தடைகள் வரவே செய்யும். அரைக் கல்பமாக, மாயையின் இராச்சியத்தில் மக்களின் புத்தி தமோபிரதானாகவும், சீரழிந்ததாகவும் ஆகுகின்றது. அவர்களை மேன்மையானவர்கள் ஆக்குவது தந்தையின் கடமையாகும். உங்களைச் சீரழிந்தவர்கள் ஆக்குவதற்கு அரைக் கல்பம் எடுக்கின்றது. பின்னர் தந்தை உங்களை ஒரு விநாடியில் மேன்மையானவர்கள் ஆக்குகின்றார். நம்பிக்கை வைப்பதற்கு அதிக காலம் எடுப்பதில்லை. நம்பிக்கை கொண்ட பல நல்ல குழந்தைகள் விரைவாக ஒரு சத்தியம் செய்கின்றனர், ஆனால் மாயையும் மிகவும் சக்திசாலி. அவள் மனதில் ஏதோவொரு புயலைக் கொண்டுவருகின்றாள். அதைச் செயற்படுத்தாமல் இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் அனைவரும் முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் இன்னமும் உங்களின் கர்மாதீத நிலையை அடையவில்லை. பௌதீக அங்கங்களினூடாக ஏதோவொன்று நிகழ்ந்துவிடுகின்றது. நீங்கள் உங்களின் கர்மாதீத நிலையை அடையும்வரை, நிச்சயமாக இடையிடையே தடைகள் வரவே செய்யும். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: முயற்சி செய்வதன் மூலம், நீங்கள் இறுதியில் உங்களின் கர்மாதீத நிலையை அடைவீர்கள். பின்னர் உங்களின் சரீரம் மேலும் இருக்க முடியாது. இதனாலேயே இதற்குக் காலம் எடுக்கின்றது. ஏதோவொரு தடை இருக்கவே செய்கின்றது. சில சமயங்களில், மாயை உங்களைத் தோற்கடித்தும் விடுகின்றாள். இது குத்துச் சண்டையாகும். பாபாவின் நினைவில் இருப்பதற்கு ஆசை உள்ளது, எனினும் உங்களால் அவ்வாறு செய்ய முடியாமலுள்ளது. எஞ்சியிருக்கின்ற சொற்ப காலத்தில், நீங்கள் படிப்படியாக அந்த ஸ்திதியை அடைய வேண்டும். எவரும் பிறவியிலேயே ஓர் அரசனாகிவிடுவதில்லை. ஒரு குழந்தை படிப்படியாகவே வளர வேண்டும். இதற்கும் காலம் எடுக்கும். இப்பொழுது மிகவும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. நீங்கள் செய்யும் முயற்சியிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. நீங்கள் கவனம் செலுத்துவீர்களாயின், என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் நிச்சயமாக உங்களின் ஆஸ்தியைத் தந்தையிடம் இருந்து கோருவீர்கள். மாயை நிச்சயமாக உங்களை எதிர்ப்பாள். இதனாலேயே நீங்கள் ஒரு சத்தியம் செய்கின்றீர்கள். மாயையும் சளைத்தவள் அல்ல. அவள் மிகச்சிறிய ரூபங்களில் வருகின்றாள். அவள் சக்திசாலிகளின் முன்னால் பெருமளவு சக்தியைப் பயன்படுத்துகின்றாள். இவ்விடயங்கள் சமய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. தந்தை கூறுகின்றார்: நான் இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நீங்கள் தந்தையிடமிருந்து ஜீவன் முக்தியைப் பெறுகின்றீர்கள். அதன் பின்னர் இந்த ஞானத்திற்கான தேவை இருக்காது. நீங்கள் ஞானத்தின் மூலம் ஜீவன் முக்தியைப் பெறுகின்றீர்கள். சத்திய யுகமே ஜீவன் முக்தி எனப்படுகின்றது. எனவே, இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களுக்கு உங்களின் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடகத்தின்படி, விருட்சம் வளர்வதற்குக் காலம் எடுக்கும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பல தடைகள் உருவாக்கப்படுகின்றன. மாற்றம் நிகழவே வேண்டும். நீங்கள் சிப்பிகளிலிருந்து வைரங்கள் ஆகவேண்டும். பகலுக்கும் இரவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. இன்றும்கூட, மக்கள் தொடர்ந்தும் தேவர்களுக்கு ஆலயங்களைக் கட்டுகின்றனர். பிராமணர்களாகிய நீங்கள் ஆலயங்கள் கட்டுவதில்லை. ஏனெனில் அது பக்தி மார்க்கம் ஆகும். பக்தி மார்க்கம் இப்பொழுது முடிவடையப்போகின்றது என்பதையும், பின்னர் ஞான மார்க்கத்திற்கே வெற்றி என்பதையும் உலகம் அறியாதுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்கின்றீர்கள். கலியுகம் இன்னமும் அதன் குழந்தைப் பருவத்திலேயே இருப்பதாக மக்கள் நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை அனைத்தும் சமய நூல்களிலேயே தங்கியுள்ளது. தந்தை இங்கிருந்து, வேதங்கள் சமய நூல்கள் அனைத்தினதும் இரகசியங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: இதுவரைக்கும் நீங்கள் கற்ற அனைத்தையும் மறந்துவிடுங்கள். அதன் மூலம் எவருமே சற்கதி பெறுவதில்லை. அதன் மூலம் அவர்கள் தற்காலிக சந்தோஷத்தையே பெற்றுவந்தாலும், நிலையான சந்தோஷத்தைப் பெறுவது சாத்தியமில்லை. அது கணப்பொழுது சந்தோஷமாகும். மக்கள் துன்பத்தில் உள்ளனர். சத்திய யுகத்தில் துன்பத்தின் பெயரோ, சுவடோ இல்லை என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். கம்சன் (அசுரன்) கிருஷ்ண பூமியில் இருந்ததாகவும், அங்கு ஏதோவெல்லாம் நிகழ்ந்ததாகவும், கிருஷ்ணர் சிறையில் பிறந்ததாகவும் அவர்கள் எழுதியுள்ளனர். அவர்கள் அத்தகைய பல விடயங்களை எழுதியுள்ளனர். சத்திய யுகத்தின் முதலாம் இலக்க இளவரசனான கிருஷ்ணர் என்ன பாவம் செய்தார்? அவையனைத்தும் கட்டுக் கதைகள் ஆகும். தந்தை உங்களுக்கு உண்மையைக் கூறியுள்ளதால் நீங்கள் இப்பொழுது இதைப் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை மாத்திரமே வந்து சத்திய பூமியை ஸ்தாபிக்கின்றார். சத்திய பூமியில் பெருமளவு சந்தோஷம் இருந்தது, பொய்மை நிறைந்த பூமியில் பெருமளவு துன்பமே உள்ளது. மக்கள் அவையனைத்தையும் மறந்துவிட்டனர். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் சத்திய பூமியை ஸ்தாபிப்பீர்கள் என்பதையும், பின்னர் அதன் அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதையும் அறிவீர்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் உங்களால் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரமுடியும். நீங்கள் கற்று, சூரிய வம்ச சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி ஆகவேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அனைவரும் உயர்ந்த அந்தஸ்தைக் கோரவே விரும்புகின்றனர். அனைவரும் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றனர். மிகச் சிறந்த, தீவிரமான பக்தர்கள் மீண்டும் மீண்டும் நினைவு செய்வதற்காக ஒரு படத்தைத் தங்களுடன் வைத்திருக்கின்றனர். பாபா கூறுகின்றார்: திரிமூர்த்தி படமொன்றை உங்களுடன் வைத்திருங்கள், அப்பொழுது நீங்களும் மீண்டும் மீண்டும் அதை நினைவு செய்வீர்கள். தந்தையை நினைவு செய்வதால் நாங்கள் சூரியவம்ச குலத்திற்குச் செல்வோம். நீங்கள் திரிமூர்த்தி படமொன்றை உங்களின் அறையில் மாட்டினால் உங்களின் பார்வை மீண்டும் மீண்டும் அதன்மீது விழும். பாபா மூலம் நாங்கள் சூரிய வம்ச குலத்திற்குச் செல்வோம். பின்னர், காலையில் நீங்கள் விழித்தெழுந்ததும் உங்களின் பார்வை அதன்மீது விழும். அதுவும் ஒருவித முயற்சியே ஆகும். பாபா உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார்: மிகச் சிறந்த பக்தர்கள் பெரும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் கண் விழித்தவுடனேயே கிருஷ்ணரை நினைப்பதற்காக கிருஷ்ணரின் படத்தைத் தங்களின் முன்னால் வைத்திருக்கின்றனர். உங்களுக்கு இது இன்னமும் இலகுவானது. உங்களால் இலகுவாக நினைவில் இருக்க முடியாவிட்டாலும், மாயை உங்களைத் தொந்தரவுசெய்தாலும், இப்படங்கள் உங்களுக்கு உதவி புரியும். சிவபாபா பிரம்மா மூலம் எங்களை விஷ்ணு பூமியின் அதிபதிகள் ஆக்குகின்றார். நாங்கள் பாபா மூலம் உலக அதிபதிகள் ஆகுகின்றோம். சதா இதை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் பெருமளவு உதவி பெறமுடியும். தாங்கள் மீண்டும் மீண்டும் மறந்துவிடுவதாக உணர்கின்ற குழந்தைகளுக்கு பாபா இந்த ஆலோசனை வழங்குகின்றார்: உங்கள் முன்னிலையில் ஒரு படத்தை வைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் தந்தையையும், உங்களின் ஆஸ்தியையும் நினைவு செய்வீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் பிரம்மாவை நினைவுசெய்யக்கூடாது. இருவர் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும்போது, அவர்கள் தரகரை நினைவு செய்வதில்லை. பாபாவை மிக நன்றாக நினைவு செய்யுங்கள், பாபாவும் உங்களை நினைவு செய்வார். நினைவே நினைவைக் கொண்டுவருகின்றது. இப்பொழுது நீங்கள் அன்பிற்கினியவரின் தொழிலை அறிவீர்கள். சிவ பக்தர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் “சிவா, சிவா” எனக் கூறுகின்றனர். எனினும் அது தவறானது. காசியில் அவர்கள் சிவனை உலகின் பிரபு எனக் கூறுகின்றனர், பின்னர் கங்கைகளைப் பற்றிப் பேசுகின்றனர். அவர்கள் ஆற்றங்கரைகளுக்குச் சென்று அமர்ந்துகொள்கின்றனர். தந்தை ஞானக்கடல் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. வெளிநாட்டவர்கள் பலர் பெனாரஸைப் பார்க்கச் செல்கின்றனர். அங்கு பெரிய ஆற்றங்கரைகள் பல உள்ளன. எவ்வாறாயினும், அனைவரதும் தந்தையின் ஆலயமே இன்னமும் அனைவரையும் கவர்கின்றது. அனைவரும் அதற்கே செல்கின்றனர். ஆலயம் எவரிடமும் செல்வதில்லை. ஆலயங்களிலுள்ள தேவ விக்கிரகங்கள் மக்களைத் தங்கள்பால் கவர்கின்றன. சிவபாபாவும் அனைவரையும் கவர்கின்றார். சிவபாபா முதலாம் இலக்கத்தவர், பின்னர் பிரம்மாவும், சரஸ்வதியும் இரண்டாம் இலக்க விஷ்ணு ஆவர். விஷ்ணு பின்னர் பிரம்மாவாகின்றார். பிராமணர்கள் பின்னர் விஷ்ணு பூமியின் தேவர்களாகின்றனர். விஷ்ணு பூமியின் தேவர்கள் பின்னர் பிராமணர்களாகின்றனர். இதுவே உங்கள் தொழிலாகும். நாங்கள் இப்பொழுது தேவர்களாகின்றோம், எனவே நாங்கள் மற்றவர்களுக்கும் பாதையைக் காண்பிக்க வேண்டும். மற்றவர்கள் அனைவரும் உங்களைக் காட்டுக்கே அழைத்துச் செல்வார்கள். நீங்கள் அனைவரையும் காட்டிலிருந்து வெளியேற்றி தோட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றீர்கள். சிவபாபா வந்து முட்களை மலர்களாக்குகின்றார். நீங்களும் இத்தொழிலையே செய்கின்றீர்கள். நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் விளங்கப்படுத்துவதற்கென அரசனோ, அரசியோ இல்லை. பாண்டவர்கள் மூன்றடி நிலத்தையேனும் பெறவில்லை என நினைவு கூரப்படுகின்றது. அவர்களுடைய தந்தை சக்திவாய்ந்தவராக இருந்ததால் அவர் உலக இராச்சியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். அதே பாகம் இப்பொழுது மீண்டும் நடிக்கப்படும். தந்தை மறைமுகமானவர். கிருஷ்ணருக்கு தடைகள் ஏற்பட முடியாது. தந்தை இப்பொழுது வந்துவிட்டார். நீங்கள் வந்து அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். இதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நாளுக்கு நாள் தொடர்ந்தும் புதிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இவ்விடயங்களை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதை உங்களால் காண முடியும். அனைத்தும் புத்தியாலேயே செய்யப்பட வேண்டும். கண்காட்சி மூலமா, புரொஜெக்டர் மூலமா சிறந்த தாக்கம் ஏற்படும்? கண்காட்சியில் நீங்கள் விளங்கப்படுத்தும்போது, உங்களால் அவர்களின் முகங்களைப் பார்க்க முடியும்: கீதையின் கடவுள் தந்தையே என்பதை நீங்கள் புரிந்துகொண்டால், உங்களின் ஆஸ்தியைக் கோர முயற்சி செய்யுங்கள். நீங்கள் இதற்கு ஏழு நாட்களை வழங்கவேண்டும். இதை அவர்களுக்கு எழுத்தில் கொடுங்கள்! அல்லாவிடில், அவர்கள் வெளியில் சென்றதுமே மாயை அவர்களை மறக்கச் செய்துவிடுவாள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்துள்ளீர்கள் என்பதும், இப்பொழுது நீங்கள் வீடு திரும்பவேண்டும் என்பதும் உங்கள் புத்தியில் உள்ளது. நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதானாக ஆகவேண்டும். நீங்கள் இப்படங்களை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். அவை மிகவும் சிறந்தவை. இலக்ஷ்மி, நாராயணன் எவ்வாறு அல்லது எப்பொழுது தங்களுடைய இராச்சிய பாக்கியத்தைப் பெற்றார்கள் என்பது “பிர்லா” போன்றோருக்குக்கூடத் தெரியாது. நீங்கள் இதை அறிவீர்கள். எனவே நீங்கள் அதிக சந்தோஷத்தை அனுபவம் செய்யவேண்டும். நீங்கள் இலக்ஷ்மி, நாராயணன் படத்தை எடுத்து, அவர்கள் எவ்வாறு, தங்களுடைய அந்தஸ்தைப் பெற்றார்கள் என்பதை விரைவாக மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இவ்விடயங்கள் அனைத்தும் புத்தியால் புரிந்துகொள்ளப்பட்டு, விளங்கப்படுத்தப்பட வேண்டும். இலக்கு மிக உயர்வானது. ஆசிரியர்களுக்கேற்பவே அவர்கள் செய்யும் சேவையும் இருக்கும். தங்கள் ஸ்திதிக்கு ஏற்ப நிலையங்களைப் பராமரிப்பவர்களை பாபாவினால் பார்க்க முடிகின்றது. அனைவரிடமும் போதை உள்ளது, ஆனால் உள்ளுணர்வு கூறுகின்றது: ஆசிரியர்கள் நன்றாக இருந்தால் பெருமளவு சேவை தொடர்ந்தும் இடம்பெறும். அனைவரும் திறமைசாலிகளாக இருக்க முடியாது. அனைவரும் ஒரே ஆசிரியரைக் கொண்டிருக்க முடியாது. முன்னைய கல்பத்தில் நிகழ்ந்தவையே இப்பொழுதும் நிகழ்கின்றது. தந்தை கூறுகின்றார்: தொடர்ந்தும் உங்கள் ஸ்திதியை உருவாக்குங்கள். இது ஒவ்வொரு கல்பத்திற்குமான விடயமாகும். ஒவ்வொருவரும் தாங்கள் முன்னைய கல்பத்தில் செய்த அதே முயற்சியையே செய்வதைக் காணலாம். என்ன நிகழ்ந்தாலும், முன்னைய கல்பத்திலும் அதேவிதமாக நிகழ்ந்தது என நாங்கள் கூறுகின்றோம். அப்பொழுது அந்த சந்தோஷமும், அமைதியும் ஏற்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: செயல்களைச் செய்யும்போது தந்தையை நினைவு செய்யுங்கள். உங்களின் புத்தியின் யோகம் அவருடனேயே சுற்றித்திரியட்டும். அப்பொழுது நீங்கள் பெருமளவு நன்மையை அனுபவிப்பீர்கள். இதைச் செய்பவர்கள் யாராயினும், அதற்கான வெகுமதியைப் பெறுவார்கள். நீங்கள் நல்லதைச் செய்யும்போது, நீங்கள் பெறுவதும் நல்லதாகவே இருக்கும். மாயையின் கட்டளைகளைப் பின்பற்றுவதால், அனைவரும் தொடர்ந்தும் தீய செயல்களையே செய்துவருகின்றனர். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பெறுகின்றீர்கள். நல்லதையே செய்யுங்கள், அப்பொழுது உங்களுக்கும் நல்லதே செய்யப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவே முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும், அதற்கேற்ப வெகுமதியைப் பெறுவீர்கள். நாங்கள் ஏன் யோகம் செய்து, தொடர்ந்தும் சேவை செய்யக்கூடாது? யோகத்தால் உங்கள் ஆயுட்காலம் அதிகரிக்கும். நினைவு யாத்திரையில் இருப்பதன் மூலம் நாங்கள் நோயற்றவர்கள் ஆகுவோம். எனவே, நாங்கள் ஏன் பாபாவின் நினைவில் இருக்கக்கூடாது? இது சரியாயின், நாங்கள் ஏன் அதைச் செய்யக்கூடாது? ஞானம் மிகவும் இலகுவானது. சிறுவர்களால்கூட அதைப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும். எவ்வாறாயினும், அவர்கள் யோகிகள் அல்லர். அவர்கள் தந்தையை நினைவு செய்யவேண்டும் என்பதை உறுதியாக்கிக் கொள்ளுங்கள். தாங்கள் மீண்டும் மீண்டும் மறந்துவிடுவதாக உணர்பவர்கள் தங்களுடன் படங்களை வைத்திருக்க வேண்டும். அதுவும் நன்றாக இருக்கும். நீங்கள் காலையில் விழித்தெழுந்து, படங்களைப் பார்த்ததுமே, சிவபாபாவிடமிருந்து உங்களின் ஆஸ்தியான விஷ்ணுதாமத்தைக் கோருகின்றீர்கள் என்பதை நினைவு செய்வீர்கள். இந்தத் திரிமூர்த்தி படமே பிரதானமானது. இப்பொழுது நீங்கள் அதன் அர்தத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். உலகிலுள்ள எவருமே இத்தகைய திரிமூர்த்தி படத்தை வைத்திருக்கவில்லை. இது மிக இலகுவானது. நாங்கள் எழுதுகின்றோமோ, இல்லையோ, பிரம்மா மூலம் ஸ்தாபனையும், விஷ்ணு மூலம் பராமரிப்பும் இடம்பெறுகின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்கின்றனர். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் மாயையுடன் குத்துச் சண்டையிடும்பொழுது, ஒருபோதுமே தோற்கடிக்கப்படாமல் இருப்பதில் கவனம் செலுத்துங்கள். முன்னைய கல்பத்தின் விழிப்புணர்வினால் உங்கள் ஸ்திதியை உருவாக்குங்கள். சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருங்கள்.

2. உங்களுக்கு நல்லதையே செய்வதற்கு, ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். இப்பழைய உலகுடனான சகல உறவுமுறைகளையும் துண்டித்துவிடுங்கள். மாயையின் புயல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு, படங்களை உங்கள் முன்னால் வைத்திருந்து, தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
ஞானத்தை அருள்பவராகவும் ஆசீர்வாதங்களை அருள்பவராகவும் இருந்து, பலவீனமான ஆத்மாக்களை சக்திகளின் பலத்தால் நிரப்புவீர்களாக.

தற்காலத்தில், பலவீனமான ஆத்மாக்களுக்கு பாய்ந்து செல்வதற்கு போதிய சக்தி இல்லாதுள்ளது. அவர்களுக்கு மேலதிக பலம் தேவையாகும். எனவே, அவர்கள் பாய்ந்து செல்வதற்கு உதவுவதற்கு, விசேடமான ஆத்மாக்களாகிய நீங்கள் விசேடமான சக்தியினால் உங்களை நிரப்ப வேண்டும். இதற்கு, ஞானத்தை அருள்பவராக இருப்பதுடன், நீங்கள் சக்திகளின் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் இருக்க வேண்டும். படைப்பவர் படைப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றார் என்பதால், ஆசீர்வாதங்களை அருள்பவராகி உங்கள் படைப்பிற்கு சகல சக்திகளதும் ஆசீர்வாதங்களை வழங்குங்கள். இப்பொழுது இந்தச் சேவைக்கான தேவையே உள்ளது.

சுலோகம்:
ஒவ்வொரு விளையாட்டையும் ஒரு பற்றற்ற பார்வையாளராக பார்த்தால் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதுடன் சந்தோஷமாகவும் இருப்பீர்கள்.