09.05.19        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:
இனிய குழந்தைகளே, சிவபாபாவே அற்புதமான தந்தையும் ஆசிரியரும் சற்குருவும் ஆவார். அவர் தனக்கெனச் சொந்தமான ஒரு தந்தையைக் கொண்டிருப்பதில்லை. அவர் ஒருபொழுதும் எவரிடமும் எதையும் கற்பதில்லை. அவர் ஒரு குருவைக் கொண்டிருக்கத் தேவையில்லை. நீங்கள் அத்தகைய அற்புதத்துடன் அவரை நினைவு செய்ய வேண்டும்.

கேள்வி:
ஆத்மா இலகுவாகவே தூய்மையாகக்கூடிய அளவிற்கு, நினைவு செய்வதில் இருக்க வேண்டிய புதுமை என்ன?

8பதில்:
நீங்கள் நினைவில் அமர்ந்திருக்கும்பொழுது, தொடர்ந்தும் தந்தையிடமிருந்து கரண்ட்டைப் (சக்தியை) பெறுகிறீர்கள். நீங்கள் தந்தையைப் பார்க்கின்றீர்கள், தந்தை உங்களைப் பார்க்கின்றார். அத்தகைய நினைவே ஆத்மாவைத் தூய்மையாக்குகிறது. இந்த நினைவு மிக இலகுவானது, ஆனால் தாங்கள் சரீரங்கள் அல்ல, ஆத்மாக்களே என்பதைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் மறக்கின்றார்கள். ஆத்ம உணர்வுடைய குழந்தைகளால் மாத்திரமே நினைவில் நிலைத்திருக்க முடியும்.

ஓம் சாந்தி.
எங்கள் தந்தையே எல்லையற்ற தந்தை, அவர் தனக்கெனச் சொந்தமாக ஒரு தந்தையைக் கொண்டிருப்பதில்லை என்ற நம்பிக்கையை இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தந்தையைக் கொண்டிருக்காத எம்மனிதரும் உலகில் இல்லை. ஒவ்வொரு கருத்தும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும், உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுப்பவர் அதை ஒருபொழுதும் கற்காதவர் ஆவார். எவ்வாறாயினும், மனிதர்கள் நிச்சயமாக ஏதோ ஒரு விடயத்தைக் கற்கின்றார்கள். கிருஷ்ணரும் கற்றார். தந்தை வினவுகின்றார்: நான் எதைக் கற்பது? நான் உங்களுக்குக் கற்பிப்பதற்காக வந்துள்ளேன். நான் எவரிடமும் கற்றதில்லை. நான் எவரிடமிருந்தும் கற்பித்தல்களைப் பெற்றுக்கொண்டதில்லை. நான் குருமார்கள் எவரையும் ஏற்றுக்கொண்டதில்லை. நாடகத்திற்கேற்ப, நிச்சயமாகத் தந்தையினுடைய புகழே, அனைத்திலும் உயர்வானதாகும். கடவுளே அதிமேலானவர் என்பது நினைவுகூரப்படுகின்றது. அவரிலும் உயர்வானவராக யார் இருக்கமுடியும்! எந்தவொரு தந்தையோ, ஆசிரியரோ அல்லது குருவோ இல்லை. இந்த எல்லையற்ற தந்தை தந்தையையோ, ஆசிரியரையோ அல்லது குருவையோ கொண்டிருப்பதில்லை. அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். உங்களால் இதை மிக நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அத்தகையதொரு மனிதர் இருக்க முடியாது. அத்தகைய ஒரு தந்தையை, ஆசிரியரை, சற்குருவை மிகவும் அற்புதத்துடன் நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். மக்கள் கூறுகிறார்கள்: ஓ தந்தையாகிய கடவுளே! அவர் ஞானம் மிக்க ஆசிரியரும் பரமகுருவும் ஆவார். அவர் ஓரேயொருவரே ஆவார். அவரைப் போன்று இன்னுமொருவர் இல்லை. ஒரு மனித சரீரத்தினூடாகவே அவர் உங்களுக்குக் கற்பிக்க வேண்டும். உங்களுக்குக் கற்பிப்பதற்கு நிச்சயமாக அவருக்கு ஒரு வாய் தேவையாகும். குழந்தைகளாகிய நீங்கள் இதை மீண்டும் மீண்டும் நினைவுசெய்தால், உங்களுடைய படகுகள்; அக்கரைக்குச் செல்ல முடியும். நினைவினூடாக மாத்திரமே, உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படும். அவரைப் பரம ஆசிரியராக அறிந்துகொள்வதால், உங்களுடைய புத்திகளில் ஞானம் அனைத்தும் பிரவேசிக்கும். அவரே எங்களுக்கு யோகத்தைக் கற்பிக்கின்ற சற்குருவும் ஆவார். நீங்கள் ஒருவருடன் மாத்திரமே யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆத்மாக்கள் அனைவரும் ஒரே தந்தையைக் கொண்டிருக்கின்றார்கள். அவர் ஆத்மாக்கள் அனைவருக்கும் கூறுகின்றார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். ஆத்மாவே சரீரமாகிய, வாகனத்தை (மோட்டரை) கட்டுப்படுத்துகின்றார். நீங்கள் அதை ஒரு இரதம் அல்லது வேறு ஏதோவொன்று என அழைக்க முடியும்; ஆத்மாவே அனைத்தையும் கட்டுப்படுத்துகின்ற பிரதானமானவர் ஆவார். ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை ஒருவரே ஆவார். நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். நாங்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகளாகிய சகோதரர்கள் ஆவோம். பின்னர், பிரஜாபிதா பிரம்மாவின் சரீரத்தில் தந்தை பிரவேசிக்கும் பொழுது, நாங்கள் சகோதர, சகோதரிகள் ஆகவேண்டும். பிரஜாபிதா பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள் சகோதர சகோதரிகளாக இருப்பார்கள். ஒரு சகோதரர், ஒருபொழுதும் தனது சகோதரியைத் திருமணம் செய்ய முடியாது. எனவே, நீங்கள் அனைவரும் பிரஜாபிதா பிரம்ம குமாரர்களும் குமாரிகளும் ஆவீர்கள். உங்களைச் சகோதர, சகோதரிகளாகக் கருதுவதால், நீங்கள் இறை சமுதாயத்தின் அன்பான குழந்தைகள் ஆவீர்கள். நீங்களே கடவுளின் நேரடியான சமுதாயத்தினர் என்று நீங்கள் கூறுவீர்கள். பாபாவாகிய, கடவுளே அனைத்து விடயங்களையும் எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் எவரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொண்டதில்லை. அவர் எப்பொழுதும் சம்பூரணமானவர் ஆவார். அவருடைய கலைகள் ஒருபொழுதும் குறைவடைவதில்லை, ஏனைய அனைவருடைய கலைகளும் குறைவடைகின்றன. நாங்கள் சிவபாபாவைப் பெருமளவு புகழ்கின்றோம். “சிவபாபா” என்று கூறுவது மிக இலகுவானது. தூய்மையாக்குபவர் தந்தை மாத்திரமே ஆவார். “கடவுள்” என்று வெறுமனே கூறுவது சரியானதாக இல்லை. தந்தை வந்து தூய்மையற்றவர்கள் அனைவரையும் எவ்வாறு தூய்மையானவர்கள் ஆக்குகின்றார் என்பது இப்பொழுது உங்களுடைய இதயங்களைத் தொடுகின்றது. உங்களுடைய லௌகீகத் தந்தையும் பரலோகத் தந்தையும் உள்ளனர். பரலோகத் தந்தையை அனைவரும் நினைவுசெய்கின்றார்கள். அவர்கள் தூய்மையற்றிருப்பதாலேயே அவரை நினைவுசெய்கின்றார்கள். நீங்கள் ஒருமுறை தூய்மையானவர்கள் ஆகிவிட்டால், தூய்மையாக்குபவரைக் கூவியழைப்பதற்கான அவசியமில்லை. நாடகம் எவ்வாறு இருக்கின்றது எனப் பாருங்கள்! நீங்கள் தூய உலகின் அதிபதிகளாக விரும்புவதால், தூய்மையாக்குபவராகிய தந்தையை நினைவு செய்கின்றீர்கள். அவர்கள் சமயநூல்களில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஒரு யுத்தத்தைக் காண்பித்துள்ளார்கள், ஆனால், அது அவ்வாறில்லை. நாங்கள் தேவர்களோ அல்லது அசுரர்களோ அல்ல என்பதை நீங்கள் இப்போது புரிந்துகொள்கிறீர்கள். நாங்கள் இரண்டிற்கும் இடையில் இருக்கிறோம். இதனை அனைவரும் தொடர்ந்தும் உங்களுக்குள் செலுத்த முயற்சிக்கின்றார்கள். இது மிகவும் களிப்பூட்டும் நாடகமாகும். நீங்கள் ஒரு நாடகத்தில் களிப்பூட்டுவனவற்றையே காண்கின்றீர்கள். அவை அனைத்தும் எல்லைக்குட்பட்ட நாடகங்கள், ஆனால் இதுவோ எல்லையற்ற நாடகம் ஆகும். இது வேறு எவருக்கும் தெரியாது. தேவர்களும்கூட அதை அறிய முடியாது. நீங்கள் இப்பொழுது கலியுகத்தை விட்டு வெளியே வந்துள்ளீர்கள். அதை அறிந்தவர்கள் ஏனையோருக்கு விளங்கப்படுத்தவும் முடியும். ஒரு குறிப்பிட்ட நாடகத்தை நீங்கள் ஒருமுறை பார்த்ததும், அந்நாடகம் முழுவதும் உங்களுடைய புத்தியில் இருக்கின்றது. இதுவே மனித உலக விருட்சம் எனவும், அதன் விதையானவர் மேலே உள்ளார் எனவும் பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அவர்கள் பல்ரூப உருவத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது மக்களுக்குத் தெரியாது. சிவபாபா எவரிடமிருந்தாவது ஒரு மொழியைக் கற்றிருப்பாரா? அவர் ஓர் ஆசிரியரைக் கொண்டிராததால், எம்மொழியைக் கற்றிருப்பார்? எனவே, அவர் நிச்சயமாக, அவர் பிரவேசித்துள்ள இரதத்தின் மொழியையே உபயோகிப்பார். அவர் தனக்கென சொந்தமாக ஒரு மொழியைக் கொண்டிருக்க மாட்டார். அவர் எதையும் கற்பதோ அல்லது பயிலுவதோ கிடையாது. அவர் தனக்கெனச் சொந்தமாக ஓர் ஆசிரியரைக் கொண்டிருப்பதில்லை. கிருஷ்ணர் அனைத்தையும் கற்கின்றார். அவர் ஒரு தாயையும் தந்தையையும் ஆசிரியரையும் கொண்டிருக்கின்றார். அவர் ஏற்கனவே ஜீவன்முக்தியைப் பெற்றுவிட்டதால் அவருக்கு ஒரு குரு தேவையில்லை. உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். பிராமணர்களாகிய நீங்களே, அனைவரிலும் உயர்வானவர்கள் ஆவீர்கள். நீங்கள் உங்களுடைய விழிப்புணர்வில் இதைக் கொண்டிருக்க வேண்டும். தந்தையே எங்களுக்குக் கற்பிப்பவர் ஆவார். நாங்கள் இப்பொழுது பிராமணர்கள். இது மிகவும் தெளிவாக உள்ளது. பிராமணர்கள், பின்னர் தேவர்கள்… கடவுள் அனைத்தையும் அறிவார் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால், அவருக்கு என்ன தெரியும் என்பது உங்களுக்குத் தெரியாது. அவர் ஞானம்-நிறைந்தவர் ஆவார். அவர் முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியைப் பற்றிய ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். ஒரு விதையானவர் முழு விருட்சத்தினதும் ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். அவை உயிரற்ற விதைகளும், நீங்களோ உயிருள்ளவர்களும் ஆவீர்கள். நீங்கள் உங்களுடைய விருட்சத்தின் ஞானத்தை விளங்கப்படுத்துகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நான் பல்வேறுபட்ட மனித உலகின் விதை ஆவேன். அனைவரும் மனிதர்களே, ஆனால் அதில் பல வகைகள் உள்ளன. ஒரு தனி ஆத்மாவின் சரீரத்தின் முகச்சாயல் இன்னொருவரைப் போன்று அதே மாதிரி இருக்கமுடியாது. இரு நடிகர்கள் ஒரேமாதிரி இருக்க முடியாது. இதுவே எல்லையற்ற நாடகம் ஆகும். நாங்கள் மனிதர்களை நடிகர்களாகக் குறிப்பிடுவதில்லை, ஆனால் ஆத்மாக்களையே நடிகர்களாகக் குறிப்பிடுகின்றோம். அம்மக்கள் மனிதர்களை நடிகர்களாகக் கருதுகின்றார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் நடிகர்கள் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. அம்மக்கள் நடனமாடுகிறார்கள். மக்கள் குரங்குகளை நடனமாடச் செய்வதுபோன்று, ஆத்மாவே சரீரத்தை நடனமாடச் செய்கின்றார்; அவர் தனது பாகத்தை நடிக்கச் செய்கின்றார். இவ்விடயங்கள் புரிந்துகொள்வதற்கு மிக இலகுவானவை ஆகும். எல்லையற்ற தந்தை நிச்சயமாக வருகின்றார். அவர் வருவதில்லை என்பதல்ல. சிவனின் பிறப்பும் உள்ளது. உலகம் மாற வேண்டியுள்ளபொழுதே, தந்தை வருகின்றார். பக்திமார்க்கத்தில், அவர்கள் தொடர்;ந்தும், கிருஷ்ணரை நினைவுசெய்கின்றார்கள், ஆனால் எவ்வாறு கிருஷ்ணர் வரமுடியும்? கலியுகத்திலோ அல்லது சங்கம யுகத்திலோ இக்கண்களால் கிருஷ்ணரின் ரூபத்தைக் காண்பது சாத்தியமல்ல. எனவே, அவரை எவ்வாறு கடவுள் என அழைக்க முடியும்? அவர் சத்தியயுகத்தின் முதலாம் இலக்க இளவரசர் ஆவார். அவர் ஓரு தந்தையையும் ஓர் ஆசிரியரையும் கொண்டிருக்கின்றார், ஆனால் அவர் ஜீவன்முக்தியில் இருப்பதால், அவருக்கு ஒரு குரு தேவையில்லை. சுவர்க்கமானது, ஜீவன்முக்தி என அழைக்கப்படுகின்றது. கணக்கு தெளிவாக உள்ளது. மனிதர்கள் 84 பிறவிகளை எடுக்கின்றார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். யார் எத்தனை பிறவிகளை எடுக்கின்றார்கள் என்ற கணக்கை நீங்கள் காண்பிக்கின்றீர்கள். தேவ குலமே நிச்சயமாக முதலில் வருகின்றது. அவர்களுடைய பிறவியே முதற்பிறவி ஆகும். முதன்மையானவர் பிறவியெடுக்கும்பொழுது, ஏனைய அனைவரும் அவருக்குப் பின்னர் வருகின்றார்கள். இவ்விடயங்கள் உங்களுக்குத் தெரியும். உங்களில் சிலரும், இவ்விடயங்களை மிக நன்றாகப் புரிந்துகொள்கின்றீர்கள். அக்கல்வி மிகவும் இலகுவாக உள்ளதைப் போன்று, இதுவும் மிகவும் இலகுவானதாகும். ஒரு மறைமுகமான சிரமம் உள்ளது. உங்களுடைய தந்தையை நினைவுசெய்வதில் மாயை தடைகளை உருவாக்குகின்றாள், ஏனெனில் இராவணனாகிய மாயை பொறாமை உடையவள்;. நீங்கள் இராமரை நினைவுசெய்யும்பொழுது, எனது அடிமை ஏன் இராமரை நினைவுசெய்கின்றார் என எண்ணி இராவணன் பொறாமைப்படுகின்றான். இதுவும் முற்கூட்டியே நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது எதுவுமே புதியதல்ல. நீங்கள் முன்னைய கல்பத்தில் நடித்த அதே பாகங்களையே நடிப்பீர்கள். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்துகொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்த அதே முயற்சியையே செய்துகொண்டிருக்கின்றீர்கள். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது; அது ஒருபொழுதும் முடிவடைவதில்லை. காலம் தொடர்ந்தும் கடந்து செல்கின்றது. இதுவே 5000 வருடங்களுக்குரிய நாடகம் என்று தந்தை விளங்கப்படுத்துகின்றார். சமயநூல்களில் அவர்கள் அவ்வாறான வேறுபட்ட விடயங்களை எழுதியுள்ளார்கள்! தந்தை ஒருபொழுதும் உங்களை பக்தி செய்வதை நிறுத்துமாறு கேட்பதில்லை, ஏனெனில் பின்னர் உங்களால் இங்கு தொடர முடியாதிருந்தால், நீங்கள் அதையும் கைவிட்டுவிட்டதால் இங்குமில்லாமலும் அங்குமில்லாமலும் இருப்பீர்கள். பின்னர், உங்களால் எப்பயனும் கிடையாது. இதனாலேயே சிலர் எந்த பக்தியையும் செய்யாதவர்கள் என்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள்; அவர்கள் வாழ்க்கையில் அவ்விதமாக வெறுமனே தொடர்ந்தும் செல்கின்றார்கள். கடவுளே பல ரூபங்களை எடுக்கின்றார் என்று சிலர் கூறுகின்றார்கள். ஓ! ஆனால் இதுவே தொடர்ந்தும் மீண்டும் மீண்டும் தொடர்கின்ற அநாதியான, முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்ட, எல்லையற்ற நாடகம் ஆகும். இதனாலேயே அது அநாதியான, அழிவற்ற உலக நாடகம் என்று அழைக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே அதைப் புரிந்துகொள்ள முடியும், அது குமாரிகளாகிய உங்களுக்கு மிகவும் இலகுவானதாகும். தாய்மார்கள் அவர்கள் ஏறியுள்ள ஏணியில் கீழிறங்க வேண்டும். குமாரிகளுக்கு வேறு எந்த பந்தனங்களும் கிடையாது. அவர்கள் வேறு எந்த எண்ணங்களையும் கொண்டிருப்பதில்லை; அவர்கள் தந்தைக்கு மாத்திரம் உரியவர்களாக இருக்க முடியும். நீங்கள் லௌகீக உறவுமுறைகளை மறந்து பரலோக உறவுமுறையை ஏற்படுத்த வேண்டும். கலியுகத்தில், சீரழிவே உள்ளது. நாடகத்திற்கேற்ப, நீங்கள் கீழே வரவேண்டும். இவை அனைத்தும் கடவுளுக்கு உரியவை என்று பாரத மக்கள் கூறுகின்றார்கள். அவர் அதிபதி ஆவார். நீங்கள் யார்? நான் ஓர் ஆத்மா ஆவேன். ஆனால் இவை அனைத்தும் கடவுளுக்குரியவை ஆகும். இச்சரீரம் போன்றவை உள்ளடங்குகின்ற இவை அனைத்தும் பரமாத்மாவினால் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இதைக் கூறுகின்றார்கள், அது நல்லது. அனைத்தும் கடவுளால் வழங்கப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறுகின்றார்கள். நல்லது, எனவே பின்னர் உங்களுக்குத் தரப்பட்டுள்ளவற்றைப் பராமரிப்பதில் எவ்விதமான நேர்மையின்மையையும் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. எவ்வாறாயினும், அவர்கள் இதைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், ஆனால், இது இராவணனின் சமுதாயம் என்பதால், நீங்கள் ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளராக இருப்பதில் உங்களையே நீங்கள் ஏமாற்றுகின்றீர்கள். நீங்கள் ஒன்றைக் கூறி வேறொன்றைச் செய்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஏதோவொன்றைக் கொடுத்துப் பின்னர் அதை எடுத்தார், எனவே நீங்கள் ஏன் அதைப் பற்றிய துன்பத்தை உணர்கின்றீர்கள்? தனது குழந்தைகளுடைய பற்றை முடித்துவிடுவதற்காகவே, தந்தை இவ்விடயங்கள் அனைத்தையும் அவர்களுக்கு விளங்கப்படுத்துகிறார். தந்தை இப்பொழுது வந்துள்ளார். நீங்கள் கூவியழைத்தீர்கள்: பாபா, எங்களை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்! நாங்கள் இராவண இராச்சியத்தில் மிகவும் சந்தோஷமற்றவர்களாக உள்ளோம்! வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! இது ஏனெனில், தூய்மையாகாமல் உங்களால் திரும்பிச் செல்ல முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொண்டதால் ஆகும். எங்களை உங்களுடன் அழைத்துச் செல்லுங்;கள்! எங்கே? எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்! தாங்கள் வீடு செல்லவேண்டும் என்றே அனைவரும் கூறுகின்றார்கள். கிருஷ்ண பக்தர்கள் கிருஷ்ணரின் பூமியாகிய, வைகுந்தத்திற்குச் செல்ல விரும்புகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் சத்தியயுகத்தை நினைவுசெய்கின்றார்கள். இது மிகவும் அழகானதாகும். ஒருவர் மரணிக்கும்பொழுது, அவர் சுவர்க்கத்திற்குச் செல்வதில்லை. சுவர்க்கம் சத்தியயுகத்திலும் நரகம் கலியுகத்திலும் உள்ளது. எனவே, நிச்சயமாக, நரகத்திலேயே மறுபிறவியும் இடம்பெறும். இது சத்தியயுகம் அல்ல. அது உலகின் ஓர் அற்புதம் ஆகும். அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள், அதைப் புரிந்துகொள்கின்றார்கள், இப்பொழுதும் ஒருவர் மரணிக்கும்பொழுது, அவர்களுடைய உறவினர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. 84 பிறவிகளின் சக்கரத்தின் ஞானத்தைக் கொண்டுள்ள தந்தையால் மாத்திரம் அதை உங்களுக்குத் தரமுடியும். நீங்கள் உங்களைச் சரீரங்களாகக் கருதினீர்கள். ஆனால் அது தவறானதாக இருந்தது. இப்பொழுது தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பீர்களாக! கிருஷ்ணரால் கூறமுடியாது: நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாக இருப்பீர்களாக! அவர் தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருக்கின்றார். சிவபாபா தனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. இது அவர் பிரசன்னமாகியுள்ள அவருடைய இரதம் ஆகும். இது அவருடைய இரதமும் இவருடைய இரதமும் ஆகும். இவருடைய சொந்த ஆத்மாவும்கூட உள்ளார். தந்தை இச்சரீரத்தைக்; கடனாகப் பெற்றுள்ளார். தந்தை கூறுகிறார்: நான் இவருடைய ஆதாரத்தைப் பெறுகின்றேன். நான் எனக்கெனச் சொந்தமாக ஒரு சரீரத்தைக் கொண்டிருப்பதில்லை. எனவே, நான் எவ்வாறு உங்களுக்குக் கற்பிப்பேன்? ஒவ்வொரு நாளும் தந்தை இங்கமர்ந்திருந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதச் செய்வதற்கும் தந்தையைப் பார்ப்பதற்கும் உங்களை ஈர்க்கின்றார். இச்சரீரமும் மறக்கப்பட வேண்டும். நான் உங்களைப் பார்க்கின்றேன், நீங்கள் என்னைப் பார்க்கின்றீர்கள். நீங்கள் அதிகளவுக்குத் தந்தையைப் பார்க்கும்பொழுது, அதிகளவு தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். தூய்மையாகுவதற்கு வேறு எந்த வழியும் கிடையாது. இருந்தால், ஓர் ஆத்மா எதனூடாகத் தூய்மையானவர் ஆகமுடியும் என்கின்ற வழியைக் காட்டுங்கள். ஓர் ஆத்மா கங்கை நீரால் தூய்மையானவர் ஆகமாட்டார். எல்லாவற்றிற்கும் முதலில், நீங்கள் எவருக்கேனும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். வேறு எத் தந்தையும் இவரைப் போன்றவர் இல்லை. அவர்களுடைய நாடித்துடிப்பை உணர்ந்து அவர்கள் வியப்படையும் அளவுக்குப் போதுமானளவு புரிந்துகொண்டுள்ளனரா என்று பாருங்கள். அவர் உண்மையிலேயே பரமாத்மா என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தான் யார் எனத் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கின்றார். வரலாறு மீண்டும் மீண்டும் இடம்பெறும் என்பதும் குழந்தைகளுக்குத் தெரியும். இக்குலத்திற்கு உரியவர்கள் மாத்திரமே வருவார்கள். ஏனைய அனைவரும் அவர்களுடைய சொந்த சமயங்களுக்குச் செல்வார்கள். ஏனைய சமயங்களுக்கு மத மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள், வெளிப்பட்டு அவர்களுடைய சொந்தப் பிரிவுக்குத் திரும்ப வருவார்கள். இதனாலேயே அசரீரி விருட்சம் காண்பிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்களைப் புரிந்துகொள்கின்றீர்கள். ஏனையவர்கள் அரிதாகவே புரிந்துகொள்வார்கள். ஏழு தொடக்கம் எட்டுப் பேரில், இந்த ஞானம் மிகவும் சிறந்தது என்று எண்ணுகின்ற ஒருவர் அல்லது இருவரே வெளிப்படுவார்கள். இவ்விடத்திற்குரியவர்கள் குறைந்தளவு புயல்களையே கொண்டிருப்பார்கள். இந்த ஞானத்தைச் செவிமடுப்பதற்கு அவர்கள் மீண்டும் இங்கு வர விரும்புவார்கள். சிலர் இங்கு வந்து, பின்னர் சகவாசத்தால் நிறமூட்டப்பட்டு அதன் பின்னர் திரும்ப வரமாட்டார்கள். ஒரு விருந்துக்கு ஒரு குழு செல்வதைப் பார்க்கும்பொழுது, அவர்கள் அதில் சேர்ந்துகொள்வார்கள். அவர்கள் இதை ஒரு பெரும் முயற்சியாகக் கண்டுகொள்கின்றார்கள். பெருமளவு முயற்சி செய்யப்பட வேண்டியுள்ளது. நீங்கள் மறந்துவிடுவதாகத் திரும்பத் திரும்பக் கூறுகின்றீர்கள். நான் ஓர் ஆத்மா, இச்சரீரமல்ல் நீங்கள் இதை மீண்டும் மீண்டும் மறந்துவிடுகின்றீர்கள். காமச்சிதையில் அமர்ந்ததால், குழந்தைகளாகிய நீங்கள் அவலட்சணமாகியுள்ள்Pர்கள் என்பதைத் தந்தை அறிவார். நீங்கள் இடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்தீர்கள். இவ்வாறே நீங்கள் அவலட்சணம் ஆகியுள்ளீர்கள். தந்தை உங்களுக்குக் கூறுகின்றார்: எனது குழந்தைகள் அனைவரும் எரிக்கப்பட்டுவிட்டார்கள். இது ஓர் எல்லையற்ற விடயமாகும். எனது வீட்டில் வசிக்கப்போகின்ற, பல மில்லியன் கணக்கான ஆத்மாக்கள் உள்ளார்கள், அதாவது, அவர்கள் பிரம்மலோகத்தில் வசிக்கப்போகின்றார்கள். தந்தை எல்லையற்றதில் இருக்கின்றார். நீங்களும் எல்லையற்றதிற்குள் செல்வீர்கள். பாபா ஸ்தாபனையை மேற்கொண்டு பின்னர் பிரிந்து செல்வார், பின்னர் நீங்கள் இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள் என நீங்கள் அறிவீர்கள். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்திற்குத் திரும்பச் செல்வார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. நடிகர்களாகிய உங்கள் மீது, இராவணன் பொறாமைப்பட்டாலும், தடைகளை உருவாக்கினாலும். அல்லது புயல்களை ஏற்படுத்தினாலும் அதைப் பார்க்காதீர்கள். ஆனால் உங்களுடைய முயற்சியில் ஈடுபட்டிருப்பதில் நிலைத்திருங்கள். ஏனெனில் ஒவ்வொரு நடிகரும் இந்நாடகத்தில் தனது சொந்தப் பாகத்தைக் கொண்டிருக்கின்றார். இந்த அநாதியான நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும்.

2. உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ள பெறுமதி வாய்ந்தவற்றைப் பராமரிக்கும்போது, இராவணனின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலம் நேர்மையற்றவர் ஆகிவிடாதீர்கள். அனைவர்மீதும் நீங்கள் கொண்டுள்ள பற்றை அகற்றி, முழுமையான நம்பிக்கைப் பொறுப்பாளராக வாழுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் புத்தியில் நம்பிக்கை வைப்பதனால், எந்தத் தீமையிலும் நல்லதை அனுபவம் செய்வதன் மூலம் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆகுவீர்களாக.

எப்பொழுதும் நினைவு செய்ய வேண்டிய சுலோகம்: எது நடந்ததோ அது நல்லதே, நடப்பதும் நல்லதே, நடக்க இருப்பது மிக மிக நல்லதாகும் தீயது என்ற பார்வையுடன் எதனையும் பார்க்காதீர்கள், ஆனால் தீய ஒன்றிலுமே நன்மையை அனுபவம் செய்யுங்கள். தீய ஒன்றில் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். எந்த ஒரு சூழல் ஏற்படும் போதும், ~என்ன நடந்தது?| என எண்ண வேண்டாம், ஆனால் உடனடியாகவே ~அது நன்மைக்கே| என நினையுங்கள். எது நடந்திருந்தாலும், அது நல்லதற்கே. நல்லது இருக்கும் இடத்தில், நீங்கள் எப்பொழுதும் கவலையற்ற சக்கரவர்த்திகளாக இருப்பீர்கள். உங்கள் புத்தியில் நம்பிக்கை உள்ளது என்றால் கவலையற்ற சக்கரவர்த்தியாக இருப்பது என்று அர்த்தமாகும்.

சுலோகம்:
சுயத்தின் மீது மரியாதை கொண்டிருப்பவர்களதும், பிறரிடம் மரியாதை கொண்டிருப்பவர்களதும் பதிவேடு எப்பொழுதும் சிறப்பாக இருக்கும்.