27.01.20 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் இனிமையானதாகவும், முதற் தரமானதாகவும் இருக்கவேண்டும். தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் ஆவார். தந்தை செய்வதைப் போன்று, நீங்கள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும்.
கேள்வி:
நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இந்த ஞானத்தை எவ்விதத்தில் கொடுக்க வேண்டும்?
பதில்:
நீங்கள் உங்கள் நண்;பர்கள், உறவினர்கள் போன்றவர்களுடன் மிகவும் அன்பாகவும்;, ஒரு புன்னகையுடனும், அதிகளவு பணிவுடனும் பேசவேண்டும். இது அதே மகாபாரத யுத்தம் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். தந்தை, உருத்திர ஞான யாகத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் கூறுகிறார்: நான் உங்களுக்குச் சத்தியத்தைக் கூறுகிறேன். நீங்கள் பல பிறவிகளாகப் பக்தி செய்து வருகிறீர்கள். இப்பொழுதே ஞானம் ஆரம்பிக்கிறது. உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது மிகவும் சாதுரியமாக அவர்களுடன் பேசுங்கள். தொடர்ந்தும் உங்களுடைய குடும்பத்தோடு பெருமளவு அன்புடன் பழகுங்கள். ஒருபோதும் எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.
பாடல்:
நாங்கள் காத்திருந்த அந்த நாளும் இறுதியில் வந்துவிட்டது….
ஓம் சாந்தி.
இந்தப் பாடல்கள் எவையாவது ஒலிக்கும்போது, குழந்தைகளாகிய நீங்கள் அவற்றின் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களால் ஒரு விநாடியில் அவற்றின் கருத்தை அறிந்துகொள்ள முடியும். நாடகத்தில் எல்லையற்ற கடிகாரம் உள்ளது. பக்தி மார்க்கத்தில் மக்கள் கூவி அழைக்கிறார்கள். அது ஒரு நீதிமன்றத்தில் வழக்கொன்று இருந்தால், “விசாரணை எப்போது இடம்பெறும்? நாங்கள் எப்போது அழைக்கப்பட்டு, வழக்கு எப்போது முடிவடையும்?” என்று மக்கள் கேட்பதைப் போன்றதாகும். ஆகவே குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரு வழக்கு உள்ளது. என்ன வழக்கு? இராவணன் உங்களுக்கு அதிகளவு துன்பத்தை ஏற்படுத்தியுள்ளான். உங்களுடைய வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. மக்கள் தொடர்ந்தும் கூவி அழைக்கிறார்கள்: பாபா, வந்து எங்களைத் துன்பத்திலிருந்து விடுதலை செய்யுங்கள். உங்களுடைய விசாரணை நிச்சயமாக ஒருநாள் இடம்பெறும். தந்தை நீங்கள் கூறுவனவற்றைக் கேட்பதில்லை. நாடகத்திற்கேற்ப, மிகச்சரியான நேரத்தில் அவர் வருவார். அதில் ஒரு விநாடியேனும் வித்தியாசம் இருக்க முடியாது. அந்த எல்லையற்ற கடிகாரம் துல்லியமாகத் தொழிற்படுகின்றது. நீங்கள் வைத்திருக்கும் கடிகாரங்கள் அந்தளவுக்குச் சரியாகத் தொழிற்படுவதில்லை. இந்த யக்யத்தின் ஒவ்வொரு பணியும் மிகச்சரியாகச் செய்யப்பட வேண்டும். கடிகாரம்கூட மிகத்துல்லியமாக இருக்கவேண்டும். தந்தை மிகவும் துல்லியமானவர். விசாரணையும் மிகச்சரியாக இடம்பெறும். அவர் ஒவ்வொரு சக்கரத்திலும் சங்கம யுகத்தில், சரியான நேரத்தில் வருகிறார். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் கூறியவற்றைக் கேட்டதால் தந்தை வந்திருக்கிறார். இப்பொழுது நீங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறீர்கள். உங்களை யார் சந்தோஷமற்றவர்கள் ஆக்கினார் என்பதை முன்னர் நீங்கள் அறிந்திருக்கவில்லை. துவாபர யுகத்திலிருந்து இராவணனின் இராச்சியம் ஆரம்பமாகியது என்பதைத் தந்தை இப்போது விளங்கப்படுத்துகிறார். ஒவ்வொரு கல்பத்திலும், சங்கம யுகத்தில் எல்லையற்ற இரவில் பாபா வருகிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது தெரியும். சிவபாபாவே எல்லையற்ற இரவில் வருகிறார். இது கிருஷ்ணர் பற்றிய கேள்வியல்ல. மக்கள் அஞ்ஞான இருளில் உறங்கும்போது, அவர்களைப் பகலுக்குக் கூட்டிச் செல்வதற்காக, ஞான சூரியனான, தந்தை வருகிறார். அவர் கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள், ஏனெனில் நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து, தூய்மையானவர்களாக மாற வேண்டும். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். அவர் வரும்போது மாத்திரமே அவர் உங்களை விசாரணை செய்யலாம். உங்களுடைய விசாரணை இப்போது இடம்பெறவுள்ளது. தந்தை கூறுகிறார்: தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு நான் வந்திருக்கிறேன். தூய்மையாகுவதற்கு அத்தகைய இலகுவானதொரு முறையை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். இந் நாட்களில் விஞ்ஞானத்தின் சக்தி அதிகம் உள்ளது. அணுகுண்டுகள் பெரிய சத்தத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் மௌன சக்தி மூலம் விஞ்ஞானத்தை வெற்றி கொள்கிறீர்கள். மௌனம், யோகம் என்று அழைக்கப்படுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் தந்தையை நினைவு செய்வதுடன், ‘பாபா, நீங்கள் வரும்போது நாங்கள் சென்று எங்களுடைய மௌன தாமத்தில் வாழலாம்’ என்றும் கூறுவீர்கள். ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் உங்களுடைய யோக சக்தியின் மூலம், அதாவது, உங்களுடைய மௌன சக்தியின் மூலம் விஞ்ஞானத்தை வெற்றி கொள்கிறீர்கள். நீங்கள் மௌன சக்தியைச் சேகரிக்கின்றீர்கள். விஞ்ஞானத்தின் மூலம் விநாசம் இடம்பெறும். குழந்தைகளாகிய நீங்கள் மௌனத்தின் மூலம் வெற்றியடைகிறீர்கள். பௌதீக சக்தியைக் கொண்டவர்களால் உலகத்தை வெல்ல முடியாது. இந்தக் கருத்துக்களை உங்களுடைய கண்காட்சிகளில் மேலே எழுதுங்கள். டெல்லியே தலைநகரம் என்பதால், டெல்லியில் பெருமளவு சேவை இடம்பெற முடியும். உங்களுடைய தலைநகரமும் டெல்லியாகவே இருக்கும். டெல்லி, பரிஸ்தான் (தேவதைகளின் பூமி) என்று அழைக்கப்படுகிறது. பாண்டவர்களின் கோட்டைகள் எதுவும் அங்கு இல்லை. மக்கள் தங்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குக் கோட்டையைக் கட்டுகிறார்கள். உங்களுக்குக் கோட்டைகள் போன்றவை தேவையில்லை. மௌன சக்தி மூலம் நீங்கள் உங்களுக்குரிய இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். அந்த மக்கள் கொண்டிருப்பது செயற்கையான மௌனமாகும். ஆனால், உங்களுடையதோ உண்மையான மௌனமாகும். ஞானத்தின் சக்தியும், மௌனத்தின் சக்தியும் உள்ளன. ஞானம் என்றால் கல்வியாகும். இந்தக் கல்வி மூலம் நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். ஒரு பொலிஸ் அத்தியட்சகருக்கு அதிகளவு சக்தி உள்ளது. அவை அனைத்தும் உங்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கின்ற பௌதீக விடயங்களாகும். உங்கள் விடயங்கள் அனைத்தும் ஆன்மீகமானதாகும். உங்களுடைய வாயிலிருந்து வெளிவருகின்ற வார்த்தைகள் எதுவானாலும் உங்களைச் செவிமடுப்பவர்கள் சந்தோஷமடையக்கூடிய வகையில், முதற் தரமானதாகவும், மிக இனிமையானதாகவும் இருக்கவேண்டும். தந்தையே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவருமாவார். நீங்களும் அவ்வாறே அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கவேண்டும். நீங்கள் உங்கள் உற்றார், உறவினர்களுக்கு எவ்விதத் துன்பத்தையும் ஏற்படுத்தக்கூடாது. நீங்கள் அனைவருடனும் மிகுந்த ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நீங்கள் மூத்தோரிடம் அதிகளவு அன்புடன் பழக வேண்டும். நீங்கள் கூறுகின்றவற்றைச் செவிமடுப்பவர்கள் எவரும் சந்தோஷமடையக்கூடியவாறு, அத்தகைய இனிய, முதற்தரமான வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளிவர வேண்டும். சிவபாபா கூறுகிறார்: மன்மனாபவ! நானே அதிமேலானவர். என்னை நினைவு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் என்று அவர்களுக்குக் கூறுங்கள். நீங்கள் அதிகளவு அன்;புடன் அவர்களுடன் பேச வேண்டும். மூத்த சகோதரர் ஒருவர் அருகில் இருந்தால், ‘தாதாஜி, “என்னை நினைவு செய்யுங்கள்” என்று சிவபாபா கூறுகிறார்’ என்று அவருக்குக் கூறுங்கள். உருத்திரர் என்றும் அழைக்கப்படும் சிவபாபா இந்த ஞானமெனும் யாகத்தை உருவாக்கியுள்ளார். ஞான யாகத்தைக் கிருஷ்ணர் உருவாக்கினார் என்று நீங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். மக்கள் உருத்திர ஞான யாகத்தையிட்டு மாத்திரமே பேசுகிறார்கள். உருத்திரராகிய சிவபாபா இந்த ஞானமெனும் யாகத்தை உருவாக்கியுள்ளார். நீங்கள் ஓர் இராச்சியத்தைப் பெறக்கூடியதாக அவர் உங்களுக்கு ஞானத்தையும், யோகத்தையும் கற்பிக்கிறார். தந்தையும் கூறுகிறார்: கடவுள் பேசுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள். ஏனெனில் இப்போது இதுவே அனைவருக்கும் இறுதிக் கணங்களாகும். இது அனைவரது ஓய்வுபெறும் ஸ்திதியாகும். அனைவரும் வீடு திரும்பவேண்டும். எவராவது மரணிக்கும்போது, கடவுளை நினைவு செய்யும்படி அவருக்குக் கூறப்படுகிறது. கடவுளே இங்கு வந்து கூறுகிறார்: மரணம் உங்கள் முன்னால் உள்ளது. எவரையும் அதிலிருந்து காப்பாற்ற முடியாது. தந்தை கல்பத்தின் இறுதியில் வந்து கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது நினைவுத் தீ என்று அழைக்கப்படுகிறது. இந்த நினைவின் மூலம் உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும் என்று தந்தை உத்தரவாதமளிக்கிறார். உங்களுடைய பாவங்கள் அழிக்கப்பட்டு, தூய்மையாகுவதற்கு வேறு எந்த வழியுமில்லை. உங்கள் தலை மீதுள்ள பாவச் சுமையினாலும், உங்களில் கலப்படம் உள்ளதாலும். தங்கம் இப்போது ஒன்பது கரட்டாக மாத்திரமே உள்ளது. ஒன்பது கரட் தங்கமாக மாத்திரம் இருக்கும்போது அது செயற்கைத் தங்கம் என்று அழைக்கப்படுகிறது. அது மீண்டும் 24 கரட் தங்கம் ஆகுவது எவ்வாறு? ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகுவது எவ்வாறு? ஒரு தூய ஆத்மாவிற்குத் தூய ஆபரணங்கள் கொடுக்கப்படும். நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோருடன் புன்னகையுடனும், மிகவும் அன்பாகவும்;, அதிகளவு பணிவுடனும் பேசவேண்டும். இது அதே மகாபாரத யுத்தம் என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். இது உருத்திர ஞான யாகம் என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது எங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி மற்றும் இறுதி பற்றிய ஞானம் தந்தையால் கொடுக்கப்படுகிறது. இந்த ஞானத்தை உங்களால் வேறு எங்கும் பெற முடியாது. நான் உங்களுக்குச் சத்தியத்தைக் கூறுகிறேன். நீங்கள் பல பிறவிகளாக பக்தி செய்து வருகிறீர்கள். இந்த ஞானம் ஆரம்பிக்கின்ற நேரம் இப்போதாகும். பக்தி இரவும், ஞானம் பகலுமாகும். சத்திய யுகத்தில் பக்தி இருக்காது. உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்போது நீங்கள் அவர்களுடன் சாதுரியமாகப் பேச வேண்டும். அம்பை எய்வதற்கு முன்னர், நீங்கள் நேரத்தையும், சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஞானத்தைக் கொடுப்பதற்கு உங்களுக்கு அதிகளவு மதிநுட்பம் தேவை. தந்தை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிகளைக் கொடுக்கிறார். தூய்மை மிகவும் நல்லது. இலக்ஷ்மியும், நாராயணனும் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள்;. அவர்கள் தூய்மையாக இருந்ததுடன், பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருந்தார்கள். பின்னர் அவர்கள் தூய்மையற்றவர்களாகவும், பூஜிப்பவர்களாகவும் ஆகினார்கள். தூய்மையான ஒருவர் தூய்மையற்றவரைப் பூஜிப்பது சரியானது போல் தெரியவில்லை. சிலர் தூய்மையற்றவர்களிடமிருந்து ஓடியும் விடுகின்றனர். வல்லபாச்சாரிகள் (கிருஷ்ண பக்தர்களின் மதப் பரிவினர்) தங்கள் பாதங்களை எவரும் தொடுவதை அனுமதிப்பதில்லை. மனிதர்கள் அழுக்கானவர்கள் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆலயங்களில் பிராமணப் பூசாரிகள் மாத்திரமே விக்கிரகங்களைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சூத்திரர்கள் விக்கிரகங்களைத் தொடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. பிராமணப் பூசாரிகள் மாத்திரமே அபிஷேகம் செய்வது போன்றவற்றிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். வேறு எவரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதிகளவு வேறுபாடுள்ளது! அந்தப் பிராமணர்கள் கருப்பை மூலம் பிறப்பெடுத்தவர்கள். ஆனால் உண்மையான பிராமணர்களாகிய நீங்கள் வாய்வழித் தோன்றல்கள். இரு வகையான பிராமணர்கள் உள்ளனர் என்றும், ஒரு வகையினர், பிரஜாபிதா பிரம்மாவின் வாய் வழித் தோன்றல்கள் என்றும், மற்றவர்கள் கருப்பை மூலம் பிறப்பெடுத்தவர்கள் என்றும் நீங்கள் அந்தப் பிராமணர்களுக்கு மிகவும் நன்றாக விளங்கப்படுத்தலாம். பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்களாகிய பிராமணர்களே உச்சிக்குடுமிகள். ஒரு யாகம் உருவாக்கப்படும்போது, அதனைக் கவனித்துக் கொள்வதற்குப் பிராமணப் பூசாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். இது ஞானம் பற்றிய யாகமாகும். பிராமணர்களாகிய உங்களுக்கு ஞானம் கொடுக்கப்பட்டு, பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். வெவ்வேறு சாதிகள் பற்றியும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சேவை செய்யக்கூடிய குழந்தைகள் சேவை செய்வதற்கு எப்போதும் ஆவலாக உள்ளார்கள். எப்போதாவது எங்காவது ஒரு கண்காட்சி நடந்தால், அவர்கள் உடனடியாக அங்கு ஓடுவார்கள். தாங்கள் சென்று, இந்த ஞானக் கருத்துக்களை விளங்கப்படுத்த வேண்டுமென்று அவர்;கள் எண்ணுகிறார்கள். கண்காட்சிகளில் பிரஜைகள் மிக விரைவாக உருவாக்கப்படுகிறார்கள். பலர் தாமாகவே வருவார்கள். ஆகவே தெளிவாக விளங்கப்படுத்தக்கூடிய திறமையுள்ளவர்கள் தேவை. எவராவது முற்றாக விளங்கப்படுத்தவில்லை என்றால், ‘பிரம்மகுமாரிகள் இந்தளவு ஞானத்தையா கொண்டிருக்கிறார்கள்?’ என்று மக்கள் கூறுவார்கள். ஆகவே அவச்சேவை செய்யப்படும். இதனாலேயே வழிகாட்டிகள் விளங்கப்படுத்தும்போது, அவதானமாக உள்ள ஒருவர் தேவைப்படுகிறார். ஒரு முக்கியஸ்தர் வந்தால், நன்றாக விளங்கப்படுத்தக்கூடிய ஒருவர் அவர்களுடன் பேச வேண்டும். தெளிவாக விளங்கப்படுத்த முடியாதவர்கள் நீக்கப்பட வேண்டும். நன்றாக மேற்பார்வை செய்யக்கூடிய எவராவது தேவை. நீங்கள் மகாத்மாக்களையும் அழைக்கவேண்டும். இதனையே பாபா கூறுகிறார் என்று அவர்களுக்குக் கூறுங்கள்: நானே அதிமேலான கடவுள். படைப்பவரான தந்தை நானாவேன். ஏனையவர்கள் அனைவரும் படைப்பின் ஒரு பகுதியாவார்கள். நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஒரு சகோதரர் இன்னொரு சகோதரருக்கு என்ன ஆஸ்தியைக் கொடுப்பார்? சந்தோஷ தாமம் என்ற ஆஸ்தியை வேறு எவராலும் உங்களுக்குக் கொடுக்க முடியாது. தந்தையால் மாத்திரமே உங்களுக்கு அந்த ஆஸ்தியைக் கொடுக்க முடியும். தந்தை ஒருவர் மாத்திரமே அனைவருக்கும் சற்கதியைக் கொடுப்பவர். நீங்கள் அவரை நினைவு செய்யவேண்டும். தந்தையே வந்து, சத்திய யுகத்தை உருவாக்குகிறார். அவர் பிரம்மாவின் சரீரத்தின் மூலம் சுவர்க்கத்தை உருவாக்குகிறார். மக்கள் சிவனின் பிறந்த நாளைக் (சிவஜெயந்தி) கொண்டாடுகிறார்கள், ஆனால் அவர் என்ன செய்தார்? அனைவரும்; அவை அனைத்தையும் மறந்துவிட்டார்கள். சிவபாபா வந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்து, உங்களுடைய ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார். 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் சுவர்க்கமாக்கப்பட்டது. நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் என்ற கேள்விக்கு இடமில்லை. திகதிகளும், நேரங்களும் உங்கள் முன்னால் உள்ளன. அவை பொய்யென எவராலும் நிரூபிக்க முடியாது. புதிய உலகமும், பழைய உலகமும் அரைவாசி அரைவாசியாக இருக்கவேண்டும். சத்திய யுகம் நூறாயிரக் கணக்கான ஆண்டுகளைக் கொண்டதென்று அந்த மக்கள் கூறுகிறார்கள். அது அவ்வாறாக இருந்ததென்றால், எதையுமே சரியாகக் கணக்கிட முடியாதிருக்கும். உண்மையில் சுவாஸ்திகாவில் நான்கு சமமான பாகங்கள் உள்ளன. ஒவ்வொரு யுகமும் 1250 ஆண்டுகளாகும். கணக்கிட்டுப் பார்க்க முடியும். அந்த மக்களுக்கு இந்தக் கணிப்புகள் எதுவும் தெரியாது. அதனாலேயே அவர்கள் சிப்பியளவு பெறுமதி வாய்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தந்தை இப்போது உங்களை வைரங்கள் போன்ற பெறுமதியுடையவர்கள் ஆக்குகிறார். அனைவரும் தூய்மையற்றவர்கள். இதனாலேயே அவர்கள் கடவுளை நினைவு செய்கிறார்கள். கடவுள் வந்து உங்களை ஞானத்தின் மூலம் அழகானவர்கள் ஆக்குகிறார். அவர் குழந்தைகளாகிய உங்களை ஞான இரத்தினங்களால் அலங்கரிக்கிறார். அப்போது என்ன ஆகுகிறீர்கள் என்று பாருங்கள்! உங்களுடைய இலக்கும், குறிக்கோளும் என்ன? பாரதம் எவ்வாறு கிரீடம் சூட்டப்பட்டு இருந்தது என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? முஸ்லீம்கள் சோமநாதர் ஆலயத்திலிருந்து ஏராளமான வைரங்கள் போன்றவற்றைக் கொள்ளையிட்டு, அவை அனைத்தையும் தங்களுடைய பள்ளிவாசல்களில் பயன்படுத்தினார்கள். இப்போது அவற்றின் பெறுமதியை மதிப்பிட எவராலும் முடியாது. அரசர்கள் அணிந்திருந்த கிரீடங்களில் பல பெரிய இரத்தினங்கள் இருந்துள்ளன. சில இரத்தினங்கள் நூறாயிரக்கணக்கான பெறுமதி வாய்ந்தனவாகவும், ஏனையவை ஐந்நூறாயிரம் பெறுமதி வாய்ந்தனவாகவும் இருந்திருக்கும். இந் நாட்களில் செயற்கையான பொருட்கள் பல உள்ளன. இவ்வுலகின் செயற்கையான சந்தோஷம் ஒரு சில சதங்கள் மாத்திரமே பெறுமதியானவை; ஏனையவை அனைத்தும் துன்பமே. ஆகவே சந்தோஷம் காகத்தின் எச்சம் போன்றது என்று சந்நியாசிகள் கூறுகிறார்கள். அதனாலேயே அவர்கள் தங்கள் வீட்டையும், வியாபாரத்தையும் விட்டுவிட்டுச் செல்கிறார்கள். எவ்வாறாயினும் அவர்களும் இப்போது முற்றாகத் தமோபிரதான் ஆகிவிட்டார்கள். அவர்களும் இப்போது நகரங்களை நாடிச் சென்றுவிட்டார்கள். ஆனால் நீங்கள் யாரிடம் சென்று முறையிடுவீர்கள்? அரசர்களோ அல்லது அரசிகளோ இல்லை. நீங்கள் கூறுவனவற்றைச் செவிமடுக்க யாருமில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவருடைய சொந்த கருத்துள்ளது எனவும், அவர்கள் விரும்பியதை அவர்கள் செய்யலாம் எனவும், இந்த உலகம் எண்ணங்களால் உருவாக்கப்பட்டது எனவும் அவர்கள் கூறுவார்கள். தந்தை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் ஒரு மறைமுகமான வழியில் முயற்சி செய்வதற்கு உதவி செய்கிறார். நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். ஏனைய சமயங்கள் அனைத்தும் இறுதியில் விரிவடையும். பின்னர் போரும் அதிகளவு முரண்பாடுகளும் உள்ளன. நீங்கள் முக்கால்வாசி கல்பத்திற்குச் சந்தோஷமாக இருக்கிறீர்கள். இதனாலேயே உங்களுடைய தேவ தர்மம் உங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைத் தருவதாகத் தந்தை கூறுகிறார். நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறேன். ஏனைய சமய ஸ்தாபகர்கள் எவரும் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதில்லை. அவர்கள் எவருக்கும் சற்கதி அளிப்பதில்லை; அவர்கள் தங்கள் சொந்தச் சமயங்களை ஸ்தாபிப்பதற்கு வருகிறார்கள். அவர்களும் இறுதியில் முற்றிலும் தமோபிரதான் ஆகியதும் அவர்களை முற்றிலும் சதோபிரதான் ஆக்குவதற்குத் தந்தை வரவேண்டியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இங்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. இன்னார் இன்னார் மிக நன்றாகப் புரிந்துகொண்டார்கள் என்றும், அவர் மிகவும் நல்லவர் என்றும் சில குழந்தைகள் பாபாவிற்கு எழுதுகிறார்கள். பாபா கூறுகிறார்: அவர் எதனையும் புரிந்துகொள்ளவில்லை. பாபா வந்து எங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார் என்பதை அவர் புரிநது கொண்டிருந்தால், அவர் மிகவும் போதையடைந்து, உடனேயே ஒரு பயணச்சீட்டு வாங்கி, அந்தக் கணமே இங்கு ஓடி வந்திருப்பார். எவ்வாறாயினும் நீங்களும் தந்தையைச் சந்திக்க வரும்போது, உங்களுடைய ஆசிரியரிடமிருந்து ஓர் அறிமுகக் கடிதத்தைக் கொண்டு வரவேண்டும். நீங்கள் தந்தையை அடையாளம் கண்டவுடன் அவரைச் சந்திக்க வருவதைத் தாமதிக்க முடியாது. நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு போதையைக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்குள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய புத்தி அவர்களின் நண்பர்கள், உறவினர்களை நோக்கி அலையாது. எவ்வாறாயினும் உங்களிற் பலருடைய புத்தி தொடர்ந்தும் அலைந்து திரிகிறது. வீட்டில் உங்களுடைய குடும்பத்துடன் வாழும்போது ஒரு தாமரை மலர் போன்று தூய்மையாக இருப்பதுடன், தந்தையின் நினைவிலும் அமர்ந்திருங்கள். இது மிகவும் இலகுவானதாகும். இயன்றளவு தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். உங்களால் வேலையிலிருந்து லீவு எடுக்கக்கூடியதாகவுள்ளது. ஆகவே உங்கள் வேலையிலிருந்து இரண்டு நாட்கள் லீவு எடுத்து, நினைவு யாத்திரையில் அமர்ந்திருங்கள். நினைவில் அமர்ந்திருப்பதற்கு ‘நான் தொடர்ந்தும் தந்தையின் நினைவில் இருத்தல் என்ற விரதத்தைக் கடைப்பிடிப்பேன்’ என்று நீங்கள் மீண்டும் மீண்டும் நினைக்கவேண்டும். அப்போது நீங்கள் அதிகளவு சேகரித்துக்கொள்வீர்கள். உங்களுடைய பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் முற்றாகத் தூய்மையாக வேண்டும். எவராலும் நாள் முழுவதும் நினைவில் இருக்க முடியாது. மாயை நிச்சயமாகத் தடைகளை ஏற்படுத்துகிறாள். அவ்வாறிருந்தும், இந்த முயற்சியைச் செய்வதன் மூலம் நீங்கள் வெற்றியடைகிறீர்கள். சிந்தியுங்கள்: இன்று நான் முழு நாளும் தோட்டத்தில் அமர்ந்திருந்து தந்தையை நினைவு செய்வேன். உணவை உண்ணும்போதும் நான் நினைவில் அமர்ந்திருப்பேன். இதற்கு முயற்சி தேவை. நாங்கள் நிச்சயமாகத் தூய்மையாகவேண்டும். நீங்கள் முயற்சி செய்வதுடன், மற்றவர்களுக்கும் பாதையைக் காட்ட வேண்டும். பாட்ஜ்கள் மிகவும் சிறந்தவை. வீதிகளில் நீங்கள் உங்களுக்கிடையே பேசிக்கொண்டால், நீங்கள் கூறுவனவற்றைச் செவிமடுப்பதற்குப் பலர் ஒன்றுகூடுவார்கள். தந்தை கூறுகிறார்: என்னை நினைவு செய்யுங்கள்! அவர்கள் செய்தியைப் பெற்றுக்கொண்டதும், நீங்கள் பொறுப்பிலிருந்து விடுபடுகிறீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தொழில் போன்றவற்றிலிருந்து விடுமுறை பெற்று, நினைவில் இருப்பதற்கான சத்தியத்தை செய்து கொள்ளுங்கள். மாயையை வெற்றி கொள்ள வேண்டுமாயின், நினைவு செய்ய முயற்சி செய்யுங்கள்.
2. உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு மிகுந்த அன்புடனும், புன்னகையுடனும், அதிகளவு பணிவுடனும் சேவை செய்யுங்கள். உங்கள் புத்தி அவர்களை நோக்கி அலைவதை அனுமதிக்காதீர்கள். மிகுந்த அன்புடன், அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்.
ஆசீர்வாதம்:
லௌகீகத்தை அலௌகீகமாக மாற்;றுவதன் மூலம், ஒரு மாஸ்டர் சர்வசக்திவானாக சகல பலவீனங்களிலிருந்தும் விடுதலை அடைவீர்களாக.
மாஸ்டர் சர்வசக்திவான்களும், ஞானம் நிறைந்த ஆத்மாக்களும் என்றுமே எந்த பலவீனங்களினாலோ அல்லது பிரச்சினைகளினாலோ ஆதிக்கம் செலுத்தப்படுவதில்லை, ஏனெனில், அவர்கள் அமிர்தவேளையிலிருந்து தாம் பார்க்கின்ற, கேட்கின்ற, நினைக்கின்ற, செய்கின்ற அனைத்தையும் லௌகீகத்திலிருந்து அலௌகீகமாக மாற்றுகிறார்கள். உங்கள் லௌகீக குடும்பத்தினரின் பொறுப்புகளை நிறைவேற்றுகின்ற வேளையிலும் எப்பொழுதும் அலௌகீக பணியை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்தால், நீங்கள் மாயையின் எந்த விகாரங்களினாலோ அல்லது எந்த நபரினது தொடர்பினாலோ ஆதிக்கம் செலுத்தப்பட மாட்டீர்கள். தமோகுனி அதிர்வலைகளின் மத்தியிலும் நீங்கள் எப்பொழுதும் ஒரு தாமரையைப் போன்றிருப்பீர்கள். லௌகீகக் குப்பைகளின் மத்தியில் இருக்கும் போதும், அதிலிருந்து நீங்கள் பற்றற்றிருப்பீர்கள்.
சுலோகம்:
அனைவரையும் திருப்திபடுத்தினால், உங்கள் முயற்சியில் நீங்கள் இயல்பாகவே ஓர் உயரப்பாய்ச்சலை பாய்வீர்கள்.
இந்த அவ்யக்த மாதத்தில் அவ்யக்த ஸ்திதியை அனுபவம் செய்வதற்கான விசேட வீட்டுவேலை.
அமிர்த வேளையில் விழித்தெழும் கணத்திலிருந்து, உங்கள் ஒவ்வொரு செயல், எண்ணம், வார்த்தையிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்கள் ஆகுங்கள். வீணான ஒரு வார்த்தையும் இல்லாதிருக்கட்டும். முக்கிய பிரமுகர்கள் தங்கள் பேச்சுக்களை நிச்சயித்துள்ளதைப் போன்று, உங்கள் வார்த்தைகளும் நிச்சயிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். மேலதிகமாக எதனையும் பேசாதீர்கள்.