19.05.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     28.11.84     Om Shanti     Madhuban


உங்கள் எண்ணங்களைப் பலனுள்ளதாக்குவதற்கான இலகுவான வழிமுறை.


இன்று, உலகைப் படைப்பவரும் உலக நன்மையாளருமான தந்தை, சகல விசேடமான குழந்தைகளையும் பார்ப்பதற்காக உலகெங்கும் சுற்றி வந்தார். அவர் ஞானி ஆத்மாக்களையும் அன்பான, ஒத்துழைக்கும் குழந்தைகளையும் கண்டார். அவர் பக்த ஆத்மாக்களைக் கண்டார். அத்துடன் ஞானம் அற்ற குழந்தைகளையும் கண்டார். பல்வகையான ஆத்மாக்கள் தமது அன்பிலே முழுமையாகத் திளைத்திருப்பதை அவர் கண்டார். சிலர் குறிப்பிட்ட பணியைச் செய்வதில் மூழ்கியிருந்தார்கள். சிலர் எதையாவது உடைக்கும் பணியில் மூழ்கியிருந்தார்கள். ஏனையோர் எதையாவது திருத்தும் பணியில் மூழ்கியிருந்தார்கள். ஆனால் அனைவரும் நிச்சயமாக அவற்றில் மூழ்கியிருந்தார்கள். நான் எதையாவது கண்டுபிடிக்க வேண்டும், நான் எதையாவது எடுக்க வேண்டும், நான் எதையாவது அடைய வேண்டும் என்ற எண்ணமே அனைவரின் மனங்களிலும் இருந்தது. ஒவ்வொருவரும் அந்த இலக்குடன் தனது சொந்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களிடம் எல்லைக்குட்பட்ட பேறுகள் இருந்தாலும், சகல திசைகளிலும் அனைவரும் ஒரே எண்ணத்துடன் இருப்பதை பாபா கண்டார்: நான் எதையாவது கண்டுபிடிக்க வேண்டும், நான் ஏதாவதாக ஆகவேண்டும். இவற்றுக்கு இடையே, பாபா குறிப்பாக பிராமணக் குழந்தைகளையும் கண்டார். இந்தத் தேசத்திலோ அல்லது வெளிநாடுகளிலோ, பாபா ஒவ்வொருவரிலும் ஒரே எண்ணத்தைக் கண்டார். நான் இப்போது எதையாவது செய்ய வேண்டும். எல்லையற்ற பணிக்காக நான் விசேடமாக எதையாவது செய்ய வேண்டும். எனக்குள் ஒரு சிறப்பியல்பைக் கிரகித்து, விசேடமான ஆத்மா ஆகவேண்டும். பெரும்பாலான குழந்தைகளில் பாபா இத்தகைய உற்சாகத்தைக் கண்டார். ஒவ்வொருவரின் முயற்சிகளிலும் ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் விதையின் நடைமுறை ரூபத்தையும் காலத்தின் சூழலையும் பாபா கண்டார். உற்சாகம் என்ற இந்த விதையை நிலையானது ஆக்குவதற்கு, அதற்கு மீண்டும் மீண்டும் கவனம் செலுத்துதல் என்ற நீரை ஊற்றிச் சோதிக்க வேண்டும். அதாவது, அதை வளரச் செய்யும் வழிமுறையானது, தொடர்ந்து அதற்கு சூரிய ஒளியைக் கொடுப்பதே ஆகும். இதிலேயே நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். விதைகளை விதைப்பது என்பதை அனைவரும் அறிவார்கள். அதைப் பராமரிப்பதிலும் பழத்தைப் பெறச்செய்வதிலுமே வேறுபாடு தோன்றுகிறது.

தினமும் அமிர்தவேளையில், குழந்தைகளான நீங்கள் நாள் முழுவதும் செய்யும் அன்பின் விளையாட்டை அல்லது முயற்சியை பாப்தாதா பார்க்கிறார். உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களுக்காகவும் சேவைக்காகவும் உற்சாகத்திற்கான சிறப்பான எண்ணங்கள் உள்ளன: ‘இப்பொழுதில் இருந்து, நான் இதைச் செய்வேன். நான் அதைச் செய்வேன். நான் நிச்சயமாக இதைச் செய்வேன். நான் நிச்சயமாக இதைச் செய்து அனைவருக்கும் காட்டுவேன்.’ நீங்கள் தொடர்ந்து இத்தகைய மேன்மையான எண்ணங்கள் என்ற விதைகளை விதைக்கிறீர்கள். பாப்தாதாவுடனான உங்களின் இதயபூர்வமான சம்பாஷணையில், நீங்கள் மிக இனிமையான விடயங்களைக் கூறுகிறீர்கள். ஆனால், அந்த எண்ணத்தை, அதாவது, அந்த விதையைப் பராமரிக்கும்போது, அதை நடைமுறை ரூபத்தில் இடும்போது என்ன நிகழுகிறது? ஏதாவதொரு விடயத்தில், அதை வளரச் செய்யும் வழிமுறையில், அல்லது அதை பழமாக்கும் சிறப்பியல்பில், உங்களின் கொள்ளளவிற்கேற்ப நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுகிறீர்கள். எந்தவோர் எண்ணம் என்ற விதையையும் பழம் ஆக்குவதற்கான இலகுவான வழிமுறையானது, தொடர்ந்து அந்த விதைக்கு எல்லா வேளையும் விதையான தந்தையிடமிருந்து சகல சக்திகளையும் பெற்று வலிமை ஆக்குவதே ஆகும். விதைரூப நிலையினூடாக, உங்களின் எண்ணங்களின் விதையானது இலகுவாகவும் இயல்பாகவும் வளர்ந்து பலனைத் தரும். எவ்வாறாயினும், விதையானவருடன் நிலையான இணைப்பு இல்லாமையால், நீங்கள் ஏனைய ஆத்மாக்களை அல்லது வசதிகளை வளர்ச்சிக்கான வழிமுறையாக ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். இதன் காரணத்தினால், ‘நான் இவ்வாறு செய்வதா அல்லது அவ்வாறு செய்வதா, நான் இவ்வாறே செய்ய வேண்டும்’ என்ற விரிவாக்கத்தில் உங்களுக்கு அதிக நேரமும் முயற்சியும் செலவாகிறது. நீங்கள் வேறோர் ஆத்மாவை அல்லது வசதியை உங்களின் ஆதாரம் ஆக்குகிறீர்கள். கடலிடமிருந்தும் சூரியனிடமிருந்தும் நீரையும் சூரிய ஒளியையும் பெறுவதற்குப் பதிலாக, நீங்கள் அதற்கு ஏனைய வசதிகள் என்ற நீரை ஊற்றுகிறீர்கள். ஆத்மாக்களை உங்களின் ஆதாரம் என்று கருதும் சகாஷை அதற்கு வழங்குகிறீர்கள். ஆகவே, விதையில் இருந்து பலன் கிடைப்பதில்லை. இதனாலேயே, முயற்சி செய்த பின்னரும், உங்களின் நேரத்தை வழங்கிய பின்னரும், நீங்கள் தொடர்ந்து முன்னேறும்போது, புலப்படும் பழம் என்ற பேறு இல்லாவிட்டால், உங்களின் உற்சாகம் குறைவடைகிறது. நீங்கள் உங்களுடனும் உங்களின் சகபாடிகளுடனும் சேவையிலும் மனவிரக்தி அடைகிறீர்கள். சிலவேளைகளில் சந்தோஷ அலைகளும் சிலவேளைகளில் சோகத்தின் அலைகளும் பிராமண வாழ்க்கை என்ற படகை ஆட்டுகின்றன. சிலவேளைகளில் அது நன்றாகச் செல்கிறது. தற்காலத்தில் குழந்தைகளான உங்களில் சிலரின் வாழ்க்கை நிலைமை இவ்வாறே உள்ளன. நீங்கள் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். நீங்கள் ஒரு பணியைச் செய்கிறீர்கள். ஆனால், நீங்கள் எதை அனுபவம் செய்ய வேண்டுமோ, அதை அனுபவம் செய்வதில்லை. ஆகவே, சந்தோஷம் இருந்தாலும், நீங்கள் சந்தோஷ நடனம் ஆடுவதில்லை. நீங்கள் தொடர்ந்து முன்னேறுகிறீர்கள். ஆனால் துரித கதியில் செல்வதில்லை. நீங்கள் மேன்மையான வாழ்க்கை வாழ்பவர்கள் என்றும், நீங்கள் இப்போது தந்தைக்குரியவர்கள் என்றும், இப்போது சேவையாளர்கள் என்றும் துன்பமும் வேதனையும் மிக்க உலகில் இருந்து அப்பால் வந்துள்ளீர்கள் என்றும் திருப்தி அடைகிறீர்கள். எவ்வாறாயினும், இந்தத் திருப்திக்கிடையே, உங்களின் சொந்த விருப்பத்திற்கு மாறாகவும், ஏன் அது நிகழுகிறது என்ற புரிந்துணர்வு இன்மையாலும், அதிருப்தி அலைகள் வெளிப்படுகின்றன. இது ஏனெனில், ஞானமும் நினைவும் இலகுவாக இருந்தாலும், உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் அன்பாகவும் பற்றற்றவராகவும் இருந்து அந்தப் பொறுப்பை நிறைவேற்றுதல் சிலவேளைகளில் இலகுவாக உள்ளது. சிலவேளைகளில் கடினமாக உள்ளது.

பிராமணக் குடும்பமும் சேவை என்ற இல்லறமுமே உறவுமுறைகள் மற்றும் தொடர்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இதிலேயே, ஏதாவதொரு முறையில் நீங்கள் அனுபவம் செய்ய வேண்டியதை அனுபவம் செய்வதில்லை. இதனாலேயே, இரு வகையான அலைகளும் உள்ளன. இப்போது, காலம் நெருங்கி வருவதனால், முயற்சியின் இந்த வேகம் உங்களின் இறுதி இலக்கைக் குறிப்பிட்ட காலத்திற்குள் அடைவதற்கு அனுமதிக்காது. இது, இப்போது தடைகளை அழிப்பவராகி, சந்தோஷமற்றிருக்கும் ஆத்மாக்களை உலகின் தடைகளுக்கு மத்தியில் சந்தோஷத்தையும் சௌகரியத்தையும் அனுபவம் அடையச் செய்வதற்கான நேரம் ஆகும். நீண்ட காலத்திற்குத் தடைகளை அழிப்பவர் என்ற ஸ்திதியைக் கொண்டிருக்கும் ஒருவரால் மட்டுமே தடைகளை அழிக்கும் பணியைச் செய்ய முடியும். இப்போதும் நீங்கள் உங்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தடைகளை முடிப்பதில் மும்முரமாக இருந்து, உங்களின் சக்தியை அதற்காகப் பயன்படுத்தினால்,மற்றவர்களுக்குச் சக்தியைக் கொடுப்பதில் எவ்வாறு உங்களால் கருவி ஆகமுடியும்? தடைகளில் இருந்து விடுபட்டு, சக்திகளின் களஞ்சியத்தைச் சேமியுங்கள். அப்போது மட்டுமே உங்களால் சக்தி சொரூபம் ஆகி, தடைகளை அழிப்பவரின் பணியைச் செய்ய முடியும். உங்களுக்குப் புரிகிறதா?

குறிப்பாக பாபா இரண்டு விடயங்களைக் கண்டார். பாரதத்திலுள்ள ஞானம் இல்லாத குழந்தைகள், ஆசனத்தை எடுப்பதில் அல்லது வேறொருவர் ஆசனத்தை எடுப்பதற்கு உதவுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். இரவு பகலாக, தமது கனவுகளிலும், அவர்கள் ஆசனத்தையே பார்க்கிறார்கள். ஆனால், பிராமணக் குழந்தைகளோ தங்களை நிலைநிறுத்துவதில் ஈடுபட்டுள்ளார்கள். நீங்கள் ஆசனத்தைப் பெற்றுள்ளீர்கள். ஆனால், உங்களை நிலைநிறுத்துகிறீர்கள். வெளிநாட்டில், தாங்கள் உருவாக்கிய அழிக்கும் சாதனங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறையைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பெரும்பாலானோரின் வாழ்க்கை, வாழ்க்கையாகவே இல்லை. அது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. ஞானம் அற்றவர்கள் தமது பாதுகாப்பைத் தேடுகிறார்கள். ஆனால், ஞானிக் குழந்தைகளோ வெளிப்படுத்துகை என்ற கொடியை ஏற்றுவதில் ஈடுபட்டுள்ளார்கள். ‘இப்போது, எங்களை இந்தத் துயரத்தில் இருந்து காப்பாற்றுங்கள்!’ என்பதே உலக மக்களின் நிலைமையாக உள்ளது. பல வகையான துயரங்களால் அலைந்து திரியும் ஆத்மாக்களுக்கு அமைதி இலக்கைக் காட்டுங்கள். அச்சா.

எப்போதும் தமது சம்பூரண ஸ்திதி என்ற ஆசனத்தில் நிலையாக அமர்ந்திருப்பவர்களுக்கும், சுயத்திற்கும் உலகிற்கும் தடைகளை அழிப்பவர்களாக இருப்பவர்களுக்கும், விதையானவரான தந்தையுடன் உறவுமுறை ஏற்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மேன்மையான எண்ணம் என்ற விதையையும் பலனுள்ளது ஆக்குவதுடன் அதன் நடைமுறைப் பழத்தை உண்பவர்களுக்கும், எப்போதும் திருப்தியாகவும் திருப்தி இரத்தினங்களாகவும் இருக்கும் குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா விடுதியில் தங்கியுள்ள குமாரிகளைச் சந்திக்கிறார்:
1.உங்களின் பாக்கியத்தைப் பார்க்கையில் நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கிறீர்கள், அல்லவா? தவறான பாதையில் செல்வதில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். இழப்பை அனுபவம் செய்வதற்குப் பதிலாக, உங்களின் வாழ்க்கையை வருமானம் சம்பாதிக்கும் ஒன்றாக நீங்கள் ஆக்கியுள்ளீர்கள். உலக வாழ்வில், அறிவு இல்லாவிட்டால், இழப்பே ஏற்படும். ஆனால், ஞானி வாழ்க்கையில், ஒவ்வொரு விநாடியும் வருமானமே இருக்கும். பிராமணர்கள் அனைவரும் பாக்கியசாலிகளே. ஆனால், குமாரிகள் இரட்டைப் பாக்கியசாலிகள் ஆவார்கள். குமாரி வாழ்க்கையில் ஒரு பிரம்மகுமாரி ஆகுவதெனில், ஒரு பிராமணர் ஆகுவதெனில் அது மிகவும் மகத்தானதாகும். இது சிறியதொரு விடயமல்ல. இது மிகப் பெரியதொரு விடயம். நீங்கள் என்னவாகி உள்ளீர்கள் என்ற போதை உங்களுக்கு இருக்கிறதா? சாதாரணமான குமாரியில் இருந்து நீங்கள் சக்தி ரூபம் ஆகியுள்ளீர்கள். நீங்கள் மாயையை அழிக்கும் சக்திகள் ஆவீர்கள், அல்லவா? நீங்கள் மாயையால் பயப்படுபவர்கள் அல்ல. ஆனால், மாயையை அழிப்பவர்கள். நீங்கள் பலவீனமானவர்கள் அல்ல. ஆனால் தைரியசாலிகள். நீங்கள் சிறிய விடயங்களை இட்டுப் பயப்படுவதில்லையல்லவா? நீங்கள் எப்போதும் உங்களின் மேன்மையான பேற்றினை நினைத்தால், அந்தச் சிறிய விடயங்கள் ஒன்றுமே இல்லாதது போன்றே இருக்கும். இப்போது, நீங்கள் உங்களின் வாழ்க்கை முழுவதற்கும் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துள்ளீர்களா அல்லது நீங்கள் இந்த விடுதியில் இருக்கும் காலப்பகுதிக்கு மட்டுமா? இந்தப் புரிந்துணர்வைக் கொண்டிருப்பதனால், உங்களில் எவராலும் மேன்மையான வாழ்க்கையில் இருந்து சாதாரணமான வாழ்க்கைக்குச் செல்ல முடியாது. கோடீஸ்வரர் ஒருவரை ஏழையாகும்படி சொன்னால், அவர் அவ்வாறு ஆகுவாரா? ஒருவர் தனது சூழ்நிலைகளால் அவ்வாறு ஆகினால், அவர் அதை விரும்பமாட்டார். எனவே, இந்த வாழ்க்கை சுய இராச்சியத்தை உடையது. உங்களால் இதில் இருந்து சாதாரணமான வாழ்க்கைக்குச் செல்ல முடியாது. எனவே, விவேகியாகி, அனைத்தையும் அனுபவம் செய்கிறீர்களா அல்லது ஒருவர் மற்றவரின் சகவாசத்தினால் தொடர்ந்து முன்னேறுகிறீர்களா? உங்களின் சொந்தப் புத்தியால் நீங்கள் தீர்மானித்துவிட்டீர்களா? உங்களின் சொந்த மனச்சாட்சியின் தீர்மானத்தினாலேயே நீங்கள் இந்த வாழ்க்கையை உருவாக்கியுள்ளீர்கள், அப்படியல்லவா? அல்லது, உங்களின் பெற்றோர் கேட்டதனால் நீங்கள் இங்கு வந்தீர்களா? அச்சா.

2. குமாரிகளான நீங்கள், நீங்களாக முன்வருகிறீர்களா? உங்களை எங்கு அனுப்பினாலும் அங்கு நீங்கள் சேவைக்காகச் செல்வீர்களா? நீங்கள் உறுதியான ஒப்பந்தத்தையா அல்லது பலவீனமான ஒப்பந்தத்தையா செய்துள்ளீர்கள்? அது உறுதியான ஒப்பந்தமாக இருந்தால், உங்களை எங்கே இருத்தினாலும் அங்கே இருக்க நீங்கள் தயாரா? உங்களுக்கு ஏதாவது பந்தனம் இருந்தால், அது உண்மையான ஒப்பந்தம் இல்லை. நீங்களே தயார் ஆகினால், எவராலும் உங்களைத் தடுக்க முடியாது. ஆடு ஒன்றை எங்கேயும் கட்டி வைக்க முடியும். ஆனால் எவராலும் சிங்கத்தைக் கட்டி வைக்க முடியாது. எனவே, எவ்வாறு ஒரு பெண்சிங்கம் எவருக்கும் கட்டுப்படும்? அவை காட்டில் வசிக்கும்போதும் சுதந்திரமாகவே உள்ளன. எனவே, நீங்கள் யார்? பெண்சிங்கங்கள். பெண்சிங்கம் என்றால் களத்தில் இறங்குபவர் என்று அர்த்தம். உங்களிடம் ஒரு நம்பிக்கையும் ஒரு வலிமையும் இருக்கும்போது, குழந்தைகளான உங்களுக்குத் தைரியம் இருக்கும்போது, தந்தை உதவி செய்வார். ஒரு பந்தனம் எத்தனை உறுதியானதாக இருந்தாலும், தைரியத்தின் அடிப்படையில், அந்த வலிமையான பந்தனத்தையும் இலகுவாக உடைத்துவிட முடியும். உதாரணமாக, சிறைப் பூட்டுகள் திறக்கப்பட்டதாகக் காட்டப்படுகின்றது. அதேபோன்று,உங்களின் பந்தனங்களும் உடைந்துவிடும். ஆகவே, அவ்வாறானவர்கள் ஆகுங்கள். சிறிதளவு பந்தனம் இருந்தாலும், அதை யோக அக்கினியால் எரித்துவிடுங்கள். அதை எரித்ததும், அதன் பெயரோ அல்லது சுவடோ எஞ்சியிருக்காது. அதை உடைப்பதன் மூலம், அதை மீண்டும் ஒரு கயிற்றால் கட்ட முடியும். ஆகவே, அதை உடைக்காதீர்கள். அதை எரித்து விடுங்கள். நீங்கள் எல்லா வேளைக்கும் சுதந்திரமானவர்கள் ஆகுவீர்கள். அச்சா.

தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்யக்த மேன்மையான வாசகங்கள்

இலகு சுபாவத்தைக் கொண்டவர் ஆகுங்கள். நீங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள்.
பிராமணர்களின் பிரதானமான சம்ஸ்காரம், சம்பூரணமான துறவிகளாக இருப்பதாகும். துறவறத்தின் மூலமே உங்களால் உங்களின் வாழ்க்கையில் இலகுத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்ற நற்குணங்களை விருத்தி செய்ய முடியும். இலகுதன்மையையும் சகிப்புத்தன்மையையும் கொண்டவர்கள், நிச்சயமாக மற்றவர்களைக் கவருவதுடன் ஒருவருக்கொருவர் அன்பாகவும் இருப்பார்கள். இலேசாகவும் இலகுவாகவும் இருப்பவர்களால் மற்றவர்களையும் இலேசாகவும் இலகுவாகவும் ஆக்க முடியும். இலேசாகவும் இலகுவாகவும் இருத்தல் என்றால், நீங்கள் கேட்கும், பார்க்கும் அல்லது செய்யும் எதுவும் சாரம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போது நீங்கள் அனைத்தினதும் சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்வீர்கள். நீங்கள் செய்யும் எதிலும் சாரம் நிறைந்திருக்க வேண்டும்.

இலகு முயற்சியாளர்களாக இருப்பவர்களால் மற்றவர்களையும் இலகு முயற்சியாளர்கள் ஆக்க முடியும். இலகு முயற்சியாளர்கள் அனைத்திலும் சகலகலாவல்லவர்களாக இருப்பார்கள். அவர்களில் புலப்படும்படியாக எந்தக் குறைவும் இருக்காது. அவர்கள் எதிலும் தைரியத்தை இழக்க மாட்டார்கள். தங்களால் எதையும் செய்ய முடியாது என அவர்கள் ஒருபோதும் கூற மாட்டார்கள். இலகுத்தன்மை மற்றும் இலேசான தன்மை என்ற இந்த ஒரு நற்குணத்தால், அவர்களால் அனைத்திலும் மாதிரியாகி, திறமைச் சித்தி எய்த முடியும். நீங்கள் சாகார் பாபாவைக் கண்டீர்கள். அவர் ஞானம் நிறைந்தவராக இருந்த அளவிற்கு, இலகுவான சுபாவத்தையும் கொண்டிருந்தார். இது குழந்தையின் சம்ஸ்காரத்தைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது: வயதானவர்களுடன் வயதானவராகவும், இளையவர்களுடன் ஒரு குழந்தையாகவும் இருத்தல் ஆகும். இந்த முறையில் தந்தையைப் பின்பற்றி, இலகு சுபாவத்தைக் கொண்டவராகவும் இலேசாகவும் இருங்கள்.

மற்றவர்களின் சம்ஸ்காரங்களை இலகுவாக்குவதற்கான வழிமுறை, ‘ஹா ஜி’ என்று சொல்லுவதாகும். இங்கு ‘ஹா ஜி’ என்று கூறும்போது, உங்களின் பிரஜைகள் சத்தியயுகத்தில் உங்களுக்கு ‘ஹா ஜி’ என்று சொல்லுவார்கள். இங்கு நீங்கள் ‘நா ஜி’ என்று கூறினால், உங்களின் பிரஜைகளும் தொலைவில் இருந்தே வணக்கம் சொல்லுவார்கள். எனவே, ‘இல்லை’ என்ற வார்த்தையை நீக்குங்கள். அனைத்திற்கும் ‘ஹா ஜி’ என்று சொல்வதன் மூலம், நீங்கள் இலகுவாகவும் இலேசாகவும் இருக்கும் சம்ஸ்காரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். வெற்றி ரூபம் ஆகுவதற்கு இலேசானதன்மை, இலகுவானதன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்ற நற்குணங்களைக் கிரகியுங்கள். பொறுமையான ஒருவர் அனைத்தையும் கவனமாகக் கருத்தில் கொண்டு, அதனூடாக வெற்றி பெறுவார். அதேபோன்று, ஹா ஜி என்று சொல்பவர்களும் இலகுவான சுபாவத்தைக் கொண்டிருப்பார்கள். சகித்துக் கொள்ளும் சக்தியால் அவர்களால் கடுமையான சம்ஸ்காரங்களைக் கொண்டவர்களையும் குளிர்மையாக்க முடியும். அவர்களால் கஷ்டமான பணியையும் இலகுவானதாக்க முடியும்.

உங்களின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள தேவர்களின் படங்களும் நிச்சயமாக இலகுவான, இலேசான சுபாவத்தையே சித்தரிக்கின்றன. இவை குறிப்பாக இந்த நற்குணத்தைச் சித்தரிக்கின்றன. அவர்களின் முகச்சாயல்கள் இலகுத்தன்மையைக் காட்டுகின்றன. இதை நீங்கள் கள்ளங்கபடமற்ற தன்மை என்று குறிப்பிடுகிறீர்கள். ஒருவர் எந்தளவிற்கு இலகுவான முயற்சியாளராக இருக்கிறாரோ, அந்தளவிற்கு, அவர்கள் தமது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் செயல்களிலும் இலகுவாக இருப்பார்கள். இதுவே தேவதையாக இருத்தல் எனப்படுகிறது. இலகுத்தன்மை என்ற நற்குணத்தைக் கிரகிப்பதுடன், உங்களுக்கு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும் சக்தியும் சகித்துக் கொள்ளும் சக்தியும் அவசியம். ஏற்றுக்கொள்ளும் சக்தியும் சகித்துக்கொள்ளும் சக்தியும் இல்லாவிடின், இலகுத்தன்மை பெரும் அப்பாவியின் ரூபத்தை எடுக்கும். சிலவேளைகளில், இந்த அப்பாவித்தனம் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே, நீங்கள் அந்தளவிற்கு இலகு சுபாவம் உடையவர்கள் ஆகக்கூடாது.

இலகுத்தன்மை என்ற நற்குணத்தால், தந்தையும் கள்ளங்கபடமற்ற பிரபு என்று அழைக்கப்படுகிறார். எவ்வாறாயினும், கள்ளங்கபடமற்ற பிரபுவாக இருக்கும் அதேவேளை, அவர் சர்வசக்திவானாகவும் இருக்கிறார். அவர் வெறுமனே கள்ளங்கபடமற்ற பிரபு மட்டும் அல்ல. எனவே, நீங்களும் இலேசானதன்மை என்ற நற்குணத்தைக் கிரகிக்க வேண்டும். ஆனால், எப்போதும் உங்களின் சக்தி ரூபத்தையும் நினைவில் வைத்திருங்கள். உங்களின் சக்தி ரூபத்தை மறந்து, கள்ளங்கபடமற்ற ரூபத்தை மட்டும் நினைத்தால், நீங்கள் மாயையால் சுடப்படுவீர்கள். ஆகவே, மாயை உங்களை எதிர்க்க முயற்சி செய்வதற்கு முன்னர், அவள் உங்களுக்குத் தலைவணங்கும்படி சக்தி ரூபம் ஆகுங்கள். நீங்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்க வேண்டும். உங்களின் பிராமண வாழ்க்கையில், நீங்கள் எப்போதும் இலகுவான சுபாவத்தைக் கொண்டவர் ஆகுவதற்கு சகல சிறப்பியல்புகளாலும் நிரம்பியவர் ஆகுங்கள். உங்களின் வார்த்தைகள் இலேசாகவும் இலகுவாகவும் இருக்க வேண்டும். உங்களின் செயல்கள் இலகுவான சுபாவத்தைக் கொண்டிருக்க வேண்டும். சதா ஒரேயொருவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். ஒரேயொருவருடன் சகல உறவுமுறைகளையும் கொண்டிருங்கள். ஒரேயொருவரிடமிருந்து அனைத்தையும் பெறும் அதேவேளை, சதா ஸ்திரமாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். சதா சந்தோஷமாக இருந்து, சந்தோஷப் பொக்கிஷங்களைப் பகிர்ந்து அளியுங்கள்.

உங்களின் வாழ்க்கையில் இலகுத்தன்மை என்ற நற்குணத்தைக் கிரகிப்பதற்கு, தற்சமயம் நீங்கள் ஒரு விடயத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களின் ஸ்திதியின் அத்திவாரம் நீங்கள் பெறும் புகழின் அடிப்படையில் கட்டப்படக்கூடாது. உங்களின் ஸ்திதி புகழ்ச்சியில் தங்கியிருக்குமாயின், நீங்கள் செய்யும் செயல்களின் பலனைப் பெறும் ஆசை உங்களிடம் இருக்கும். நீங்கள் புகழப்படும்போது, உங்களின் ஸ்திதி நன்றாக இருக்கும். உங்களை இகழ்ந்தால், நீங்கள் அனாதைகள் போன்று ஆகிவிடுவீர்கள். அதன்பின்னர் உங்களின் ஸ்திதியையும் கைவிட்டு, பிரபுவும் அதிபதியுமான தந்தையையும் மறந்துவிடுவீர்கள். எனவே, ஒருபோதும் புகழப்பட வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் பெறும் புகழ்ச்சியின் அடிப்படையில் உங்களின் ஸ்திதியை உருவாக்காதீர்கள். அப்போது மட்டுமே நீங்கள் இலகு சுபாவத்தைக் கொண்டிருப்பவர் எனப்படுவீர்கள். இலகுத்தன்மையையும் இலேசான தன்மையையும் உங்களின் ஆதி சுபாவம் ஆக்குவதன் மூலம், நீங்கள் இலகுவாக முற்றுப்புள்ளி இடும் சக்தியை விருத்தி செய்து கொள்வீர்கள். இலகுவான சுபாவத்தைக் கொண்டிருப்பவர்கள், அனைவருடனும் அன்பாக இருப்பார்கள். அவர்கள் நிச்சயமாக அனைவரிடமிருந்தும் ஒத்துழைப்பைப் பெறுவார்கள். இதனாலேயே, அவர்களால் அனைத்தையும் இலகுவாகப் பெறக்கூடியதாக உள்ளது. அத்துடன் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி இட முடிகிறது. உங்களிடம் இலகுவான சுபாவம் இருக்கும் அளவிற்கு, மாயை உங்களை எதிர்க்க மாட்டாள். அப்போது நீங்கள் அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள்.

இலகுவான சுபாவத்தைக் கொண்டிருப்பவர்களுக்குப் பல வீணான எண்ணங்கள் இருக்காது. அவர்களின் நேரமும் வீணாகாது. வீணான எண்ணங்கள் எவையும் இல்லாததால், அவர்களின் புத்தியானது எல்லையற்றதாகவும் தொலை நோக்குடையதாகவும் இருக்கும். இதனாலேயே, எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையும் அவர்களை எதிர்ப்பதற்கு வரமாட்டாது. எந்தளவிற்கு இலேசானதன்மை உள்ளதோ, அந்தளவிற்குச் சுத்தமும் காணப்படும். சுத்தமானது தன்னைநோக்கி அனைவரையும் கவரும். சுத்தம் என்றால் நேர்மையும் சத்தியமும் என்று அர்த்தம். உங்களிடம் இலகுவான சுபாவம் இருக்கும்போது, அவை உங்களிடம் வரும். இலகுவான சுபாவத்தைக் கொண்டிருப்பவர்கள் பல ரூபங்களைக் கொண்டிருப்பார்கள். மென்மையான ஒன்றை எந்தவொரு உருவமாகவும் வளைக்க முடியும். நீங்கள் தங்கம் ஆகியுள்ளீர்கள். ஆனால் இப்போது நெருப்பில் உருக்கப்பட்ட தங்கம் ஆகுங்கள். அப்போது அதை வளைக்க முடியும். இந்தப் பலவீனத்தால், சேவையில் வெற்றி ஏற்படுவதில்லை. சுயத்தில் அல்லது மற்றவர்களின் கடந்தகாலத்தைப் பார்க்காதீர்கள். நீங்கள் இலகுவான சுபாவம் உடையவர் ஆகுவீர்கள். இலகு சுபாவத்தை உடையவர்களில் இனிமை என்ற நற்குணம் புலப்படும். அவர்களின் கண்களிலும் உதடுகளிலும் செயல்களிலும் இனிமையானது நடைமுறையில் புலப்படும். ஒருவர் தெளிவாக இருக்கும் அளவிற்கு, அவர்கள் இலேசாகவும் மேன்மையாகவும் ஆகுவார்கள். தெளிவானது உங்களின் மேன்மையான ஸ்திதிக்கு நெருக்கமாகக் கொண்டுவரும். எந்தளவிற்குத் தெளிவு உள்ளதோ, அந்தளவிற்கு வெற்றியும் சமநிலையும் காணப்படும். தெளிவும் இலகுத்தன்மையும் மேன்மையாக இருத்தலும் உங்களைத் தந்தைக்குச் சமமானவர் ஆக்கும்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதியானவராகி, எந்தவொரு சூழ்நிலைக்கும் முற்றுப்புள்ளி இடுவதன் மூலம் உங்களை மாற்றிக் கொள்வீர்களாக.

புள்ளி ரூபமான தந்தையினதும் புள்ளி ரூபமான ஆத்மாக்களினதும் விழிப்புணர்வுடன் கட்டுப்படுத்தும் சக்தி இருக்கும்போது உங்களால் எந்தவொரு சூழ்நிலைக்கும் முற்றுப்புள்ளி இடமுடியும். எந்தவொரு சூழ்நிலையிலும் தங்களை மாற்றிக் கொண்டு, முற்றுப்புள்ளி இட முன்வருபவர்கள், ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் தங்களுக்காக ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதாவது, அவர்கள் சந்தோஷத்தைப் பெறுகிறார்கள். அத்துடன் அவர்கள் தந்தையிடமிருந்தும் பிராமணக் குடும்பத்திடமிருந்தும் ஆசீர்வாதங்களையும் பெறுகிறார்கள்.

சுலோகம்:
நீங்கள் உருவாக்கும் எண்ணங்களுக்கு அவ்வப்போது திடசங்கற்பம் என்ற முத்திரையை இடுங்கள். நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்கள்.