06.09.19 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையைப் (பிரம்மா) போன்று கடவுளின் உதவியாளர்கள் ஆகவேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதற்காகச் சங்கமயுகத்தில் வருகின்றார்.
கேள்வி:
அதி மங்களகரமான இச்சங்கமயுகம் எவ்வாறு அதி அழகானதும், நன்மை பயக்கின்ற யுகமும் ஆகும்?
பதில்:
இந்நேரத்தில் மாத்திரமே குழந்தைகளாகிய நீங்கள், அதாவது ஆண்கள் பெண்கள் ஆகிய இருபாலருமே அதி மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். இச்சங்கமயுகமே கலியுகத்தின் இறுதிக்கும், சத்தியயுகத்தின் ஆரம்பத்திற்கும் இடையிலுள்ள காலப்பகுதியாகும். இந்நேரத்திலேயே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்காக இறை பல்கலைக்கழகத்தைத் திறந்து வைக்கின்றார். இங்கேயே நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகின்றீர்கள். கல்பம் முழுவதிலும் இத்தகைய பல்கலைக்கழகம் வேறு எக்காலத்திலும் இருப்பதில்லை. இந்நேரத்தில் மாத்திரமே அனைவரும் ஜீவன்முக்தியைப் பெறுகின்றனர்.ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இங்கு அமர்ந்திருக்கும்போது, தந்தையே தூய்மையாக்குபவர் என்பதால் முதலில் அவரையே நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். அவரை நினைவு செய்வதன் மூலம் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் ஆகுவதே உங்கள் இலக்காகும். சதோ நிலையை அடைவது உங்கள் இலக்கல்ல. நீங்கள் சதோபிரதான் ஆகவேண்டும் என்பதாலேயே, நீங்கள் நிச்சயமாகத் தந்தையையும் நினைவு செய்ய வேண்டும். அத்துடன், உங்கள் இனிய வீட்டையும் நீங்கள் நினைவு செய்கிறீர்கள், ஏனெனில், நீங்கள் அங்கு செல்ல வேண்டும். அத்துடன், உங்களுக்கு அங்கு செல்வச் செழிப்பும் தேவை என்பதால், சுவர்க்க பூமியையும் நீங்கள் நினைவு செய்ய வேண்டும். ஏனெனில் அப் பேற்றை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தந்தையின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து கற்பித்தல்களைப் பெற்று, உங்கள் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாகச் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். ஏனைய உயிர்வாழும் ஆத்மாக்கள் அனைவரும் சாந்திதாமத்திற்குச் செல்வார்கள். அனைவரும் வீடு திரும்ப வேண்டும். இப்பொழுது இது இராவண இராச்சியம் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனுடன் ஒப்பிடப்பட்டே, சத்தியயுகத்திற்கு இராம இராச்சியம் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், இரு கலைகள் குறைவடைகின்றன. ஒன்று சூரிய வம்சம் என்றும், மற்றையது சந்திர வம்சம் என்றும் அழைக்கப்படுகின்றது. கிறிஸ்தவர்களுக்கு ஒரேயொரு வம்சம் இருப்பது போன்று, இதுவும் ஒரேயொரு வம்சமாகும். எவ்வாறாயினும், அதில் சூரிய வம்சமும், சந்திர வம்சமும் உள்ளன. இவ்விடயங்கள் எச்சமய நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இதுவே ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. சுவர்க்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், ஞானத்திற்கான தேவை இருக்காது. குழந்தைகளாகிய உங்களுக்கு அதி மங்களகரமான சங்கமயுகத்தில் மாத்திரமே இந்த ஞானம் கற்பிக்கப்படுகின்றது. உங்களது நிலையங்களிலும், நூதனசாலைகளிலும் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட வேண்டும்: சகோதர சகோதரிகளே, இந்த அதி மங்களகரமான சங்கமயுகம் ஒரு தடவை மாத்திரமே வரும். “அதிமங்களமான சங்கமயுகம்” என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எனவே, நீங்கள் இவ்வாறும் எழுத வேண்டும்: இது கலியுகத்தின் இறுதியும், சத்தியயுகத்தின் ஆரம்பமும் சந்திக்கின்ற சங்கமயுகமாகும். எனவே, சங்கமயுகமே மிக அழகான, நன்மைபயக்கும் யுகமாகும். தந்தை கூறுகின்றார்: நான் அதி மங்களகரமான சங்கமயுகத்தில் மாத்திரமே வருகின்றேன். எனவே, சங்கமயுகத்தின் அர்த்தமும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. விலைமாதர் இல்லத்தின் இறுதியும், சிவாலயத்தின் ஆரம்பமுமே அதி மங்களகரமான சங்கமயுகம் எனப்படுகின்றது. இங்கு, அனைவரும் விகாரம் நிறைந்தவர்களாக உள்ளனர். அங்கோ அனைவரும் விகாரமற்றவர்கள். எனவே, நிச்சயமாக விகாரமற்றவர்களே அதி மேலானவர்கள் எனப்படுகின்றனர். ஆண்கள், பெண்கள் இருபாலருமே அதி மேலானவர்கள் ஆகுகின்றனர். எனவே, அவர்களது பெயர் அதி மேன்மையான மனிதர்கள் (புருஷோத்தமர்கள்) என்பதாகும். இது சங்கமயுகம் என்பதைக் குழந்தைகளாகிய உங்களையும், தந்தையையும் தவிர வேறு எவருமே அறியமாட்டார்கள். அதி மங்களகரமான சங்கமயுகம் எப்போது என்பது எவரது புத்தியிலும் புகுவதில்லை. தந்தை இப்பொழுது வந்துந்துள்ளார். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவர் அதிகளவில் புகழப்படுகின்றார். அவரே பேரானந்தக் கடலான ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும் ஆவார். அவர் ஞானத்தின் மூலமாக அனைவருக்கும் சற்கதியை அருள்கின்றார். பக்தி மூலமாக சற்கதி பெறப்படுகின்றது என நீங்கள் ஒருபோதும் கூறமாட்டீர்கள். சத்தியயுகத்தில் மாத்திரமே சற்கதி உள்ளது. அது ஞானத்தின் மூலமாகவே இடம்பெறுகின்றது. எனவே, அவர் நிச்சயமாக கலியுக இறுதியினதும், சத்தியயுக ஆரம்பத்தினதும் சங்கமத்திலேயே வரவேண்டும். தந்தை அனைத்தையும் மிகத் தெளிவுபடுத்தி விளங்கப் படுத்துகின்றார். புதியவர்கள் வருகின்றனர், அவர்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வந்திருக்கின்றார்கள், தொடர்ந்தும் வருவார்கள். இவ்வாறாகவே இராச்சியம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். நீங்களே கடவுளின் உண்மையான உதவியாளர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர் ஒரு நபருக்கு மாத்திரம் கற்பிப்பதில்லை. ஒருவர் கற்கின்றார், பின்னர் அவரிடம் நீங்கள் கற்கின்றீர்கள், அதன் பின்னர் மற்றவர்களுக்குக் கற்பிக்கின்றீர்கள். இதனாலேயே இப்பெரிய பல்கலைக்கழகம் இங்கு திறக்கப்பட வேண்டும். முழு உலகிலும் அத்தகையதோர் பல்கலைக்கழகம் இருக்கவும் முடியாது, இறை பல்கலைக்கழகம் என ஒன்று இருக்கமுடியும் என்பதை உலக மக்கள் எவரும் அறிந்திருக்கவும் மாட்டார்கள். கீதையின் கடவுளாகிய சிவன் வந்து, இப்பல்கலைக்கழகத்தைத் திறந்து வைக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் உங்களைப் புதிய உலகின் அதிபதிகளாக, அதாவது தேவர்களாக ஆக்குகின்றார். தமோபிரதானாகியுள்ள ஆத்மாக்கள் இந்நேரத்தில் மீண்டும் ஒரு தடவை சதோபிரதான் ஆகவேண்டும். இந்நேரத்தில், அனைவரும் தமோபிரதானாக உள்ளனர். சில குமார்களும் குமாரிகளும், சந்நியாசிகளும் தூய்மையாக இருந்தாலும், தற்காலத்தில் அந்தளவு தூய்மை கிடையாது. முதலில் கீழிறங்கி வருகின்ற ஆத்மாக்கள் தூய்மையாக உள்ளனர். பின்னர், அவர்கள் தூய்மையற்றவர்களாகின்றனர். அனைவரும் சதோபிரதான், சதோ, ரஜோ, தமோ நிலைகளைக் கடந்து செல்லவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இறுதியில், அனைவரும் தமோபிரதானாகின்றனர். தந்தை இப்பொழுது இங்கிருந்து, தனிப்பட்ட முறையில் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: இவ்விருட்சம் முழுமையாக உக்கிய நிலையாகிய தமோபிரதான் நிலையை அடைந்துவிட்டது. அது பழையதாகிவிட்டதால், நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். இது பல்வேறு சமயங்களையும் கொண்ட விருட்சமாகும். இதனாலேயே இது எல்லையற்ற பல்வகை நிகழ்ச்சி எனப்படுகின்றது. விருட்சம் மிகவும் பெரியதும், எல்லையற்றதும் ஆகும். நீங்கள் விதைகளை விதைக்கும்போது தோன்றுபவை உயிரற்ற மரங்களாகும். இது பல்வேறு சமயங்களினது பல்வகைப் படமாகும். அனைவரும் மனிதர்களே, எனினும் அவர்களுக்கிடையில் பற்பல வகையினர் உள்ளனர். இதனாலேயே அவர்கள் எல்லையற்ற பல்வகை நிகழ்வைப் பற்றிப் பேசுகின்றனர். எவ்வாறு சகல சமயங்களும் வரிசைக்கிரமமாகக் கீழிறங்குகின்றன என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். அனைவரும் திரும்பிச் சென்று, பின்னர் கீழிறங்க வேண்டும். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மா அதாவது பரமாத்மா அத்தகையதோர் பெரிய பாகத்தின் பதிவை தனக்குள் கொண்டிருப்பது ஓர் அற்புதமாகும். பரமனுடன் ஆத்மாவும் சேர்ந்து, கடவுள் (பரமனான ஆத்மா) என்று அழைக்கப்படுகின்றார். நீங்கள் அவரை பாபா என அழைக்கிறீர்கள். ஏனெனில் அவரே சகல ஆத்மாக்களதும் பரமதந்தையாவார். ஆத்மாக்களே தமது முழுப் பாகத்தையும் நடிக்கின்றார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மனிதர்கள் இதனை அறியமாட்டார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: ஆத்மா செயல்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்டவர். உண்மையில், அவ்வார்த்தைகள் தவறானவை. நீங்கள் பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும்: ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுகிறார்கள். ஓர் ஆத்மா தான் செய்த நல்ல, தீய செயல்களுக்கேற்ற பலனைப் பெறுகின்றார். ஆத்மாக்கள் தூய்மையற்ற சம்ஸ்காரங்களினால் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். இதனாலேயே அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று அவர்களின் புகழைப் பாடுகின்றனர். நீங்கள் இப்பொழுது உங்களது 84 பிறவிகளையும் பற்றி அறிவீர்கள். வேறு எந்த மனிதர்களும் இதனை அறியமாட்டார்கள். நீங்கள் அவர்களிடம் சென்று, அவர்களது 84 பிறவிகளையும் பற்றிக் கூறி, அதற்கான அத்தாட்சியை காட்டும் போது, அவர்கள் வினவுகிறார்கள்: சமய நூல்கள் அனைத்தும் பொய்யா? மனிதர்கள் 8.4 மில்லியன் பிறவிகள் எடுப்பதாக அவர்கள் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். உண்மையில், கீதையே சகல சமய நூல்களினதும் இரத்தினம் என்பதைத் தந்தை இங்கிருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை 5000 வருடங்களுக்கு முன்னர் எங்களுக்குக் கற்பித்த இராஜயோகத்தையே இப்பொழுது கற்பிக்கின்றார். நாங்கள் தூய்மையாக இருந்தோம் என்பதையும், தூய இல்லற தர்மத்திற்குரியவர்களாக இருந்தோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அதை இப்பொழுது ஒரு தர்மம் என அழைக்க முடியாது. மக்கள் அதர்மவான்கள் ஆகிவிட்டனர். அதாவது விகாரமானவர்கள் ஆகிவிட்டனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்நாடகத்தைப் புரிந்துகொள்கின்றீர்கள். இது எல்லையற்ற நாடகமாகும், இதுவே 5000 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் தொடர்ந்தும் நிகழ்கின்றது. நூறாயிரக்கணக்கான வருடங்கள் கொண்ட எதனையும் எவராலும் புரிந்துகொள்ள முடியாது. இது, நேற்று நீங்கள் சிவாலயத்தில் இருந்த போது இடம்பெற்ற நேற்றைய விடயமே. ஆனால் இன்று நீங்கள் விலைமாதர் இல்லத்தில் இருக்கிறீர்கள். நாளை மறுபடியும் சிவாலயத்தில் இருப்பீர்கள். சத்தியயுகமானது சிவாலயம் அல்லது சுவர்க்கம் எனவும், திரேதாயுகம் சுவர்க்கம் சார்ந்தது, (அரைவாசி) எனவும் அழைக்கப்படுகின்றது. நீங்கள் அங்கு பல வருடங்கள் இருப்பீர்கள். நீங்கள் மறுபிறவி எடுக்க வேண்டும். இது இராவண இராச்சியம் எனப்படுகின்றது. நீங்கள் அரைக்கல்பத்திற்குத் தூய்மையற்றவர்கள் ஆகினீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: வீட்டில் வாழும்போது, ஒரு தாமரையைப் போன்று தூய்மையாக இருங்கள். குமார்களும், குமாரிகளும் எப்படியோ தூய்மையானவர்களே. அவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றது: நீங்கள் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. தவறினால், நீங்கள் மீண்டும் தூய்மையாகுவதற்காக முயற்சியை செய்ய வேண்டியிருக்கும். கடவுள் பேசுகின்றார்: தூய்மையாகுங்கள்! நீங்கள் எல்லையற்ற தந்தை கூறுவதைச் செவிமடுக்க வேண்டும். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வசிக்கும்போது ஒரு தாமரை மலர் போன்று தூய்மையாக வாழ முடியும். எனவே, தந்தை உங்களை 21 பிறவிகளுக்குத் தூய்மையற்றவராகாமல் பாதுகாக்கும் போது, நீங்கள் ஏன் உங்கள் குழந்தைகளில் தூய்மையற்றவர்களாகும் பழக்கத்தைப் பதியச் செய்கின்றீர்கள்? நீங்கள் உங்கள் குடும்பத்தினதும், சமூகத்தினதும் அபிப்பிராயங்களைத் துறந்து விடவேண்டும். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். அனைத்துச் சமயங்களிலும் மணமகாத பல ஆண்கள் இருக்கின்றார்கள் எனினும், அவர்கள் இராவண இராச்சியத்திலேயே வசிப்பதால், பாதுகாப்பாக வாழ்வதில் சற்றுக் கடினம் உள்ளது. வெளிநாடுகளிலும்கூட பலர் திருமணம் செய்யாமல் இருந்து, பின்னர், தங்கள் முதுமைக்காலத்தில் சகவாசத்திற்காகத் திருமணம் செய்கின்றனர். அவர்கள் தவறான பார்வையினால் திருமணம் செய்வதில்லை. அத்தகைய பலர் உலகில் உள்ளனர். சகபாடியால் அவர் மிக நன்றாகப் பராமரிக்கப்படுவார். பின்னர் அவர் மரணிக்கும்போது குறிப்பிட்ட அளவை அந்நபருக்கு (சகபாடிக்கு) விட்டுச் செல்வார். ஒரு பகுதியை புண்ணியச் செயல்களுக்காகக் கொடுக்கின்றார். அவர்கள் செல்வதற்கு முன் ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கி விட்டு செல்கின்றார்கள். வெளிநாடுகளிலும் அவர்கள் பெரிய நம்பிக்கை நிதியங்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவை பின்னர் இங்கு உதவி புரியும். இங்கு (இந்தியாவில்) வெளிநாடுகளுக்கு உதவக்கூடிய நம்பிக்கை நிதியங்கள் கிடையாது. இங்கு மக்கள் ஏழ்மையில் இருக்கும் போது அவர்களால் எவ்வாறு உதவ முடியும்? அங்கு அவர்கள் பெருமளவு பணத்தைக் கொண்டிருக்கின்றார்கள். பாரதம் ஏழ்மையானது. பாரத மக்களின் நிலையைப் பாருங்கள்! பாரதம் முடி சூடப்பட்டிருந்தது. ஆனால், அது நேற்றைய விடயமாகும். 3000 வருடங்களுக்கு முன்னர் வைகுந்தம் இருந்தது என அவர்களே கூறுகின்றனர். தந்தையே அதனை உருவாக்குகின்றார். தூய்மையற்றதைத் தூய்மையாக்குவதற்காகத் தந்தை எவ்வாறு மேலிருந்து இங்கு கீழிறங்கி வருகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரே ஞானக்கடலும், தூய்மையாக்குபவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். அதாவது, அவரே அனைவரையும் தூய்மையாக்குபவர் ஆவார். அனைவரும் எனது (சிவபாபா) புகழைப் பாடுகின்றனர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நான் உங்களைத் தூய்மையாக்குவதற்காகவே இத் தூய்மையற்ற உலகிற்கு வருகின்றேன். நீங்கள் தூய்மையாகுவதால் முதலில் தூய உலகிற்குச் செல்கின்றீர்கள். நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள். பின்னர், இராவண இராச்சியத்திற்குள் வீழ்ந்துவிடுகின்றீர்கள். மக்கள் பரமதந்தை பரமாத்மாவை ஞானக்கடல் என்றும், அமைதிக்கடல் என்றும், தூய்மையாக்குபவர் என்றெல்லாம் பாடிய போதிலும், உங்களைத் தூய்மையாக்குவதற்காக அவர் எப்போது வருகின்றார் என்பது எவருக்கும் தெரியாது. தந்தை கூறுகின்றார்: நீங்கள் என்னைப் புகழ்கின்றீர்கள். நான் இப்பொழுது வந்து எனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். நான் 5000 வருடங்களுக்கு ஒரு தடவை இந்த அதி மங்களகரமான சங்கம யுகத்தில் வருகின்றேன். நான் எவ்வாறு வருகின்றேன் என்பதையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். படங்களும் உள்ளன. பிரம்மா சூட்சும உலகில் இல்லை. பிரம்மா இங்கேயே இருக்கின்றார், பிராமணர்களும் இங்கேயே இருக்கின்றார்கள். அவர் முப்பாட்டனார் என அழைக்கப்படுவதுடன், அவருடைய வம்சாவளி விருட்சமும் உள்ளது. மனித உலக வம்சாவளி விருட்சமானது பிரஜாபிதா பிரம்மாவுடனேயே ஆரம்பமாகின்றது. அவர் பிரஜாபிதா (மக்களின் தந்தை) என்பதால், நிச்சயமாக அவருடைய மக்களும் இருக்கவே வேண்டும். அவர்கள் பௌதீகப் படைப்பாக இருக்க முடியாது. எனவே நிச்சயமாக அவர்கள் தத்தெடுக்கப்பட்டிருக்கவே வேண்டும். அவரே முப்பாட்டனார் ஆவார். எனவே நிச்சயமாக அவர் அனைவரையும் தத்தெடுத்திருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். பின்னர் நீங்கள் தேவர்களாக வேண்டும். நீங்கள் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாகுவதும், பிராமணர்களிலிருந்து தேவர்களாகுவதும் ஒரு குட்டிக்கரணமடிப்பது போன்றதாகும். பல்ரூப வடிவமும் உள்ளது. அனைவரும் நிச்சயமாக அங்கிருந்து இங்கு வர வேண்டும். அனைவரும் கீழே வந்தபின் படைப்பவரும் வருகின்றார். அவர் படைப்பவராகவும், இயக்குனராகவும் இருப்பதுடன், நடிக்கவும் செய்கின்றார். தந்தை கூறுகின்றார்: ஓ, ஆத்மாக்களே, நீங்கள் என்னை அறிவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள். முதலில் நீங்கள் சத்திய யுகத்தில் ஒரு சரீரத்தைத் எடுத்து, அத்தகையதோர் சந்தோஷமான சிறந்த பாகத்தை நடித்தீர்கள். பின்னர் 84 பிறவிகளை எடுக்கும்போது, பெருமளவு துன்பத்திற்குள் வந்தீர்கள். ஒரு நாடகத்திற்கு படைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோர் உள்ளனர். இந்நாடகம் எல்லையற்றது, எவருமே இந்த எல்லையற்ற நாடகத்தைப் பற்றி அறியமாட்டார்கள். பக்திமார்க்கத்தில் அவர்கள் அத்தகைய விடயங்களைக் காண்பிக்கின்றார்கள். அவை மக்களின் புத்தியில் நிலைத்து நின்றுவிட்டன. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, அவையனைத்தும் பக்தி மார்க்கத்து சமய நூல்களாகும். பக்தி மார்க்கத்தில் பெருமளவு சம்பிரதாயங்கள் உள்ளன. ஒரு விதையிலிருந்து விருட்சத்தின் விரிவாக்கம் இடம்பெறுவது போன்று, அதாவது ஒரு சின்னஞ் சிறிய விதையிலிருந்து மிகப்பெரிய விருட்சம் உருவாகி பரந்துவிரிவது போன்று, பக்தியிலும் பெருமளவு விரிவாக்கம் உள்ளது. ஞானம் ஒரு விதையாகும், அதற்கு எவ்வித விரிவாக்கத்தின் அவசியமும் தேவையில்லை. தந்தை கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள். இதற்கு வேறு எவ்விதப் சத்தியபிரமாணங்களோ, கட்டுபாடுகளோ கிடையாது. அவையனைத்தும் முடிவுக்கு வருகின்றன. நீங்கள் ஒரு தடவை சற்கதியை பெற்றுவிட்டால், அதன் பின்னர் வேறு எதற்கான தேவையும் கிடையாது. நீங்கள் பெருமளவு பக்தி செய்திருப்பதால், அதற்கான பலனை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே நான் வந்திருக்கின்றேன். தேவர்கள் சிவாலயத்திலேயே வாழ்ந்தார்கள். இதனாலேயே மக்கள் ஆலயங்களுக்குச் சென்று, அவர்களின் புகழைப் பாடுகின்றனர். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நான் 5000 வருடங்களுக்கு முன்னரும் உங்களுக்கு விளங்கப்படுத்தினேன்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். சரீர உறவுமுறைகள் அனைத்தையும் துறந்து, உங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்யும் போது, உங்கள் பாவங்கள் இந்த யோக அக்கினியில் எரிந்துவிடும். தந்தை இப்பொழுது எதையெல்லாம் விளங்கப்படுத்துகிறாரோ, அதனை அவர் ஒவ்வொரு கல்பத்திலும் விளங்கப்படுத்தியுள்ளார். கீதையிலும்கூட சில நல்ல வார்த்தைகள் உள்ளன. மன்மனாபவ என்றால், என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள் என்பதாகும். சிவபாபா கூறுகின்றார்: நான் இங்கு வந்திருக்கிறேன். யாருடைய சரீரத்தில் நான் பிரவேசிக்கின்றேன் என்பதையும் உங்களுக்குக் கூறுகின்றேன். அனைத்து வேதங்களினதும், சமய நூல்களினதும் சாராம்சத்தையும் நான் பிரம்மாவினூடாக உங்களுக்குக் கூறுகின்றேன். மக்கள் இந்த உருவங்களைக் காட்டுகிறார்கள். எனினும், அவர்கள் அவற்றின் அர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை. சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை சிவபாபா எவ்வாறு பிரம்மாவின் சரீரத்தின் மூலமாக உங்களுக்குக் கூறுகின்றார் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். 84 பிறவிகளின் நாடகத்தின் இரகசியங்களையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியிலேயே நான் வருகின்றேன். பின்னர் அவர் முதலாம் இலக்க இளவரசராகி, அதன் பின்னர்; 84 பிறவிகளைச் சுற்றி வருகிறார். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையான பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இந்த இராவண இராச்சியத்தில் வாழும்போதும், தூய்மையற்ற குடும்பத்தின் குலக் கோட்பாடுகளையும், சமூக அபிப்பிராயங்;களையும் கைவிட்டு, எல்லையற்ற தந்தை கூறும் விடயங்களையே ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்துடன் வீட்டில் வாழும்போது, ஒரு தாமரை மலர் போன்று வாழுங்கள்.
2. இந்த எல்லையற்ற பல்வகை நிகழ்வை மிக நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இதில் ஆத்மாக்கள் தமது பாகத்தை நடிக்கிறார்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படுகின்றார்கள். ஆத்மாக்கள் நல்லதும், தீயதுமான செயல்களைச் செய்து அவற்றிற்கான பலனைப் பெறுகின்றார்கள். இதன் உட்கருத்தை புரிந்துகொண்டு மேன்மையான செயல்களைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்கள் ஆன்மிக அதிகாரத்தினால், அகங்காரமற்றவராகவிருந்து, உண்மையான ஞானத்தின் நடைமுறை வடிவத்தை காட்டுகின்ற ஓர் உண்மையான சேவையாளர் ஆகுவீர்களாக.ஒரு மரம் அதிகளவு பழங்கள் காய்க்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் போது, அம்மரம் பணிவடைய ஆரம்பிக்கும், அதாவது அது பணிவாக இருப்பதன் மூலம் சேவை செய்யும். அவ்வாறாகவே ஆன்மிக அதிகாரமுடைய குழந்தைகள், எந்தளவிற்கு தாம் அதிகாரத்தை கொண்டிருக்கிறார்களோ அந்தளவிற்கு அனைவருடனும் பணிவாகவும் அன்பாகவும் இருப்பார்கள். தற்காலிக அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் அகங்காரமுடையவர்கள், ஆனால் சத்தியத்தின் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் அந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் அகங்காரமற்றவர்களாக இருப்பார்கள். இதுவே உண்மையான ஞானத்தின் நடைமுறை வடிவங்கள் ஆகும். உண்மையான சேவையாளர்களுக்கு தமது மனோபாவத்தில் எவ்வளவு அதிகாரமிருந்தாலும், அந்தளவிற்கு அவர்களின் வார்த்தைகளில் அன்பும் பணிவும் இருக்கும்.
சுலோகம்:
துறவறத்தை கொண்டிருக்காது, உங்களால் பாக்கியத்தைப் பெற முடியாது.