12.05.19 Avyakt Bapdada Tamil Lanka Murli 05.12.84 Om Shanti Madhuban
விகாரத்தை சம்பூரணமாக வென்றவராக இருத்தல் என்றால் எல்லைக்குட்பட்ட ஆசைகளுக்கு அப்பால் செல்வதாகும்.
இன்று, பாப்தாதா தனது அதிமேன்மையான கரங்களைப் பார்க்கிறார். கரங்களான நீங்கள் அனைவரும் உலக மாற்றம் என்ற பணியில் உங்களின் அன்புடனும் சக்தியுடனும் ஈடுபட்டுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் ஒரேயொருவரின் கரங்கள். இதனாலேயே, உங்களின் சொந்த இறை குடும்பத்தின் சகோதர, சகோதரிகளை மீண்டும் விழித்தெழச் செய்யும் ஒரேயொரு ஆசை உங்களுக்கு உள்ளது. அவர்கள் தந்தையை அல்லது தமது நிஜக் குடும்பத்தை அறியாததால், அவரின் குழந்தைகளாக இருந்தாலும் பாக்கியத்தை அருள்பவரான தந்தையிடமிருந்து தமது பாக்கியத்தைப் பெறுவதில் இருந்து தடுக்கப்படுகிறார்கள். ஏதாவதொரு உரிமையின் ஒரு துளியுடன் தந்தையை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். ஏனெனில், நீங்கள் அனைவரும் முழு வம்சத்தினதும் மூத்தவர்கள் ஆவீர்கள். எனவே, மூத்த குழந்தைகள் தந்தைக்குச் சமமானவர்கள் என்று கூறப்படுகிறது. இதனாலேயே, மூத்தவர்களுக்கு இயல்பாகவே தமது அறியாத இளைய சகோதர, சகோதரிகளின் மீது கருணையும் அன்பும் காணப்படும். எல்லைக்குட்பட்ட குடும்பங்களில் உள்ள மூத்தவர்கள் எப்போதும் தமது குடும்பத்தில் கவனம் செலுத்துவதைப் போன்று, எல்லையற்ற குடும்பத்தின் மூத்தவர்களான நீங்களும் இதில் கவனம் செலுத்துகிறீர்கள், அல்லவா? இது அத்தகைய பெரியதொரு குடும்பம் ஆகும். முழு எல்லையற்ற குடும்பமும் உங்களுக்கு முன்னால் உள்ளதா? நீங்கள் கருணைக்கதிர்களையும் ஆன்மீக நல்லாசிகளின் கதிர்களையும் ஆசீர்வாதங்களின் கதிர்களையும் அனைவருக்கும் பரப்பும் மாஸ்ரர் சூரியர்கள் அல்லவா? சூரியன் உயரே இருக்கும்வரை, அதனால் அனைவருக்கும் அதன் கதிர்களைப் பரப்ப முடியும். அது கீழே போகும்போது, அதனால் எங்கும் அதன் கதிர்களைப் பரப்ப முடியாது. அதேபோன்று, அதிமேலானவர்களான நீங்கள் தந்தையைப் போன்று மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக இருந்தால் மட்டுமே, உங்களால் எல்லையற்ற கதிர்களைப் பரப்ப முடியும். அதாவது, எல்லையற்ற சேவையாளர்கள் ஆகமுடியும். நீங்கள் அனைவரும் இத்தகைய எல்லையற்ற சேவையாளர்கள், அல்லவா? நீங்கள் அனைவரின் ஆசைகளையும் பூர்த்திசெய்யும் காமதேனுக்கள், அல்லவா? அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்யும் நீங்கள், உங்களின் சொந்த மனங்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதில் மும்முரமாக இல்லையல்லவா? உங்களின் சொந்த மனங்களின் ஆசைகள் பூர்த்தியாகாவிட்டால், எவ்வாறு மற்றவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள்? தந்தையை அடைவதே உங்களின் மகத்தான ஆசை ஆகும். இப்போது, அந்த மேன்மையான ஆசை பூர்த்தியாகி இருப்பதனால், ஏனைய சிறிய, எல்லைக்குட்பட்ட ஆசைகள் அனைத்தும் அந்த ஒரு மேன்மையான ஆசையில் அடங்கியுள்ளன. இந்த மேன்மையான, எல்லையற்ற ஆசையின் முன்னால் எந்தவொரு எல்லைக்குட்பட்ட ஆசைகளாலும் நிற்க முடியுமா? அந்த எல்லைக்குட்பட்ட ஆசைகள் மாயையை எதிர்ப்பதற்கு உங்களை அனுமதிப்பதில்லை. அந்த எல்லைக்குட்பட்ட ஆசைகள், எல்லையற்ற மேடையில் எல்லையற்ற சேவை செய்வதற்கு உங்களை அனுமதிப்பதில்லை. எல்லைக்குட்பட்ட ஆசைகளைக் கவனமாகச் சோதித்துப் பாருங்கள்: பொதுவாக, காமம் என்ற விகாரத்தின் ஏதாவது சுவடு அல்லது சந்ததி காணப்படலாம். ஆசைகளின் ஆதிக்கத்திற்கு உள்ளாகுவதனால், உங்களால் அதை எதிர்க்க முடியாது. அப்போது உங்களால் எல்லையற்ற ஆசைகளைப் பூர்த்தி செய்பவர் ஆகமுடியாது. காமத்தை வென்றவர் ஆகுவதெனில், எல்லைக்குட்பட்ட ஆசைகளை வென்றவர் ஆகுதல் என்று அர்த்தம். நீங்கள் இத்தகைய ஆசைகளைப் பூர்த்தி செய்யும் விசேடமான ஆத்மாக்கள் ஆவீர்கள். ‘மன்மனாபவ’ என்ற ஸ்திதியின் மூலம், உங்களால் மனதின் எல்லைக்குட்பட்ட ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அதாவது, உங்களால் அவற்றை முடித்து, மற்றவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியும். இப்போது, சத்தத்திற்கு அப்பால் உள்ள ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதன் மூலம், உங்களால் ஓய்வெடுக்கும் நிலையில் காமத்தை வென்றவர்கள் ஆகமுடியும். அதாவது, உங்களால் உலகின் முன்னால் மாதிரிகள் ஆகமுடியும். உங்களின் இளைய சகோதர, சகோதரிகள் மூத்தவர்களான உங்களை இந்த விருப்பத்துடனேயே பார்க்கிறார்கள். அவர்கள் உங்களை அழைக்கிறார்கள். எமது ஆசைகளைப் பூர்த்தி செய்யுங்கள்! சந்தோஷம் மற்றும் அமைதிக்கான எமது ஆசைகளைப் பூர்த்தி செய்யுங்கள்! எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்களா அல்லது அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்களா? அனைவரின் இதயங்களில் இருந்தும் மேன்மையான சுலோகம் வெளிப்பட வேண்டும் - யாராவது அதைக் கூறுவதனாலோ அல்லது ஒன்றுகூடலின் ஒழுங்குமுறைகளின் சூழலுக்கேற்பவோ இல்லாமல், அது உங்களின் இதயத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். ‘ஆசைகளின் அறிவே அறியாதவர்’.
சில குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். அவர்கள் அனைவரிலும் அதிபுத்திசாலியான ஒரேயொருவருக்கே புத்திசாலிகள் ஆகுகிறார்கள். அது அவர்களின் எல்லைக்குட்பட்ட ஆசை. ஆயினும், இது இவ்வாறு அல்லது அது அவ்வாறு. அது ஒரு தூய ஆசை. அது சேவைக்கான ஆசை என அவர்கள் சொல்லுவார்கள். அது அவர்களின் சொந்த விருப்பமாகவே இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு சேவையின் புற வடிவத்தைக் கொடுப்பார்கள். இதனாலேயே, புன்னகையுடன், அனைத்தையும் பார்த்து அறிந்தாலும், அவர்களின் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொண்டாலும் பாப்தாதா சில குழந்தைகளுக்கு வெளிப்படையாக சமிக்ஞைகளைக் கொடுப்பதில்லை. எவ்வாறாயினும், நாடகத்திற்கேற்ப, அவர்கள் நிச்சயமாக ஒரு சமிக்ஞையைப் பெறுகிறார்கள். அது எவ்வாறு? அவர்களின் எல்லைக்குட்பட்ட ஆசைகள் பூர்த்தியாகும்போது, அது பேற்றின் வடிவில் உள்ளது. ஆனால், ஒரு அக ஆசை தொடர்ந்து பல ஏனைய ஆசைகளை உருவாக்குகிறது. இதனாலேயே, அவர்கள் தொடர்ந்து மனதின் குழப்பத்தின் வடிவிலேயே சமிக்ஞைகளைப் பெறுகிறார்கள். எல்லைக்குட்பட்ட புறப் பேறுகளால் அவர்கள் எந்தளவிற்கு உண்டு, பருகிப் பாடினாலும், அது அவர்களின் மனங்களின் குழப்பத்தை மறைக்கும் வழிமுறையே ஆகும். அவர்களின் மனங்களில் திருப்தி இருப்பதில்லை. அவர்கள் தற்காலிக வேளைக்குத் திருப்தியாக இருப்பார்கள். ஆனால் அவர்களால் எல்லா வேளைக்கும் திருப்தியின் ஸ்திதியில் இருக்க முடிவதில்லை. அவர்களால் தமது இதயபூர்வமாக ‘தந்தையைக் கண்டடைந்ததால், நான் அனைத்தையும் கண்டுவிட்டேன்’ என்ற பாடலைப் பாட முடியாது. அவர்கள் தந்தையிடம் கூறுகிறார்கள்: நான் உங்களைக் கண்டுகொண்டேன். ஆனால் எனக்கு நிச்சயமாக இதுவும் வேண்டும். ‘எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும்’ என்ற அவர்களின் ஆசைகள் ஒருபோதும் நிறைவடைவதில்லை. இப்போது, காலத்திற்கேற்ப, அனைவரிடமிருந்தும் ‘ஆசைகளின் அறிவே அறியாதவர்’ என்ற ஒரே ஒலி வெளிப்பட வேண்டும். அப்போது மட்டுமே உங்களால் மற்றவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய முடியும். இப்போது, குறுகிய காலத்தில், மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் ஒவ்வொருவரும் உயிர்வாழும் பொக்கிஷக் களஞ்சியம் என்பதை இந்த உலகே அனுபவம் செய்யும். அவர்கள் யாசகர்களின் வடிவில் வருவார்கள். நீங்கள் மட்டுமே நிரம்பி வழியும் பொக்கிஷக் களஞ்சியம் என்ற ஒலி வெளிப்படும். இப்போதும், அவர்கள் யாரோ ஒருவரைத் தேடுகிறார்கள். ஆனால், அவர்களால் அந்த ஒரேயொருவர் எங்குள்ளார் என்றும் அந்த ஒரேயொருவர் யார் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. எவ்வாறாயினும், காலத்தின் அம்புக்குறி இப்போது போடப்படும். வீதி சமிக்ஞைகளில் எந்தத் திசையில் செல்வது என அம்புக்குறியால் காட்டப்படுவதைப் போன்று, அனைவரும், ‘அங்கே செல்லுங்கள்!’ என்பதை அனுபவம் செய்வார்கள். நீங்கள் இத்தகைய நிரம்பிவழியும் பொக்கிஷக் களஞ்சியங்கள் ஆகிவிட்டீர்களா? காலமும் உங்களுடன் ஒத்துழைக்கும். அது உங்களின் ஆசிரியர் ஆகமாட்டாது. ஆனால் ஒத்துழைக்கும். காலத்திற்கு முன்னரே, குழந்தைகள் அனைவரும் தமது முழுமையான ரூபத்தில், பொக்கிஷக் களஞ்சியங்களால் நிரம்பி வழியும் ரூபத்தில், ஆசைகளின் அறிவே அறியாதவர்களாக, திருப்தி ஆத்மாக்களாக இருப்பதையே பாப்தாதா விரும்புகிறார். ஏனெனில், இப்போது நீங்கள் அந்தச் சம்ஸ்காரங்களால் உங்களை நிரப்பிக் கொள்ளாவிட்டால், இறுதியில், உங்களால் நீண்ட காலத்திற்கு அந்த சம்ஸ்காரங்களைக் கொண்டிருக்கும் பேற்றின் உரிமை உடையவர்கள் ஆக முடியாதிருக்கும். இதனாலேயே, நீங்களே உலகின் ஆதார மூர்த்திகள் ஆவீர்கள். நீங்கள் உலகின் ஒளிகள் ஆவீர்கள். நீங்கள் உலகின் குல தீபங்கள் ஆவீர்கள். மேன்மையான புகழ் அனைத்தினதும் உரிமை உடைய ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் இப்போது உங்களின் சம்பூரணமான ரூபத்தில் உலகிற்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா?
பாப்தாதா, தனது அன்பான ரூபத்தினால், இங்கு வந்துள்ள சகல விசேடமான, சேவையாளர் குழந்தைகளை அன்புடன் வரவேற்கிறார். வலது கரங்களான குழந்தைகளை அவர் சமமாக கைலாகு கொடுத்து வரவேற்கிறார். நல்வரவாகுக. அச்சா.
உலகின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் அனைவருக்கும், சதா சம்பூரணமான, திருப்தியான ஆத்மாக்களுக்கும், உலகின் ஆதார மூர்த்திகளுக்கும், எல்லா வேளையும் உலக நன்மைக்கான மேன்மையான விருப்பத்தில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், உலகின் முன்னால் மாஸ்ரர் உலகைக் காப்பவர்களாக இருந்து அனைவரையும் காப்பவர்களுக்கும், சகல அதிமேன்மையான, மகாத்மாக்களுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா மீட்டிங்கிற்காக வந்திருக்கும் சகோதர, சகோதரிகளைச் சந்திக்கிறார்:
சேவையாளர் குழந்தைகள் ஏற்கனவே தமது மனங்களில் சேவைக்கான திட்டங்களைச் செய்திருப்பார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என மீட்டிங்கில் பேசுவீர்கள். எத்தகைய சேவை இடம்பெற்றாலும், ஒவ்வொரு வகையான சேவையும் அனைத்திலும் சிறந்தது என்றே சொல்லப்படும். உதாரணமாக, காலம் நெருங்கி வருவதனால், அது அனைவரின் புத்திகளிலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய நேரங்களுக்கேற்ப, உங்களால் நிலத்தை உழக்கூடிய வகையில் சக்திவாய்ந்த திட்டத்தை உருவாக்குங்கள். விதைகளை விதைப்பதற்கு முன்னர் எப்போதும் நிலத்தை உழுவார்கள். நீங்கள் நிலத்தை உழும்போது என்ன நிகழும்? அது புரட்டப்படும். அதன்பின்னர் விதைகள் விதைக்கப்பட்டதும் அவை இலகுவாக வளரும். அதேபோன்று, குழப்பத்தை ஏற்படுத்துதல் என்ற உழுவதைச் செய்யுங்கள். என்ன குழப்பம்? ‘யாரோ ஒருவர் இருக்கிறார்’ என்ற புரிந்துணர்வு அனைவருக்கும் உள்ளது என உங்களுக்கு இன்று சொல்லப்பட்டது. எவ்வாறாயினும், ‘இவரே அந்த ஒருவர்’ அல்லது ‘இவர் ஒருவர் மட்டுமே’ என்ற புரிந்துணர்வு இப்போது அவர்களுக்கு ஏற்பட வேண்டும். இந்தக் குழப்பம் என்ற உழுதல் இன்னமும் செய்யப்படவில்லை. ‘மற்றவர்களும் உள்ளார்கள், நீங்களும் இருக்கிறீர்கள்’ என்று கூறும் நிலைக்கே அவர்கள் வந்துள்ளார்கள். எவ்வாறாயினும், இப்போது ‘இது ஒன்று மட்டுமே’ என அவர்கள் கூறும் வகையில் அம்பை எறியுங்கள். இத்தகைய தொடுகையைப் பெற்ற ஆத்மாக்கள் உங்களின் முன்னால் வரவேண்டும். இத்தகைய குழப்பம் ஏற்படும்போதே வெளிப்படுத்துகை இடம்பெறும். இதற்கான வழிமுறை என்ன? உங்களின் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்போது சகல வகையான வழிமுறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் கருத்தரங்குகளை நடத்துகிறீர்கள். மற்றவர்களின் மேடைகளுக்கு அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் உங்களின் சொந்த மேடையை உருவாக்குவதுடன் யோகா முகாம்களையும் நடத்துகிறீர்கள். இந்த வசதிகள் அனைத்தும் மக்களை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளன. அவர்களிடம் எத்தகைய சந்தேகங்கள் இருந்தாலும், அவர்கள் அவற்றில் இருந்து விடுபட்டுள்ளார்கள். அவர்கள் நெருங்கி வந்துள்ளார்கள். எவ்வாறாயினும், அவர்கள் இப்போது ஆஸ்திக்கான உரிமையைக் கோருகின்ற ஸ்திதிக்கு நெருங்கி வரவேண்டும். அவர்கள் ‘ஆஹா, ஆஹா!’ என்று கூறுபவர்கள் ஆகியுள்ளார்கள். ஆனால், இப்போது அவர்கள் வாரிசுகள் ஆகவேண்டும். நீங்கள் மட்டுமே உண்மையான பாதையைக் காட்டுபவர்கள், நீங்களே தந்தையைச் சந்திப்பதற்கு அவர்களுக்கு உதவுபவர்கள் என்ற சத்தம் இப்போது உரத்தும் தெளிவாகவும் கேட்க வேண்டும். நீங்கள் அவர்களைப் பாதுகாப்பவர்கள். அவர்களின் வீடுகளில் இருந்து ஓடச் செய்பவர்கள் அல்ல. எனவே, இப்போது வழிமுறையும் சூழலும் இவ்வாறு இருக்க வேண்டும். ஸ்திதியின் ரூபம் இவ்வாறு இருக்க வேண்;டும். அனைவரும் ஒரே எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். சூழலின் விளைவு சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். அன்பின் சூழல் அங்குள்ளது. ஆனால், இப்போது நீங்கள் அதற்குச் சிறிதளவு மேலதிகமான அமைதியையும் சக்தியையும் சேர்க்க வேண்டும். உலகைப் பொறுத்தவரை, அவர்கள் அமைதியை அனுபவம் செய்கிறார்கள். ஆனால், அமைதிக்கடலை விட்டு இருக்க முடியாத அளவிற்கு அவர்களை அமைதி அம்பு தாக்க வேண்டும். குறிப்பிட்ட காலப்பகுதிக்கு உங்களின் சகவாசத்தின் நிறத்தை அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், நீங்கள் இப்போது அவர்களை உறுதியாக நிறமூட்ட வேண்டும். இந்த நிறம் தொடர்ந்து அவர்களை ஈர்த்து, உங்களுக்கு நெருக்கமாக்குவதுடன் ஓர் உறவுமுறையையும் ஏற்படுத்தும். இதுவரை நீங்கள் செய்த அனைத்தும் சிறப்பானதே என உங்களுக்குக் கூறப்பட்டது. எவ்வாறாயினும், நீங்கள் தங்க நகையைத் தயாரித்திருந்தாலும், அதில் இரத்தினங்களைப் பதிக்க வேண்டும். இன்றைய உலகில், நடைமுறை அத்தாட்சியையே அனைவரும் விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் நடைமுறை அத்தாட்சியாக அமைதியையும் சக்தியையும் அனுபவம் செய்ய வேண்டும். அது ஒரு கணநேரத்திற்காயினும், அந்த அனுபவத்தின் சக்தியானது நிச்சயமாக அவர்களை நெருக்கமான உறவுமுறையை ஏற்படுத்தச் செய்யும். எனவே, நீங்கள் திட்டங்களைச் செய்வீர்கள். குழந்தைகளான உங்களின் தைரியத்தையும் உற்சாகத்தையும் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். நீங்கள் சேவை செய்யும் ஆர்வத்தைக் கொண்டுள்ள குழந்தைகள். சேவை செய்வதற்கான ஆழ்ந்த அன்பு உங்களுக்கு உள்ளது. ஏதாவது புதுமை ஏற்பட வேண்டும் என நிச்சயமாக அனைவரும் நினைக்கிறார்கள். புதுமையை ஏற்படுத்துவதற்கு, அனைத்திற்கும் முதலில் அனைவரிடமும் ஒற்றுமையான எண்ணம் ஏற்பட வேண்டும். ஒருவர் எதையாவது கூறும்போது, அனைவரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் இந்த ஒற்றுமையான எண்ணத்தின் திடசங்கற்பத்துடன் இருங்கள். ஒரு செங்கல் அசைந்தாலும், அது முழுச் சுவரையும் அசையச் செய்துவிடும். ஒருவரின் எண்ணம் சூழ்நிலைகளால் அல்லது வேறொரு காரணத்தினால் பலவீனம் அடைந்தால், முழு நிகழ்ச்சியும் பலவீனம் ஆகிவிடும். ஆகவே, உங்களுக்குள் திடசங்கற்பத்துடன் ‘நான் இதைச் செய்ய வேண்டும், நான் அனைவரின் ஒத்துழைப்பையும் பெறுவேன்’ என நினையுங்கள். அதன்பின்னர் அதைச் செய்யுங்கள். உங்களின் சேவையைப் பார்த்து பாப்தாதா களிப்படைகிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் இல்லை. ஆனால் இப்போது தங்கத்தில் இரத்தினங்களைப் பதிக்க வேண்டும். அப்போதே அவை தொலைவில் இருந்தும் கவரக்கூடியதாக இருக்கும்.
வெளிநாட்டிலும் உள்ள குழந்தைகளிடம் மிக நல்ல தைரியம் உள்ளது. தமது மைக் இங்கு வந்துள்ளதாகவும், சத்தம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தமக்கிடையே சிரிக்கிறார்கள். எவ்வாறாயினும், சிறிதளவு சத்தத்தை உருவாக்கக்கூடிய ஒருவரே இங்கு வந்துள்ளார். உரத்த சத்தத்தை ஏற்படுத்தக்கூடியவர் இன்னமும் இங்கு வரவில்லை. எனினும், நீங்கள் இந்தளவிற்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு நல்ல தைரியம் உள்ளது. அச்சா.
உங்களின் பூஜிக்கத்தகுதிவாய்ந்த ரூபங்கள் இப்போது வெளிப்பட வேண்டும். நீங்கள் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள். பூஜிப்பவர்கள் அல்ல. ‘இவர்கள் எமது விசேடமான இஷ்ட தெய்வங்கள், எமது மூதாதையர்கள், எமது பூஜிக்கத்தகுதிவாய்ந்தவர்கள், இவர்களே எமது ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடியவர்கள்’ என்பதை மக்கள் இப்போது அனுபவம் செய்ய வேண்டும். உங்களின் எல்லைக்குட்பட்ட எண்ணங்களும் ஆசைகளும் இப்போது முடிவடைய வேண்டும், அப்போது மட்டுமே இந்த அலை பரவும் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. இப்போதும், இன்னமும் சிறிதளவு ‘எனது’ என்பது உள்ளது. இப்போது, ‘எனது சம்ஸ்காரங்கள், எனது சுபாவம்’ என்பவற்றை இல்லாமல் செய்யுங்கள். தந்தையின் சம்ஸ்காரங்களே எனது சம்ஸ்காரங்கள். அவையே ஆதி சம்ஸ்காரங்கள், அப்படியல்லவா? பிராமணர்களின் மாற்றமே, உலக மாற்றத்திற்கான அடிப்படை ஆகும். எனவே, நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள்? நீங்கள் நிச்சயமாகச் சொற்பொழிவுகள் ஆற்ற வேண்டும். ஆனால், நீங்கள் பேச ஆரம்பித்ததும், அவர்கள் சத்தத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். உங்களின் சொற்பொழிவுகள் இவ்வாறு இருக்க வேண்டும். நீங்கள் பேச வேண்டும். நீங்கள் சத்தத்திற்குள் வரும்போது, அவர்கள் சத்தத்திற்கு அப்பால் செல்வார்கள். அவை வார்த்தைகளாக மட்டுமன்றி, அனுபவம் நிறைந்த வார்த்தைகளாக இருக்க வேண்டும். இந்த அலையானது அனைவரிலும் பரவவேண்டும். உதாரணமாக, ஒருவர் எதையாவது விவரிக்கும்போது, அது சிரிப்பு அலைகளை அல்லது அழுகையை அல்லது விருப்பமின்மையை ஏற்படுத்தினால், அது தற்காலிகமானதே. எவ்வாறாயினும், அந்த அலை பரவுகிறது. அதேபோன்று, அனுபவத்தின் அலையும் இப்போது பரவ வேண்டும். இதுவே நிகழ வேண்டும். உதாரணமாக, ஸ்தாபனையின் ஆரம்பத்தில், அவர்கள் ‘ஓம்’ என்று உச்சாடனம் செய்ய ஆரம்பித்ததும் பலருக்கு திரான்ஸ் காட்சிகள் தென்பட்டன. அந்த அலை பரவியது. அதேபோன்று, அனுபவத்தின் அலையும் ஒன்றுகூடலில் பரவவேண்டும். சிலருக்கு, அமைதியின் அனுபவமும் ஏனையோருக்கு சக்தியின் அனுபவமும் ஏற்பட வேண்டும். இந்த அலை பரவவேண்டும். அவர்கள் வெறுமனே செவிமடுப்பவர்கள் ஆகக்கூடாது. ஆனால், அனுபவ அலை ஏற்பட வேண்டும். உதாரணமாக, நீரூற்றில் அமிழும் ஒருவர் குளிர்மையையும் புத்துணர்ச்சியையும் அனுபவம் செய்வார். அதேபோன்று, அவர்களும் தொடர்ந்து அமைதியையும் அன்பையும் சக்தியையும் ஆனந்தத்தையும் அதீந்திரிய சுகத்தையும் அனுபவம் செய்ய வேண்டும். இன்று, விஞ்ஞானத்தால் உங்களுக்கு வெப்பத்தினதும் குளிர்ச்சியினதும் அனுபவத்தைக் கொடுக்கக்கூடியதாக உள்ளது. முழு அறையும் அந்த வெப்பநிலையை அடைகின்றது. அவ்வாறாயின், மாஸ்ரர் அமைதிக்கடல்களும் சக்தி மற்றும் அனைத்தின் கடல்களுமான சிவசக்திகளும் பாண்டவர்களுமான உங்களால் இந்த அலையைப் பரப்ப முடியாதா? அச்சா.
பரந்த, எல்லையற்ற புத்திகளைக் கொண்டுள்ள பலர் இங்கு ஒன்றுகூடியுள்ளார்கள். சக்தி சேனையும் பெரியது. மேன்மையான ஆத்மாக்கள் பலர் ஒரே வேளையில் ஒன்றாக மதுவனத்திற்கு வருதல் சிறிய விடயம் அல்ல. இப்போது, நீங்கள் ஒருவருக்கொருவர் சாதாரணமாக இருப்பதனால், அனைத்தும் சாதாரணமாக இருப்பதைக் காண்பீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் மேன்மையான ஆத்மா ஆவீர்கள். கல்பம் முழுவதிலும் வேறெந்த வேளையிலும் பல மேன்மையான ஆத்மாக்களின் இத்தகைய ஒன்றுகூடல் இருக்க முடியாது. ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. நீங்கள் இப்போது ஒருவரையொருவர் சாதாரணமானவராகக் கருதுகிறீர்கள். நீங்கள் மேற்கொண்டு முன்னேறுகையில், ஒவ்வொருவரையும் அவரின் சிறப்பியல்பிற்கேற்ப விசேடமான ஆத்மாவாகக் கருதுவீர்கள். இப்போது, மக்களின் சிறப்பியல்புகளை அதிகளவில் பார்ப்பதற்குப் பதிலாக, அவர்களின் அற்ப விடயங்களை நீங்கள் அவதானிக்கிறீர்கள். இதைப் பற்றிச் சிறிது சிந்தியுங்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பல பக்தர்களின் மூதாதையர் ஆவீர்கள். நீங்கள் அனைவரும் விசேடமான இஷ்ட தெய்வங்கள், அல்லவா? ஒவ்வொரு விசேடமான இஷ்ட தெய்வத்திற்கும் பல பக்தர்கள் இருப்பார்கள். நீங்கள் சிறிய ஆளுமையைக் கொண்டவர்கள் அல்ல. அப்படியல்லவா? ஒரு விக்கிரகத்திற்கும் அதிகளவு முக்கியத்துவம் உள்ளது. ஆகவே, பல விசேடமான இஷ்ட தெய்வங்கள் ஒன்றாகக் கூடினால், என்ன நிகழும்? நீங்கள் சக்திசாலிகள். ஆனால், நீங்கள் உங்களுக்குள்ளே மறைந்திருப்பதனால், உலகின் முன்னாலும் மறைந்துள்ளீர்கள். உண்மையில், ஒவ்வொருவரின் மதிப்பும் எண்ணற்றது. பாப்தாதா குழந்தைகளின் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது, ஒவ்வொரு குழந்தையும் மகத்தானவர் என்பதையிட்டு அவர் பெருமைப்படுகிறார். சில வேளைகளில் நீங்கள் யார் என்பதையும், ஏனைய வேளைகளில் நீங்கள் யார் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள். இல்லாவிடின், நீங்கள் மிகவும் மகத்தானவர்கள். நீங்கள் சாதாரணமான ஆளுமைகளைக் கொண்டுள்ளவர்கள் அல்ல. சிறிதளவு வெளிப்படுத்துகை இடம்பெற்றாலும், நீங்கள் யார் என்பதை நீங்களும் அறிந்து கொள்வீர்கள். தந்தை உங்களின் மகத்துவத்தைப் பார்க்கிறார். நீங்கள் அனைவரும் தந்தைக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளீர்கள். அச்சா. உங்கள் ஒவ்வொருவரின் சிறப்பியல்பு என்னவென்பதைப் பற்றி வகுப்பு நடத்துங்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் அழியாத போதையைப் பேணுவதுடன், ஆன்மீகக் களிப்பையும் சுகத்தையும் அனுபவம் செய்யும் தேவதை ஆகப் போகும் பிராமணர் ஆகுவீர்களாக.தேவதைகள் ஆகப் போகும் பிராமணர்களான நீங்கள் தேவர்களை விட அதியுயர்ந்தவர்கள். தந்தையின் ஞானம் தேவர்களின் வாழ்க்கைகளில் வெளிப்படப்போவதில்லை. இறைவனை சந்திக்கும் அனுபவமும் அங்கு இருக்காது. ஆகவே, இப்போது, தேவதைகள் ஆகப்போகும் பிராமணர்களான நீங்கள் தேவர்களை விட அதிமேலானவர்கள் என்ற போதையை எப்போதும் வைத்திருங்கள். இந்த அழியாத போதை மட்டுமே நீங்கள் ஆன்மீகக் களிப்பையும் சுகத்தையும் அனுபவம் செய்ய வைக்கும். சதா இந்த போதை உங்களிடம் இல்லாவிட்டால், நீங்கள் சிலவேளைகளில் களிப்பானவராகவும் சிலவேளைகளில் குழப்பத்திற்குரியவராகவும் இருப்பீர்கள்.
சுலோகம்:
உங்களின் சேவையையும் தந்தையிடம் அர்ப்பணியுங்கள். அப்போதே நீங்கள் அர்ப்பணித்த ஆத்மா என்று அழைக்கப்படுவீர்கள்.