11.03.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே பிராமண குலத்தின் அதி மேன்மையான, அதி பாக்கியசாலி அலங்காரங்கள். கடவுளே உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றார்.கேள்வி:
தந்தை ஏன் குழந்தைகளாகிய உங்களுக்கு சத்திய யுகத்திலன்றி, சங்கம யுகத்திலேயே உலகம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றார்?பதில்:
சத்திய யுகம் ஆரம்ப காலம் ஆகும். எவ்வாறு அவர் முழு உலகம் பற்றிய செய்தியை அதாவது, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தை அந்நேரத்தில் கூறியிருக்க முடியும்? சக்கரம் மீண்டும் மீண்டும் சுழலவில்லையாயின், எவ்வாறு அவர் சக்கரம் பற்றிய செய்தியைக் கூறமுடியும்? சங்கம யுகத்தில் மாத்திரமே குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தையால் முழுச் செய்தியும் வழங்கப்படுகின்றது. நீங்களே மூன்றாவது ஞானக் கண்ணையும் பெறுகின்றீர்கள்.
ஓம் சாந்தி.
இன்று, மங்களகரமான நாள், திரிமூர்த்தி சிவனின் பிறந்த தினமாகும். எனவே, அனைத்து பிராமணர்களினதும் பிறந்த தினமாகும், அத்துடன் சங்கம யுகத்தினதும் பிறந்த தினமாகும். பாபாவால் பலருக்கு இந்த இறை பிறப்புரிமைக்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்க முடியாமலுள்ளது. சிவபாபாவையோ அல்லது அவரிடமிருந்து நீங்கள் எதைப் பெறுகின்றீர்கள் என்பதையோகூட அறியாமல் பலர் உள்ளனர். இவ்வாழ்த்துக்களைப் பற்றி அவர்கள் எதைப் புரிந்துகொள்வார்கள்? புதிய குழந்தைகளால் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. இது ஞான நடனமாகும். ஸ்ரீ கிருஷ்ணர் நடனமாடியதாகக் கூறப்படுகின்றது. இங்கு, குழந்தைகள் இராதையும், கிருஷ்ணரும் போன்று ஆடையணிந்து நடனமாடுகின்றனர். எவ்வாறாயினும், நடனம் என்ற கேள்விக்கு இடமில்லை. சத்திய யுகத்தில் அவர் தனது குழந்தைப் பருவத்தில் இளவரசர்களுடனும், இளவரசிகளுடனும் நடனமாடுகின்றார். இவர் பாப்தாதா என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தாதா பாட்டனார் எனப்படுகின்றார். இந்த தாதா ஒரு பௌதீகத் தந்தையாவார். இது ஓர் அற்புதமான விடயமாகும்! அந்த தாதா ஆன்மீகமானவர், இவரோ (பிரம்ம பாபா) பௌதீகமானவர். நாங்கள் பாப்தாதா என அழைக்கப்படுகின்றோம். நீங்கள் பாட்டனாரின் ஆஸ்தியைத் தந்தை மூலம் பெறுகின்றீர்கள். ஆஸ்தி பாட்டனாரிடமிருந்தாகும். சகல ஆத்மாக்களும் சகோதரர்கள். நீங்கள் தந்தையிடமிருந்தே ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் உங்களது சொந்தச் சரீரங்களையும், பௌதீக அங்கங்களையும் கொண்டிருக்கின்றீர்கள். நான் அசரீரியானவர் என அழைக்கப்படுகின்றேன். எனவே, எனக்கு நிச்சயமாக ஒரு சரீரம் தேவை. அப்பொழுதே என்னால் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்க முடிவதுடன், மனிதர்களை தேவர்களாக்குவதற்கும், தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்குமான பாதையை உங்களுக்குக் காண்பிக்க முடியும். நான் அழுக்கான ஆடைகளைக் கழுவுகின்றேன். அவர் நிச்சயமாக ஒரு மகத்தான சலவைத் தொழிலாளி ஆவார். அவர் உலகம் முழுவதிலுமுள்ள சகல ஆத்மாக்களையும், சரீரங்களையும் கழுவுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் ஞானத்தாலும், யோகத்தாலும் கழுவப்படுகின்றீர்கள். இன்று இங்கு வந்திருக்கின்ற குழந்தைகள், சிவபாபாவிற்கு வாழ்த்துத் தெரிவிக்கவே வந்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் யாருக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்துள்ளீர்களோ, அவரே உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார். ஏனெனில், நீங்களே பிராமண குலத்தின் அதி மேன்மையான, அதி பாக்கியசாலி அலங்காரங்கள். தேவர்கள் உங்களின் அளவிற்கு மேன்மையானவர்களல்லர். பிராமணர்கள் தேவர்களை விடவும் உயர்ந்தவர்கள். தந்தையே அதியுயர்ந்தவர். அவர் பின்னர் பிரம்மாவின் சரீரத்தினுள் பிரவேசிக்கின்றார். அவரின் குழந்தைகளாகிய நீங்கள் அதியுயர்ந்த பிராமணர்கள் ஆகுகின்றீர்கள். பிராமணர்களே உச்சிக் குடுமிகள். தேவர்கள் அவர்களுக்குக் கீழேயே உள்ளனர். சிவபாபாவே மிக உச்சியில் உள்ளார். பாபா உங்களுடைய சுவர்க்க ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே குழந்தைகளாகிய உங்களை பிராமணர்கள் ஆக்கியுள்ளார். மக்கள் இலக்ஷ்மி நாராயணனுக்கு எத்தனை ஆலயங்களைக் கட்டியுள்ளனர் எனப் பாருங்கள்! அம்மக்கள் அவர்களுக்குத் தலைவணங்குகின்றனர். தேவர்களும் மனிதர்களே என்பதை பாரத மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலக்ஷ்மியும், நாராயணனும் ஒருவரிலிருந்து ஒருவர் வேறுபட்டவர்கள். இங்கு, ஒருவரே இருவரினதும் பெயரைக் கொண்டிருப்பதும் உண்டு. ஒருவர் தன்னை இலக்ஷ்மி-நாராயணன் என அழைக்கின்றார். அப்படியாயின், அவர் தன்னை நான்கு புயங்களுடைய ரூபமான விஷ்ணு என அழைக்கின்றார் என்றே அர்த்தமாகும். அவர்கள் இலக்ஷ்மி-நாராயணன் என்றோ, இராதா-கிருஷ்ணர் என்றோ தங்களுக்குப் பெயர் சூட்டிக்கொள்கின்றனர். அப்படியாயின், அவர்கள் நான்கு புயங்களுடைய ரூபமாகிவிட்டனர் என்றல்லவா அர்த்தம். சூட்சுமலோகத்து விஷ்ணுவே இலக்கும் இலட்சியமும் ஆகும். நீங்கள் விஷ்ணு தாமத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். இலக்ஷ்மியும், நாராயணனும் விஷ்ணு தாமத்தின் அதிபதிகளாவர். விஷ்ணு நான்கு புயங்களைக் கொண்டவர். இரண்டு இலக்ஷ்மியினுடையவையும், இரண்டு நாராயணனுடையவையும் ஆகும். நீங்கள் விஷ்ணு தாமத்தின் அதிபதிகளாகின்றீர்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள். அச்சா, தந்தையின் புகழை ஒரு பாடலாகப் பாடுங்கள்! ஆரம்பத்திலிருந்து இன்றுவரை, ஒருவரைத் தவிர வேறு எவருக்குமே உலகம் முழுவதிலும் புகழ் இல்லை. அனைத்தும் வரிசைக்கிரமம் ஆகும். அதி மகத்தானதும், அதியுயர்ந்ததுமான புகழ் அதியுயர்ந்த பரம தந்தை பரமாத்மாவிற்கேயாகும். நீங்கள் அவரின் குழந்தைகள். நீங்கள் கூறுகின்றீர்கள்: நாங்கள் கடவுளின் குழந்தைகள். கடவுளே சுவர்க்கத்தைப் படைப்பவர், எனவே நீங்கள் ஏன் இன்னமும் நரகத்தில் இருக்கின்றீர்கள்? கடவுள் இங்கேயே பிறப்பெடுக்கின்றார். தாங்கள் கிறிஸ்துவிற்குரியவர்கள் என கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். பாரத மக்கள் தாங்கள் பரம தந்தை பரமாத்மாவின் நேரடிக் குழந்தைகள் என்பதை மறந்துவிட்டனர். தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தனக்குரியவர்களாக்கி, உங்களின் இராச்சிய பாக்கியத்தை உங்களுக்கு வழங்குவதற்காகவே இங்கு வருகின்றார். பல புதிய குழந்தைகள் வந்திருப்பதால், இன்று பாபா அனைத்தையும் மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். புரிந்துகொள்வது அவர்களுக்குச் சிரமமாக இருந்தாலும், அவர்கள் எப்படியோ சுவர்க்கவாசிகள் ஆகுவார்கள். சத்திய யுகத்தில் சூரிய வம்ச அரசன், அரசி, பணிப்பெண்கள், வேலையாட்கள், பிரஜைகள் போன்றோர் இருப்பர். அவர்களில் சிலர் ஏழைகள், சிலர் செல்வந்தர்கள். அவர்களுக்கும் பணிப்பெண்களும், வேலையாட்களும் இருப்பார்கள். முழு இராச்சியமும் இங்கு ஸ்தாபிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. வேறு எவருக்கும் இது தெரியாது. சகல ஆத்மாக்களும் தமோபிரதானாக உள்ளனர். எவரிடமும் மூன்றாவது ஞானக்கண் இல்லை. (ஒரு பாடல் இசைக்கப்பட்டது.) நீங்கள் பாடலில் தந்தையின் புகழைக் கேட்டீர்கள். அவரே அனைவரதும் தந்தையாவார். கடவுள் தந்தை என அழைக்கப்படுகின்றார், அவர் முடிவற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்ற தந்தையாவார். இது முடிவற்ற சந்தோஷத்தைக் கொண்டிருந்த பாரதமாகும். இங்கு இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது. இலக்ஷ்மியும் நாராயணனும் குழந்தைப் பருவத்தில் இராதை, கிருஷ்ணராக இருந்தனர். அவர்களின் திருமணத்தின்போதே அவர்களுக்கு இலக்ஷ்மி, நாராயணன் என்ற பெயர் வழங்கப்பட்டது. 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதத்தில் தேவர்களின் இராச்சியம் இருந்தது. அங்கு வேறு எவருடைய இராச்சியமும் இருக்கவில்லை, இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் மாத்திரமே இருந்தது. அங்கு வேறெந்த நாடுகளும் இருக்கவில்லை. எனவே, இலக்ஷ்மியும் நாராயணனும் தங்களின் முன்னைய பிறவியில் எத்தகைய செயல்களைச் செய்தார்கள் என்பதை பாரத மக்கள் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். பீர்லா மிகவும் செல்வந்தர் ஆகுமளவிற்கு எத்தகைய செயல்களைச் செய்தார் என மக்கள் கேட்கின்றனர். அவர் நிச்சயமாகத் தனது முன்னைய பிறவியில் பெருமளவு தான தர்மங்கள் செய்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது. சிலரிடம் ஏராளமான செல்வம் இருக்கின்றது. ஆனால் சிலரிடமோ உண்பதற்குக்கூட போதியளவு இல்லை. ஏனெனில் அவர்கள் அத்தகைய செயல்களைச் செய்திருக்கின்றார்கள். அனைவருக்கும் கர்மத்தில் நம்பிக்கை இருக்கின்றது. கீதையின் கடவுள் செயல்களினதும், நடுநிலைச் செயல்களினதும், பாவச் செயல்களினதும் தத்துவத்தை விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் அவரின் புகழைக் கேட்டீர்கள். கடவுள் சிவன் ஒரேயொருவரே. மனிதர்களைக் கடவுள் என அழைக்க முடியாது. தந்தை இப்பொழுது எங்கிருந்து வந்திருக்கின்றார்? மகாபாரத யுத்தம் சற்று முன்னாலேயே உள்ளதாக நீங்கள் விளங்கப்படுத்துகின்றீர்கள். அனைவரும் துன்ப வேளையிலேயே தன்னை நினைப்பதாக இனிமையிலும் இனிமையான பாபா விளங்கப்படுத்துகின்றார். “துன்பத்திலுள்ளபோதே அனைவரும் கடவுளை நினைவு செய்கின்றனர்…” துன்பத்தில் இருக்கும்போதே அனைவரும் சிவபாபாவை நினைவு செய்கின்றனர். சந்தோஷமாக உள்ளபோது எவருமே அவரை நினைவு செய்வதில்லை. சுவர்க்கத்தில் எவ்வித துன்பமும் இருக்கவில்லை. அங்கு, அவர்கள் தந்தையிடமிருந்து பெற்ற ஆஸ்தி அவர்களிடம் இருந்தது. 5000 வருடங்களுக்கு முன்னர் சிவபாபா வந்தபோது, அவர் பாரதத்தைச் சுவர்க்கமாக்கினார். அது இப்பொழுது நரகமாக உள்ளது. தந்தை சுவர்க்கத்தை உருவாக்க வந்துள்ளார். உலகிலுள்ள எவருக்கும் இதுகூடத் தெரியாது. அவர்கள் கூறுகின்றனர்: நாங்கள் எல்லோரும் குருடர்கள்! ஓ கடவுளே! குருடருக்கு ஊன்றுகோலாகத் திகழ்பவரே, வாருங்கள்! வந்து எங்களுக்குப் பார்வையைக் கொடுங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் மூன்றாவது ஞானக் கண்ணைப் பெற்றுள்ளீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்குமிடம் சாந்திதாமம் ஆகும். தந்தைகூட அங்கேயே வசிக்கின்றார். ஆத்மாக்களாகிய நீங்களும், நானும் அங்கேயே வசிக்கின்றோம். அவர் இந்த ஆத்மாவினூடாகக் கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தையாகிய நான் அங்கேயே வசிக்கின்றேன். நீங்கள் மறுபிறவிகளுடன் கூடிய உங்களின் பாகங்களை நடிக்கின்றீர்கள், ஆனால் நான் அவ்வாறில்லை. நீங்கள் உலகின் அதிபதிகளாகின்றீர்கள், நான் அவ்வாறு ஆகுவதில்லை. நீங்கள் 84 பிறவிகள் எடுத்தாக வேண்டும். உங்களுக்குக் கூறப்பட்டது: ஓ குழந்தைகளே, உங்களுடைய சொந்தப் பிறவிகளைப் பற்றியே உங்களுக்குத் தெரியாது. மக்கள் 8.4 மில்லியன் பிறவிகளைப் பற்றிப் பேசுவது பொய்யாகும். நான் ஞானக் கடலும், தூய்மையாக்குபவரும் ஆவேன். அனைவரும் தூய்மையற்றிருக்கும்போதே நான் வருகின்றேன். அப்பொழுதே நான் உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை விளங்கப்படுத்தி, உங்களை திரிகாலதரிசிகள் ஆக்குகின்றேன். பலர் கேட்கின்றனர்: மனிதர்கள் முதலில் எவ்வாறு படைக்கப்பட்டனர்? கடவுள் எவ்வாறு உலகைப் படைத்தார்? சமய நூலொன்றில், பிரளயம் இடம்பெறுவதாகவும், குழந்தை கிருஷ்ணர் அரசமிலையில் கடலில் மிதந்து வருவதாகவும் அவர்கள் காட்டியுள்ளனர். தந்தை கூறுகின்றார்: அவ்வாறு எதுவும் இல்லை. இது எல்லையற்ற நாடகமாகும். சத்திய, திரேதா யுகங்கள் பகலும், துவாபர, கலியுகங்கள் இரவும் ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: உங்களுக்கும் அது உரித்தாகட்டும்! நீங்கள் 100மூ துர்பாக்கியசாலிகளிலிருந்து 100மூ பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் அதே பாரத மக்கள், ஆனால் உங்களுக்கு அது தெரியாது. தந்தை இதை உங்களுக்குக் கூறுவதற்காகவே வந்திருக்கின்றார். உங்களின் சொந்தப் பிறவிகளைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் 84 பிறவிகள் எடுத்துள்ளீர்கள் என்பதை நான் வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். தந்தை முழு உலகினதும் செய்திகளை சங்கம யுகத்திலேயே உங்களுக்குக் கூறுகின்றார். அவர் சத்திய யுகத்தில் அதை உங்களுக்குக் கூறுவதில்லை. உலகம் ஆரம்பம் முதல் மத்தியூடாக இறுதி வரைக்கும் சென்றிராத நிலையில் அவரால் எவ்வாறு உங்களுக்கு அது பற்றிய செய்தியைக் கூறமுடியும்? நான் சக்கரத்தின் இறுதிப் பகுதியாகிய சங்கம யுகத்திலேயே வருகின்றேன். நான் ஒவ்வொரு யுகத்திலும் வருவதாக சமய நூல்களில் அவர்கள் எழுதியுள்ளனர். “கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார்” என கீதை கூறுகின்றது. ஏனைய சமயத்தவர்கள் கிருஷ்ணரைக் கடவுள் என நம்புவதில்லை. கடவுள் அசரீரியானவர். அவரே சகல ஆத்மாக்களினதும் தந்தையாவார். நீங்கள் தந்தையிடமிருந்தே உங்களின் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள். கடவுள் சர்வவியாபகர் என அழைக்கப்படும்போது, அது தந்தைத்துவம் ஆகிவிடுகின்றது. ஒரு தந்தை ஆஸ்தியைப் பெறுவாரா? குழந்தைகளே ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றனர். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் குழந்தைகள். உங்களுக்கு நிச்சயமாகத் தந்தையின் ஆஸ்தி தேவை. நீங்கள் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியால் சந்தோஷமடைவதில்லை. அதனாலேயே நீங்கள் கூவியழைக்கின்றீர்கள்: உங்களின் கருணை மூலம் நாங்கள் பெருமளவு சந்தோஷத்தைப் பெற்றோம். இப்பொழுது, நீங்கள் இராவணனிடமிருந்து துன்பத்தைப் பெற்றதால், மீண்டும் கூவியழைக்க ஆரம்பித்தீர்கள். ஆத்மாக்கள் அனைவரும் சந்தோஷமற்றிருப்பதால், அவர்கள் ஒவ்வொருவரும் கூவியழைக்கின்றனர். அதனாலேயே அவர்கள் அவரை நினைவு செய்து, கூறுகின்றனர்: பாபா, வந்து எங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுங்கள்! இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் சற்கதி அடைவதாலேயே நினைவுகூரப்படுகின்றது: அனைவருக்கும் சற்கதி அருள்பவர் தந்தை ஒருவரே. இப்பொழுது அனைவரும் சீரழிந்த நிலையிலுள்ளனர், பின்னர் அனைவரும் சற்கதியடைவர். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தபோது நீங்கள் சுவர்க்கத்தில் இருந்தீர்கள். ஏனைய அனைவரும் முக்தி தாமத்தில் இருந்தனர். நாங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து இராஜ யோகம் கற்கின்றோம். தந்தை கூறுகின்றார்: நான் சக்கரத்தில் சங்கம யுகத்திலேயே உங்களுக்குக் கற்பிக்கின்றேன். நான் உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக்குகின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்து இரகசியங்களையும் விளங்கப்படுத்துகின்றேன். சிவராத்திரி எப்பொழுது என்பதையும், சிவபாபா வந்தபோது என்ன நடந்ததென்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மக்களுக்கு எதுவுமே தெரியாது. எனவே, அவர்கள் கல்லுப் புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது தெய்வீகப் புத்தியுடையவர்கள் ஆகுகின்றீர்கள். பாரதம் சத்திய யுகமாக இருந்தபோது, அங்குள்ள அனைவரும் தெய்வீகப் புத்தியைக் கொண்டிருந்தனர். இலக்ஷ்மியும், நாராயணனும் தேவி, தேவன் என்றும் அழைக்கப்படுகின்றனர். கடவுளே அவர்களுக்கு ஆஸ்தியைக் கொடுத்தார். அவர் இப்பொழுதும் அவர்களுக்கு அதை வழங்குகின்றார். அவர் மீண்டும் ஒரு தடவை உங்களை தேவ, தேவியர் ஆக்குகின்றார். இப்பொழுது இது உங்களின் பல பிறவிகளின் இறுதிப் பிறவியாகும். தந்தை கூறுகின்றார்: விநாசம் சற்று முன்னால் உள்ளது. இது உருத்திர ஞான யாகம் எனப்படுகின்றது. அந்த யாகங்கள் அனைத்தும் பௌதீகமானவை (பௌதீகத் தேவைகளுக்காக வளர்க்கப்படுபவை). இது ஞான விடயமாகும். தந்தை வந்து, இந்த யாகத்தில் மனிதர்களை தேவர்களாக்குகின்றார். சிவபாபா வரும்போது நீங்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றீர்கள். பாபா பின்னர் கூறுகின்றார்: நான் தனியாக வருவதில்லை. எனக்கும் ஒரு சரீரம் தேவை. நான் பிரம்மாவின் சரீரத்தினுள் பிரவேசிக்க வேண்டியுள்ளது. முதலில் சூட்சுமலோகம் உருவாக்கப்பட வேண்டும். அதனாலேயே நான் அவரினுள் பிரவேசித்தேன். அவர் தூய்மையற்றவர். அவர் 84 பிறவிகள் எடுத்ததால் தூய்மையற்றவர் ஆகினார். அனைவரும் கூவியழைக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு உங்களின் ஆஸ்தியைக் கொடுப்பதற்காக இப்பொழுது மீண்டும் ஒரு தடவை வந்துவிட்டேன். தந்தை மாத்திரமே பாரதத்திற்கு சுவர்க்க ஆஸ்தியை வழங்குகின்றார். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். எனவே, அவர் நிச்சயமாக சுவர்க்கம் என்ற பரிசை வழங்குவார். நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இது மனிதர்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு தேவர்களாகின்ற பாடசாலையாகும். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் 21 சந்ததிகளுக்கு சந்தோஷத்தைப் பெறுகின்றீர்கள். அங்கு அகால மரணம் கிடையாது. உங்கள் சரீரத்தின் ஆயுட்காலம் முடிவுக்கு வரும்போது, நீங்கள் உங்களின் சரீரத்தை நீக்கி வேறொன்றை எடுப்பீர்கள் என்ற காட்சி உங்களுக்குக் கிடைக்கும். பாம்பின் உதாரணம் உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றீர்கள், பதிலாக, தந்தையும் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார். நீங்கள் இப்பொழுது துர்பாக்கியசாலிகளில் இருந்து மிகவும் பாக்கியசாலிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் தூய்மையற்ற மனிதரிலிருந்து தூய தேவர்கள் ஆகுகின்றீர்கள். சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தை விளங்கப்படுத்த வேண்டும். பின்னர் இது மறைந்துவிடும். சத்திய யுகத்தில் ஞானத்திற்கான தேவை இல்லை. நீங்கள் இப்பொழுது சீரழிந்த நிலையில் இருக்கின்றீர்கள். அதனாலேயே நீங்கள் இந்த ஞானத்தின் மூலம் சற்கதியடைகின்றீர்கள். தந்தை மாத்திரமே வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அனைவருக்கும் ஒரேயொரு சற்குரு மாத்திரமே உள்ளார். பக்தி மார்க்கத்திலுள்ள எந்த பௌதீகச் சடங்குகளாலும் எவராலும் சற்கதியடைய முடியாது. அனைவரும் ஏணியில் கீழிறங்கியாக வேண்டும். பாரதம் முதலில் சதோபிரதானாக இருந்தது. பின்னர் நீங்கள் 84 பிறவிகள் எடுக்கவேண்டியிருந்தது. இப்பொழுது நீங்கள் மேலேற வேண்டும். நீங்கள் முக்திதாமமாகிய வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும். நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகின்றது. இப்பழைய உலகம் அழிக்கப்பட வேண்டும். பாரதம் அழிவற்ற பூமி எனப்படுகின்றது. தந்தையின் பிறப்பிடம் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. நீங்கள் சாந்தி தாமத்திற்குச் சென்று, பின்னர் இங்கு வந்து மீண்டும் ஆட்சி செய்வீர்கள். பாரதத்தில் மாத்திரமே தூய்மையானவர்களும், தூய்மையற்றவர்களும் உள்ளனர். நீங்கள் 84 பிறவிகள் எடுக்கையில் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் யோகிகளில் இருந்து போகிகள் (இந்திரிய சுகத்தை அனுபவிப்பவர்கள்) ஆகினீர்கள். இது ஆழ்நரகம் ஆகும். இது பெருந் துன்ப காலமாகும். மேலும் துன்பம் வரவுள்ளது. காரணம் இல்லாமலே இரத்தம் சிந்தப்படும். மக்கள் எங்காவது அமர்ந்திருக்கும்போது, குண்டுகள் போடப்படும். அவர்கள் செய்த குற்றம் என்ன? காரணம் இல்லாமலே அனைவரும் அழிக்கப்படுவார்கள். குழந்தைகள் விநாசத்திற்கான காட்சிகளைக் கண்டுள்ளனர். உங்களிடம் இப்போது உலகச் சக்கரத்தைப் பற்றிய ஞானம் உள்ளது. உங்களிடம் இப்போது ஞானவாள் உள்ளது. நீங்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்கள். பிரஜாபிதாவும் பாபா ஆவார். முன்னைய கல்பத்திலும், அவர் வாய்வழித்தோன்றல்களை உருவாக்கினர். தந்தை கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறேன். நான் இவரினுள் பிரவேசித்து வாய்வழித் தோன்றல்களாகிய உங்களைப் படைக்கிறேன். நான் பிரம்மாவின் மூலம் சுவர்க்கத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றேன். எதிர்காலத்திலேயே நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். முதலில் அழுக்கான உலகம் அழிக்கப்பட வேண்டும். புதிய உலகை உருவாக்கவே எல்லையற்ற தந்தை வருகின்றார். தந்தை கூறுகிறார்: எனது உள்ளங்கையில் குழந்தைகளாகிய உங்களுக்காக சுவர்க்கத்தை நான் கொண்டுவந்திருக்கிறேன். நான் உங்களுக்கு எந்தச் சிரமும் கொடுப்பதில்லை. நீங்கள் யாவரும் திரௌபதிகள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் தேவர்களை விடவும் உயர்ந்த, அதி மேன்மையான பிராமணர்கள் என்ற ஆன்மீக போதையைக் கொண்டிருங்கள். ஞானத்தாலும், யோகத்தாலும் ஆத்மாவைச் சுத்தப்படுத்துங்கள்.
2. சிவனின் அவதாரத்திற்கான வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவியுங்கள். அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குங்கள். எதிரியான இராவணனிடம் இருந்து அனைவரையும் விடுவியுங்கள்.ஆசீர்வாதம்:
உங்களுடைய ஒவ்வொரு எண்ணத்தையும் தந்தையிடம் ஒப்படைப்பதன் மூலம், சதா விடுதலையடைந்தவர்களாக இருந்து எந்த பலவீனத்தையும் அகற்றிவிடுவீர்களாக.உங்கள் எண்ணங்களில் வருவன அனைத்தையும் தந்தையிடம் ஒப்படைப்பதே சகல பலவீனங்களையும் அகற்றுவதற்கான இலகுவான வழிமுறையாகும். சகல பொறுப்புகளையும் தந்தையிடம் ஒப்படைத்து விடும் போது நீங்கள் விடுதலை அடைகிறீர்கள். ஒரேயொரு திடசங்கற்ப எண்ணத்தை மாத்திரம் கொண்டிருங்கள்: நான் தந்தைக்கு உரியவன், தந்தை எனக்குரியவர். உரிமை உடைய ஸ்திதியில் ஸ்திரமாக நீங்கள் நிலைத்திருக்கும் போது, இயல்பாகவே தங்கியிருத்தல் முடிவடைகின்றது. ஒவ்வொரு விநாடியிலும் சோதனை செய்து பாருங்கள்: நான் தந்தையை போன்று, சகல சக்திகளுக்கும் உரிமையுடைய மாஸ்டர் சர்வசக்திவானாக இருக்கின்றேனா?
சுலோகம்:
ஸ்ரீமத்தின் சமிக்சைகளுக்கு ஏற்ப, ஒரு விநாடியில் பற்றற்றவராகவும் அன்பாகவும் ஆகுவதே தபஸ்வி ஆத்மாவின் அடையாளமாகும்.