04.08.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     09.01.85     Om Shanti     Madhuban


மேன்மையான பாக்கியசாலி ஆத்மாக்களின் ஆன்மீக ஆளுமை.


இன்று, பாக்கியத்தை அருள்பவரான தந்தை, தனது மேன்மையான, பாக்கியசாலிக் குழந்தைகளைப் பார்த்தார். ஒவ்வொரு குழந்தையின் பாக்கிய ரேகையும் அதிமேன்மையானதாகவும் அழியாததாகவும் இருந்தது. குழந்தைகளான நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள். ஏனெனில், நீங்கள் அனைவரும் பாக்கியத்தை அருள்பவருக்குச் சொந்தமானவர்கள். இதனாலேயே, பாக்கியம் உங்களின் பிறப்புரிமை ஆகுகிறது. நீங்கள் அனைவரும் இயல்பாகவே பிறப்புரிமையின் வடிவில் உரிமையைப் பெற்றுள்ளீர்கள். அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அந்த உரிமையை வாழ்க்கையில் தனக்காக அனுபவிப்பதற்கும், மற்றவர்களுக்காகப் பயன்படுத்தி அவர்களும் அதை அனுபவிக்கச் செய்வதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. பாக்கியத்தின் உரிமைக்குத் தகுதிவாய்ந்தவராக இருந்து, அந்த சந்தோஷத்தையும் போதையையும் பேணுவதுடன், மற்றவர்களையும் பாக்கியத்தை அருள்பவரினால் பாக்கியசாலி ஆக்குவதே, உரிமையின் போதையைப் பேணுதல் என்று அர்த்தம். பௌதீகமான செல்வத்தைக் கொண்டிருக்கும் ஒருவரின் முகத்திலும் நடத்தையிலும் தற்காலிகமான செல்வத்தின் போதை புலப்படுவதைப்போன்று, பாக்கியத்தை அருள்பவரிடமிருந்து பெறுகின்ற அழியாத, மேன்மையான பாக்கியச் செல்வத்தின் போதை இயல்பாகவே உங்களின் முகங்களிலும் நடவடிக்கைகளிலும் புலப்படும். மேன்மையான பாக்கியச் செல்வம் என்ற பேற்றின் ரூபம் அலௌகீகமானது, ஆன்மீகமானது. உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரையும்விட, உங்களின் மேன்மையான பாக்கியத்தின் பிரகாசமும் ஆன்மீக போதையும் மேன்மையானதும், அன்பானதும் தனித்துவமானதும் ஆகும். மேன்மையான பாக்கிய சூரியனின் கதிர்களைத் தொலைவில் இருந்தே அனுபவம் செய்ய முடியும். மேன்மையான பாக்கியத்தைக் கொண்டுள்ள ஆத்மாவின் கண்களில் இருந்து அனைவரும் எப்போதும் ஆன்மீக இராஜரீகத்தை அனுபவம் செய்வார்கள். இந்த உலகில் இராஜரீகத்தையும் ஆளுமையையும் கொண்டுள்ள எத்தனை மகான் ஆத்மாக்கள் இருந்தாலும், மேன்மையான பாக்கியத்தைக் கொண்டுள்ள ஆத்மாக்களின் முன்னால், உலக ஆளுமையுடையவர்கள் அந்த ஆன்மீக ஆளுமையை அதிகபட்ச மேன்மையானதாகவும் தனித்துவமாகவும் உணர்வார்கள். மேன்மையான பாக்கியத்தைக் கொண்டுள்ள ஆத்மாக்களைத் தனித்துவமான, அலௌகீக உலகில் இருந்து வந்திருப்பதாகவும், அல்லாவின் மக்கள் என்று அழைக்கப்படும் முற்றிலும் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனுபவம் செய்வார்கள். புதிதாக ஏதாவது கண்டுபிடிக்கப்படும்போது, மக்கள் அதை அன்புடன் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அதேபோன்று, மேன்மையான பாக்கியத்தைக் கொண்டுள்ள ஆத்மாக்களைக் காண்பதில் அவர்கள் அதிகபட்சம் சந்தோஷம் அடைவார்கள். மேன்மையான, பாக்கியசாலி ஆத்மாக்களின் மேன்மையான மனோபாவத்தில் இருந்து, மற்றவர்களும் தாமும் எதையாவது பெறுகிறோம் என உணரும் வகையில் அந்தச் சூழல் அமையும். அதாவது, அவர்கள் அந்தச் சூழலை அல்லது சுற்றாடலை பேறுள்ள ஒன்றாகவே உணர்வார்கள். எதையாவது அடைகின்ற, எதையாவது பெறுகின்ற அனுபவத்தில் அவர்கள் தங்களை மறந்திருப்பார்கள். மேன்மையான, பாக்கியசாலி ஆத்மாக்களைப் பார்க்கும்போது, தாகத்தைக் கொண்டிருப்பவர்களிடம் கிணறு ஒன்றே நடந்து வந்துள்ளதைப் போன்று அவர்கள் அனுபவம் செய்வார்கள். பேறுகள் இல்லாமல் இருக்கும் ஆத்மாக்களுக்கு ஏதோவொரு பேற்றின் நம்பிக்கை ஏற்படும். எங்கும் நம்பிக்கை இழந்திருக்கும் இருளின் மத்தியில், தூய நம்பிக்கைத் தீபம் ஏற்றப்பட்டிருப்பதை அவர்கள் அனுபவம் செய்வார்கள். மனவிரக்தி அடைந்துள்ள ஆத்மாக்கள் தமது இதயங்களில் சந்தோஷத்தை அனுபவம் செய்வார்கள். நீங்கள் இத்தகைய மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருப்பவர்கள் ஆகிவிட்டீர்களா? உங்களின் இந்த ஆன்மீகச் சிறப்பியல்புகளை நீங்கள் அறிவீர்களா? நீங்கள் அவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா? நீங்கள் அவற்றை அனுபவம் செய்கிறீர்களா? அல்லது, நீங்கள் வெறுமனே அவற்றைப் பற்றி நினைக்கிறீர்களா? அவற்றைப் பற்றிக் கேள்விப்படுகிறீர்களா? நடக்கும்போதும் உலாவித்திரியும்போதும், உங்களின் சாதாரணமான உருவத்தில் மறைந்திருக்கும் மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருக்கும் ஆத்மா என்ற விலைமதிப்பற்ற வைரத்தை நீங்கள் ஒருபோதும் மறப்பதில்லை, அல்லவா? நீங்கள் உங்களை ஒரு சாதாரணமான ஆத்மாவாகக் கருதுவதில்லை, அல்லவா? சரீரம் பழையது. சாதாரணமானது. ஆனால் ஆத்மா மகத்தானது, விசேடமானது. முழு உலகினதும் அதிர்ஷ்டத்தின் ஜாதகத்தைப் பாருங்கள்! உங்களிடம் இருப்பதைப் போன்ற மேன்மையான பாக்கிய ரேகை வேறு எவரிடமும் இல்லை. ஆத்மாக்கள் எந்தளவிற்குச் செல்வத்தால் நிறைந்திருந்தாலும், எந்தளவிற்கு ஆத்மாவின் புராணங்களின் அறிவுப் பொக்கிஷங்களால் நிறைந்திருந்தாலும், எந்தளவிற்கு விஞ்ஞான அறிவின் சக்தியால் நிறைந்திருந்தாலும், உங்களின் அனைவரினதும் நிறைந்திருக்கும் பாக்கியத்தின் முன்னால் அவர்கள் எம்மாத்திரம்? அவர்கள் வெளிப்படையாக நிறைந்திருந்தாலும், உள்ளே வெறுமையாக இருப்பதையும், அதேவேளை நீங்களோ உள்ளே நிறைந்திருப்பதுடன் வெளிப்படையாக சாதாரணமானவர்களாக இருப்பதையும் அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். ஆகவே, உங்களின் மேன்மையான பாக்கியத்தை உங்களின் விழிப்புணர்வில் சதா வைத்திருப்பதன் மூலம், சக்திசாலியாக இருக்கும் உங்களின் ஆன்மீக போதையைப் பேணுங்கள். புறத்தே, நீங்கள் சாதாரணமானவராகத் தோன்றக்கூடும். ஆனால் அந்தச் சாதாரணத்தன்மையிலும் மகத்துவம் புலப்பட வேண்டும். ஆகவே, உங்களையே சோதித்துப் பாருங்கள்: ஒவ்வொரு சாதாரணச் செயலிலும் மகத்துவம் அனுபவம் செய்யப்படுகிறதா? இந்த முறையில் உங்களுக்குள்ளே இந்த அனுபவம் இருக்கும்போது, நீங்கள் இந்த அனுபவத்தை மற்றவர்களுக்கும் கொடுப்பீர்கள். நீங்கள் உங்களின் லௌகீக வர்த்தகத்தை மற்றவர்கள் செய்வதைப் போன்று செய்கிறீர்களா? அல்லது கடவுளுக்குச் சொந்தமான ஓர் ஆன்மீக நபர் செய்வதைப் போன்று செய்கிறீர்களா? நீங்கள் நடக்கும்போதும், அசையும்போதும் அனைவருடனும் தொடர்பில் வரும்போதும், உங்களின் கண்களிலும் உங்களின் முகத்திலும் ஏதோ தனித்துவம் இருக்கிறது என்பதை அவர்கள் நிச்சயமாக அனுபவம் செய்ய வேண்டும். அதைப் பார்க்கும்போது, அவர்களால் அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், ‘இது என்ன? இவர்கள் யார்?’ என்ற கேள்வியாவது அவர்களுக்குள் தோன்ற வேண்டும். இந்தக் கேள்வி என்ற அம்பானது நிச்சயமாக அவர்களைத் தந்தைக்கு நெருக்கமாகக் கொண்டுவரும். உங்களுக்குப் புரிகிறதா? நீங்கள் இத்தகைய மேன்மையான பாக்கியத்தைக் கொண்டிருக்கும் ஆத்மாக்கள். குழந்தைகளின் அப்பாவித்தனத்தைப் பார்க்கும்போது, பாப்தாதா சிலவேளைகளில் புன்னகைக்கிறார். நீங்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். ஆனால், உங்களின் பாக்கியத்தையே மறக்கும் அளவிற்கு நீங்கள் அப்பாவிகள் ஆகுகிறீர்கள். மற்றவர்கள் மறக்காத எதையும் அப்பாவிக் குழந்தைகளான நீங்கள் மறக்கிறீர்கள். மக்கள் தங்களை மறப்பார்களா? யாரேனும் தந்தையை மறப்பார்களா? எனவே, நீங்கள் மிகவும் அப்பாவிகள் ஆகிவிட்டீர்கள். 63 பிறவிகளாக, நீங்கள் தவறான பாடத்தை மிகவும் உறுதியாகக் கற்றுள்ளீர்கள். அதைக் கடவுளே மறக்கச் சொன்னாலும், நீங்கள் அதை மறப்பதில்லை. எவ்வாறாயினும், மேன்மையான விடயங்களை நீங்கள் மறக்கிறீர்கள். இதனாலேயே, நீங்கள் மிகவும் அப்பாவிகள். தந்தை கூறுகிறார்: இந்த அப்பாவிகளுடன் இருப்பதும் நாடகத்தில் எனது பாகமே ஆகும். நீங்கள் நீண்ட காலமாக அப்பாவிகளாக இருந்தீர்கள். இப்போது, தந்தையைப் போன்று, மாஸ்ரர் ஞானம் நிறைந்தவர்களாகவும் மாஸரர் சக்திசாலிகளாகவும் ஆகுங்கள். உங்களுக்குப் புரிகிறதா? அச்சா.

சதா மேன்மையானவர்களாகவும் பாக்கியசாலிகளாகவும் இருப்பவர்களுக்கும், தமது சொந்தப் பாக்கியத்தினூடாக பாக்கியசாலி ஆகும் சக்தியை மற்றவர்களுக்குக் கொடுப்பவர்களுக்கும், சாதாரணத்தன்மையிலும் மகத்துவத்தின் அனுபவத்தைக் கொடுப்பவர்களுக்கும், அப்பாவிகளில் இருந்து பாக்கியசாலி ஆகுபவர்களுக்கும், சதா பாக்கியத்தின் உரிமைக்கான போதையையும் சந்தோஷத்தையும் பேணுபவர்களுக்கும், உலகில் அதிர்ஷ்ட நட்சத்திரங்களாகி சதா பிரகாசிப்பவர்களுக்கும், இத்தகைய மேன்மையான, பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும், பாக்கியத்தை அருள்பவரான பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

பாப்தாதா மதுவன சகோதர, சகோதரிகளைச் சந்திக்கிறார்:
மதுவனவாசிகள் என்றால் தமது இனிமையால் சதா அனைவரையும் இனிமையானவர்கள் ஆக்குபவர்கள் என்று அர்த்தம். தமது எல்லையற்ற விருப்பமின்மை என்ற மனோபாவத்தால், மற்றவர்களையும் எல்லையற்ற விருப்பமின்மையைக் கொண்டிருக்கத் தூண்டுபவர்கள் என்று அர்த்தம். மதுவனவாசிகளின் சிறப்பியல்பானது, அதிகபட்ச இனிமையும் அதிகபட்ச விருப்பமின்மையும் ஆகும். இந்தச் சமநிலையைப் பேணுபவர்கள், இலகுவாகவும் இயல்பாகவும் முன்னால் செல்வதை அனுபவம் செய்கிறார்கள். மதுவனத்தின் இந்த இரண்டு சிறப்பியல்புகளின் விளைவானது உலகிற்குப் பரவுகிறது. ஆத்மாக்களுக்கு ஞானம் இல்லாவிட்டாலும், மதுவனம் ஒளிவீடாகவும் சக்திவீடாகவும் திகழ்கிறது. இந்த வெளிச்சவீட்டின் ஒளியானது அனைவரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களின் மீது விழுகிறது. இங்கு இந்த அதிர்வலைகள் இருக்கும் அளவிற்கேற்ப, நீங்கள் திரும்பிச் சென்றபின்னர், நீங்கள் தனித்துவமானவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களின் பிரச்சனைகளால், சூழ்நிலைகளால் அல்லது ஏதாவது பேறுகள் இல்லாமல் போவதனால் தற்காலிக விருப்பமின்மையின் மனோபாவத்தினூடாக நிச்சயமாக ஏதாவது விளைவொன்று அவர்களில் ஏற்படுகிறது. நீங்கள் இங்கு சக்திசாலிகள் ஆகும்போது, அங்கும், ஏதாவதொரு சக்திவாய்ந்த விடயம் நிகழுகிறது. இங்கிருக்கும் அலையானது, உலகிலுள்ள மக்களின் மீதும் பிராமணர்களின் மீதும் பரவுகிறது. விசேடமான கருவிகள், குறுகிய காலத்திற்கு உற்சாகத்துடன் இருந்து, பின்னர் சாதாரணமானவர்கள் ஆகிவிட்டால், அங்கும் மற்றவர்கள் உற்சாகம் அடைந்து, பின்னர் மீண்டும் சாதாரணமானவர்கள் ஆகிவிடுவார்கள். எனவே, மதுவனமே விசேடமானதொரு மேடை ஆகும். பௌதீகமான மேடையில், சொற்பொழிவு ஆற்றுபவர்கள் அல்லது மேடைச் செயலாளர்கள் நிச்சயமாக அந்த மேடையில் கவனம் செலுத்துவார்கள். அல்லது அது சொற்பொழிவு ஆற்றுபவரை மட்டும் பொறுத்தவிடயம் என்று நினைப்பார்களா? ஒருவர் சிறியதொரு பாடலைப் பாடச் செல்லக்கூடும். அல்லது ஒரு பூங்கொத்தைக் கொடுப்பதற்குச் செல்லக்கூடும். ஆனால் அவர் மேடைக்குச் செல்லும்போது, அந்தச் சிறப்பியல்புடனும் கவனத்துடனுமே செல்வார். எனவே, உங்களுக்கு மதுவனத்தில் என்ன கடமை இருந்தாலும், நீங்கள் உங்களைச் சிறியவராக (இளையவர்) அல்லது மகத்தானவராக (மூத்தவர்) நினைத்தாலும், நீங்கள் மதுவனம் என்ற விசேடமான மேடையில் இருக்கிறீர்கள். மதுவனம் என்றால் மகத்தான மேடை என்று அர்த்தம். எனவே, மகத்தான மேடையில் ஒரு பாகத்தை நடிப்பவர்களும் மகத்தானவர்களே, அப்படியல்லவா? அனைவரும் உங்களை மகத்தான முறையிலேயே பார்க்கிறார்கள். ஏனெனில், மதுவனத்தின் புகழ் என்றால் மதுவனவாசிகளின் புகழ் என்று அர்த்தம்.

மதுவனவாசிகளின் ஒவ்வொரு வார்த்தையும் முத்தைப் போன்றது. அவை வார்த்தைகள் அல்ல. ஆனால் முத்துக்கள். முத்துக்கள் பொழிவதைப் போன்றே இருக்கும். நீங்கள் பேசுவதில்லை. ஆனால் முத்துக்களைப் பொழிகிறீர்கள். இது இனிமை என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் பேசுவதைக் கேட்பவர்கள், நானும் அவ்வாறே பேசுவேன் என்று நினைக்கும் வகையில் வார்த்தைகளைப் பேசுங்கள். நீங்கள் பேசுவதைக் கேட்கும் அனைவரும், கற்பதற்கும் உங்களைப் பின்பற்றுவதற்குமான தூண்டுதலைப் பெற வேண்டும். உங்களில் இருந்து வெளிவரும் வார்த்தைகள், அவற்றைப் பதிவு செய்து, மீண்டும் கேட்கும் வகையில் இருக்க வேண்டும். மக்கள் எதையாவது விரும்பும்போது, அதை மீண்டும் மீண்டும் கேட்பதற்காக, அதைப் பதிவு செய்கிறார்கள். ஆகவே, உங்களின் வார்த்தைகள் அத்தகைய இனிமை உடையதாக இருக்க வேண்டும். இத்தகைய இனிய வார்த்தைகளின் அதிர்வலைகள் இயல்பாகவே உலகில் பரவுகின்றன. இந்தச் சூழல் இயல்பாகவே அந்த அதிர்வலைகளை ஈர்க்கின்றன. எனவே, உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மகத்தானதாக இருக்க வேண்டும். ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உங்கள் மனதில் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் மகத்தானதாகவும் இனிமையானதாகவும் இருக்க வேண்டும். இரண்டாவதாக, மதுவனத்தில் சகல பொக்கிஷக்களஞ்சியங்களும் முழுமையாக இருக்கும் அளவிற்கு, எல்லையற்ற விருப்பமின்மையும் இருக்க வேண்டும். ஆழ்ந்த பேறும் அதே அளவிற்கு விருப்பமின்மையின் மனோபாவமும் இருக்க வேண்டும். அப்போது உங்களிடம் எல்லையற்ற விருப்பமின்மைக்குரிய மனோபாவம் உள்ளது எனக்கூற முடியும். பேறு இல்லாவிடின், எவ்வாறு விருப்பமின்மைக்குரிய மனோபாவம் இருக்க முடியும்? ஒரே வேளையில் உங்களிடம் பேறும், விருப்பமின்மைக்குரிய மனோபாவமும் இருந்தால் மட்டுமே, அது எல்லையற்ற விருப்பமின்மை எனப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் எதைச் செய்கிறீர்களோ, அதன் பலனை இப்போது பெறுவீர்கள். எதிர்காலத்திலும் நீங்கள் நிச்சயமாக அதைப் பெறப் போகிறீர்கள். தற்சமயம், அனைவரின் இதயத்தில் இருந்தும் நீங்கள் உண்மையான அன்பையும் ஆசீர்வாதங்களையும் பெறுகிறீர்கள். இந்தப் பேறானது, சுவர்க்க இராச்சிய பாக்கியத்தை விட மகத்தானது. ஒவ்வொருவரின் அன்பும் ஆசீர்வாதங்களும் எந்தளவிற்கு இதயத்தை முன்னால் செல்ல வைக்கிறது என்பதை இப்போது உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அனைவரின் இதயங்களில் இருந்தும் வருகின்ற ஆசீர்வாதங்களில் இருந்து நீங்கள் அனுபவிக்கும் சந்தோஷம் தனித்துவமானது. யாராவது உங்களைத் தனது உள்ளங்கைகளில் தாங்கி, உங்களைப் பறக்கச் செய்வதைப் போன்று நீங்கள் உணர்வீர்கள். அனைவரின் அன்பும் ஆசீர்வாதங்களும் உங்களுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கும். அச்சா.

இந்த புதிய வருடத்திற்காக உங்கள் அனைவருக்கும் புதிய ஊக்கமும் உற்சாகமும் நிறைந்ததோர் எண்ணம் உள்ளதல்லவா? அதில் திடசங்கற்பம் உள்ளதா? தினமும் உங்களுக்குள் ஏற்படும் எந்தவோர் எண்ணத்தையும் தொடர்ந்து மீட்டல் செய்யுங்கள். நீங்கள் தொடர்ந்து எதையாவது உறுதியாக்கும்போது, அது உங்களுக்குள் மிகவும் உறுதியாகுவதைப் போன்று, உங்களுக்குள் ஏற்பட்ட அந்த எண்ணத்தையும் கைவிடாதீர்கள். அந்த எண்ணத்தைத் தினமும் மீட்டல் செய்து, திடசங்கற்பம் கொள்ளுங்கள். இந்தத் திடசங்கற்பம் எப்போதும் பயனுள்ளதாக இருக்கும். சிலவேளைகளில், நீங்கள் என்ன எண்ணத்தை உருவாக்கினீர்கள் என்று நீங்கள் சிந்திப்பீர்கள். சிலவேளைகளில், தொடர்ந்து முன்னேறும்போது, என்ன எண்ணம் ஏற்பட்டது என்பதையே நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். அப்போதே பலவீனம் ஏற்படுகிறது. தினமும் அதை மீட்டல் செய்து, தந்தையின் முன்னால் தினமும் மீண்டும் மீண்டும் கூறுங்கள். அது உறுதி அடையும். அப்போது உங்களால் இலகுவாக வெற்றி பெற முடியும். மதுவனத்தில் உள்ள ஒவ்வோர் ஆத்மாவையும் அனைவரும் எவ்வளவு அன்புடன் பார்க்கிறார்கள் என்பதைத் தந்தை அறிவார். மதுவனவாசிகளின் சிறப்பியல்புகளின் முக்கியத்துவம் எதிலும் குறைந்ததல்ல. ஒருவர் சிறியதொரு விசேடமான பணியைச் செய்தாலும், அது ஓரிடத்தில் செய்யப்படும் பணியாக இருந்தாலும், அனைவரும் அதனால் தூண்டப்படுவார்கள். அதனால், அந்தச் சிறப்பியல்பின் நன்மையின் முழுப்பங்கையும் அந்த ஆத்மா பெறுவார். ஆகவே, மதுவனத்தில் இருப்பவர்களுக்கு மேன்மையான எண்ணங்கள் ஏற்பட்டு, திட்டங்கள் செய்யும்போது அல்லது செயல்களைச் செய்யும்போது, அது அனைவரிலும் கற்பதற்கான உற்சாகத்தை உருவாக்குகிறது. எனவே, அனைவரிலும் உற்சாகத்தை ஏற்படுத்தும் ஓர் ஆத்மா எவ்வளவு நன்மை பெறுவார்! நீங்கள் அனைவரும் இந்தளவு முக்கியம் வாய்ந்தவர்கள். நீங்கள் ஒரு மூலையில் எதையாவது செய்கிறீர்கள். அது எங்கும் பரவுகிறது. அச்சா.

இந்த வருடத்திற்கு ஒரு புதிய திட்டம். இந்த வருடம், ஒரு குழுவை உருவாக்குங்கள். அந்தக் குழுவின் சிறப்பியல்புகளை நடைமுறையில் மற்றவர்கள் பார்க்கும்போது, அவர்கள் தூண்டப்படுவதுடன் அந்த அதிர்வலைகள் எங்கும் பரவ வேண்டும். அரசாங்கம் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுக்கும்படி கூறுகிறது. நீங்கள் எதையாவது நடைமுறையில் செய்வதை அவர்கள் புரிந்து கொள்ளும்படி ஒரு மாதிரியுருவை உருவாக்கும்படி கூறுகிறது. இதன் மூலம் அவர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். அதேபோன்று, மற்றவர்களைத் தூண்டும்படியான குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும். நற்குணம் என்றால் என்ன, சக்தி என்றால் என்ன, ஞானம் என்றால் என்ன, நினைவென்றால் என்ன என எவராயினும் பார்க்க விரும்பினால், இவற்றின் நடைமுறை ரூபம் அவர்களில் புலப்பட வேண்டும். சிறிய குழுக்கள் இத்தகைய நடைமுறை உதாரணங்கள் ஆகினால், அந்த மேன்மையான அதிர்வலைகள் இயல்பாகவே சூழலில் பரவும். தற்காலத்தில், அனைவரும் நடைமுறை ரூபத்தையே பார்க்க விரும்புகிறார்கள். அவர்கள் வெறுமனே கேட்பதற்கு விரும்புவதில்லை. நடைமுறையின் விளைவானது அவர்களை விரைவாகச் சென்றடையும். எனவே, இத்தகைய ஊக்கத்தினதும் உற்சாகத்தினதும் நடைமுறை ரூபம் இருக்க வேண்டும். மற்றவர்கள் இலகுவாகத் தூண்டுதல்களைப் பெற்று, அந்தத் தூண்டுதல்கள் சகல திசைகளிலும் எங்கும் பரவும்படியாக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இது, ஒன்றில் இருந்து இரண்டிற்கு, அதில் இருந்து மூன்றுக்கு எனத் தொடர்ந்து செல்லும். இதனாலேயே, நீங்கள் இப்போது ஏதாவது சிறப்பியல்பை உருவாக்க வேண்டும் விசேடமான கருவி ஆத்மாக்களே அத்தாட்சிகள் என்பதை அனைவரும் புரிந்து கொள்கின்றனர். அவர்களிடமிருந்து அனைவரும் தூண்டுதல்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதேபோன்று, மேலும் அத்தாட்சியை உருவாக்குங்கள். அவர்கள் இதைக் காணும்போது, ஆமாம், அவர்களால் நடைமுறையில் ஞான சொரூபத்தின் அனுபவத்தைப் பெறக்கூடியதாக உள்ளது என அவர்கள் அனைவராலும் கூற முடியும். இந்தத் தூய, மேன்மையான செயல்களாலும் தூய, மேன்மையான எண்ணங்களின் மனோபாவத்தாலும் சூழலை நிரப்புங்கள். இதைப் போன்று ஏதாவது செய்வதன் மூலம் நடைமுறையில் அதைக் காட்டுங்கள். தற்காலத்தில், மனதின் மூலம் சேவை செய்யும் அளவிற்கு வார்த்தைகளின் மூலம் சேவை செய்வதில் பலன் ஏற்படுவதில்லை. நீங்கள் ஒரு வார்த்தையைப் பேசி, நூறு வார்த்தைகளின் அதிர்வலைகளைப் பரப்பினால், அதில் விளைவு ஏற்படலாம். வார்த்தைகள் பொதுவானவை ஆகிவிட்டன. ஆனால் அந்த வார்த்தைகளுடன் வருகின்ற சக்திவாய்ந்த அதிர்வலைகள் வேறெங்கும் இருப்பதில்லை. அது இங்கு மட்டுமே உள்ளது. இந்தச் சிறப்பியல்பைக் காட்டுங்கள். கருத்தரங்குகளும் இளைஞர் நிகழ்ச்சிகளும் எல்லா வேளையும் இடம்பெறும். அவை தொடர்ந்தும் இடம்பெற வேண்டும். இந்த இரண்டினாலும் ஊக்கமும் உற்சாகமும் அதிகரிக்கும். ஆனால், இப்போது ஆத்ம சக்திக்கான தேவை உள்ளது. இது உங்களின் மனோபாவத்தின் மூலம் அதிர்வலைகளைப் பரப்புதல் ஆகும். இது சக்திவாய்ந்தது. நல்லது.

ஆசீர்வாதம்:
சகித்துக் கொள்ளும் சக்தியைக் கிரகிப்பதன் மூலம் சத்தியத்தைக் கடைப்பிடித்து, அதன் மூலம் எப்போதும் வெற்றியாளர் ஆகுவீர்களாக.

உலகிலுள்ள மக்கள், இந்த உலகில் நேர்மையான மக்கள் வாழ்வது சிரமம் என்று நினைக்கிறார்கள். தாங்கள் பொய் சொல்ல வேண்டும் என்றே நினைக்கிறார்கள். பிராமண ஆத்மாக்கள் பலரும் தாம் சிலவேளைகளில் ஏமாற்றக்கூடிய புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் தந்தை பிரம்மாவைக் கண்டீர்கள்: அவர் சத்தியத்திற்காகவும் தூய்மைக்காகவும் அதிகளவு எதிர்ப்பைச் சந்தித்தார். ஆனால் அவர் பயப்படவில்லை. சத்தியத்திற்கு, உங்களுக்கு சகித்துக் கொள்ளும் சக்தி தேவை. நீங்கள் சகித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தலைவணங்க வேண்டும். நீங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அது தோல்வி அல்ல. அது எல்லா வேளைக்குமான வெற்றியே ஆகும்.

சுலோகம்:
சந்தோஷமாக இருந்து, மற்றவர்களைச் சந்தோஷப்படுத்துவது, ஆசீர்வாதங்களைக் கொடுத்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வதாகும்.