07.09.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, தந்தை தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுப்பதற்காக ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறார். நீங்களும் தந்தையின் மிகச் சரியான அறிமுகத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

கேள்வி:
குழந்தைகளின் எந்தக் கேள்வியைச் செவிமடுக்கும் பொழுது தந்தை வியப்படைகிறார்?

பதில்:
குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா உங்கள் அறிமுகத்தை கொடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. நாங்கள் எவ்வாறு உங்கள் அறிமுகத்தைக் கொடுப்பது? இந்தக் கேள்வியைச் செவிமடுக்கும் போது பாபா வியப்படைகிறார். தந்தை உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுத்திருப்பதால், நீங்களும் அதனை மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும். இதில் சிரமம் ஏதுமில்லை. இது மிக இலகுவானது. ஆத்மாக்கள் அனைவரும் அசரீரியானவர்கள் என்பதால் அவர்களின் தந்தையும் நிச்சயமாக அசரீரியானவராக இருக்க வேண்டும்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். எல்லையற்ற தந்தை இந்த இரதத்தில் வருகின்றார் என்பதும் உங்களுக்குத் தெரியும். நீங்கள் 'பாப்தாதா" எனக் கூறும் பொழுது, சிவபாபாவே இந்த இரதத்தில் அமர்ந்திருந்து தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரே பாபா என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதற்காக, ஆன்மீகத் தந்தையை நினைவு செய்யுமாறு பாபா உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். இது யோக அக்கினி எனவும் அழைக்கப்படுகிறது. நீங்கள் இப்பொழுது தந்தையை இனங்கண்டுள்ளீர்கள். எனவே நீங்கள் எவ்வாறு வினவ முடியும்: நான் எவ்வாறு தந்தையின் அறிமுகத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பது? நீங்கள் எல்லையற்ற தந்தையின் அறிமுகத்தைப் பெற்றிருப்பதால், உங்களால் நிச்சயமாக அதனைப் பிறருக்குக் கொடுக்க முடியும். அவருடைய அறிமுகத்தை எவ்வாறு கொடுப்பது என்ற கேள்வியேனும் எழவே முடியாது. நீங்கள் எவ்வாறு தந்தையை அறிந்து கொண்டீர்களோ, அதேபோன்று, ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஒருவரே என்பதை உங்களால் அவர்களுக்குக் கூற முடியும். இதையிட்டு குழப்பமடையத் தேவையில்லை. சிலர் கூறுகிறார்கள்: பாபா! உங்கள் அறிமுகத்தைக் கொடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது. ஓ! தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதில் சிரமம் என்ற கேள்விக்கே இடமில்லை. மிருகமும் சமிக்ஞையினால் இது இன்ன மிருகத்தின் குழந்தை என்பதைப் புரிந்து கொள்கிறது. அவரே ஆத்மாக்களாகிய எங்கள் தந்தை என்பதை நீங்களும் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாவாகிய நான் இப்பொழுது இந்தச் சரீரத்தினுள்; இருக்கிறேன். தனது ஆத்மா அமரத்துவ ரூபம் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அவருக்கு வடிவம் இல்லையென்பதல்ல. குழந்தைகளாகிய நீங்கள் அவரை இனங்கண்டுள்ளீர்கள். இது மிக எளிமையான விடயமாகும். அசரீரியான ஒருவர் மாத்திரமே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை. தந்தையின் குழந்தைகளான, அனைத்து ஆத்மாக்களும் சகோதரர்கள். நாங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுகிறோம். தனது தந்தையையும் அவரது படைப்பையும் அறியாத ஒரு குழந்தையேனும் இவ்வுலகில் இருக்க முடியாது என்பதும் உங்களுக்குத் தெரியும். தனது தந்தையிடம் என்ன சொத்து இருக்கின்றது என்பதும் அவருக்குத் தெரியும். இது ஆத்மாக்களினதும் பரமாத்மாவினதும் ஒரு சந்திப்பாகும். இது நன்மைபயக்கும் ஒன்றுகூடலாகும். தந்தை பரோபகாரியாவார். அவர் அதிகளவு நன்மையளிக்கின்றார். தந்தையை இனங்கண்டு கொள்வதால், நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஓர் எல்லையற்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அந்தச் சந்நியாசிகளையும், குருமார்களையும், பின்பற்றுபவர்களுக்குத் தங்கள் குருவின் ஆஸ்தியைப் பற்றித் தெரியாது. தங்களுடைய குருவிடம் என்ன சொத்து இருக்கின்றது என்பதை அறிந்து கொண்ட சீடர்கள்; வெகு அரிதாகவே உள்ளனர். இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது: இவர் சிவபாபா, அவரிடமும் சொத்து உள்ளது. சுவர்க்க உலக இராச்சியமே எல்லையற்ற தந்தையின் சொத்து என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறெவரின் புத்தியிலும் இவ்விடயம் இல்லை. ஒரு பௌதீகத் தந்தையிடம் என்ன சொத்து இருக்கும்? அவருடைய குழந்தைகள் அதனை அறிந்திருப்பார்கள். உயிருடன் இருக்கும் பொழுதே நீங்கள் பரலோகத் தந்தைக்கு உரியவர்களென இப்பொழுது கூறுகின்றீர்கள். அவரிடமிருந்து நீங்கள் எதனைப் பெறுகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். முன்னர் நீங்கள் சூத்திர குலத்தவராக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் பிராமண குலத்தினுள் வந்துவிட்டீர்கள். பாபா இந்த பிரம்மாவின் சரீரத்தினுள் வருகின்றார் எனும் ஞானமும் உங்களிடம் உள்ளது. இவர் மனித குலத்தின் தந்தை (பிரஜாபிதா பிரம்மா) என அழைக்கப்படுகிறார். சிவனே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை. இவர் (மனித குலத்தின் தந்தை) முப்பாட்டனார் என அழைக்கப்படுகின்றார். நீங்கள் இப்பொழுது அவரின் குழந்தைகளாகி உள்ளீர்கள். அவர் எங்கும் இருக்கின்றார், அவர் சகல இரகசியங்களையும் அறிந்தவரென அவர்கள் சிவபாபாவைப் பற்றிக் கூறுகிறார்கள். அவர் எவ்வாறு படைப்பின் ஆரம்பம், நடு, இறுதி பற்றிய ஞானத்தைக் கொடுக்கிறார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டீர்கள். அவர் ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை. அவர் பெயருக்கும், ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று கூறுவது தவறாகும். அவரது பெயரும் ரூபமும் நினைவு கூரப்படுகிறது. சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மனிதர்களே பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள், ஆனால் இரவு சிவபாபாவைக் குறிக்கின்றது. இராத்திரி என்பது என்ன என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். இரவில் முழுமையான இருள் நிலவுகின்றது ; அது அறியாமை எனும் இருள் ஆகும். மக்கள் இன்னமும் பாடுகிறார்கள்: ஞான சூரியன் உதிக்கும் பொழுது, அறியாமை எனும் இருள் அகற்றப்படுகிறது. ஆனால் அவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. சூரியன் என்றால் என்ன என்றோ எப்பொழுது அவர் உதிக்கின்றார் என்பதையோ அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஞான சூரியனே ஞானக் கடல் எனவும் அழைக்கப்படுகிறார் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். எல்லையற்ற தந்தையே ஞானக் கடல் ஆவார். சந்நியாசிகள் குருமார் போன்றவர்கள் தங்களைச் சமய நூல்களின் அதிகாரிகள் எனக் கருதுகிறார்கள். அவை அனைத்தும் பக்தியே. பலர் வேத சாஸ்திரங்களைக் கற்பதால் கல்விமான்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆதலால் தந்தை இங்கு அமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவுக்கும் இடையிலான சந்திப்பு என அழைக்கப்படுகின்றது. தந்தை இந்த இரதத்தினுள் பிரவேசித்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இந்தச் சந்திப்பு ஓர் ஒன்றுகூடல் என அழைக்கப்படுகிறது. நாங்கள் வீடு திரும்பும் பொழுது அதுவும் ஓர் ஒன்றுகூடலே. தந்தையே இங்கு அமர்ந்திருந்து உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரே தந்தையும் ஆசிரியரும் ஆவார். இந்த ஒரு கருத்தை நன்றாகக் கிரகியுங்கள்; இதை மறந்துவிடாதீர்கள்; தந்தை அசரீரியானவர். அவருக்கென சொந்தமாக ஒரு சரீரம் இல்லை. ஆதலால் அவர் ஒரு சரீரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவரே கூறுகிறார்: நான் சடப்பொருளின் ஆதாரத்தை எடுக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் என்னால் எவ்வாறு பேச முடியும்? ஒரு சரீரம் இல்லாமல் பேசுவது சாத்தியமாகாது. ஆதலால் தந்தை இந்தச் சரீரத்தினுள் பிரவேசிக்கிறார். இவருக்கு 'பிரம்மா" எனும் பெயர் சூட்டப்படுகிறது. நாங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாறும் பொழுது எங்கள் பெயர்களும் மாற வேண்டும். உங்களுக்குப் பெயர்களும் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் பாருங்கள் சிலர் இப்பொழுது இங்கில்லை. இதனாலேயே பிராமணர்களுக்கு ஒரு மாலையில்லை. பக்தர்களின் மாலையும், உருத்திரனின் மாலையும் நினைவுகூரப்படுகின்றது, ஆனால் பிராமணர்களுக்கு மாலையில்லை. விஷ்ணுவின் மாலையும் நினைவு கூரப்படுகிறது. அம்மாலையின் முதல் மணி யார்? 'இரட்டை மணி" என நீங்கள் கூறுவீர்கள். இதனாலேயே சூட்சும உலகில் ஒரு தம்பதியினர் காட்டப்பட்டுள்ளனர். விஷ்ணுவை நான்கு கரங்களுடன் காட்டியுள்ளனர். - இலக்ஷ்மியின் இரண்டு கரங்களும், நாராயணனின் இரண்டு கரங்களும் ஆகும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் சலவைத் தொழிலாளி. நான் யோகசக்தியின் மூலம் உங்களைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் ஆக்குகின்றேன். இருந்தும் நீங்கள் விகாரத்தில் ஈடுபடுவதால், உங்கள் அலங்காரத்தை இழக்கிறீர்கள். அனைவரையும் சுத்தமானவர்கள் ஆக்குவதற்காகவே தந்தை வருகிறார். அவர் வந்து ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆதலால் கற்பிப்பவர் நிச்சயமாக வரவேண்டியுள்ளது. மக்கள் கூவியழைக்கிறார்கள்: வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். ஆடைகள் அழுக்காகுகின்றன. அவை சலவை செய்யப்படுவதால், தூய்மையாக்கப்படுகின்றன. நீங்களும் கூவி அழைக்கின்றீர்கள்: ஓ! தூய்மையாக்குபவரான பாபாவே! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள். ஆத்மாக்கள் தூய்மையாகும் பொழுது அவர்களால் ஒரு தூய சரீரத்தைப் பெற முடியும். ஆதலால் தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதே முதன்மையான விடயமாகும். தந்தையின் அறிமுகத்தை நான் எவ்வாறு கொடுக்க முடியும்? எனும் கேள்வியை நீங்கள் கேட்கக் கூடாது. தந்தை தன் அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்ததாலேயே நீங்கள் இங்கே வந்துள்ளீர்கள். நீங்கள் தந்தையிடம் வந்துள்ளீர்கள். தந்தை எங்கே உள்ளார்? இந்த இரதத்தில். இதுவே அமரத்துவ சிம்மாசனமாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் அமரத்துவ ரூபங்களே. இவை அனைத்தும் ஆத்மாக்களாகிய நீங்கள் பிரசன்னமாக இருக்கும் உங்கள் சிம்மாசனங்களே ஆகும். அந்தப் பௌதீக அமரத்துவ சிம்மாசனம் (அமிர்தசாரில் உள்ள) உயிரற்றது. நான் ஓர் அமரத்துவ ரூபம். அதாவது அசரீரியானவர் பௌதீக வடிவமற்றவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆத்மாவாகிய நான் அமரத்துவமானவர்;. நான் ஒருபொழுதும் அழிக்கப்பட முடியாதவர்;. நான் ஒரு சரீரத்தை நீக்கிவிட்டு, இன்னொரு சரீரத்தை எடுக்கிறேன். ஆத்மாவாகிய என்னுடைய பாகம் அநாதியாக நிச்சயிக்கப்பட்டுள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் எனது பாகம் இவ்வாறே ஆரம்பித்தது. 01.01.01 உடன் ஆரம்பித்த காலத்திலேயே, எங்கள் பாகத்தை நடிப்பதற்கு நாங்கள் எங்கள் வீட்டில் இருந்து வந்தோம். இது 5000 ஆண்டுகளின் சக்கரம். அவர்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். இதனாலேயே அவர்களால் அது குறைந்தளவு ஆண்டுகளைக் கொண்டது என சிந்திக்க முடியாதிருக்கின்றது. ஆதலால் தந்தையின் அறிமுகத்தை பிறருக்கு எவ்வாறு கொடுப்பது என குழந்தைகளாகிய நீங்கள் ஒருபோதும் கேட்கக் கூடாது. அத்தகைய கேள்விகளை நீங்கள் கேட்கும் பொழுது பாபா வியப்படைகிறார். ஓ! நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள், எனவே உங்களால் எவ்வாறு அவருடைய அறிமுகத்தைக் கொடுக்காதிருக்க முடியும்? நாங்கள் அனைவரும் ஆத்மாக்கள். அனைவருக்கும் ஜீவன்முக்தி அளிக்கும் ஒரேயொருவர் எங்கள் பாபாவே. அவர் எப்பொழுது அனைவருக்கும் ஜீவன்முக்தி அளிக்கின்றாரென்பது இப்பொழுது உங்களுக்குத் தெரியும். அனைவருக்கும் ஜீவன் முக்தியை அளிப்பதற்காக ஒவ்வொரு கல்பத்தின் சங்கமத்திலும் அவர் வருகின்றார். இன்னும் 40,000 ஆண்டுகள் எஞ்சியிருக்கிறது. என அவர்கள் எண்ணுகிறார்கள். அவர் பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்;பட்டவர் என அவர்கள் நேரடியாகக் கூறுகிறார்கள். பெயருக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்டு ஏதேனும் இருக்க முடியுமா? கற்களுக்கும் கூழாங்கற்களுக்குமே பெயர்கள் உண்டு. ஆதலால், தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் வந்துள்ளீர்கள். குழந்தைகள் பலர் உள்ளனர் என்பது தந்தைக்கும் தெரியும். குழந்தைகளாகிய நீங்கள் எல்லைக்குட்பட்டதற்கும் எல்லையற்றதற்கும் அப்பால் செல்ல வேண்டும். அவர் குழந்தைகள் அனைவரையும் பார்க்கிறார். அத்துடன் அவர்களை மீண்டும் அழைத்துச் செல்வதற்காகவே தான் வந்துள்ளார் என்பதும் அவருக்குத் தெரியும். சத்தியயுகத்தில் வெகு சிலரே இருப்பார்கள். இந்த ஞானம் மிகவும் தெளிவானது. அது படங்களுடன் விளங்கப்படுத்தப்படுகிறது. ஞானம் மிகவும் சுலபமானது. எவ்வாறாயினும் நினைவு யாத்திரைக்கு நேரம் எடுக்கிறது. இத்தகைய தந்தையை நீங்கள் ஒருபொழுதும் மறந்துவிடக் கூடாது. தந்தை கூறுகிறார்: என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள், அப்பொழுது நீங்கள் தூய்மையாகுவீர்கள். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காகவே நான் வருகிறேன். அமரத்துவ ஆத்மாக்களாகிய நீங்கள் உங்கள் தனிப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளீர்கள். பாபாவும் இந்த சிம்மாசனத்தைக் கடனாக எடுத்துள்ளார். தந்தை இந்த அதிர்ஷ்ட இரதத்தினுள் பிரவேசித்துள்ளார். பரமாத்மாவுக்குப் பெயரோ வடிவமோ இல்லையெனச் சிலர் கூறுகிறார்கள். அது சாத்தியமில்லை. அவர்கள் அவரைக் கூவியழைத்து, அவருடைய புகழ் பாடுகிறார்கள். எனவே அவர் நிச்சயமாக ஏதோவொன்றாக இருக்க வேண்டும். தமோபிரதானாக இருப்பதால் அவர்கள் எதையுமே புரிந்து கொள்வதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே 8.4 மில்லியன் உயிரினங்கள் இருக்க முடியாது. ஆகக் கூடியது 84 பிறவிகளே இருக்க முடியும். அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும். எவராவது சென்று பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலக்கவோ, அநாதியான முக்தியை அடையவோ முடியாது. இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. இதில் ஓர் ஆத்மாவேனும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்க முடியாது. இந்த அநாதியான அழியாத நாடகத்தில் இருந்தே அவர்கள் சிறிய நாடகங்களை உருவாக்குகிறார்கள். அவை அழியக் கூடியவை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது எல்லையற்றதினுள் இருக்கின்றீர்கள். நீங்கள் எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள் என்ற ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் பெற்றுள்ளீர்கள். தந்தை இதனை இப்பொழுது உங்களுக்குக் கூறியுள்ளார் முன்னர் நீங்கள் எவருமே இதனை அறிந்திருக்கவில்லை. ரிஷிகள் முனிவர்களுமே தங்களுக்குத் தெரியாது என்றே கூறுகிறார்கள். இப்பழைய உலகை மாற்றுவதற்குத் தந்தை சங்கமயுத்தில் மாத்திரமே வருகிறார். அவர் பிரம்மா மூலம் மீண்டும் ஒருமுறை புதிய உலக ஸ்தாபனையை மேற்கொள்கிறார். அவர்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் எவராலும் அந்தளவிற்குப் பழையதை நினைவில் கொண்டிருக்க முடியாது. பெரும் பிரளயம் ஒருபொழுதும் ஏற்படுவதில்லை. தந்தை உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். பின்னர் நீங்கள் உங்கள் இராச்சியத்தைக் கோருகிறீர்கள். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முதல் இலக்கத்தில் உள்ளவரும் மிகவும் நேசிக்கப்படுபவரும் தந்தையே என்பதும் அடுத்ததாக ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் நேசிக்கப்படுகிறார் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஸ்ரீ கிருஷ்ணரே முதல் இலக்கத்தைக் கொண்ட சுவர்க்கத்தின் முதல் இளவரசர். பின்னர் அவர் 84 பிறவிகளை எடுக்கிறார். அவரின் இறுதிப் பிறவியில் நான் அவருடைய சரீரத்தினுள் பிரவேசிக்கிறேன். நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாக வேண்டும். தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர். ஆற்று நீர் எவ்வாறு உங்களை தூய்மையாக்கும்? சத்தியயுகத்திலும் அந்த ஆறுகள் இருக்கும். அங்கிருக்கும் நீர் மிகவும் சுத்தமானதாக இருக்கும். குப்பை கூழங்கள் அவற்றில் இருக்காது. இங்கே அவற்றில் பெருமளவு குப்பை கூழம் இருக்கிறது. பாபா அவை அனைத்தையும் கண்டுள்ளார். அந்த நேரத்தில் அவரிடம் ஞானம் எதுவும் இருக்கவில்லை. நீரினால் நீங்கள் தூய்மையாக முடியும் என்ற எண்ணத்தைத் தான் கொண்ருந்ததையிட்டு பாபா வியப்படைகிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, தந்தையை எவ்வாறு நினைவு செய்வது என்பதையிட்டு ஒருபோதும் குழப்பமடையாதீர்கள். ஓ! உங்களால் தந்தையை நினைவு செய்ய முடியாதா? அந்தக் குழந்தைகள் விகாரத்தின் மூலம் பிறப்பெடுத்துள்ளார்கள். குழந்தைகளாகிய நீங்களோ தத்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஓர் ஆஸ்தியைப் பெறுகின்ற தத்தெடுக்கப்பட்ட குழந்தையொன்று எவ்வாறு தன் தந்தையை மறக்க முடியும்.? நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்தைப் பெறுகிறீர்கள். ஆதலால் நீங்கள் அவரை மறக்கக் கூடாது. குழந்தைகள் தங்கள் பௌதீகத் தந்தையை எப்பொழுதாவது மறப்பார்களா? எவ்வாறாயினும் இங்கே மாயையிடமிருந்து எதிர்ப்பு உள்ளது. மாயை உங்களுடன் தொடர்ந்தும் போர் தொடுக்கிறாள். இவ்வுலகம் முழுவதுமே கர்ம ஷேத்திரம். ஓர் ஆத்மா ஒரு சரீரத்தினுள் பிரவேசித்து, செயல்களைச் செய்கிறார். செயல்கள், நடுநிலையான செயல்கள், பாவச் செயல்கள் என்பவற்றின் இரகசியத்தை தந்தை விளங்கப்படுத்துகிறார். இங்கே இராவண இராச்சியத்தில் செயல்கள் பாவகரமானதாகுகின்றன. அங்கே இராவண இராச்சியம் இல்லாததால் அவர்களின் செயல்கள் நடுநிலையானதாக உள்ளன. அங்கே பாவச் செயல்கள் இல்லை. இவ்விடயங்கள் மிகவும் சுலபமானவை. இராவண இராச்சியத்தில் செயல்கள் பாவமாகுகின்றன. இதனாலேயே நீங்கள் பாவங்களுக்கான தண்டனையை அனுபவம் செய்ய வேண்டியுள்ளது. இராவணன் அநாதியானவன் என்பதல்ல. இல்லை. அரைக் கல்பத்திற்கு இராவண இராச்சியமும் அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியமும் உள்ளது. நீங்கள் தேவர்களாக இருந்த பொழுது உங்கள் செயல்கள் நடுநிலையானதாக இருந்தன. இவை அனைத்துமே ஞானமாகும். இப்பொழுது நீங்கள் பாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளதால் நீங்களும் இந்த ஞானத்தைக் கற்க வேண்டும். அவ்வளவுதான்! நீங்கள் தொழில் முதலியவற்றின் எண்ணங்கள் எதனையும் கொண்டிருக்கக் கூடாது. எவ்வாறாயினும் வீட்டில் வசிப்பவர்கள் தொழில் முதலானவற்றைச் செய்ய வேண்டும். ஆதலால் தந்தை கூறுகிறார்: ஒரு தாமரை மலரைப் போன்று வாழுங்கள். நீங்கள் அந்தத் தேவர்களைப் போன்று ஆகவேண்டும். அந்த அடையாளம் உங்களுக்குப் பொருந்தாததால் அது விஷ்ணுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அது அவருக்கே பொருந்தும். விஷ்ணுவின் அந்த இரட்டை ரூபமே இலக்ஷமியும் நாராயணனும் ஆகுகின்றது. அது வன்முறையற்ற அதிமேன்மையான தேவதர்மம். அங்கே காமவாளோ, சண்டை சச்சரவு எதுவுமோ இருப்பதில்லை. நீங்கள் இரட்டை வன்முறையற்றவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்களே சத்தியயுக அதிபதிகளாக இருந்தீர்கள். அது தூய சத்தியயுக உலகம் என அழைக்கப்படுகிறது. ஆத்மா சரீரம் இரண்டுமே தூய்மையானவை. உங்கள் சரீரங்களைத் தூய்மையாக்குபவர் யார்? தந்தையே. இது கலியுகம். சத்தியயுகம் கடந்துவிட்டது என நீங்கள் கூறுகிறீர்கள். நேற்று நீங்கள் ஆட்சி புரிந்த பொழுது அது சத்தியயுகமாக இருந்தது. நீங்கள் தொடர்ந்தும் ஞானம் நிறைந்தவர்கள் ஆகுகின்றீர்கள் அனைவரும் ஒரேமாதிரியாக இருக்க முடியாது. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த விழிப்புணர்வில் இருங்கள்: ஆத்மாவாகிய நான் இந்த அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளேன். நீங்கள் எல்லைக்குட்பட்டதற்கும் எல்லையற்றதிற்கும் அப்பால் செல்ல வேண்டும். ஆதலால் எல்லைக்குட்பட்ட எதனிலும் உங்கள் புத்தி சிக்கிக்கொள்வதை அனுமதிக்காதீர்கள்.

2. எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சொத்தைப் பெறுகின்றீர்கள் என்ற போதையைப் பேணுங்கள். செயல்கள், நடுநிலையான செயல்கள், பாவச் செயல்கள் என்பனவற்றின் இரகசியத்தைப் புரிந்து கொண்டு பாவச் செயல்கள் செய்வதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். கற்கும் பொழுது உங்கள் புத்தியை தொழில் போன்றவற்றிலிருந்து அகற்றுங்கள்.

ஆசீர்வாதம்:
ஆசீர்வாதம்: சத்தியத்தின் அதிகாரத்துடன் அன்பை சமநிலையாக்குவதன் மூலம் வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

பொய்மையான இந்த உலகில் சத்தியத்தின் அதிகாரத்தை தந்தை பிரம்மாவிடம் நடைமுறை ரீதியில் நீங்கள் பார்த்தீர்கள். அவரது அதிகார வார்த்தைகள் ஆணவத்தின் உணர்வை ஒருபோதும் ஏற்படுத்தவில்லை. அதிகார வார்த்தைகளில் அன்பு அமிழ்த்தப்பட்டிருந்தது. அதிகார வார்த்தைகள் வெறுமனே அன்பினால் மாத்திரம் நிறைந்திருப்பதில்லை ஆனால் அவை ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. ஆகவே தந்தையைப் பின்பற்றுங்கள். அன்பும் அதிகாரமும், பணிவும் மேன்மையும்,: இந்த சோடிகள் சமமாக புலப்படட்டும். இப்போது சேவையில் இந்த சமநிலையை கோடிட்டுக் கொள்ளுங்கள் அப்போது நீங்கள் வெற்றி சொரூபம் ஆகுவீர்கள்.

சுலோகம்:
எனது என்பதை உங்களுடையது என மாற்றிக்கொள்வது என்றால் உங்கள் பாக்கியத்துக்கான உரிமையைக் கோருதல் ஆகும்.