26.01.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பிரம்மபாபா சிவபாபாவின் இரதமாவார், இருவருடைய பாகங்களும் ஒன்றாகவே இருக்கின்றன. இது பற்றிய சிறிதளவு சந்தேகமும் இருக்கக்கூடாது.கேள்வி:
மக்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக, உருவாக்கியுள்ள மாபெரும் பாவம் என்று அழைக்கப்படுகின்ற வழிமுறை என்ன?பதில்:
மக்கள் சந்தோஷமற்று இருக்கின்றபொழுது, தங்களைக் கொல்வதற்குப் பல வழிகளைக் கையாள்கிறார்கள். அவர்கள் தற்கொலை செய்ய எண்ணுகிறார்கள். ஏனெனில் அவ்வாறு செய்வதனால், தாங்கள் துன்பத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும் அதை விடவும் பெரும் பாவம் வேறு எதுவுமில்லை. இது எல்லையற்ற துன்ப உலகம் என்பதால், அவர்கள் மேலும் அதிகமாகத் துன்பத்தில் சிக்கிக் கொள்கின்றார்கள்,
ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களை வினவுகின்றார்; பரமாத்மா ஆத்மாக்களாகிய உங்களை வினவுகின்றார். நீங்கள் பரமாத்மா பரமதந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவீர்களா? அவருக்கெனச் சொந்தமாக ஓர் இரதம் இல்லை. தந்தை இந்த நெற்றியின் மத்தியில் இருக்கின்றார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றது, இல்லையா? தான் இவருடைய நெற்றியின் மத்தியில் இருப்பதாகவும், தான் இவரின் சரீரத்தைக் கடனாக எடுத்திருப்பதாகவும் தந்தையே கூறுகின்றார். ஆத்மா நெற்றியின் மத்தியிலேயே இருக்கின்றார், எனவே தந்தையும் அங்கேயே இருக்கின்றார். அங்கே பிரம்மாவும் இருக்கின்றார், அத்துடன் சிவபாபாவும் இருக்கின்றார். பிரம்மா அங்கு இல்லையானால் சிவபாபாவால் எவ்வாறு பேச முடியும்? நீங்கள் சிவபாபாவை எப்பொழுதும் மேலே இருப்பதாகவே நினைவுசெய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது இங்கே தந்தையுடனேயே அமர்ந்திருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். சிவபாபா மேலே இருக்கின்றார் என்றில்லை. அவருடைய ரூபம் இங்கேயே பூஜிக்கப்படுகின்றது. இந்த விடயங்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தை ஞானக்கடல் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் எங்கே ஞானத்தைப் பேசுகின்றார்? அவர் அதை மேலிருந்து பேசுகின்றாரா? அவர் இங்கு கீழே வந்து விட்டார். அவர் பிரம்மாவின் சரீரத்தினூடாக அதனைப் பேசுகின்றார். சிலர் தாங்கள் பிரம்மாவை நம்புவதில்லை எனக் கூறுகின்றனர், ஆனால் சிவபாபாவே பிரம்மாவின் சரீரத்தினூடாக “என்னை நினைவுசெய்யுங்கள்!” எனக் கூறுகின்றார். இது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். எவ்வாறாயினும், மாயை மிகவும் சக்திவாய்ந்தவள்; அவள் உங்களுடைய முகங்களை முற்றிலும் அப்பால் திருப்பி உங்களைப் பின்னடையச் செய்கின்றாள். சிவபாபா இப்பொழுது உங்களைத் தனக்கு முன்னால் வைத்துள்ளார். நீங்கள் நேரடியாக அவரின் முன்னிலையில் அமர்ந்திருக்கின்றீர்கள். எனவே, பிரம்மாவில் எதுவுமில்லை என்று நம்புகின்றவர்கள் என்ன நிலையை அடைவார்கள்? அவர்கள் சீரழிவையே அடைவார்கள். அவர்களிடம் எந்த ஞானமும் இல்லை. மக்கள் கூவியழைக்கின்றார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே! அந்தத் தந்தையாகிய கடவுள் அவர்களைச் செவிமடுக்கின்றாரா? மக்கள் அவருக்குக் கூறுகின்றார்கள்: விடுதலையாக்குபவரே, வாருங்கள்! அவர் மேலிருந்தே அவர்களை விடுதலையாக்குவாரா? தந்தை ஒவ்வொரு கல்பத்திலும் அதிமேன்மையான சங்கமயுகத்தில் வருகின்றார். அவர் எவரில் பிரவேசிக்கின்றாரோ, அவரை நீங்கள் ஒரு பக்கத்தில் வைத்தால், அதை என்னவென்று அழைப்பீர்கள்? முதலாம் இலக்க தமோபிரதான்! அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தாலும், மாயை முற்றாக அவர்களுடைய முகங்களை அப்பால் திருப்புகிறாள். அவள் அவர்களை முற்றிலும் ஒரு சதத்திற்கும் பெறுமதியற்றவர்களாக ஆக்குமளவிற்கு அதிகளவு சக்தியைக் கொண்டிருக்கின்றாள். அவ்வாறானவர்கள் சில நிலையங்களில் இருக்கின்றார்கள், இதனாலேயே தந்தை உங்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறுகின்றார். நீங்கள் செவிமடுத்தவற்றைத் தொடர்ந்தும் கூறுகின்றபொழுதிலும், அது பண்டிதரின் உதாரணம் போன்றே ஆகுகின்றது. பாபா கூறுகின்ற பண்டிதரின் கதையொன்று உள்ளது. இராமரின் பெயரை உச்சரிப்பதன் மூலம் அவர்களால் ஆற்றைக் கடக்க முடியும் என அவர் மற்றவர்களுக்குக் கூறினார். அது உருவாக்கப்பட்டுள்ள ஒரு கதையாகும். இந்நேரத்தில் நீங்கள் தந்தையின் நினைவிலிருப்பதனால், நச்சுக்கடலிருந்து பாற்கடலிற்குச் செல்கின்றீர்கள். அவர்கள் பக்தி மார்க்கத்தில் பல சமயக்கதைகளை உருவாக்கியுள்ளார்கள். அவ்வாறான விடயங்கள் நடைபெற மாட்டாது. அது உருவாக்கப்பட்ட ஒரு கதையே. அந்தப் பண்டிதர் அதைச் செய்யுமாறு மற்றவர்களுக்குக் கூறினார். ஆனால் அவரே அதைச் செய்யவில்லை. மற்றவர்களை விகாரமற்றவர்களாகும்படி கூறிக் கொண்டு ஒருவர் தொடர்ந்தும் விகாரத்தில் ஈடுபட்டால், அது அவர்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? சில பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை, இருப்பினும், அவர்கள் தொடர்ந்தும் இந்த ஞானத்தை மற்றவர்களுக்குக் கூறுகின்றார்கள். இதனாலேயே ஞானம் கொடுத்தவர்களிலும் பார்க்க அதைச் செவிமடுத்தவர்களால் முன்னே செல்ல முடியும் எனக் கூறப்படுகின்றது. பலருக்கும் சேவை செய்பவர்கள் நிச்சயமாக விரும்பப்படுவார்கள். பண்டிதர் பொய்யானவரானால் யார் அவரை விரும்புவார்கள்? அவர்களுடைய அன்பு, நடைமுறை ரீதியில் நினைவில் நிலைத்திருப்பவர்களின் மீது மாற்றப்படும். மாயை மிக நல்ல மகாராத்திகளையும் விழுங்கி விடுகின்றாள்; பலர் விழுங்கப்பட்டுள்ளார்கள். பாபா விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இன்னமும் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையவில்லை. ஒருபுறத்தில் யுத்தம் இடம்பெறும், மறுபுறத்தில் நீங்கள் கர்மாதீத ஸ்திதியை அடைவீர்கள்; அவை முற்றிலும் தொடர்புபட்டவை. பின்னர் யுத்தம் முடிவடையும்பொழுது, நீங்கள் மாற்றப்படுவீர்கள். உருத்திரரின் மாலையே முதலில் உருவாக்கப்படுகின்றது. வேறு எவரும் இந்த விடயங்கள் பற்றி அறியார். விநாசம் முன்னிலையில் உள்ளதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சிறுபான்மையினராகவும், மற்றையோர் பெரும்பான்மையினராகவும் இருக்கின்றார்கள், எனவே உங்களை யார் நம்புவார்கள்? உங்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றபொழுது, உங்களின் யோக சக்தியினால் இங்கு வருவதற்கு பலர் ஈர்க்கப்படுவார்கள். உங்களிலிருந்து அதிகளவு கறை அகற்றப்படும்பொழுது, நீங்கள் அதிகச் சக்தியால் நிறைக்கப்படுவீர்கள். பாபா அனைத்தையும் அறிந்தவர் (ஜனிஜனன்கார்) என்றில்லை. அவர் இங்கு வந்து அனைவரையும் பார்த்து அனைவரது ஸ்திதியையும் அறிந்து கொள்கின்றார். ஒரு தந்தை அவரது குழந்தைகளின் ஸ்திதியை அறிய மாட்டாரா? அவர் அனைத்தையும் பற்றி அறிவார். இதைப் பற்றி அந்தர்யாமியாக இருத்தல் எனும் கேள்விக்கு இடமில்லை. நீங்கள் இன்னமும் உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடையவில்லை. அசுரத்தனமாகப் பேசுவது, நடந்துகொள்வது மிகவும் பிரபல்யமானது. நீங்கள் உங்களது நடத்தையைத் தெய்வீகமானதாக்க வேண்டும். தேவர்கள் சகல தெய்வீக குணங்களும் நிறைந்தவர்கள். நீங்கள் இப்பொழுது அவர்களைப் போன்று ஆகவேண்டும். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் அதிகளவு வேறுபாடுள்ளது! எவ்வாறாயினும் மாயை எவரையும் தனியாக விடுவதில்லை; அவள் அவர்களை “தொட்டாற்சுருங்கி” தாவரம் போல் ஆக்குகிறாள். அவள் சிலரை முற்றாகக் கொன்றுவிடுகின்றாள். ஐந்து படிகள் (மாடிகள்) இருக்கின்றன. சரீர உணர்வு இருக்கும்பொழுது, நீங்கள் நேரடியாகக் கீழே வீழ்கின்றீர்கள். நீங்கள் வீழ்கின்றபொழுது, மரணிக்கின்றீர்கள். இந்நாட்களில் மக்கள் தங்களைக் கொல்வதறகுப் பல வழிகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். அவர்கள் முற்றாக முடிவடைந்து விடும்வகையில், 21வது மாடியிலிருந்து வீழ்;கின்றார்கள். அவர்கள் வைத்தியசாலைக்குச் சென்று தொடர்ந்தும் வலியையும், துன்பத்தையும் அனுபவிக்க விரும்புவதில்லை. ஒருவர் ஐந்தாவது மாடியிலிருந்து வீழ்ந்தும் இறக்கவில்லை எனில், தொடர்ந்தும் அதிகளவு வலியை அனுபவம் செய்கின்றார். சிலர் தங்களுக்குத் தீ மூட்டியும் கொள்கின்றார்கள். அந்நபர் ஒருவரினால் காப்பாற்றப்பட்டால், அதிகளவு வலியைச் சகித்துக்கொள்ள வேண்டும். அவர் முழுமையாக எரிந்து விட்டால், அவரது ஆத்மா நீங்கி விடுவார். இதனாலேயே அவர்கள் தற்கொலை செய்து, தங்கள் சரீரங்களை முழுமையாக அழிக்கின்றார்கள். தங்களுடைய சரீரங்களை நீக்குவதனால், தாங்கள் துன்பத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். எவ்வாறாயினும், அது பெரும் பாவமாகும். அவர்கள் மேலும் துன்பத்தால் வருந்த வேண்டும், ஏனெனில் இது முடிவில்லாத துன்ப உலகமாகும். அங்கே எல்லையற்ற சந்தோஷம் இருக்கின்றது. இப்பொழுது நீங்கள் துன்பதாமத்திலிருந்து சந்தோஷதாமத்திற்குத் திரும்புகின்றீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது உங்களைச் சந்தோஷதாமத்தின் அதிபதிகள் ஆக்குகின்ற தந்தையை நினைவுசெய்ய வேண்டும். தந்தை இவரின் மூலமாக விளங்கப்படுத்துகின்றார், இவரது ரூபமும் இருக்கின்றது. பிரம்மாவின் மூலமான சுவர்க்க ஸ்தாபனை எனக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நாங்கள் இங்கு பல தடவைகள் சுவர்க்கம் எனும் எங்கள் ஆஸ்தியைக் கோருவதற்கு வந்துள்ளோம். தந்தை, உலகம் மாறும்பொழுது சங்கமயுகத்திலேயே வருகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, சந்தோஷ தூய உலகிற்கு அழைத்துச் செல்வதற்கு வந்துள்ளேன். “ஓ தூய்மையாக்குபவரே!” என நீங்கள் கூவியழைத்தீர்கள். நீங்கள் இந்த அழுக்கான உலகிலிருந்து உங்களை வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்லுமாறு மகாகாலனையே அழைத்தீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. பாபா நிச்சயமாக வருகின்றார். நாங்கள் அனைவரும் மரணிக்கின்றபொழுதே அமைதி இருக்கும். மக்கள் தொடர்ந்தும் அமைதி பற்றிப் பேசுகின்றார்கள். பரந்தாமத்திலேயே அமைதி இருக்கின்றது. எவ்வாறாயினும் இந்த உலகில் இன்னமும் அதிகளவு மனிதர்கள் இருப்பதால், எவ்வாறு இங்கே அமைதி நிலவ முடியும்? சத்தியயுகத்தில் அமைதியும், சந்தோஷமும் இருந்தன. இப்பொழுது கலியுகத்தில் எண்ணிக்கையற்ற மதங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் அழிக்கப்படும்பொழுதே, ஒரு தர்மத்தின் ஸ்தாபனை இடம்பெறும். அப்பொழுதே அமைதியும், சந்தோஷமும் நிலவ முடியும். விரக்திக் குரலின் பின்னர் வெற்றி முழக்கம் இருக்கும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்பொழுது, எவ்வாறு மரணச் சந்தை சூடு பிடிக்கின்றது எனக் காண்பீர்கள். விநாசம் நிச்சயமாக இடம் பெறவேண்டும். தந்தை வந்து ஒரு தர்மத்தின் ஸ்தாபனையைத் தூண்டுவதுடன், இராஜயோகத்தையும் கற்பிக்கின்றார். ஏனைய எணணற்ற மதங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். கீதையில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அவர்கள் பஞ்ச பாண்டவர்களும், அவர்களுடைய நாயும் இமய மலையில் உருகி விட்டதாகக் கூறுகின்றார்கள். அதன்பின்னர் அதன் முடிவு என்ன? அவர்கள் பிரளயத்தைக் காட்டியுள்ளார்கள். வெள்ளம் இருக்கும், ஆனால் முழு உலகமும் வெள்ளத்தில் மூழ்க மாட்டாது. பாரதம் அழியாத தூய்மையான தேசமாகும். அதிலும் தந்தை வந்து குழந்தைகளாகிய உங்கள் மூலம் அனைவருக்கும் சற்கதி அருள்வதற்கு வருகின்ற அபுவே அதிதூய்மையான யாத்திரை ஸ்தலம் ஆகும். தில்வாலா ஆலயம் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்த அவ்வாறான நல்ல ஞாபகார்த்தம்! எவ்வாறாயினும் அதைக் கட்டியவர்கள் இதைப் புரிந்துகொள்ளவில்லை, ஆனாலும் அவர்கள் குறைந்தபட்சம் விவேகிகளாக இருந்தார்கள். துவாபரயுகத்திலும், அவர்கள் நிச்சயமாக விவேகிகளாக இருந்தார்கள். கலியுகத்தில் அவர்களும் தமோபிரதான் ஆகியுள்ளனர். துவாபரயுகத்தில் அவர்கள் குறைந்தபட்சம் தமோ புத்தியைக் கொண்டிருந்தார்கள்! நீங்கள் அமர்ந்திருக்கின்ற இந்த ஆலயமே அனைத்து ஆலயங்களிலும் அதிமேலானது. நீங்கள் உயிருள்ள ரூபத்திலும், அவை உயிரற்ற ரூபத்திலும் இருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அது எங்களது ஞாபகார்த்தமாகும். இப்பொழுது நீங்கள் எவ்வாறு விநாசத்தின்பொழுது, ஒட்டுமொத்த மரணம் இடம்பெறும் என்பதைத் தொடர்ந்தும் காண்பீர்கள். மாபெரும் ஒட்டுமொத்த யுத்தம் இடம்பெறும். அனைத்தும் அழிக்கப்படும். ஒரு தேசம் மாத்திரமே மீதமிருக்கும். பாரதம் மிகவும் சிறியதாக இருக்கும், மீதி அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். சுவர்க்கம் மிகவும் சிறியது! நீங்கள் இப்பொழுது இந்த ஞானத்தை உங்கள் புத்தியில் கொண்டிருக்கின்றீர்கள். சிலரை புரிந்துகொள்ளச் செய்வதற்கு நீண்டகாலம் எடுக்கின்றது. இது அதிமேன்மையான சங்கமயுகமாகும். இங்கே அதிகளவு மனிதர்கள் இருக்கின்றார்கள், ஆனால் அங்கே வெகுசிலரே இருப்பார்கள்! அனைத்துமே அழிக்கப்படும். உலகின் வரலாறும், புவியியலும் ஆரம்பத்திலிருந்து மறுபடியும் நடைபெறும். அது சுவர்க்கத்தின் ஆரம்பத்திலிருந்து மறுபடியும் நிச்சயமாக இடம்பெறும்; அது முடிவிலிருந்து ஆரம்பபிப்பதில்லை. இந்த உலக நாடகச் சக்கரம் அநாதியானது, அது தொடர்ந்தும் சுழலும். இந்தப் பக்கத்தில் கலியுகமும், அந்தப் பக்கத்தில் சத்தியயுகமும் இருக்கின்றன. நாங்கள் இப்பொழுது சங்கமத்தில் இருக்கின்றோம். நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். தந்தை வரவேண்டும். எனவே அவருக்கு நிச்சயமாக ஓர் இரதம் தேவை. நீங்கள் இப்பொழுது வீட்டுக்குச் செல்கின்றீர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் பின்னர் இலக்ஷ்மி, நாராயணன் ஆகவேண்டும். எனவே நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். இராவண இராச்சியம் என்றால் என்ன, இராம இராச்சியம் என்றால் என்ன என்றும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகவும் தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்களாகவும் ஆகுகிறீர்கள் என்ற இந்த நாடகத்தின் இரகசியங்களைத் தந்தை, இங்கிருந்து விளங்கப்படுத்துகின்றார். தந்தையே ஞானம் நிறைந்தவரும், விதையுமாவார். அவர் உணர்வுள்ளவராவார். அவரே வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தையே உங்களை வினவுகின்றார். முழுக் கல்ப விருட்சத்தினதும் இரகசியங்களை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? இதில் என்ன நடக்கின்றது? எவ்வளவு காலத்திற்கு அதில் நீங்கள் உங்களுடைய பாகங்களை நடிக்கின்றீர்கள்? அரைக்கல்பத்திற்கு அது தேவர்களின் இராச்சியமாக உள்ளது. மீதி அரைக்கல்பத்திற்கு அது அசுர இராச்சியமாக உள்ளது. நல்ல குழந்தைகளின் புத்தியில் இந்த ஞானம் நிலைத்துள்ளது. தந்தை உங்களைத் தனக்குச் சமமாக்குகின்றார். ஆசிரியர்களும் வரிசைக்கிரமமானவர்கள். சில ஆசிரியர்கள் குழப்பம் அடைகின்றார்கள். அவர்கள் பலருக்குக் கற்பித்துப் பின்னர் மறைந்து விடுகின்றனர். சிறிய குழந்தைகளுக்கிடையேயும் சிலர் பல வித்தியாசமான சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கின்றனர். சிலர் முதலாம் இலக்க அசுரர்களாகவும், சிலர் தேவதை பூமிக்குச் செல்வதற்குத் தகுதியானவர்களாகவும் இருக்கின்றார்கள். சிலர் ஞானத்தை எடுப்பதுமில்லை, தங்களது நடத்தையைச் சீர்திருத்துவதுமில்லை, ஆனால் தொடர்ந்தும் மற்றவர்களுக்குத் துன்பம் விளைவிக்கின்றார்கள். எவ்வாறு அசுரர்கள் இரகசியமாக வந்து அவர்களுடன் அமர்வது வழக்கம் எனச் சமயநூல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் தொடர்ந்தும் நடைபெறுகின்றது. அவர்கள் அசுரர்களாக இருப்பதால் பல சிரமங்களை உருவாக்குகின்றார்கள்! அதிமேலான தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிக்க வரவேண்டும். மாயையும் மிகவும் சக்திவாய்ந்தவள். நீங்கள் அனைத்தையும் தானஞ்செய்த பின்னரும் மாயை உங்களுடைய புத்தியை அப்பால் திருப்பி விடுகின்றாள். மாயை குழந்தைகளாகிய உங்களில் அரைவாசிப் பேரை நிச்சயமாக உண்கின்றாள். இதனாலேயே மாயை மிகவும் வலிமையானவள் எனக் கூறப்பட்டுள்ளது. மாயை அரைக்கல்பமாக ஆட்சிசெய்கின்றாள், எனவே அவள் நிச்சயமாக மிகவும் வலிமையானவளாகவே இருப்பாள். மாயையினால் தோற்கடிக்கப்பட்டவர்களின் நிலைமை என்னவாகும்? அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருபொழுதும் “தொட்டாற்சுருங்கித் தாவரம்” போல் ஆகாதீர்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகித்து, உங்கள் நடத்தையைச் சீர்திருத்துங்கள்.
2. தந்தையின் அன்பைப் பெறுவதற்கு, சேவை செய்யுங்கள், எவ்வாறாயினும், பிறரைக் கிரகிக்குமாறு கூறுகின்ற விடயங்களை நீங்களும் கிரகிக்க வேண்டும். உங்களுடைய கர்மாதீத ஸ்திதியை அடைவதற்கு முழு முயற்சி செய்யுங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய கடும் உழைப்பின் மூலமும், மகத்துவத்தின் மூலமும் ஆன்மீகத்தின் அனுபவத்தைக் கொடுக்கின்ற, ஒரு சக்திமிக்க சேவகர் ஆவீர்களாக.உங்கள் தொடர்பில் வருகின்ற ஆத்மாக்கள் அனைவருக்கும் ஆன்மீகச் சக்தியின் அனுபவத்தைக் கொடுங்கள். உங்களிடம் வருகின்ற ஆத்மாக்கள் தங்கள் சொந்த ரூபத்தையும், ஆன்மீகத்தையும் அனுபவம் செய்யும் வகையில், அத்தகையதொரு பௌதீகமான, சூட்சுமமான ஸ்திதியை உருவாக்குங்கள். அத்தகைய சக்திவாய்ந்த சேவையைச் செய்வதற்கு, சேவாதாரிக் குழந்தைகளாகிய நீங்கள் வீணான எண்ணங்கள், வீணான வார்த்தைகள், வீணான செயல்களின் தளம்பல்களுக்கு அப்பால் இருந்து, மன ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய ஆன்மீகத்தில் நிலைத்திருக்கின்ற சத்தியத்தைச் செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். இந்தச் சத்தியத்தின் மூலம் உங்களால் ஞான சூரியனின் அற்புதத்தைக் காட்ட முடியும்.
சுலோகம்:
தந்தையிடமிருந்தும், அனைவரிடமிருந்துமான ஆசீர்வாதங்கள் எனும் விமானத்தில் பறப்பவர்களே, பறக்கும் யோகிகள் ஆவார்கள்.