19.08.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் ஆதி சம்ஸ்காரம் தூய்மை ஆகும். நீங்கள் இராவணனின் சகவாசத்திற்குள் சென்றதனால் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இப்பொழுது நீங்கள் தூய்மையாகி, தூய உலகின் அதிபதிகள் ஆகவேண்டும்.
கேள்வி:
அமைதியின்மைக்கான காரணம் என்ன? அதற்கான தீர்வு என்ன?
பதில்:
தூய்மையின்மையே அமைதியின்மைக்கான காரணமாகும். நீங்கள் தூய்மையாகி, உலகைத் தூய்மையாக்குவீர்கள் என்றும், உங்கள் கண்களைக் குற்றமற்றவையாக அதாவது அவை குற்றப்பார்வையைக் கொண்டிராதவாறு எப்பொழுதும் வைத்திருப்பீர்கள் என்றும் தந்தையாகிய கடவுளுக்கு இப்பொழுது சத்தியம் செய்யுங்கள். அப்பொழுதே அமைதியின்மை அகற்றப்பட முடியும். குழந்தைகளாகிய நீங்கள் அமைதியை நிலைநாட்டுவதற்கான கருவிகள் ஆகியுள்ளதால், ஒருபோதும் அமைதியின்மையைப் பரப்ப முடியாது. நீங்கள் அமைதியாகவும், மாயையின் அடிமையாகாமலும் இருக்க வேண்டும்.ஓம் சாந்தி.
'கீதையின் கடவுளே கீதையைக் கூறினார்" எனத் தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் அதனை ஒருமுறை கூறிவிட்டு, பின்னர் செல்கிறார். நீங்கள் இப்பொழுது கீதையின் கடவுளிடமிருந்து அதே கீதை ஞானத்தைச் செவிமடுப்பதுடன் இராஜயோகத்தையும் கற்கிறீர்கள். அவர்கள் எழுதப்பட்டுள்ள கீதையை வாசித்து, அதனை மனதில் பதித்த பின்னர் அதனைத் தொடர்ச்சியாக மக்களுக்குக் கூறுகிறார்கள். பின்னர் அவர்கள் தங்கள் சரீரங்களைத் துறந்து, வேறு பிறவிகளை எடுத்து, குழந்தையாகுகிறார்கள், ஆனால் அதன் பின்னர் அவர்களால் அதனைக் கூற முடியாதிருக்கும். நீங்கள் உங்கள் இராச்சியத்தைப் பெறும்வரை தந்தை உங்களுக்குத் தொடர்ந்தும் கீதையைக் கூறுவார். உலகிலுள்ள ஆசிரியர்களும் உங்களுக்குத் தொடர்ந்தும் பாடம் கற்பிக்கிறார்கள். கல்வி முடியும்வரை அவர் தொடர்ந்தும் உங்களுக்குக் கற்பிப்பார்கள். உங்கள் கல்வி முடிவடைந்ததும், நீங்கள் சென்று எல்லைக்குட்பட்ட வருமானத்தைச் சம்பாதிக்கத் தொடங்குகிறீர்கள். நீங்கள் ஆசிரியரிடம் கற்று, பணம் சம்பாதிக்கிறீர்கள், முதியவர்களாகியதும் உங்கள் சரீரத்தைத் துறந்து, வேறொன்றை எடுக்கிறீர்கள். அவர்கள் கீதையைக் கூறுகிறார்களாயினும், அதன் மூலம் என்ன நன்மை கிடைக்கின்றது? எவருக்கும் தெரியாது! அவர்கள் கீதையைக் கூறுகிறார்களாயினும் அவர்களுடைய அடுத்த பிறவியில் அவர்கள் குழந்தைகளாகியதும் அவர்களால் கீதையைக் கூறமுடியாது. அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிக் கீதையில் புலமை வாய்ந்தவர்களாகியதும் மீண்டும் அவர்களால் கீதையைக் கூற முடியும். இங்கு, தந்தை அமைதி தாமத்திலிருந்து ஒரேயொரு முறை வந்து, உங்களுக்குக் கற்பித்துவிட்டுப் பின்னர் திரும்பிச் செல்கிறார். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்துவிட்டு, என்னுடைய வீட்டிற்கு திரும்பிச் சென்றுவிடுகிறேன். நான் யாருக்குக் கற்பித்தேனோ அவர்கள் பின்னர் வந்து தங்களுடைய வெகுமதியை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் முயற்சிக்கேற்ப அனைத்தையும் வரிசைக்கிரமமாகக் கிரகித்து, திரும்பிச் செல்கிறார்கள். எங்கு? புதிய உலகிற்கு. இந்தக் கல்வி புதிய உலகிற்கானது. பழைய உலகம் முடிவடைந்து புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பது மக்களுக்குத் தெரியாது. புதிய உலகிற்காக நீங்கள் இராஜயோகம் கற்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பின்னர், இந்தப் பழைய உலகமோ அல்லது பழைய சரீரமோ இருக்காது. ஆத்மாக்கள் அழிவற்றவர்கள். ஆத்மாக்கள் தூய்மையாகி, பின்னர் தூய உலகிற்குச் செல்கிறார்கள். தேவர்களின் இராச்சியமாக இருந்த புதிய உலகமே சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. கடவுள் மட்டுமே புதிய உலகைப் படைக்கின்றார். அவர் ஒரேயொரு தர்மத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கிறார். அவர் அதை எந்தத் தேவர்கள் மூலமும் செய்வதில்லை. தேவர்கள் இங்கு வசிப்பதில்லை. எனவே, பின்னர் தேவராக ஆகப்போகின்ற ஒரு மனிதரின் மூலமே நிச்சயமாக அவர் ஞானத்தைக் கொடுப்பார். தேவர்கள் தொடர்ச்சியாக மறுபிறப்பு எடுத்து, இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளனர். குழந்தைகளாகிய உங்களுக்கு மட்டுமே இந்த இரகசியம் தெரியும். கடவுள் அசரீரியானவர், அவர் புதிய உலகைப் படைக்கின்றார். இப்பொழுது இது இராவண இராச்சியமாகும். அவர்கள் கலியுகத்தைச் சேர்ந்த தூய்மையற்றவர்களா அல்லது சத்திய யுகத்தைச் சேர்ந்த தூய்மையானவர்களா என நீங்கள் அவர்களிடம் வினவுகிறீர்கள். ஆனால் அவர்கள் அதைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது கூறுகின்றார்: நான் 5000 வருடங்களுக்கு முன்னரும் உங்களுக்கு விளங்கப்படுத்தினேன். நான் வந்து, குழந்தைகளாகிய உங்களை அரைக் கல்பத்திற்குச் சந்தோஷமானவர்கள் ஆக்குகிறேன். பின்னர் இராவணன் வந்து, உங்களைச் சந்தோஷமற்றவர்கள் ஆக்குகிறான். இது சந்தோஷம், துன்பம் பற்றிய நாடகமாகும். சக்கரத்தின் கால அளவு 5000 வருடங்களாகும். எனவே அது இரண்டு பாதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். இராவண இராச்சியத்தில், அனைவரும் சரீர உணர்வுடையவர்களாகவும், விகாரமுடையவர்களாகவும் இருக்கிறார்கள். இப்பொழுது நீங்கள் இவற்றைப் புரிந்துகொள்கிறீர்களாயினும், முன்னர் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. இதனை ஒவ்வொரு கல்பத்திலும் புரிந்துகொண்டவர்கள் மட்டுமே இப்பொழுது இதனைப் புரிந்துகொள்கிறார்கள். தேவர்கள் ஆகாதவர்கள் இங்கு வரவும் மாட்டார்கள். நீங்கள் தேவ தர்மத்தின் நாற்றை நாட்டுகிறீர்கள். அவர்கள் அசுரத்தனம் மிக்கவர்களாகவும் தமோபிரதானாகவும் ஆகும்போது, தேவ விருட்சத்துக்குரியவர்கள் என அவர்களை அழைக்க முடியாது. விருட்சம் புதியதாக இருந்தபோது சதோபிரதானாக இருந்தது. நாங்கள் அதன் இலைகளாகிய தேவர்களாக இருந்தோம், பின்னர் நாங்கள் ரஜோ, தமோ நிலைகளினூடாகச் சென்றோம். இப்பொழுது நாங்கள் பழைய, தூய்மையற்ற சூத்திரர்கள் ஆகிவிட்டோம். பழைய உலகில் பழையவர்களே இருப்பார்கள். பழையவர்கள் மீண்டும் ஒருமுறை புதியவர்களாக்கப்பட வேண்டும். தேவதர்மம் இப்பொழுது மறைந்துவிட்டது. தந்தை கூறுகின்றார்: தர்மத்திற்கு அவதூறு ஏற்படும்பொழுது... எந்தத் தர்மம் அவதூறு செய்யப்படுகின்றது? நிச்சயமாக நான் ஸ்தாபித்த தேவி தேவதா தர்மமே அவதூறு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அந்தத் தர்மம் இப்பொழுது மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக இப்பொழுது அதர்மமே இருக்கின்றது. எனவே தர்மத்திற்குப் பதிலாக அதர்மம் பரவுகின்றபோது தந்தை வருகின்றார். தர்மம் விரிவடைந்தது எனக் கூறப்படமாட்டாது. உண்மையில் அந்த தர்மம் மறைந்து, அதர்மத்தின் விஸ்தாரமே காணப்படுகிறது. சமயங்கள் அனைத்தினதும் வளர்ச்சி இருக்கின்றது. கிறிஸ்து ஒருவரிலிருந்து, கிறிஸ்தவ சமயம் இந்தளவிற்கு விரிவடைந்துள்ளது. எவ்வாறாயினும், தேவதர்மம் மறைந்துவிட்டது. தூய்மையற்றவர்கள் ஆகுவதால் அவர்கள் தங்களையே அவதூறு செய்கிறார்கள். ஒரு தர்மமே பின்னர் அதர்மமாகின்றது. ஏனைய அனைத்தும் நன்றாகச் செயற்படுகின்றன. தொடர்ந்தும் அனைவரும் தங்களுடைய சொந்த சமயத்தில் சதா உறுதியாக இருக்கிறார்கள். விகாரமற்றதாக இருந்த ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது விகாரமுடையதாகி விட்டது. நான் தூய உலகை ஸ்தாபிக்கின்றேன், பின்னர் அது தூய்மையற்றதாகவும், சூத்திர நிலையையும் அடைகின்றது. அதாவது அந்தத் தர்மத்திற்கு அவதூறு ஏற்படுகின்றது. மக்கள் தூய்மையற்றவர்களாகும்போது தங்களையே அவதூறு செய்கிறார்கள். விகாரத்தினுள் செல்வதனால், அவர்கள் தூய்மையற்றவர்களாகி, தங்களைத் தேவர்கள் என அழைக்க முடியாதவர்கள் ஆகுகின்றார்கள். சுவர்க்கம் நரகமாக மாறுகின்றது. எனவே, எவருமே தூய்மையானவர்களல்ல. நீங்கள் மிகவும் அசுத்தமானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களை அழகிய மலர்களாக்கினேன். பின்னர் இராவணன் உங்களை முட்களாக்கிவிட்டான். தூய்மையானவர்களில் இருந்து நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் உங்கள் சொந்த தர்மத்தின் நிலையைப் பார்க்க வேண்டும். 'எங்களுடைய நிலையையும், நாங்கள் எந்தளவிற்கு தூய்மையற்றவர்களாக இருக்கின்றோம் என்பதையும் வந்து பாருங்கள், எங்களைத் தூய்மையாக்குங்கள்" என நீங்கள் கூவி அழைத்தீர்கள். தந்தை உங்களைத் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையாக்குவதற்கு வந்துள்ளார். எனவே நீங்கள் தூய்மையாக வேண்டும். நீங்கள் மற்றவர்களையும் உங்களைப் போன்றவர்களாக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தினாலும் நிரம்பியிருக்கிறீர்களா எனத் தொடர்ந்தும் உங்களையே சோதித்துப் பார்க்க வேண்டும். என்னுடைய செயல்கள் தேவர்களினுடையது போன்று இருக்கின்றதா? தேவர்களின் இராச்சியத்தில், உலகம் அமைதி நிறைந்ததாக இருந்தது. உலகில் எவ்வாறு அமைதியை ஸ்தாபிப்பது என உங்களுக்குக் கற்பிப்பதற்காக நான் வந்திருக்கிறேன். எனவே, நீங்களும் அமைதியாக இருக்க வேண்டும். நான் உங்களுக்கு அமைதியாக இருப்பதற்கான வழியைக் காட்டியுள்ளேன்: என்னை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது நீங்கள் அமைதி நிறைந்தவர்களாகி, அமைதி தாமத்திற்குச் செல்வீர்கள். சில குழந்தைகள் அமைதியாக இருந்து, மற்றவர்களுக்கும் எவ்வாறு அமைதியாக இருப்பது எனக் கற்பிக்கிறார்கள். சிலர் அமைதியின்மையைப் பரப்புகின்றார்கள். அவர்கள் அமைதியில்லாமல் இருந்து, மற்றவர்களையும் அமைதியில்லாமல் ஆக்குகிறார்கள். அவர்கள் அமைதி என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. மக்கள் இங்கு அமைதியைக் கற்பதற்காக வருகிறார்கள், ஆனால் அவர்கள் இங்கிருந்து சென்றதும் அமைதியற்றவர்கள் ஆகிவிடுகின்றார்கள். தூய்மையின்மையினாலேயே அமைதியின்மை ஏற்படுகின்றது. மக்கள் இங்கு வந்து சத்தியம் செய்கின்றார்கள்: பாபா, நான் உங்களுக்கு மட்டுமே உரியவன். நான் உங்களிடம் இருந்து உலக ஆட்சியைப் பெற விரும்புகிறேன். நான் தூய்மையாகி, நிச்சயமாக உலக அதிபதியாகுவேன். பின்னர், அவர்கள் வீட்டிற்;குத் திரும்பியதும் மாயை புயல்களைக் கொண்டு வருகின்றாள். போர் நடைபெறுகின்றது, பின்னர் நீங்கள் மாயையின் அடிமையாகி தூய்மையற்றவர்களாக விரும்புகிறீர்கள். நாங்கள் தூய்மையாக இருப்போம் எனச் சத்தியம் செய்பவர்களே பின்னர் அப்பாவிகளைத் தாக்குகிறார்கள். மாயை அவர்களைத் தாக்குவதனால் அவர்கள் தங்கள் சத்தியத்தை மறந்துவிடுகிறார்கள். நீங்கள் கடவுளுக்குச் சத்தியம் செய்தீர்கள்: “நான் தூய்மையாகி, தூய உலகின் ஆஸ்தியைப் பெறுவேன். நான் குற்றமற்ற கண்களைக் கொண்டிருப்பேன். நான் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்க மாட்டேன். நான் விகாரத்தில் ஈடுபடமாட்டேன். நான் குற்றப் பார்வையைத் துறப்பேன்.” பின்னர், அதற்குப் பதிலாக அவர்கள் இராவணனாகிய மாயையினால் தோற்கடிக்கப்படுகிறார்கள். எனவே, அவர்கள் விகாரமற்றவர்களாக விரும்புபவர்களைத் தொந்தரவு செய்கிறார்கள். இதனாலேயே 'அப்பாவிகளே முரட்டுத்தனமாகத் தாக்கப்படுகிறார்கள்" என நினைவுகூரப்படுகிறது. ஆண்கள் பலசாலிகள், பெண்கள் பலமற்றவர்கள். ஆண்கள் பலசாலிகளாக இருப்பதனால் யுத்தத்திற்குச் செல்கிறார்கள். ஆனால் பெண்கள் மென்மையானவர்கள். அவர்களுடைய கடமைகள் வேறுபட்டவை. அவர்கள் வீட்டைப் பராமரிக்கிறார்கள், குழந்தைகளைப் பெற்றுப் பராமரிக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: அங்கே ஒரே ஒரு மகனே உள்ளார். விகாரம் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கு, சந்நியாசிகளும் சிலநேரங்களில் கூறுகிறார்கள்: நீங்கள் நிச்சயமாக ஒரு மகனைக் கொண்டிருக்க வேண்டும். குற்றமுடைய கண்களைக் கொண்ட ஏமாற்றுக்காரர்களே அத்தகைய கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் முன்னால் விநாசம் இருக்கும் இந்நேரத்தில் குழந்தைகளால் என்ன பயன்? அனைவரும் அழிக்கப்படுவார்கள். நான் பழைய உலகை அழிப்பதற்காக வந்துள்ளேன். சந்நியாசிகளும் அதையே கூறுகிறார்கள், அவர்களுக்கு விநாசத்தைப் பற்றி எதுவும் தெரியாது. எல்லையற்ற தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: இப்பொழுது விநாசம் இடம்பெறப்போகிறது. உங்கள் குழந்தைகள் வாரிசுகளாக முடியாது. உங்கள் குடும்பத்தின் சுவடு இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் தூய்மையற்ற உலகின் சுவடே இருக்காது. நீங்கள் தூய உலகிற்குரியவர்கள் எனப் புரிந்துகொள்கிறீர்கள். சுவர்க்கம் என அழைக்கப்பட்ட புதிய உலகம் கடந்த காலத்தில் இருந்ததாலேயே மக்கள் அதனை நினைவு கூருகிறார்கள். எவ்வாறாயினும், தமோபிரதானாக இருப்பதனால் அவர்களால் எதனையும் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுடைய பார்வை குற்றப்பார்வை. இது தர்மத்தின் அவதூறு என அழைக்கப்படுகின்றது. அத்தகையவை ஆதிசனாதன தர்மத்தில் இருப்பதில்லை. 'ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! நாங்கள் தூய்மையற்றும், சந்தோஷமற்றும் இருக்கிறோம்" என அவர்கள் கூவியழைக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களைத் தூய்மையாக்கினேன். பின்னர் இராவணனாகிய மாயையினால் நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் தூய்மையாக வேண்டும். நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள், பின்னர் மாயையுடன் யுத்தம் இடம்பெறுகிறது. நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்கு முயற்சி செய்தீர்கள், ஆனால் பின்னர் நீங்கள் உங்கள் முகத்தை அழுக்காக்கிக் கொண்டீர்கள், எனவே எவ்வாறு உங்களால் உங்கள் ஆஸ்தியைப் பெற முடியும்? தந்தை வந்து, உங்களை அழகானவர்கள் ஆக்குகின்றார். அழகானவர்களாக இருந்த தேவர்கள் அவலட்சணமானவர்கள் ஆகிவிட்டார்கள். அவர்கள் நீலநிற சரீரத்துடன் தேவர்களின் ரூபங்களைக் காட்டியுள்ளார்கள். அவர்கள் எப்பொழுதாவது கிறிஸ்துவையோ புத்தரையோ அவ்வாறு காட்டியிருக்கிறார்களா? அவர்கள் தேவர்களின் அழுக்கான ரூபங்களைச் செய்திருக்கிறார்கள். 'அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்பவரும், அனைவருக்கும் தந்தையுமான, பரமாத்மாவாகிய பரமதந்தையே வந்து எங்களை விடுவியுங்கள்!" என்றெல்லாம் அழைக்கப்படுபவர் அவலட்சணமானவராக இருக்க முடியாது. அவர் சதா அழகானவரும், சதா தூய்மையானவரும் ஆவார். கிருஷ்ணர் வேறொரு சரீரத்தை எடுக்கும்போதும் அவர் தூய்மையாகவே இருக்கின்றார். தேவர்கள் மட்டுமே மகாத்மாக்கள் என அழைக்கப்படுகிறார்கள். கிருஷ்ணரும் ஒரு தேவரே. இப்பொழுது இது கலியுகமாகும். மகாத்மாக்கள் எவ்வாறு கலியுகத்தில் இருக்க முடியும்? ஸ்ரீகிருஷ்ணர் சத்தியயுகத்தின் முதலாவது இளவரசராக இருந்தார். அவர் தெய்வீகக் குணங்களைக் கொண்டிருந்தார். இப்பொழுது தேவர்கள் போன்றோர் இல்லை. சாதுக்களும், புனிதர்களும் தூய்மையாகினாலும், அவர்கள் விகாரத்தின் மூலமே மறுபிறப்பு எடுக்கிறார்கள். பின்னர் அவர்கள் துறவறத்தை மேற்கொள்ள வேண்டும். தேவர்கள் எப்பொழுதும் தூய்மையானவர்கள். இங்கு இராவணனின் இராச்சியம் உள்ளது. அவர்கள் இராவணனை பத்துத் தலைகளுடன் காட்டியிருக்கிறார்கள் - அவற்றில் ஐந்து ஆண்களையும், ஐந்து பெண்களையும் குறிக்கின்றது. நாங்கள் அனைவரும் எங்களில் ஐந்து விகாரங்களைக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் தேவர்களுக்கு இதைக் கூறமுடியாது. அது சந்தோஷ தாமம் ஆகும். அங்கு இராவணன் இருந்திருந்தால் அது துன்ப பூமியாக இருந்திருக்கும். தேவர்களும் குழந்தைகளைப் பெறுகிறார்கள். எனவே அவர்களும் விகாரமுடையவர்களே என அவர்கள் எண்ணுகிறார்கள். முற்றிலும் விகாரமற்றவர்களாகத் தேவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இதனாலேயே அவர்கள் பூஜை செய்யப்பட்டார்கள். சந்நியாசிகளும் மதப்பிரசாரம் (மிஷன்) செய்பவர்களைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆண்களை மட்டுமே துறவறத்தை மேற்கொள்ள அனுமதிக்கிறார்கள், இந்த வகையில் தங்கள் மதப்பிரசாரம் செய்பவர்களைப் பெருக்கிக் கொள்கிறார்கள். தந்தை இல்லறப் பாதைக்காக ஒரு புதிய மிஷனை(மதப்பிரசாரம் செய்பவர்கள்) உருவாக்கியிருக்கிறார். அவர் தம்பதிகளைத் தூய்மையாக்குகிறார். பின்னர் நீங்கள் சென்று, தேவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் இங்கு சந்நியாசிகள் ஆகுவதற்கு வரவில்லை. நீங்கள் உலக அதிபதிகளாகுவதற்காகவே வந்துள்ளீர்கள். அவர்கள் இல்லறப் பாதையில் பிறப்பெடுத்துப் பின்னர் அதைத் துறந்து செல்கிறார்கள். தூய்மையே உங்கள் சம்ஸ்காரங்கள் ஆகும். இப்பொழுது நீங்கள் தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள் எனவே நீங்கள் தூய்மையாக வேண்டும். தந்தை தூய இல்லறப் பாதைக்கான ஆசிரமத்தை உருவாக்குகிறார்.. தூய உலகம் சத்தியயுகம் என அழைக்கப்படுகின்றது, தூய்மையற்ற உலகம் கலியுகம் என அழைக்கப்படுகின்றது. இங்கு தூய்மையற்ற ஆத்மாக்கள் பெருந்தொகையில் இருக்கிறார்கள். இவ்விடயங்கள் சத்தியயுகத்தில் இருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: பாரதத்தில் தர்மத்திற்கு அவதூறு ஏற்படும்பொழுது, அதாவது, தேவ தர்மம் தூய்மையற்றதாகும்போது, அவர்கள் தங்களையே அவதூறு செய்கிறார்கள். தந்தை கூறுகின்றார்: நான் உங்களைத் தூய்மையாக்கினேன், பின்னர் நீங்கள் தூய்மையற்றவர்களாகி, எதற்கும் பயனற்றவர்களாகி விட்டீர்கள். நீங்கள் மிகவும் தூய்மையற்றவர்கள் ஆகும்போதே, நான் உங்களைத் தூய்மையாக்க வர வேண்டும். இதுவே மீண்டும், மீண்டும் தொடர்கின்ற நாடகச் சக்கரம் ஆகும். சுவர்க்கத்திற்குச் செல்வதற்குத் தெய்வீகக் குணங்கள் அவசியமாகும். கோபம் இருக்கக்கூடாது. ஒருவர் கோபத்தைக் கொண்டிருப்பாராயின், அவர் அசுரரைப் போன்றவர். உங்களுக்கு மிக அமைதியான ஸ்திதி தேவைப்படுகின்றது. நீங்கள் கோபம் அடைவீர்களாயின், உங்களுக்குள் கோபம் எனும் தீய ஆவி உள்ளது எனக் கூறப்படும். தங்களுக்குள் தீய ஆவிகளைக் கொண்டிருக்கும் எவராலும் தேவர்கள் ஆக முடியாது. அவர்களால் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறமுடியாது. தேவர்கள் விகாரமற்றவர்கள். அரசன், அரசியைப் போன்று பிரஜைகளும் விகாரமற்றவர்களாக இருக்கிறார்கள். தந்தையாகிய கடவுள் மட்டுமே வந்து, உங்களை முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆக்குகின்றார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் தூய்மையைக் கடைப்பிடிப்பதாகத் தந்தைக்குச் சத்தியம் செய்துள்ளீர்கள், எனவே மாயையின் தாக்குதல்களிலிருந்து தொடர்ந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஒருபோதும் மாயையின் அடிமையாகாதீர்கள். இந்தச் சத்தியத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். ஏனெனில் நீங்கள் இப்பொழுது தூய உலகிற்குச் செல்ல வேண்டும்.2. தேவர்களாகுவதற்கு, உங்கள் ஸ்திதியை முற்றிலும் அமைதி நிறைந்ததாக ஆக்குங்கள். எவ்விதமான தீய ஆவியும் உங்களுள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்காதீர்கள். தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள்.
ஆசீர்வாதம்:
சகல பேறுகளும் நிறைந்தவராகி அனைத்து மேன்மையான பேறுகளையும் கொண்டிருக்கும் உங்கள் முகத்தினூடாக அனுபவத்தைக் கொடுப்பீர்களாக.சங்கம யுகத்தி;ல் பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளீர்கள்: சகல பேறுகளும் நிறைந்திருப்பீர்களாக. அத்தகைய ஆசீர்வாதத்தைப் பெற்ற ஆத்மாக்கள் முயற்சி செய்யத் தேவையில்லை. அவர்களுடைய முகங்களில் இருக்கும் பிரகாசம் அவர்கள் எதையாவது பெற்றுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. அதனால் அந்த ஆத்மாக்கள்; பேறுகளின் சொருபங்கள். மக்கள் அத்தகைய குழந்தைகளின் முகங்களைப் பார்க்கும்பொழுது இலக்கு மிகவும்; உயர்ந்தது என்றும், அவர்கள் மேன்மையான துறவைக் கொண்டிருக்கிறார்கள் என்றம் கூறுகிறார்கள். அவர்களுடைய துறவு புலப்படுகிறது. ஆனால் அவர்களின் பாக்கியம் புலப்படவில்லை. அனைத்துப் பேறுகளையும் கொண்டிருக்கும் போதையை நீங்கள் பேணி உங்கள் பாக்கியத்தைக் காட்டும்போது அவர்கள் இலகுவாகக் கவரப்பட்டு வருவார்கள்.
சுலோகம்:
ஊக்கம் உற்சாகத்துடன் ஒரேயொரு வழிகாட்டலைப் பின்பற்றும் கூட்டத்தின் ஒற்றுமையும் இருக்கும்போது வெற்றி அமிழ்ந்திருக்கும்.