20.10.19    Avyakt Bapdada     Tamil Lanka Murli     24.02.85     Om Shanti     Madhuban


சங்கமயுகமே சகல மேன்மையான பேறுகளுக்கான யுகம் ஆகும்.


இன்று, பாப்தாதா பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் எங்கும் உள்ள சகல விசேடமான ஆத்மாக்களையும் பார்த்தார். ஒருபுறம், தற்காலிக பேறுகளைப் பெறும் ஆத்மாக்கள் பலர் உள்ளனர். அதாவது, அவர்களிடம் சில பேறுகள் உள்ளன. சில பேறுகள் இல்லாதிருக்கின்றன. இன்று அவர்களிடம் பேறுகள் உள்ளன. நாளை பேறுகள் இல்லாமல் போகின்றன. எனவே, ஒருபுறம் எண்ணற்ற பேறுகளின் சொரூபங்கள். மறுபுறம், எல்லா வேளையும் பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் மிக விசேடமான ஆத்மாக்களான நீங்கள் மிகச்சிலரே இருக்கிறீர்கள். இரண்டுக்கும் இடையிலான மகத்தான வேறுபாட்டை பாபா கண்டார். பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளைக் கண்டு பாப்தாதா களிப்படைந்தார். பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் குழந்தைகளான நீங்கள், பலமில்லியன் மடங்கு பாக்கியசாலிகள் ஆவீர்கள். விசேட ஆத்மாக்களான உங்களிடம் அதிகளவு பேறுகள் உள்ளன. உங்களின் ஒவ்வோர் அடியும் உங்களுக்குப் பலமில்லியன்களைக் கொடுக்கின்றது. உலக வாழ்க்கையில், சகல பேறுகளின் சொரூபமாக இருக்கும் வாழ்க்கையில், நான்கு விசேட விடயங்களின் பேறுகள் அத்தியாவசியமானவை. 1) சந்தோஷத்தைக் கொடுக்கும் உறவுமுறைகள். 2) எப்போதும் குளிர்மையான, அன்பான சுபாவமும் சம்ஸ்காரங்களும். 3) உண்மையான வருமானம் என்ற மேன்மையான செல்வம். 4) மேன்மையான செயல்களும் மேன்மையான தொடர்புகளும். இந்த நான்கு விடயங்களினதும் பேறுகள் உங்களிடம் இருந்தால், உங்களின் லௌகீக வாழ்க்கையிலும் வெற்றியும் சந்தோஷமும் இருக்கும். எவ்வாறாயினும், உலக வாழ்க்கைக்கான பேறுகள், தற்காலிகமான காலப்பகுதிக்கான பேறுகள் ஆகும். இன்று, உறவுமுறைகள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. ஆனால் நாளை, அதே உறவுகள் துன்பத்தைக் கொடுக்கின்றன. இன்று, வெற்றி உள்ளது. நாளை, அது இருப்பதில்லை. அதற்கு எதிர்மாறாக, பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்களான உங்களிடம் இந்த மேன்மையான, அலௌகீக வாழ்க்கையில் இந்த நான்கு பேறுகளும் உள்ளன. ஏனெனில், உங்களுக்கு நேரடியாக சந்தோஷத்தை அருள்பவருடனும் சகல பேறுகளை அருள்பவருடனும் அழியாத உறவுமுறை உள்ளது. இந்த உறவுமுறை ஒருபோதும் உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பதில்லை. அல்லது உங்களை ஏமாற்றுவதும் இல்லை. தற்சமயம், அழியும் உறவுமுறைகளில் துன்பம் அல்லது ஏமாற்றுதல் காணப்படுகிறது. அழியாத உறவுமுறையில், உண்மையான அன்பும் சந்தோஷமும் உள்ளன. எனவே, நீங்கள் சதா தந்தை மீது அன்பு வைத்திருக்கிறீர்கள். அத்துடன் தந்தையுடன் சகல உறவுமுறைகளின் சந்தோஷமும் உங்களிடம் உள்ளது. ஓர் உறவுமுறையேனும் தவறுவதில்லை. நீங்கள் விரும்பும் எந்தவோர் உறவுமுறையினூடாகவும் உங்களால் பேறுகளை அனுபவம் செய்ய முடியும். ஆத்மா எந்த உறவுமுறையை அன்பானதாக உணர்கிறாரோ, அந்த உறவுமுறையினூடாக அன்பின் பொறுப்பினைக் கடவுள் பூர்த்தி செய்கிறார். நீங்கள் சகல உறவுமுறைகளையும் ஏற்படுத்தக்கூடிய ஒருவராகக் கடவுளை நீங்கள் ஆக்கியுள்ளீர்கள். கல்பம் முழுவதிலும் வேறு எந்த வேளையிலும் உங்களால் இத்தகைய மேன்மையான உறவுமுறைகளை அடைய முடியாது. எனவே, நீங்களும் உறவுமுறையைப் பெற்றுள்ளீர்கள். அத்துடன், உங்களின் அலௌகீக, தெய்வீக வாழ்க்கையில் உங்களிடம் எப்போதும் மேன்மையான சுபாவமும் இறை சம்ஸ்காரங்களும் இருப்பதனால், உங்களின் சுபாவமும் சம்ஸ்காரங்களும் ஒருபோதும் எவருக்கும் துன்பம் விளைவிக்காது. பாப்தாதாவின் சம்ஸ்காரங்களே குழந்தைகளான உங்களின் சம்ஸ்காரங்களும் ஆகுகின்றன. பாப்தாதாவின் சுபாவம், குழந்தைகளின் சுபாவம் ஆகுகிறது. ‘சுவபாவ்’ (சுய உணர்வுகள், ஒருவரின் சுபாவம்) என்றால் எப்போதும் அனைவருக்காகவும் ஆத்ம உணர்வுகளைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். ‘சுவ’ என்றால் மேன்மையானது என்றும் அர்த்தம். சுய உணர்வுகள் அல்லது மேன்மையான உணர்வுகள் சுவபாவ் (சுபாவம்) என்று அர்த்தம். சதா மகாதானியாகவும் கருணைநிறைந்தவராகவும் உலக உபகாரியாகவும் இருத்தல் தந்தையின் சம்ஸ்காரங்கள் ஆகும். எனவே, அவை உங்களின் சம்ஸ்காரங்களாகவும் இருக்க வேண்டும். இதனாலேயே, உங்களின் சுபாவமும் சம்ஸ்காரங்களும் எப்போதும் உங்களுக்குச் சந்தோஷத்தின் பேற்றினைக் கொடுக்க வேண்டும். அதேபோன்று, உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் உண்மையான வருமானத்தின் செல்வமும் உங்களிடம் உள்ளது. எனவே, நீங்கள் எத்தனை அழியாத பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள்? நீங்கள் ஒவ்வொருவரும் பொக்கிஷச் சுரங்கங்களின் அதிபதிகள் ஆவீர்கள். நீங்கள் பொக்கிஷங்களை மட்டும் பெறவில்லை. ஆனால், நீங்கள் எல்லையற்ற, எண்ணற்ற பொக்கிஷங்களைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களால் அவற்றைத் தொடர்ந்து அதிகரிக்க முடியும். நீங்கள் எந்தளவிற்கு அவற்றைப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு அவை அதிகரிக்கும். நீங்கள் இதை அனுபவம் செய்துள்ளீர்கள், அல்லவா? உங்களின் பௌதீகச் செல்வத்தை நீங்கள் எதற்காகச் சம்பாதிக்கிறீர்கள்? சந்தோஷமாக உங்களால் பருப்பும் ரொட்டியும் உண்ண முடியும் என்பதற்காகவே. உங்களின் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்பதற்காக. அதன் மூலம் உலகில் உங்களுக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என்பதற்காக. உங்களைப் பாருங்கள்: நீங்கள் சந்தோஷம், சுகம் என்ற பருப்பையும் ரொட்டியையும் பெறுகிறீர்கள். பருப்பையும் ரொட்டியையும் உண்டு, கடவுளின் புகழைப் பாடுங்கள் என நினைவுகூரப்படுகிறது. இந்த முறையில் நினைவுகூரப்படும் பருப்பையும் ரொட்டியையும் நீங்கள் உண்கிறீர்கள். பிராமணக் குழந்தைகளான உங்களுக்குப் பருப்பும் ரொட்டியும் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை நீங்கள் பாப்தாதாவிடமிருந்து பெற்றுள்ளீர்கள். கவர்ச்சிகரமான உணவு உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், நீங்கள் நிச்சயமாகப் பருப்பையும் ரொட்டியையும் பெறுவீர்கள். உங்களிடம் பருப்பும் ரொட்டியும் உள்ளன. உங்களின் குடும்பம் நன்றாக உள்ளது. உங்களின் பெயர்கள் அதிகளவில் பெருமைப்படுத்தப்படுகின்றன. உங்களின் பெயர்கள் எந்தளவிற்குப் பெருமைப்படுத்தப்படுகின்றன என்றால், நீங்கள் உங்களின் இறுதிப் பிறவியை அடைந்திருந்தாலும், ஆத்மாக்கள் பலர் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் பெயர்களினூடாகத் தமது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார்கள். உங்களின் பெயர்கள் இந்தளவிற்குப் பெருமைப்படுத்தப்படுகின்றன. உங்களின் பெயர்கள் ஒரு பிறவிக்கு மட்டும் பெருமைப்படுத்தப்படுவதில்லை. ஆனால், கல்பம் முழுவதற்கும் உங்களின் பெயர்கள் பெருமைப்படுத்தப்படுகின்றன. எனவே, உங்களிடமே உண்மையான சந்தோஷச் செல்வம் உள்ளது. நீங்கள் உங்களைத் தந்தையுடன் இணைத்துக் கொள்வதனால், உங்களுடன் ஏற்படுத்தப்படும் தொடர்பும் மேன்மையானது. உங்களின் உயிரற்ற விக்கிரகங்களுடன் ஒரு விநாடி தொடர்பிற்கேனும் ஆத்மாக்கள் தாகத்துடன் இருக்குமளவிற்கு உங்களுடனான தொடர்பு மிக மேன்மையானது. உங்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு, ஒரு கணநேர தரிசனத்தைப் பெறுவதற்கு அவர்கள் தாகத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து ஒரு தொடர்பிற்காக, ஒரு விநாடி தரிசனத்திற்காக ஏங்குகிறார்கள். அவர்கள் தொடர்ந்து அதிகளவில் அழுகிறார்கள். அவற்றின் முன்னால் செல்வதற்காக அவர்கள் அதிகளவில் சகித்துக்கொள்கிறார்கள். அவை வெறும் விக்கிரகங்களே. அவ்வாறான சிலைகள் அவர்களின் வீடுகளிலும் உள்ளன. எனினும், அந்தக் குறிப்பிட்ட விக்கிரகத்துடன் ஒரு விநாடியேனும் தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான தாகம் அவர்களுக்கு உள்ளது. நீங்கள் ஒரேயொரு எல்லையற்ற தந்தைக்கு உரியவர்கள் என்பதனால், முழு உலகிலுமுள்ள ஆத்மாக்களுடன் உங்களுக்குத் தொடர்புள்ளது. நீங்கள் இப்போது எல்லையற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இப்போது உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவருடனும் தொடர்புடையவர்கள். நீங்கள் நான்கு விடயங்களையும் அநாதியாகப் பெற்றுள்ளீர்கள். இதனாலேயே, நீங்கள் சதா சந்தோஷமான வாழ்க்கை வாழுகிறீர்கள். பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் வாழ்க்கையை நீங்கள் வாழுகிறீர்கள். பிராமணர்களின் வாழ்க்கைகளில் எதுவும் குறைவில்லை. இதுவே உங்களின் பாடல், அப்படியல்லவா? நீங்கள் அத்தகைய பேறுகளின் சொரூபங்களா? அல்லது, நீங்கள் அவ்வாறு ஆகவேண்டியுள்ளதா? எனவே, உங்களுக்குக் கூறப்பட்டதைப் போன்று, இன்று, பாபா பேறுகளின் சொரூபங்களான குழந்தைகளைப் பார்த்தார். உலகிலுள்ள மக்கள் அந்த மேன்மையான வாழ்க்கை வாழ்வதற்கு அதிகளவு முயற்சி செய்கிறார்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் முயற்சி செய்தீர்களா அல்லது அன்பைக் கொண்டிருந்தீர்களா? தந்தை மீது நீங்கள் கொண்ட அன்பினால் அவரை உங்களுக்குச் சொந்தம் ஆக்கினீர்கள். எனவே, உலக மக்கள் முயற்சி செய்கிறார்கள். நீங்களோ அவர் மீதுள்ள அன்பினால் அவரை அடைந்தீர்கள். ‘பாபா’ எனக் கூறி, நீங்கள் பொக்கிஷங்களின் சாவியைப் பெற்றுக் கொண்டீர்கள். உலக மக்களிடம் நீங்கள் கேட்டால், அவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘ஏதாவதொன்றைச் சம்பாதிப்பது மிகவும் கஷ்டம். இந்த உலகில் வாழ்வது மிகவும் கஷ்டம்.’ ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களைச் சம்பாதிக்கிறீர்கள். இந்த வாழ்க்கையில் முன்னேறுவது உங்களுக்கு மிகவும் இலகுவாக உள்ளது. நீங்கள் பறக்கும் ஸ்திதியில் இருப்பதனால், நடப்பதில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளீர்கள். ‘நடப்பதைப் பற்றி மறந்துவிடுங்கள், நாங்கள் பறக்க வேண்டும்!’ என நீங்கள் கூறுகிறீர்கள். இதில் அதிகளவு வேறுபாடு உள்ளது. இன்று, பாப்தாதா உலகிலுள்ள குழந்தைகள் அனைவரையும் பார்த்தார். அனைவரும் தமது அன்பெனும் பேற்றில் முற்றிலும் மூழ்கிப் போயிருந்தார்கள். ஆனால், அதன் பெறுபேறு என்ன? அவர்கள் எதையாவது தேடுவதில் மும்முரமாக இருந்தார்கள். விஞ்ஞானிகளைப் பாருங்கள்: அவர்கள் தமது ஆராய்ச்சியில் மூழ்கிப் போயிருப்பதனால், அவர்களால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடிவதில்லை. கடவுளைத் தேடுவதில் மகாத்மாக்கள் எவ்வாறு ஈடுபட்டுள்ளார்கள் என்று பாருங்கள். சிறியதொரு கருத்து வேறுபாட்டினால், அவர்களுக்குப் பேறுகள் கிடைப்பதில்லை. ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மா எனத் தவறாக நினைப்பதன் மூலம் அல்லது கடவுள் சர்வவியாபி என நினைப்பதன் மூலம் அவர்கள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பேறுகளும் கிடைப்பதில்லை. விஞ்ஞானிகளும் தமது ஆராய்;ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். தாம் இன்னும் சிறிதளவு முன்னேற வேண்டும், இன்னும் சிறிதளவு செல்ல வேண்டும், தாம் சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் சென்று, அங்கு ஓர் உலகை உருவாக்க வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். சமயநூல்களின் பண்டிதர்கள், சமயநூல்களின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் வலையில் அகப்பட்டுத் திணறுகிறார்கள். சமயநூல்களின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் இலக்கு அவர்களுக்கு உள்ளது. ஆனால் அவற்றின் அர்த்தம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அரசியல் தலைவர்கள் தமது பதவி ஆசனங்களின் பின்னால் ஓடித் தங்களையே மறந்திருப்பதைப் பாருங்கள். உலகிலுள்ள அஞ்ஞானி ஆத்மாக்கள், அழிகின்ற பேறுகளின் சிறிதளவு தரிசனத்தின் ஆதாரத்தைத் தமது உண்மையான ஆதாரமாகக் கருதுகிறார்கள் என்பதைப் பாருங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? அவர்கள் அவை அனைத்திலும் தங்களையே தொலைத்துள்ளார்கள். ஆனால் நீங்களோ அனைத்தையும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் கற்பனையை முடித்துவிட்டீர்கள். ஆகவே, நீங்கள் பேறுகளின் சொரூபங்கள் ஆகியுள்ளீர்கள். எனவே, நீங்களே சதா பேறுகளின் சொரூபங்களாக இருக்கும் மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள்.

பாப்தாதா குறிப்பாக இரட்டை வெளிநாட்டவர்களைப் பாராட்டுகிறார். ஏனெனில், உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரிலும், மேன்மையான ஆத்மாக்களான உங்களின் இனங்கண்டு கொள்ளும் கண் சக்திவாய்ந்தது. அதனால் நீங்கள் அவரை இனங்கண்டு, அவரை அடைந்துள்ளீர்கள். எனவே, இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளின் இனங்காணும் கண்ணைப் பார்க்கையில், பாப்தாதா அவர்களின் புகழைப் பாடுகிறார்: ஆஹா குழந்தைகளே! ஆஹா! ஏனெனில், தொலை தேசங்களில் வசித்தாலும், வெவ்வேறு மதங்களையும் வெவ்வேறு கலாச்சாரம், சம்பிரதாயங்களைக் கொண்டிருந்தாலும், நீங்கள் வெகு தொலைவில் இருந்தாலும், உங்களின் உண்மையான தந்தையை நெருக்கமாக இனங்கண்டுள்ளீர்கள். நீங்கள் இப்போது நெருங்கிய உறவுமுறைக்குள் வந்துள்ளீர்கள். இப்போது பிராமண வாழ்க்கையின் நடைமுறை, சம்பிரதாயங்களை உங்களின் சொந்த நடைமுறை, சம்பிரதாயங்களாகப் புரிந்து, அவற்றை உங்களின் வாழ்க்கைகளில் இலகுவாக ஏற்றுக் கொண்டுள்ளீர்கள். இதுவே குறிப்பாக அன்பான, அதிர்ஷ்டமான குழந்தைகள் எனப்படுகிறது. குழந்தைகளிடம் விசேடமான சந்தோஷம் இருப்பதைப் போன்று, பாப்தாதாவிடமும் விசேடமான சந்தோஷம் உள்ளது. பிராமணக் குடும்பத்தின் ஆத்மாக்கள் உலகின் வெவ்வேறு மூலைகளுக்குச் சென்றுள்ளார்கள். ஆனால் பிரிந்து சென்று, ஒவ்வொரு மூலைக்கும் சென்ற மேன்மையான ஆத்மாக்கள் மீண்டும் தமது குடும்பத்திற்குள் வந்துள்ளார்கள். தந்தை உங்களைத் தேடினார். நீங்கள் அவரை இனங்கண்டுள்ளீர்கள். இவ்வாறே நீங்கள் உங்களின் பேற்றுக்கான உரிமையைக் கோரினீர்கள். அச்சா.

அழியாத பேற்றின் சொரூபங்களான குழந்தைகளுக்கும், சகல உறவுமுறைகளின் அனுபவத்தை எப்போதும் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும், எப்போதும் அழியாத செல்வத்தைக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும், சதா தந்தையைப் போன்று மேன்மையான சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பதுடன் சுயத்திற்காக எப்போதும் மேன்மையான உணர்வுகளைக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும், சகல பேறுகளின் பொக்கிஷக் களஞ்சியங்களுக்கும் சகல பேறுகளின் மகாதானிகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

அவ்யக்த பாப்தாதா திருமணமான தம்பதிகளைச் சந்திக்கிறார்:
உங்களின் இல்லறங்களில் வசிக்கும்போது, நீங்கள் சகல பந்தனங்களில் இருந்தும் விடுபட்டு, தந்தைமீது அன்புள்ளவர்களாக இருக்கிறீர்கள், அல்லவா? நீங்கள் அகப்பட்டுக் கொள்ளவில்லை, அல்லவா? நீங்கள் கூண்டுப் பறவைகள் இல்லையல்லவா? நீங்கள் பறக்கும் பறவைகள், அப்படித்தானே? சிறிதளவு பந்தனமும் உங்களைச் சிறைப்பிடித்துவிடும். நீங்கள் பந்தனத்தில் இருந்து விடுபட்டிருக்கும்போது, சதா பறந்து கொண்டே இருப்பீர்கள். எனவே, உங்களுக்கு எந்த வகையான பந்தனமும் கிடையாது: சரீரங்களின், உறவுகளின், இல்லறத்தின் அல்லது உடமைகளின் பந்தனங்கள் கிடையாது. எந்தவொரு பந்தனமும் இல்லாதிருப்பது, பற்றற்றவராகவும் அன்பானவராகவும் இருத்தல் எனப்படுகிறது. சுதந்திரமாக இருப்பவர்கள் எப்போதும் பறக்கும் ஸ்திதியில் இருப்பார்கள். ஆனால், தங்கியிருப்பவர்கள் சிறிதளவு பறப்பார்கள். பின்னர் அவர்களின் பந்தனம் அவர்களைக் கீழே இழுத்துவிடும். எனவே, அவர்கள் சிலவேளைகளில் கீழேயும் சிலவேளைகளில் மேலேயும் என்றிருப்பார்கள். அவர்களின் நேரம் இவ்வாறே கழியும். எப்போதும் நிலையான, ஸ்திரமான பறக்கும் ஸ்திதியைக் கொண்டிருப்பதற்கும், சிலவேளைகளில் கீழேயும் சிலவேளைகளில் மேலேயும் இருப்பதற்கும் இடையில் பகலுக்கும் இரவிற்கும் இடையிலுள்ள வேறுபாடு உள்ளது. உங்களிடம் என்ன ஸ்திதி உள்ளது? சதா பந்தனத்தில் இருந்து விடுபட்ட நிலை, சதா சுதந்திரமான பறவையா? எப்போதும் தந்தையுடன் இருப்பவரா? நீங்கள் எந்த வகையான கவர்ச்சியாலும் கவரப்படக்கூடாது. இது ஓர் அழகான வாழ்க்கை. தந்தையிடம் அன்பாக இருப்பவர்கள், சதா அழகானதொரு வாழ்க்கை வாழ்வார்கள். அது முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையாக இருக்காது. இன்று, இது நிகழ்ந்தது. நேற்று, அது நிகழ்ந்தது. இல்லை. எவ்வாறாயினும், நீங்கள் எப்போதும் தந்தையுடன் இருப்பவர்கள். எப்போதும் நிலையான, ஸ்திரமான ஸ்திதியில் இருப்பவர்கள். இதுவே களிப்பான வாழ்க்கை ஆகும். களிப்பு இல்லாவிடின், நிச்சயமாகக் குழப்பம் ஏற்படும். இன்று, இந்தப் பிரச்சனை இருந்தது. நேற்று, அந்தப் பிரச்சனை இருந்தது. துன்ப தேசத்தின் இந்த விடயங்கள் அனைத்தும் நிச்சயமாகத் துன்ப தேசத்திலேயே தோன்றும். ஆனால் நீங்கள் சங்கமயுக பிராமணர்கள். எனவே, துன்பங்கள் அனைத்தும் கீழேயே விடப்பட வேண்டும். நீங்கள் துன்ப உலகில் இருந்து அப்பால் வந்துவிட்டீர்கள். எனவே, உங்களால் துன்பத்தைப் பார்க்க முடிந்தாலும், அது உங்களைத் தொடாது. நீங்கள் கலியுகத்தை விட்டு வந்துள்ளீர்கள். நீங்கள் கரையை விட்டு வந்துவிட்டீர்கள். இப்போது சங்கமயுகத்தை வந்தடைந்துள்ளீர்கள். சங்கமயுகம் எப்போதும் அதியுயர்;ந்ததாகக் காட்டப்படுகிறது. சங்கமயுக ஆத்மாக்கள் எப்போதும் அதியுயர்ந்தவர்கள். அவர்கள் கீழே இருப்பதில்லை. தந்தை உங்களைப் பறக்கச்செய்வதற்கு வந்திருப்பதனால், நீங்கள் ஏன் பறக்கும் ஸ்திதியில் இருந்து கீழே வருகிறீர்கள்? கீழே வருவதெனில், சிறைப்படுதல் என்று அர்த்தம். இப்போது உங்களுக்கு இறக்கைகள் கிடைத்திருப்பதனால், தொடர்ந்து பறந்து கொண்டே இருங்கள். ஒருபோதும் கீழே வராதீர்கள். அச்சா.

(ஆதர்)அரைக்குமார்களுடன் பேசுகிறார்:
நீங்கள் அனைவரும் ஒரேயொருவரின் அன்பிலே திளைத்திருப்பவர்கள், அல்லவா? ஒரேயொரு தந்தையும் நாங்களும். மூன்றாவது நபர் கிடையாது. இதுவே அன்பிலே திளைத்திருத்தல் எனப்படுகிறது. நானும் எனது பாபாவும். இதைவிட, உங்களிடம் வேறு ஏதாவது ‘எனது’ என்பது உள்ளதா? எனது மாமா, எனது பேரன்... இவ்வாறு இல்லையல்லவா? ‘எனது’ என்பதில் பற்று உள்ளது. ‘எனது’ என்ற உணர்வை முடிப்பதெனில், பற்றை முடித்தல் என்று அர்த்தம். எனவே, உங்களின் பற்று அனைத்தும் தந்தைக்கே. அது மாறியுள்ளது. அது தூய பற்றாக ஆகியுள்ளது. தந்தை எப்போதும் தூய்மையானவர். எனவே, உங்களின் பற்றும் அன்பாக மாறியுள்ளது. என்னுடையவர் ஒரேயொரு பாபா மட்டுமே. இந்த ஒரேயொருவரில், ஏனைய அனைத்தும் முடிந்து போகின்றன. ஒரேயொருவரின் நினைவு இலகுவானது ஆகுகிறது. ஆகவே, நீங்கள் சதா இலகு யோகிகள் ஆவீர்கள். நான் எனது பாபாவுடன் உள்ள மேன்மையானதோர் ஆத்மா. அவ்வளவே! உங்களை மேன்மையான ஆத்மாவாகக் கருதுவதன் மூலம், நீங்கள் இயல்பாகவே மேன்மையான செயல்களைச் செய்வீர்கள். மாயையால் மேன்மையான ஆத்மாவின் முன்னால் வரமுடியாது.

தாய்மார்களுடன் பேசுகிறார்:
தாய்மார்களான நீங்கள் சதா தந்தையுடன் சந்தோஷ ஊஞ்சலில் ஆடுகிறீர்கள், அல்லவா? கோப,கோபியர்கள் சதா சந்தோஷ நடனம் ஆடுவார்கள். அல்லது ஊஞ்சல்களில் ஆடுவார்கள். எப்போதும் தந்தையுடன் இருப்பவர்கள், சந்தோஷ நடனம் ஆடுவார்கள். தந்தை உங்களுடன் இருக்கும்போது, சகல சக்திகளும் உங்களுடன் இருக்கும். தந்தையின் சகவாசம் உங்களைச் சக்திசாலிகள் ஆக்குகிறது. தந்தையின் சகவாத்தில் இருப்பவர்கள், எப்போதும் பற்றில் இருந்து விடுபட்டிருப்பார்கள். எவரின் மீதும் வைத்த பற்றினால் அவர்கள் கஷ்டப்படுவதில்லை. எனவே, நீங்கள் பற்றில் இருந்து விடுபட்டுள்ளீர்களா? என்ன வகையான சூழ்நிலைகள் வந்தாலும், நீங்கள் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பற்றில் இருந்து விடுபட்டுள்ளீர்கள். நீங்கள் பற்றில் இருந்து விடுபட்டிருக்கும் அளவிற்கு, உங்களின் நினைவிலும் சேவையிலும் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள்.

மதுவனத்திற்கு வந்துள்ள சேவையாளர்களுடன் பேசுகிறார்:
உங்களின் சேவைக்கணக்கில் நீங்கள் சேமித்துள்ளீர்கள், அல்லவா? இப்போதும், மதுவனச் சூழலில், உங்களின் ஸ்திதியைச் சக்திவாய்ந்தது ஆக்குவதற்கான வாய்ப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அத்துடன் எதிர்காலத்திற்காகவும் நீங்கள் சேமித்துள்ளீர்கள். எனவே, நீங்கள் இரட்டைப் பேறுகளைப் பெற்றுள்ளீர்கள். யக்ஞத்திற்குச் சேவை செய்வதன் மூலம், அதாவது, மேன்மையான ஸ்திதியில் இருந்து மேன்மையான சேவை செய்வதன் மூலம், நீங்கள் பலமில்லியன் மடங்கு பலனைச் சேமிக்கிறீர்கள். நீங்கள் என்ன சேவையைச் செய்தாலும், அனைத்திற்கும் முதலில் நீங்கள் சக்திவாய்ந்த ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கிறீர்களா என்றும் ஒரு சேவையாளராக, சாதாரண சேவையாளர் அன்றி, ஓர் ஆன்மீகச் சேவையாளராக சேவையைச் செய்கிறீர்களா என்றும் சோதித்துப் பாருங்கள். ஓர் ஆன்மீகச் சேவையாளரில் ஆன்மீக போதையும் ஆன்மீகப் பிரகாசமும் எப்போதும் வெளிப்பட்ட வண்ணம் இருக்க வேண்டும். சப்பாத்திகளை உருட்டும்போதும், தொடர்ந்து சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள். நீங்கள் உங்களின் பௌதீகமான, உலகப் பணிகளைச் செய்யக்கூடும். ஆனால் ஒரே வேளையில், பௌதீகமான சேவையும் சூட்சுமமான சேவையும் தொடர்ந்து இடம்பெற வேண்டும். உங்களின் கைகளால் பௌதீகப் பணியைச் செய்யுங்கள். உங்களின் மனதால் சூட்சும சேவையைச் செய்யுங்கள். அப்போது அது இரட்டைச் சேவை ஆகும். ஓரிடத்தில் இருந்தவண்ணம், உங்களின் கைகளால் வேலை செய்யும்போதும், உங்களால் நினைவின் சக்தியால் அதிகளவு சேவை செய்ய முடியும். எவ்வாறாயினும், மதுவனம் ஒரு கலங்கரைவிளக்கம். வெளிச்சவீடானது ஓரிடத்திலேயே இருக்கிறது. ஆனால் அது சூழவுள்ள பகுதிகள் எங்கும் சேவை செய்கிறது. இந்த முறையில், சேவையாளர்களால் தமக்கும் மற்றவர்களுக்கும் அதிகளவு மேன்மையான வெகுமதியை உருவாக்க முடியும். அச்சா. ஓம் சாந்தி.

இன்று, பாப்தாதா இரவு முழுவதும் இருந்து குழந்தைகளுடன் ஒரு சந்திப்பைக் கொண்டாடினார். காலை 7.00 மணியளவில் குழந்தைகளுக்கு அன்பையும் நினைவுகளையும் வழங்கி, அவர்களிடம் பிரியாவிடை பெற்றார். பாப்தாதா அதிகாலை வகுப்பை நடத்தினார்.

தினமும் காலையில் பாப்தாதாவின் மேன்மையான வாசகங்களைச் செவிமடுப்பதனால், நீங்கள் மகாத்மாக்கள் ஆகியுள்ளீர்கள். எனவே, மனதின் சங்கீதத்தால், மேன்மையான வாசகங்களைச் செவிமடுப்பதனால் நீங்கள் எவ்வாறு மகான்கள் ஆகினீர்கள் என்ற இன்றைய நாளுக்கான சாராம்சத்தை நாள் முழுவதும் செவிமடுங்கள். நீங்கள் எப்போதும் அனைத்திலும் மகத்தான பணியைச் செய்வதற்குக் கருவிகள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் உங்களின் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் தொடர்புகளாலும் சகல ஆத்மாக்களுக்கும் தானம் செய்யும் மகாதானி ஆத்மாக்கள் ஆவீர்கள். அத்துடன் நீங்கள் எப்போதும் மகத்தான யுகத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமையுள்ள ஆத்மாக்கள் ஆவீர்கள்.

இந்த மேன்மையான விழிப்புணர்வை எப்போதும் பேணும் மேன்மையான ஆத்மாக்களுக்கும், விசேடமான அதியன்பிற்குரிய நீண்ட காலம் பிரிந்திருந்து இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் காலை வணக்கங்களும். எதிர்காலத்தில் சக்கரவர்த்திகள் ஆகுபவர்களுக்கும் தற்சமயம் சக்கரவர்த்திகளாக இருப்பவர்களுக்கும் நமஸ்காரங்கள். அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் தூய, சக்திவாய்ந்த எண்ணங்களின் சக்தியால் வீணான அதிர்வலைகள் அனைத்தையும் முடிக்கும் உண்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.

எண்ணங்களால் உலகை உருவாக்க முடியும் எனக் கூறப்படுகிறது. உங்களிடம் பலவீனமான அல்லது வீணான எண்ணங்கள் ஏற்படும்போது, வீணான சூழலின் உலகம் உருவாக்கப்படுகிறது. உண்மையான சேவையாளர் என்றால் தனது தூய, சக்திவாய்ந்த எண்ணங்களால் பழைய அதிர்வலைகளை முடிப்பவர் என்று அர்த்தம். விஞ்ஞானம் ஆயுதங்களால் ஆயுதங்களை அழிப்பதைப் போன்று, ஒரு விமானத்தால் இன்னொரு விமானத்தை அழிப்பதைப் போன்று, உங்களின் தூய, சக்திவாய்ந்த எண்ணங்களின் அதிர்வலைகள் எந்தவொரு வீணான சூழலையும் முடித்துவிடும். இப்போது, இத்தகைய சேவையைச் செய்யுங்கள்.

சுலோகம்:
தடைகளின் சூட்சுமமான, தங்க இழைகளில் இருந்து விடுபட்டு, முக்தி வருடத்தைக் கொண்டாடுங்கள்.
 


விசேட அறிக்கை:
இன்று, மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. அனைவரும் மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிவரை சர்வதேச யோகம் செய்வதற்கு ஒன்றுகூடுங்கள். ஒன்றிணைந்த ரூபத்தின் விழிப்புணர்வில் இருப்பதன் மூலம், உங்களின் சூட்சுமமான மனோபாவத்தால் சக்திவாய்ந்ததொரு சூழலை உருவாக்குங்கள்.