08.12.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.03.85     Om Shanti     Madhuban


திருப்தி


இன்று, தில்வாலா தந்தை, (உங்களின் இதயங்களைக் கொள்ளைகொண்டவர்) இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தனது அன்பான குழந்தைகளுடன் இதயபூர்வமாக உரையாடுவதற்காக வந்துள்ளார். தில்வாலா தனது குழந்தைகளுடன் பரிமாறிக் கொள்வதற்காக வந்துள்ளார். அத்துடன், நேர்மையான இதயங்களைக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம் அவர்களின் இதயங்களின் நிலைமை பற்றிக் கேட்பதற்காகவும் வந்துள்ளார். ஆன்மீகத் தந்தை ஆத்மாக்களுடன் இதயபூர்வமாக உரையாடுகிறார். ஆத்மாக்களுடனான இந்த இதயபூர்வமான உரையாடல் இந்த வேளையில் மட்டுமே அனுபவம் செய்யப்படுகிறது. ஆத்மாக்களான உங்களின் அன்பின் சக்தியால் நீங்கள் ஆத்மாக்களின் படைப்பாளரான தந்தையை, இதயபூர்வமாக உரையாடுவதற்காக சத்தத்திற்கு அப்பாலிருந்து (நிர்வாணா) சத்தத்திற்குள் அழைத்து வந்துள்ளீர்கள். நீங்கள், பந்தனத்தில் இருந்து விடுபட்டிருக்கும் தந்தையை, அன்பு பந்தனத்தில் கட்டிவிடும் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள். உலகிலுள்ள மக்கள் தம்மை பந்தனத்தில் இருந்து விடுவிக்கக்கூடியவர் என அவரை நோக்கி அழைக்கிறார்கள். பந்தனத்தில் இருந்து விடுபட்டுள்ள இத்தகைய தந்தை, எப்போதும் குழந்தைகளின் அன்பில் கட்டுப்பட்டு உள்ளார். அவரைக் கட்டி வைப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்கள். நீங்கள் அவரை நினைக்கும்போதெல்லாம், தந்தை அங்கு பிரசன்னமாகின்றார். பிரபு பிரசன்னம் ஆகின்றார். எனவே, இன்று, பாபா குறிப்பாக இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளுடன் இதயபூர்வமாக உரையாடுவதற்காக வந்துள்ளார். இப்போது, இந்தப் பருவகாலத்தில், இது இரட்டை வெளிநாட்டவர்களுக்கான விசேடமான முறை ஆகும். இங்கு வந்திருப்பவர்களில் பெரும்பாலானோர் இரட்டை வெளிநாட்டவர்களே. மதுவனவாசிகள் எவ்வாறாயினும் மேன்மையான இடத்தின்வாசிகளே. நீங்கள் ஓரிடத்தில் இருந்தவண்ணம் உலகிலுள்ள பல்வகை ஆத்மாக்களின் சந்திப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு வருபவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். ஆனால், மதுவனவாசிகள் எப்போதும் இங்கேயே இருக்கிறார்கள்.

இன்று, பாபா இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளிடம் கேட்கிறார்: நீங்கள் அனைவரும் பாப்தாதாவின் கிரீடத்திலுள்ள பிரகாசிக்கும் திருப்தி இரத்தினங்கள் ஆகிவிட்டீர்களா? நீங்கள் அனைவரும் திருப்தி இரத்தினங்களா? நீங்கள் எப்போதும் திருப்தியாக இருக்கிறீர்களா? சிலவேளைகளில் நீங்கள் உங்களுடன், பிராமண ஆத்மாக்களுடன், உங்களின் சொந்த சம்ஸ்காரங்களுடன் அல்லது சூழலின் ஆதிக்கத்துடன் அதிருப்தி அடைவதில்லை, அல்லவா? நீங்கள் எப்போதும் அனைத்தினாலும் திருப்தியாக இருக்கிறீர்களா? நீங்கள் சிலவேளைகளில் திருப்தியாகவும் சிலவேளைகளில் அதிருப்தியாகவும் இருந்தால், உங்களைத் திருப்தி இரத்தினங்கள் என அழைக்க முடியுமா? நீங்கள் அனைவரும் திருப்தி இரத்தினங்கள் என்றே உங்களைக் குறிப்பிடுகிறீர்கள், அப்படியல்லவா? அவ்வாறாயின், நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்கள், ஆனால் மற்றவர்கள் உங்களை அதிருப்தி அடையச் செய்கிறார்கள் எனக் கூற முடியாதல்லவா? என்ன நிகழ்ந்தாலும், திருப்தியான ஆத்மாக்கள் ஒருபோதும் தமது சிறப்பியல்பான திருப்தியைக் கைவிட மாட்டார்கள். திருப்தி என்பது விசேடமான நற்குணம், பொக்கிஷம், வாழ்க்கையின் சிறந்த அலங்காரம் ஆகும். நீங்கள் எதையாவது விரும்பும்போது, ஒருபோதும் அதைக் கைவிட மாட்டீர்கள். திருப்தி உங்களின் சிறப்பியல்பு. பிராமண வாழ்க்கையில் திருப்தியே மாற்றத்திற்கான விசேடமான கண்ணாடி ஆகும். சாதாரணமான வாழ்க்கை உள்ளது. பிராமண வாழ்க்கை உள்ளது. சாதாரணமான வாழ்க்கை என்றால், சிலவேளைகளில் திருப்தியாகவும் சிலவேளைகளில் அதிருப்தியுடனும் இருத்தல் என்று அர்த்தம். பிராமண வாழ்க்கையிலுள்ள திருப்தி என்ற சிறப்பியல்பைப் பார்க்கும்போது, ஞானம் இல்லாதவர்களின் மனங்களில் அது பதிகிறது. இந்த மாற்றம், பல ஆத்மாக்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குக் கருவி ஆகுகின்றது. அவர் எப்போதும் திருப்தியாக இருக்கிறார், அவர் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறார் என்பது அனைவரின் உதடுகளில் இருந்தும் வெளிப்படுகிறது. எங்கு திருப்தி உள்ளதோ, அங்கு நிச்சயமாக சந்தோஷம் இருக்கும். அதிருப்தி உங்களின் சந்தோஷத்தை மறையச் செய்துவிடுகிறது. இதுவே பிராமண வாழ்க்கையின் புகழ் ஆகும். எல்லா வேளையும் திருப்தி இல்லாவிட்டால், அது சாதாரணமான வாழ்க்கை ஆகும். இலகுவான வெற்றியின் அடிப்படை திருப்தியே. ஆத்மாக்களை முழு பிராமணக் குடும்பத்தினராலும் விரும்பச் செய்வதற்கான மேன்மையான வழிமுறை திருப்தியே ஆகும். திருப்தியுடன் இருப்பவர்களை அனைவரும் இயல்பாகவே விரும்புவார்கள். அனைவரும் அவர்களைத் தமக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்வார்கள். அத்துடன் ஒவ்வொரு மேன்மையான பணியிலும் அவர்களை ஒத்துழைக்கச் செய்வார்கள். அவர்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்கோ அல்லது ஒத்துழைக்கச் செய்வதற்கோ அல்லது விசேட ஆத்மாக்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கோ எந்தவிதமான முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் இதை நினைக்க வேண்டியதில்லை. இதைக் கூறவேண்டியதில்லை. திருப்தி என்ற சிறப்பியல்பே, உங்களை ஒவ்வொரு பணியிலும் தங்க வேந்தர் ஆக்கும். ஒரு பணிக்குக் கருவியாக இருக்கும் ஆத்மாக்கள், இயல்பாகவே திருப்தியாக இருக்கும் ஆத்மாக்களை அதில் ஈடுபடுத்த நினைப்பார்கள். தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பும் அளிப்பார்கள். திருப்தியானது சதா உங்களை அனைவரின் சுபாவத்துடனும் சம்ஸ்காரங்களுடனும் ஒத்திசையச் செய்யும். திருப்தியான ஆத்மா ஒருவர் ஒருபோதும் எவருடைய சுபாவம் அல்லது சம்ஸ்காரங்களால் பயப்பட மாட்டார். நீங்கள் இத்தகைய திருப்தி ஆத்மாக்கள் ஆகியுள்ளீர்கள், அல்லவா? கடவுளே உங்களிடம் வந்தார். நீங்கள் அவரிடம் போகவில்லை. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வந்தது. வீட்டில் இருந்தவண்ணம் நீங்கள் கடவுளைக் கண்டீர்கள். பாக்கியத்தைப் பெற்றீர்கள். வீட்டில் இருந்தவண்ணம் நீங்கள் சகல பொக்கிஷங்களுக்குமான சாவியைப் பெற்றீர்கள். உங்களுக்கு எந்த வேளையில் எது தேவைப்பட்டாலும், உங்களிடம் பொக்கிஷங்கள் தயாராக இருந்தன. ஏனெனில், நீங்கள் உரிமையுள்ளவர் ஆகியுள்ளீர்கள். எனவே, நீங்களும் இயல்பாகவே அனைவருக்கும் நெருக்கமாகவும் சேவைக்கு நெருக்கமாகவும் வருகின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். உங்களின் ஆன்மீகமே உங்களை முன்னேறச் செய்கிறது. சதா திருப்தியாக இருப்பவர்களுக்காக அனைவருக்கும் இயல்பாகவே இதயபூர்வமான அன்பிருக்கும். அது மேலோட்டமான அன்பில்லை. ஒன்று, ஒருவரை சந்தோஷப்படுத்துவதற்காக மேலோட்டமான அன்பைக் கொடுத்தல். மற்றையது, இதயபூர்வமான அன்பைக் கொடுத்தல். சிலவேளைகளில், சிலர் குழப்பம் அடையாமல் இருப்பதற்காக நீங்கள் அன்பைக் கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், இத்தகைய ஆத்மாக்கள் எல்லா வேளையும் அன்பைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் கிடையாது. திருப்தியான ஆத்மாக்கள் எப்போதும் அனைவரின் இதயபூர்வமான அன்பைப் பெறுகிறார்கள். ஒருவர் புதியவரோ அல்லது பழையவரோ, அவரின் அறிமுகம் கொடுக்கப்பட்டதோ இல்லையோ, அத்தகைய ஆத்மாவின் அறிமுகத்தைத் திருப்தியே கொடுக்கும். அவருடன் பேசுவதற்கும் அமர்ந்திருப்பதற்கும் அனைவரும் ஆசைப்படுவார்கள். எனவே, நீங்கள் இந்த முறையில் திருப்தியாக இருக்கிறீர்களா? நீங்கள் உறுதியானவர்கள், அல்லவா? நீங்கள் அவ்வாறு ஆகின்றீர்கள் என நீங்கள் கூறவில்லையல்லவா? இல்லை. நீங்கள் அவ்வாறு ஆகிவிட்டீர்கள்.

திருப்தியான ஆத்மாக்கள் எப்போதும் மாயையை வென்றவர்களாக இருப்பார்கள். இது மாயையை வென்றவர்களின் ஒன்றுகூடல் ஆகும். நீங்கள் மாயையை இட்டுப் பயப்படுபவர்கள் இல்லையல்லவா? யாரிடம் மாயை வருவாள்? அவள் அனைவரிடமும் வருகிறாள், இல்லையா? மாயை வருவதில்லை என யாராவது கூறுகிறீர்களா? அவள் அனைவரிடமும் வருகிறாள். ஆனால் சிலர் அவளிடம் பயப்படுகிறார்கள். ஏனையோர் அவளை இனங்கண்டு கொள்கிறார்கள். இதனாலேயே, அவர்களால் எச்சரிக்கையாக இருக்க முடிகிறது. ஒழுங்குமுறைக் கோட்பாடுகளின் கோட்டிற்குள் இருக்கும், தந்தையின் கீழ்ப்படிவான குழந்தைகள் தொலைவிலேயே மாயையை இனங்கண்டுகொள்கிறார்கள். அவளை இனங்காண்பதற்கு உங்களுக்குச் சிறிது நேரம் எடுத்தால் அல்லது அவளை இனங்காண்பதில் நீங்கள் தவறிழைத்தால், மாயையிடம் பயப்படுகிறீர்கள். எவ்வாறு சீதை ஏமாற்றப்பட்டாள் என்ற ஞாபகார்த்தக் கதையை நீங்கள் கேட்டுள்ளீர்கள். அது ஏனெனில், அவள் அவனை இனங்காணவில்லை. சீதை மாயையின் வடிவத்தை இனங்காணாததால் ஏமாந்தாள். வந்தவரை ஒரு பிராமணப் பூசாரியாக அல்லது யாசகராக இல்லாமல், இராவணன் என்பதை அவள் இனங்கண்டிருந்தால், துன்பக் குடிலின் அனுபவம் அவளுக்கு ஏற்பட்டிருக்காது. எவ்வாறாயினும், அவனைப் பிந்தியே அவள் இனங்கண்டு கொண்டதனால், அவள் ஏமாற்றப்பட்டாள். அவ்வாறு ஏமாறியதால், துன்பப்பட வேண்டியிருந்தது. யோகியாக இருப்பதில் இருந்து அவள் வியோகி (யோகம் இல்லாமையால் பிரிதல்) ஆகினாள். சதா சகவாசத்தில் இருப்பதில் இருந்து, அவள் தொலைவிற்குச் சென்றாள். பேறுகளின் சொரூபமாக இருக்கும் ஆத்மாவில் இருந்து, அழுது அழைக்கும் ஆத்மாவாக ஆகினாள். இதற்கான காரணம் என்ன? இனங்கண்டு கொள்ளாமை! மாயையை இனங்கண்டு கொள்ளும் சக்தி இல்லாததால், மாயையை துரத்துவதற்குப் பதிலாக, நீங்கள் பயப்படுகிறீர்கள். இனங்காணல் ஏன் இல்லாமல் போகிறது? அந்த வேளையில் இனங்காணாமல், ஏன் பின்னர் இனங்காணுகிறீர்கள்? இதற்கான காரணம் என்ன? இதற்கான காரணம், நீங்கள் சதா தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களைப் பின்பற்றாமையே ஆகும். சிலவேளைகளில், நீங்கள் அவற்றை நினைக்கிறீர்கள். சிலவேளைகளில் நினைப்பதில்லை. சிலவேளைகளில், உங்களுக்குள் ஊக்கமும் உற்சாகமும் உள்ளன. சிலவேளைகளில் அவை இருப்பதில்லை. ‘சதா’ என்றிருக்கும் கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள், அதாவது, தாம் பெறுகின்ற கட்டளைகளின் ஒழுக்கமுறை எனும் கோட்டிற்குள் இருக்காதவர்கள், அந்த வேளையில் மாயையால் ஏமாற்றப்படுகிறார்கள். மாயையிடம் அதிகளவு வேறுபிரித்தறியும் சக்தி உள்ளது. அந்த வேளையில் நீங்கள் பலவீனமாக இருப்பதை மாயை பார்க்கிறாள். அந்தப் பலவீனத்தால், அவள் உங்களைத் தனக்குச் சொந்தம் ஆக்கிக் கொள்கிறாள். மாயை உட்பிரவேசிக்கும் கதவு, பலவீனமே ஆகும். அவள் நுழைவதற்குச் சிறியதொரு வழி கிடைத்தாலும், அவள் உடனடியாக அதற்குள் நுழைந்துவிடுகிறாள். தற்காலத்தில் கொள்ளையர்கள் என்ன செய்கிறார்கள்? கதவுகள் மூடியிருந்தாலும், அவர்கள் வென்ரிலேற்றர்களின் வழியே நுழைகிறார்கள். உங்களின் எண்ணங்களில் சிறிதேனும் பலவீனம் அடைவதெனில், மாயைக்கு இடம் கொடுத்தல் என்று அர்த்தம். இதனாலேயே, மாயையை வென்றவர் ஆகுவதற்கான மிக இலகுவான வழிமுறை, சதா தந்தையுடன் இருப்பதாகும். அவருடன் இருப்பதெனில், இயல்பாகவே ஒழுக்கமுறைக் கோட்பாடெனும் கோட்டுக்குள் இருத்தல் என்று அர்த்தம். அதன்பின்னர், தனித்தனியாக ஒவ்வொரு விகாரத்தில் இருந்தும் விடுபடுவதற்கான முயற்சியில் இருந்து நீங்கள் விடுதலை அடைவீர்கள். அவரின் சகவாசத்தில் இருங்கள். நீங்கள் இயல்பாகவே தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள். சகவாசம் இயல்பாகவே உங்களுக்கு நிறமூட்டும். விதையை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, கிளைகளை வெட்டுவதற்குக் கடினமாக முயற்சி செய்யாதீர்கள். ஒரு நாள், நீங்கள் காமத்தை வென்றவர் ஆகுவீர்கள். அடுத்தநாள், நீங்கள் கோபத்தை வென்றவர் ஆகுவீர்கள். இல்லை. நீங்கள் சதா வெற்றியாளர்கள். நீங்கள் விதை ரூபத்தினால் விதையை முடிக்கும்போது, இயல்பாகவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில் இருந்து விடுபடுவீர்கள். விதை ரூபத்தை உங்களுடன் வைத்திருங்கள். அப்போது, மாயையின் விதையானது, அந்த விதையில் இருந்து எந்தவிதமான சுவடும் வெளிவராத வண்ணம் எரிந்துவிடும். எவ்வாறாயினும், வறுத்த விதைகள் ஒருபோதும் பழங்களைக் கொடுக்காது.

எனவே, தந்தையுடன் இருங்கள். திருப்தியாக இருங்கள். அப்போது மாயையால் என்ன செய்ய முடியும்? அவள் தானாகவே உங்களிடம் சரணடைந்துவிடுவாள். மாயையை எவ்வாறு சரணடையச் செய்வது என்பது உங்களுக்குத் தெரியாதா? நீங்களாகவே உங்களை அர்ப்பணித்திருந்தால், மாயையும் உங்களிடம் சரணடைந்துவிடுவாள். எனவே, மாயை உங்களிடம் சரணடைந்துவிட்டாளா அல்லது நீங்கள் அதற்கான ஆயத்தங்களை இன்னமும் செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்களின் அந்தஸ்து என்ன? உங்களின் சொந்த அர்ப்பணிக்கும் விழா இருப்பதைப் போன்று, மாயையின் சரணடையும் விழாவையும் நீங்கள் ஏற்கனவே கொண்டாடிவிட்டீர்களா? அல்லது, நீங்கள் இன்னமும் அதைக் கொண்டாட வேண்டியுள்ளதா? புனிதம் அடைந்திருத்தல் என்றால் விழா இடம்பெற்று விட்டது என்று அர்;த்தம். அவள் எரிக்கப்பட்டுவிட்டாள். அதன்பின்னர், நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றபின்னர், ‘நான் என்ன செய்வது, மாயை வந்தாள்!’ என நீங்கள் கடிதங்களை எழுதமாட்டீர்கள், அல்லவா? நீங்கள் நல்ல செய்திகளைக் கூறும் கடிதங்களையே எழுதுவீர்கள், அல்லவா? அர்ப்பணிக்கும் விழாக்கள் எத்தனை இடம்பெற்றுவிட்டன? உங்களின் சொந்த விழா இடம்பெற்றுவிட்டது. ஆனால் நீங்கள் ஏனைய ஆத்மாக்களையும் மாயையை சரணடையச் செய்ய வைத்தீர்கள். நீங்கள் இத்தகைய செய்திகளையே எழுதுவீர்கள், அல்லவா? அச்சா.

நீங்கள் இங்கு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வந்த அளவிற்கு, பாப்தாதாவும் எப்போதும் குழந்தைகளான உங்களை எல்லா வேளையும் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் உள்ள திருப்தியான ஆத்மாக்களாகக் காணவே விரும்புகிறார். உங்களிடம் அன்பு உள்ளது. வெகு தொலைவில் இருந்து நெருக்கமாக வந்திருப்பதே அந்த அன்பின் அடையாளம் ஆகும். நீங்கள் அன்புடன் பகல்களையும் இரவுகளையும் எண்ணிக் கொண்டிருந்து, இங்கே வந்துள்ளீர்கள். அன்பு இல்லாவிட்டால், இங்கு வருவதும் கஷ்டமாகவே இருக்கும். அன்பு வைத்திருப்பதில் நீங்கள் சித்தி அடைந்துவிட்டீர்கள். நீங்கள் சித்திக்கான சான்றிதழைப் பெற்றீர்கள், அல்லவா? நீங்கள் ஒவ்வொரு பாடத்திலும் சித்தி அடைந்துள்ளீர்கள். எவ்வாறாயினும், உங்களின் இனங்காணும் கண்கள் மிகவும் கூர்மையாக இருப்பதனால், பாப்தாதா குழந்தைகளான உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். தொலைவில் இருந்தாலும், நீங்கள் தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். அவருடன் இருப்பவர்கள், அதாவது, இந்த நாட்டில் இருப்பவர்களால் அவரை இனங்கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால், நீங்கள் தொலைவில் இருந்தாலும் அவரை இனங்கண்டு கொண்டீர்கள். நீங்கள் தந்தையை இனங்கண்டு கொண்டீர்கள். அவரை உங்களுக்குச் சொந்தம் ஆக்கினீர்கள். அத்துடன் உங்களையும் அவருக்குச் சொந்தமாக்கினீர்கள். இதற்காக பாப்தாதா விசேடமான பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். எனவே, அவரை இனங்கண்டு கொள்வதில் நீங்கள் முன்னணியில் சென்றதைப் போன்று, மாயையை வெல்வதிலும் முதலாம் இலக்கத்தவர் ஆகுங்கள். அப்போது, நீங்கள் நிச்சயமாகத் தந்தையிடமிருந்து எப்போதும் பாராட்டுக்களைப் பெறுபவர்கள் ஆகுவீர்கள். அதன்பின்னர், மாயையிடம் பயப்படும் எந்தவோர் ஆத்மாவையும் பாப்தாதாவால் உங்களிடம், ‘அந்தக் குழந்தையிடம் மாயையை வென்றவர் ஆகுவதற்கான அவரின் அனுபவத்தைக் கேளுங்கள்’ எனக் கூறி அனுப்ப முடியும். இத்தகையதோர் உதாரணம் ஆகி, இதைச் செய்து காட்டுங்கள். பற்றை வென்ற குடும்பம் பிரபல்யமாக இருப்பதைப் போன்று, மாயையை வென்றவர்களாக இருக்கும் நிலையமும் ஒருபோதும் மாயை போர் தொடுக்காத நிலையம் எனப் பிரபல்யம் அடையும். மாயை வருதல் ஒருவிடயம். ஆனால், மாயை போர் தொடுப்பது வேறு விடயம். எனவே, நீங்களே இதிலும் ஓரிலக்கத்தைக் கோருபவர்கள், அப்படியல்லவா? இதில் யார் முதல் இலக்கத்தவர் ஆகுவீர்கள்? இலண்டனா, அவுஸ்திரேலியாவா அல்லது அமெரிக்காவா? யார் இவ்வாறு ஆகுவீர்கள்? பாரிஸா? பிரேசிலா? ஜேர்மனியா? இவ்வாறு ஆகுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் உயிர்வாழும் அருங்காட்சியகங்கள் என பாப்தாதா அறிவிப்பார். அபுவின் அருங்காட்சியகம் சேவையிலும் அதன் அலங்காரத்திலும் முதல் இலக்கத்தில் இருப்பதைப் போன்று, மாயையை வென்ற குழந்தைகளின் உயிர்வாழும் அருங்காட்சியகம் இருக்க வேண்டும். உங்களிடம் இத்தகைய தைரியம் உள்ளதல்லவா? இப்போது இதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? பொன்விழாவில், முதலில் எதையாவது செய்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும். நீங்கள் பிந்தி வந்திருந்தாலும், விரைவாகச் செல்வதன் மூலம் இதைச் செய்து காட்டுங்கள். பாரதத்தில் இருந்து வந்தவர்களும் இந்த ஓட்டப்பந்தயத்தில் ஓட வேண்டும். எவ்வாறாயினும், உங்களால் அவர்களை முந்திச் செல்ல முடியும். பாப்தாதா அனைவருக்கும் முன்னணியில் செல்வதற்கான வாய்ப்பைக் கொடுக்கிறார். உங்களால் எட்டில் ஓரிலக்கத்தையும் பெற முடியும். எட்டுப்பேர் பரிசு பெறுவார்கள். ஒருவருக்கு மட்டும் பரிசு என்றில்லை. இலண்டனும் அமெரிக்காவும் இப்போது பழையவர்கள் ஆகிவிட்டார்கள், புதியவர்களான நீங்கள் இப்போதே வந்துள்ளீர்கள் என நீங்கள் நினைக்கவில்லை, அல்லவா? மிகச்சிறிய புது நிலையம் எது? இளையவர்கள் எப்போதும் அனைவராலும் நேசிக்கப்படுகிறார்கள். இளையவர்களுக்குக் கூறப்படுகிறது: பழையவர்கள் பழையவர்களே. ஆயினும் இளையவர்கள் தந்தைக்குச் சமமானவர்கள். உங்கள் அனைவராலும் இதைச் செய்ய முடியும். இது பெரியதொரு விடயம் அல்ல. கிறீஸ், டாம்பா, ரோம். இவை இளைய நிலையங்கள். உங்களிடம் மகத்தான உற்சாகம் உள்ளது. டாம்பா என்ன செய்வீர்கள்? ஆலயம் கட்டுவீர்களா? இங்கு வந்திருந்த களிப்பூட்டும் குழந்தைக்கு டாம்பாவில் ஓர் ஆலயம் கட்டும்படி கூறப்பட்டது. டாம்பாவிற்குச் செல்லும் எவரும் உயிர்வாழும் விக்கிரங்களான உங்களைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும். சக்திசாலிகளான நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அரசர்களான நீங்கள் தயாராக இருந்தால், பிரஜைகளும் மிக விரைவாக உருவாக்கப்பட்டு விடுவார்கள். அரச குடும்பத்தை உருவாக்குவதற்குக் காலம் எடுக்கும். அரச குடும்பத்தின் இந்த இராச்சியம் உருவாக்கப்பட்டதும், பல பிரஜைகள் வருவார்கள். அவர்களைக் கண்டு நீங்கள் விசனப்படும் அளவிற்குப் பல பிரஜைகள் வருவார்கள். பாபா, இப்போது இதை நிறுத்துங்கள்! என நீங்கள் கூறுவீர்கள். எவ்வாறாயினும், அனைத்திற்கும் முதலில், இராச்சிய சிம்மாசனத்திற்கு உரிமையுள்ள அரசர்கள் தயார் ஆகவேண்டும்! கிரீடமும் திலகமும் அணிந்தவர்கள் தயாராகினால் மட்டுமே, பிரஜைகளும் ‘ஆமாம், எனது பிரபுவே!’ எனக் கூறுவார்கள். உங்களிடம் கிரீடம் இல்லாவிட்டால், நீங்களே அரசர் என எவ்வாறு உங்களின் பிரஜைகள் நம்புவார்கள்? அரச குடும்பத்தை உருவாக்குவதற்குச் சிறிது காலம் எடுக்கும். நீங்கள் அரச குடும்பத்தில் ஒருவர் ஆகுவதற்கான உரிமையுடையவர் ஆகுவதற்கான நல்ல நேரத்தில் வந்துள்ளீர்கள். பிரஜைகள் வருவதற்கான நேரம் இனி வரவுள்ளது. அரசர் ஆகுவதன் அடையாளம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுதில் இருந்தே, சுய இராச்சிய அதிகாரிகளாகவும் உலக இராச்சியத்திற்கு உரிமை உடையவராகவும் ஆகுங்கள். ஆட்சி செய்பவர்களுக்கு இப்போது நெருக்கமாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் ஆகுபவர்கள், அங்கும் இராச்சியத்தில் ஆட்சி செய்வதில் நெருக்கமானவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் இருப்பார்கள். நீங்கள் இப்போது சேவையில் ஒத்துழைக்கிறீர்கள். பின்னர் நீங்கள் இராச்சியத்தை ஆள்வதில் ஒத்துழைப்பீர்கள். ஆகவே, இப்பொழுதில் இருந்தே சோதித்துப் பாருங்கள்: நீங்கள் அரசர்களா? அல்லது, நீங்கள் சிலவேளைகளில் அரசர்களாகவும் சிலவேளைகளில் பிரஜைகளாகவும் இருக்கிறீர்களா? சிலவேளைகளில் தங்கியிருப்பவராகவும் சிலவேளைகளில் உரிமையுடையவராகவும் இருக்கிறீர்களா? நீங்கள் எல்லா வேளையும் அரசர்களா? அவ்வாறாயின், நீங்கள் எத்தனை அதிர்ஷ்டசாலிகள்? நீங்கள் பிந்தி வந்திருப்பதாக நினைக்காதீர்கள். உண்மையில் இறுதியில் வருபவர்களே இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். நீங்கள் நல்ல நேரத்தில் இங்கு வந்துள்ளீர்கள். இதனாலேயே, நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் பிந்தி வந்திருப்பதனால் உங்களால் அரசர்கள் ஆகமுடியுமா இல்லையா என நினைக்காதீர்கள். என்னால் அரச குடும்பத்தில் ஒருவர் ஆகமுடியுமா இல்லையா? நான் வராவிட்டால், யார் வருவார்? என நினையுங்கள். நீங்கள் அதில் ஓர் அங்கத்தவர் ஆகவேண்டும். என்னால் அங்கு போக முடியுமா இல்லையா எனத் தெரியவில்லை என நினைக்காதீர்கள். இது நிகழுமோ அல்லது என்ன நிகழுமோ என எனக்குத் தெரியவில்லை. இல்லை. நீங்கள் இதை ஒவ்வொரு கல்பத்திலும் நிறைவேற்றி உள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் இப்போதும் அதைச் செய்கிறீர்கள். எப்போதும் அதைச் செய்வீர்கள். உங்களுக்குப் புரிகிறதா?

நீங்கள் வெளிநாட்டவர்கள், அவர்கள் இந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்கள், அவர் ஓர் இந்தியன், நான் ஒரு வெளிநாட்டவன் என ஒருபோதும் நினைக்காதீர்கள். ஏதாவதொன்றை நாம் செய்யும் முறை எங்களுக்குரியது. அவர்களுடையது அவர்களுக்கு உரியது. உங்களை அறிமுகப்படுத்துவதற்காகவே இரட்டை வெளிநாட்டவர்கள் என்று அழைக்கப்படுகிறீர்கள். இங்கும், இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர், அவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறது. நீங்கள் பிராமணர்கள், அல்லவா? நீங்கள் இந்தியர்களோ அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களோ, நீங்கள் அனைவரும் பிராமணர்களே. நீங்கள் வெளிநாட்டவர்கள் எனக் கருதுவது தவறானது. நீங்கள் புதுப் பிறவி எடுக்கவில்லையா? பழைய பிறவியே வெளிநாட்டைச் சேர்ந்தது. புதிய பிறவி பிரம்மாவின் மடியிலேயே எடுக்கப்பட்டது, அல்லவா? அது உங்களை அறிமுகப்படுத்துவதற்காகக் கூறுவது. எவ்வாறாயினும், உங்களின் சம்ஸ்காரங்களிலோ அல்லது உங்களின் புரிந்துணர்விலோ வேறுபாடு இருப்பதாக நினைக்காதீர்கள். நீங்கள் பிராமணக் குலத்தைச் சேர்ந்தவர்கள், அல்லவா? நீங்கள் அமெரிக்க அல்லது ஆபிரிக்கக் குலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையல்லவா? அனைவரின் அறிமுகமும் எவ்வாறு கொடுக்கப்படுகிறது? சிவ குலத்தைச் சேர்ந்த பிரம்மகுமார்களும் பிரம்மகுமாரிகளும். இது ஒரேயொரு குலம் அல்லவா? நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் இந்த வேறுபாட்டைப் பற்றி ஒருபோதும் பேசாதீர்கள். இந்தியர்கள் இவ்வாறு செய்கிறார்கள், வெளிநாட்டவர்கள் அவ்வாறு செய்கிறார்கள் என்பது இல்லை. நாம் அனைவரும் ஒன்றே. தந்தையும் ஒரேயொருவரே. இந்தப் பாதையும் ஒன்றே. நடைமுறை, வழக்கங்களும் ஒன்றே. சுபாவமும் சம்ஸ்காரங்களும் ஒன்றே. எனவே, இந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே எவ்வாறு வேறுபாடு இருக்க முடியும்? வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என உங்களை அழைப்பதன் மூலம், நீங்கள் தொலைவில் சென்றுவிடுவீர்கள். நாம் அனைவரும் பிரம்மாவின் குலத்தைச் சேர்ந்த பிராமணர்கள். நான் வெளிநாட்டவர் அல்லது நான் குஜராத்தி என்பதனால் இது நிகழ்கிறது என்பதல்ல. நீங்கள் அனைவரும் ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமானவர்கள். வெவ்வேறு சம்ஸ்காரங்கள் ஒன்றுசேர்ந்து ஒன்றாகி இருப்பதே இங்குள்ள சிறப்பியல்பு ஆகும். வெவ்வேறு மதங்களும் சாதிகளும் குலங்களும் இப்போது முடிவடைந்துவிட்டன. நீங்கள் ஒரேயொருவருக்குச் சொந்தமானவர்கள். அதனால் நீங்கள் அனைவரும் ஒன்றே. உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

திருப்தி என்ற சிறப்பியல்பைக் கொண்டிருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும், தமது திருப்தியால் சேவையில் சதா வெற்றி பெறும் குழந்தைகளுக்கும், சதா சுய இராச்சிய உரிமையையும் அதனால் உலக இராச்சியத்தையும் பெறும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், நம்பிக்கை வைத்திருப்பதனால் ஒவ்வொரு பணியிலும் சதா முதலாம் இலக்கத்தவர் ஆகும் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லையற்ற விருப்பமின்மை உடையவராகி, சகல வசதிகளாலும் கவரப்படாதவராகி, பற்றற்றவராக இருந்து அவற்றைப் பயன்படுத்துபவர் ஆகுவீர்களாக.

எல்லையற்ற விருப்பமின்மை உடையவர் என்றால், எதனாலும் கவரப்படாதவராகி, சதா தந்தையின் மீது அன்புடையவராக இருப்பவர் என்று அர்த்தம். இந்த அன்பானது உங்களைத் தனித்துவமாகப் பற்றற்றவர் ஆக்குகிறது. தந்தையிடம் உங்களுக்கு அன்பு இல்லாவிட்டால், உங்களால் பற்றற்றவர் ஆகமுடியாது. உங்களிடம் ஏதாவது பற்றும் காணப்படும். தந்தையிடம் அன்பு வைத்திருப்பவர்கள், சகல கவர்ச்சிகளில் இருந்தும் அப்பாற்பட்டிருப்பார்கள். அதாவது, அவர்கள் பற்றற்றவர்களாக இருப்பார்கள். இது, பாதிக்கப்படாதவராகவும் எந்தவிதமான எல்லைக்குட்பட்ட கவர்ச்சியின் ஆதிக்கத்திற்கு உட்படாதவராகவும் இருக்கும் ஸ்திதி எனப்படுகிறது. ஏதாவது படைப்பை அல்லது வசதிகளை அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்;படாதவாறு பயன்படுத்துபவர்கள், எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கும் இராஜரிஷிகள் என்று அழைக்கப்படுவார்கள்.

சுலோகம்:
இதயத்தில் சுத்தமும் நேர்மையும் இருந்தால், பிரபு சந்தோஷம் அடைவார்.