28/10/18 Avyakt Bapdada Tamil Lanka Murli 22.02.84 Om Shanti Madhuban
சங்கமயுகத்தின் நான்கு ஒன்றிணைந்த ரூபங்களின் அனுபவம்.
இன்று, பாப்தாதா குழந்தைகள் அனைவரினதும் ஒன்றிணைந்த ரூபங்களைப் பார்க்கிறார். குழந்தைகளான நீங்கள் ஒவ்வொருவரும் உங்களின் ஒன்றிணைந்த ரூபத்தை மிக நன்றாக அறிவீர்களா? முதலில், மேன்மையான ஆத்மாக்களான நீங்கள், உங்களுடைய இறுதியான, பழைய சரீரங்களுடன் ஒன்றிணைந்துள்ளீர்கள். ஆனால் அந்தச் சரீரங்கள் உங்களை அதிகபட்சம் பெறுமதிமிக்கவர்கள் ஆக்குகின்றன. மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் அனைவரும் அந்தச் சரீரங்களின் ஆதாரத்துடன் மேன்மையான பணியைச் செய்கிறீர்கள். அத்துடன் அவற்றின் மூலம் பாப்தாதாவைச் சந்திப்பதையும் அனுபவம் செய்கிறீர்கள். ஒவ்வொருவருக்கும் பழைய சரீரமே உள்ளது. ஆனால் அந்த இறுதிச் சரீரத்தின் மகத்துவமானது, மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் அதனூடாக அலௌகீக அனுபவத்தைப் பெறுவதாகும். ஆகவே, ஆத்மாவும் சரீரமும் ஒன்றிணைந்துள்ளன. அது பழைய சரீரம் என்ற உணர்வினை நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. ஆனால், அதன் அதிபதியாகி, அதைச் செயற்பட வையுங்கள். எனவே, ஆத்ம உணர்வுடையவராகவும் கர்மயோகியாகவும் ஆகி, பௌதீக அவயவங்களைச் செயற்பட வையுங்கள்.
இரண்டாவதாக, உங்களுடைய அலௌகீக ரூபத்தினதும், உருவமற்ற ரூபத்தினதும் (தந்தை) ஒன்றிணைந்த ரூபம் உள்ளது. கல்பம் முழுவதிலும், இப்போது மட்டுமே உங்களால் இந்த ஒன்றிணைந்த ரூபத்தை அனுபவம் செய்ய முடியும். இது உங்களினதும் தந்தையினதும் ஒன்றிணைந்த ரூபத்தின் அனுபவம் ஆகும். எப்போதும், மாஸ்ரர் சர்வசக்திவானாகவும், வெற்றியாளராகவும், அனைவருக்கும் தடைகளை அழிப்பவராகவும் இருப்பதன் மூலமும், எப்போதும் நல்லாசிகளையும் மேன்மையான உணர்வுகளையும் மேன்மையான வார்த்தைகளையும் மேன்மையான திருஷ்டியையும் மேன்மையான செயல்களையும் கொண்டிருப்பதன் மூலமும், நீங்கள் மற்றவர்களுக்கு உலக உபகாரியாக இருக்கும் அனுபவத்தை வழங்குகிறீர்கள். இது ஒரு விநாடியில் சகல பிரச்சனைகளுக்கும் தீர்வுகளின் சொரூபமாக உங்களை ஆக்குகிறது. இது உங்களை, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அருள்பவராகவும் மாஸ்ரர் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆக்குகிறது. சதா இந்த ஒன்றிணைந்த ரூபத்தில் ஸ்திரமாக இருங்கள். உங்களால் இலகுவாக நினைவினதும் சேவையினதும் வெற்றி சொரூபம் ஆகமுடியும். பெயரளவிலேயே அதற்கான வழிமுறை இருக்கும். வெற்றி எப்போதும் உங்களுடன் இருக்கும். இந்த வேளையில், வழிமுறையைப் பின்பற்றுவதற்கு அதிகளவு நேரம் செலவாகுகிறது. உங்களின் கொள்ளளவிற்கேற்பவே வெற்றி அனுபவம் செய்யப்படுகிறது. எவ்வாறாயினும், எந்தளவிற்கு அதிகமாக இந்த அலௌகீக, சக்திநிறைந்த, ஒன்றிணைந்த ரூபத்தில் சதா இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு அந்த வழிமுறையால் நீங்கள் அதிகளவு வெற்றியை அனுபவம் செய்வீர்கள். அப்போது, நீங்கள் செய்யம் முயற்சியை விட அதிகமான பேற்றினை நீங்கள் அனுபவம் செய்வீர்கள். வெற்றி சொரூபமாக இருப்பதன் அர்த்தம், ஒவ்வொரு பணியிலும் வெற்றிக்கு ஏற்கனவே உத்தரவாதம் உள்ளது என்பதே ஆகும். இது உங்களின் நடைமுறை அனுபவமாக இருக்க வேண்டும்.
மூன்றாவது ஒன்றிணைந்த ரூபமானது: ‘பிராமணரான நான், தேவதை ஆவேன்’ என்பதாகும். பிராமண ரூபமும் இறுதி கர்மாதீத் தேவதை ரூபமும். இந்த ஒன்றிணைந்த ரூபத்தின் அனுபவமானது, உங்களை உலகிற்கே காட்சிகளை அருளும் ரூபம் ஆக்கும். நீங்கள் நடக்கும்போதும் அசையும்போதும், உங்களின் பௌதீகச் சரீரத்தால் பௌதீக உலகில் உங்களின் பாகத்தை நடிக்கும்போதும், பிராமணராகவும் தேவதையாகவும் இருக்கும் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதனால், நீங்கள் உங்களைத் தந்தை பிரம்மாவின் சகபாடியாக, சூட்சுமவதனத்தின் தேவதையாக, உலக சேவைக்காக பௌதீக உலகில் ஒரு சரீரத்தில் வந்திருப்பவராக அனுபவம் செய்வீர்கள். நீங்கள் உங்களை பௌதீக உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவராகவும் அவ்யக்த் ரூபத்தைப் பெற்ற ஒருவராகவும் அனுபவம் செய்வீர்கள். இந்த அவ்யக்த் உணர்வுகள், அதாவது, தேவதையாக இருக்கும் உணர்வுகள், இயல்பாகவே உங்களை அவ்யக்த் ஆக்கும். அதாவது, அவை இலகுவாக புற வார்த்தைகள் மற்றும் நடத்தைக்குரிய சம்ஸ்காரங்கள், புற சுபாவம், புற உணர்வுகளை மாற்றும். உணர்வுகள் மாறும்போது, அனைத்தும் மாறுகின்றன. உங்களின் ரூபத்தில் எப்போதும் இத்தகைய அவ்யக்த் உணர்வுகள் இருக்க வேண்டும். நீங்கள் தேவதைகளாக இருக்கும் பிராமணர்கள் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு இருக்க வேண்டும். இப்போது அந்த விழிப்புணர்வு நடைமுறை ரூபத்தைப் பெற வேண்டும். அந்த ரூபம் சதா இலகுவாகவும் இயல்பாகவும் பேணப்பட வேண்டும். அதை நடைமுறை ரூபத்தில் இடுவதெனில், நீங்கள் எப்போதும் அவ்யக்த் தேவதையாக இருத்தல் என்று அர்த்தம். சிலவேளைகளில் மறப்பதும், சிலவேளைகளில் நினைப்பதும் என்ற விழிப்புணர்வில் இருத்தல் முதல் ஸ்திதி ஆகும். அந்த ரூபம் ஆகுதல் மேன்மையான ஸ்திதி ஆகும்.
நான்காவதாக, எதிர்கால நான்கு கை ரூபம் - இலக்ஷ்மி மற்றும் நாராயணனின் ஒன்றிணைந்த ரூபம் உள்ளது. ஏனெனில், இந்த வேளையில், ஆத்மாக்களான நீங்கள் இலக்ஷ்மி மற்றும் நாராயணன் என்ற இருவரின் சம்ஸ்காரங்களாலும் நிரப்பப்படுகிறீர்கள். சிலவேளைகளில், நீங்கள் இலக்ஷ்மி ஆகுவீர்கள். சிலவேளைகளில், நீங்கள் நாராயணன் ஆகுவீர்கள். எதிர்கால வெகுமதியின் ஒன்றிணைந்த ரூபம் தெளிவானதாக இருக்க வேண்டும். இன்று ஒரு தேவதை, நாளை ஒரு தேவர். ஒரு கணம் தேவதை, அடுத்த கணம் தேவர். உங்களின் இராச்சியமும் உங்களின் இராஜ ரூபமும் வரவுள்ளன. அவை பெரும்பாலும் தயாராகிவிட்டன. இந்த முறையில் உங்களின் எண்ணங்கள் தெளிவாகவும் சக்திவாய்ந்தவையாகவும் இருக்க வேண்டும். ஏனெனில், உங்களின் தெளிவான, சக்திவாய்ந்த எண்ணங்கள் வெளிப்படும்போது, உங்களின் இராச்சியமும் நெருங்கி வரும். உங்களின் எண்ணங்கள் வெளிப்படும்போது, அவை புதிய உலகை உருவாக்கும். அதாவது, அவை இதை இந்த உலகிற்கு அழைத்து வரும். உங்களின் எண்ணங்கள் அமிழும்போது, புதிய உலகை வெளிப்படுத்த முடியாது. பிரம்மாவின் எண்ணங்கள், பிராமணர்களின் எண்ணங்களுடன் சேர்ந்து இந்த பூமியில் புதிய உலகை வெளிப்படுத்தும். தந்தை பிரம்மா, உங்களுடன் செல்வேன் என அவர் செய்த சத்தியத்தினால், பிராமணக் குழந்தைகளான உங்களுடன் சேர்ந்து புதிய உலகில் முதல் பாகத்தை நடிப்பதற்குக் காத்திருக்கிறார். பிரம்மா மட்டும் கிருஷ்ணர் ஆகினால், அவர் மட்டும் தனியே என்ன செய்வார்? அவருடன் விளையாடுவதற்கும் சேர்ந்து படிப்பதற்கும் ஏனையவர்களும் தேவை. இதனாலேயே, தந்தை பிரம்மா பிராமணர்களுக்குக் கூறுகிறார்: அவ்யக்த் ரூபத்தை எடுத்த தந்தையான எனக்குச் சமமானவர் ஆகுங்கள். அதாவது, அவ்யக்த ரூபமும் தேவதை ஸ்திதியையும் கொண்டவர் ஆகுங்கள். தேவதைகள் தேவர்கள் ஆகுவார்கள். உங்களுக்குப் புரிகிறதா? இந்த ஒன்றிணைந்த ரூபங்கள் அனைத்திலும் ஸ்திரமாக இருப்பதன் மூலம் மட்டுமே, நீங்கள் சம்பூரணமானவராகவும் முழுமையானவராகவும் ஆகுவீர்கள். நீங்கள் தந்தைக்குச் சமமானவர் ஆகி, இலகுவாக உங்களின் செயல்களின் வெற்றியை அனுபவம் செய்வீர்கள்.
இரட்டை வெளிநாட்டவர்கள், பாப்தாதாவுடன் கலந்துரையாடவும் சந்திப்பைக் கொண்டாடுவதற்குமான ஆழ்ந்த விருப்பத்தைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் இன்று பாபாவைச் சந்திக்க வேண்டும் என்று உணர்கிறீர்கள். எவ்வாறாயினும், இந்த பௌதீக உலகில் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இது சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் கீழுள்ள உலகம் ஆகும். இவை அனைத்திற்கும் அப்பாற்பட்ட உலகிற்கு வாருங்கள். அங்கு எல்லா வேளையும் உங்களால் அமர்ந்திருக்க முடியும். பாப்தாதாவும் ஒவ்வொரு குழந்தையையும் அவரின் சிறப்பியல்பிற்காக விரும்புகிறார். குறிப்பிட்ட சிலர் அதிகளவில் நேசிக்கப்படுவதாகவும், நீங்கள் அந்தளவில் நேசிக்கப்படுவதில்லை என்றும் உங்களில் சிலர் நினைக்கிறீர்கள். இது இவ்வாறு அல்ல. மகாராத்திகள் அவர்களின் சிறப்பியல்பிற்காக நேசிக்கப்படுகிறார்கள். தந்தையின் முன்னால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே உரிய முறையில் மகாராத்திகள் ஆவீர்கள். நீங்கள் மகாத்மாக்கள். அதனால் மகாராத்திகள் ஆவீர்கள். இந்தப் பணியைச் செய்வதற்கு, யாராவது ஒருவர் அன்புடன் கருவி ஆக்கப்பட்டுள்ளார். இல்லாவிடின், நீங்கள் அனைவரும் பணிக்காக உங்களுக்குரிய இடங்களைப் பெற்றுள்ளீர்கள். அனைவரும் தாதி ஆகினால் எவராவது பணி செய்வார்களா? யாராவது ஒருவர் கருவி ஆக்கப்பட வேண்டும். உண்மையில், உங்களுக்கே உரிய முறையில், நீங்கள் அனைவரும் தாதிகளே. அனைவரும் தீதி அல்லது தாதி என்று அழைக்கப்படுகிறார். எவ்வாறாயினும், நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒருவரைக் கருவி ஆக்கியுள்ளீர்கள். நீங்கள் அனைவரும் அவரைக் கருவி ஆக்கினீர்களா அல்லது தந்தை மட்டும் அவரைக் கருவி ஆக்கியுள்ளாரா? செயல்களைப் பொறுத்தவரையும் ஒவ்வொருவரின் பணிக்கேற்பவும் ஒருவர் கருவி ஆக்கப்பட்டுள்ளார். நீங்கள் அனைவரும் மகாராத்திகள் இல்லை என்பது இதன் அர்த்தம் இல்லை. நீங்களும் மகாராத்திகளே. நீங்கள் மகாவீரர்கள். மாயைக்குச் சவால் விடுப்பவர்கள் மகாராத்திகள் இல்லாவிடின், அவர்கள் வேறு யாராக இருக்க முடியும்?
பாப்தாதாவிற்கு, ஏழு நாள் பாடநெறிகளைப் பெறுபவர்களும் மகாராத்திகளே. ஏனெனில், அவர்கள் ஏழு நாள் பாடநெறியைப் பெறுகிறார்கள். அதன்பின்னர், தாம் தமது வாழ்க்கைகளை மேன்மையானது ஆக்கிக் கொள்ள வேண்டும் என அவர்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் சவால் விடுத்துள்ளனர். எனவே, அவர்கள் மகாராத்திகளும் மகாவீரர்களும் ஆவார்கள். பாப்தாதா குழந்தைகளான நீங்கள் அனைவரும் ஒரு சுலோகனைப் பயிற்சி செய்ய வேண்டும் என சதா நினைவூட்டுகிறார். உங்களின் ஆதி ஸ்திதியைப் பேணுவது ஒரு விடயம். மற்றவர்களுடன் கலந்துபழகுவது இன்னொரு விடயம். உங்களின் ஆதி ஸ்திதியில், நீங்கள் அனைவரும் பெரியவர்கள். உங்களில் எவரும் சிறியவர்கள் அல்ல. வர்த்தகச் செயற்பாட்டில், யாராவது ஒருவர் கருவி ஆக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே, உங்களின் வர்த்தகத்திலும் செயற்பாட்டிலும் சதா வெற்றிநிறைந்தவர் ஆகவேண்டுமெனில், அதற்கான சுலோகம், ‘மரியாதை கொடுத்து, மரியாதையைப் பெறுங்கள்’ என்பதே ஆகும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதெனில், மரியாதையைப் பெற்றுக் கொள்வதாகும். கொடுப்பதில் பெறுதல் அடங்கியுள்ளது. மரியாதையைக் கொடுங்கள். நீங்கள் மரியாதையைப் பெற்றுக் கொள்வீர்கள். மரியாதையைப் பெறுவதற்கான வழிமுறை, அதை வழங்குவதே ஆகும். நீங்கள் மரியாதை கொடுக்கும்போது, மரியாதையைப் பெறாமல் விடுதல் என்பது சாத்தியம் இல்லை. எவ்வாறாயினும், உங்களின் சொந்த நலனுக்காக மேலோட்டமாகக் கொடுக்காமல், உங்களின் இதயபூர்வமாகக் கொடுங்கள். இதயபூர்வமாக மரியாதை கொடுப்பவர்கள், தமது இதயங்களில் மரியாதையைப் பெறுகிறார்கள். நீங்கள் மேலோட்டமான மரியாதையைக் கொடுத்தால், மேலோட்டமான மரியாதையையே நீங்களும் பெறுவீர்கள். எப்போதும் உங்களின் இதயபூர்வமாகக் கொடுத்து, உங்களின் இதயபூர்வமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். இந்த சுலோகத்தினால், நீங்கள் எப்போதும் தடைகளில் இருந்து விடுபட்டவராகவும், வீணான எண்ணங்களில் இருந்து விடுபட்டவராகவும் கவலையற்றவராகவும் இருப்பீர்கள். அதன்பின்னர், ‘எனக்கு என்ன நிகழும்?’ என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடன் செய்ய வேண்டிய அனைத்தும் ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. அதற்கு ஏற்கனவே உத்தரவாதம் உள்ளது. நீங்கள் கவலையற்றவராக இருப்பீர்கள். நிகழ்காலத்தினதும் எதிர்காலத்தினதும் மேன்மையான வெகுமதியானது, இத்தகைய மேன்மையான ஆத்மாக்களுக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. எவராலும் இதை மாற்ற முடியாது. எவராலும் வேறொருவரின் ஆசனத்தை எடுத்துக் கொள்ள முடியாது. அது நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது நிச்சயிக்கப்பட்டிருப்பதனால், நீங்கள் கவலையற்றவர்களாக இருப்பீர்கள். இது, தந்தைக்குச் சமமாக இருப்பது என்றும், தந்தையைப் பின்பற்றுபவராக இருத்தல் என்றும் அழைக்கப்படுகிறது. உங்களுக்குப் புரிகிறதா?
பாபா இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளிடம் விசேடமான அன்பு வைத்துள்ளார். மேலோட்டமான அன்பு அல்ல. ஆனால் இதயபூர்வமான அன்பு. ‘நான் உலகிலுள்ள மிக உயர்ந்த தடைகளைத் தாண்டி வந்துள்ளேன்’ என்றொரு பழைய பாடல் இருப்பதாக பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். இதுவே இரட்டை வெளிநாட்டவர்களின் பாடலும் ஆகும். நீங்கள் கடல், மதங்கள், நாடுகள், மொழிகள் என்ற உயரமான தடைகளைக் கடந்து வந்து, தந்தைக்குச் சொந்தமாகியுள்ளீர்கள். இதனாலேயே, நீங்கள் தந்தையால் நேசிக்கப்படுகிறீர்கள். பாரத மக்கள் தேவர்களை வழிபடுபவர்கள். அவர்கள் உயரமான தடைகளைக் கடக்கவில்லை. எவ்வாறாயினும், இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள், மிக இலகுவாக உயரமான தடைகளைக் கடந்து வந்துள்ளீர்கள். இதனாலேயே, குழந்தைகளான உங்களின் இந்தச் சிறப்பியல்பைப் பற்றிய பாடல்களை பாப்தாதா தனது இதயபூர்வமாகப் பாடுகிறார். உங்களுக்குப் புரிகிறதா? உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக பாபா இதை உங்களுக்குக் கூறவில்லை. பாப்தாதா அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறார் எனச் சில குழந்தைகள் விளையாட்டாகக் கூறுவார்கள். எவ்வாறாயினும், பாபா அர்த்தபூர்வமாகவே அனைவரையும் சந்தோஷப்படுத்துகிறார். பாப்தாதா இதைக் கூற வேண்டும் என்பதற்காகக் கூறுகிறாரா அல்லது அது நடைமுறையானதா என உங்களையே கேட்டுப் பாருங்கள். நீங்கள் உயரமான தடைகளைத் தாண்டியே இங்கு வந்துள்ளீர்கள், அப்படியல்லவா? நீங்கள் மிகுந்த முயற்சி செய்து உங்களின் டிக்கெட்டுக்களைப் பெறுகிறீர்கள். இங்கிருந்து திரும்பியதும், நீங்கள் அதற்காகப் பணத்தைச் சேமிக்க ஆரம்பிக்கிறீர்கள். பாப்தாதா குழந்தைகளான உங்களின் அன்பையும், இங்கு வருவதற்காக மிகுந்த அன்புடன் நீங்கள் மேற்கொண்டுள்ள வழிமுறைகளையும், எவ்வாறு நீங்கள் இங்கு வருகிறீர்கள் என்றும் பார்க்கிறார். அன்பான வழிமுறைகளையும், அன்பான ஆத்மாக்களான உங்களின் ஆழ்ந்த அன்பையும் காண்கையில் பாப்தாதா களிப்படைகிறார். வெகு தொலைவில் இருந்து வருபவர்களிடம், அவர்கள் எவ்வாறு வருகிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள். அவர்கள் முயற்சி செய்ய வேண்டியிருந்தாலும், குறைந்தபட்சம் அவர்கள் இங்கு வந்துள்ளார்கள். அச்சா.
சதா ஒன்றிணைந்த ரூபத்தில் ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், தந்தையைப் போன்று அவ்யக்த உணர்வில் சதா ஸ்திரமாக இருப்பவர்களுக்கும், சதா வெற்றி சொரூபமாக இருப்பதை அனுபவம் செய்பவர்களுக்கும், தமது சக்திவாய்ந்த, சமமான ரூபத்தினூடாக காட்சியை அருள்பவர்களுக்கும், சதா கவலையற்றவர்களாக இருப்பதுடன், வெற்றி நிச்சயிக்கப்பட்டிருப்பவர்களுக்கும், இத்தகைய குழந்தைகளுக்கு, பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
பாப்தாதா சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து வந்திருக்கும் குழுவினருடன் பேசுகிறார்:
நீங்கள் அனைவரும் உங்களை முழு உலகிலும் விசேடமான ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? இது ஏனெனில், உலகிலுள்ள ஆத்மாக்கள் அனைவரிலும் விசேடமான ஆத்மாக்களான நீங்களே தந்தையை இனங்கண்டு கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். அதிமேலான தந்தையை இனங்கண்டு கொள்வதென்பது மகத்தான பாக்கியம் ஆகும்! நீங்கள் அவரை இனங்கண்டு கொண்டீர்கள். அவருடன் உறவுமுறையை ஏற்படுத்தி, நன்மையைப் பெறுகிறீர்கள். இப்போது, நீங்கள் உங்களைத் தந்தையின் பொக்கிஷங்கள் அனைத்தினதும் அதிபதிகளாக அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் எப்போதும் அவரின் குழந்தைகளாக இருப்பதனால், அவரின் குழந்தையாக இருத்தல் என்றால் எப்போதும் உரிமையைக் கொண்டிருப்பதாகும். இந்த விழிப்புணர்வை மீண்டும் மீண்டும் உங்களுக்குள் மீட்டிப் பாருங்கள்: ‘நான் யார்? நான் யாருடைய குழந்தை?’ அமிர்த வேளையில் சக்திவாய்ந்த விழிப்புணர்வின் ரூபத்தை அனுபவம் செய்பவர்கள் மட்டுமே சக்திசாலிகளாக இருப்பார்கள். அமிர்தவேளை சக்திநிறைந்ததாக இல்லாவிட்டால், நாள் முழுவதும் பல தடைகள் ஏற்படும். எனவே, அமிர்தவேளை எப்போதும் சக்திநிறைந்ததாக இருக்க வேண்டும். அமிர்தவேளையில், குழந்தைகளான உங்களுக்கு விசேடமான ஆசீர்வாதங்களை வழங்குவதற்குத் தந்தையே வருகிறார். அந்த வேளையில் அந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்பவர்களால் நாள் முழுவதும் இலகு யோகி என்ற ஸ்திதியைப் பேண முடியும். எனவே, கல்வி, அமிர்தவேளை இரண்டும் எப்போதும் குறிப்பாகச் சக்திவாய்ந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால் நீங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்பீர்கள்.
ஜேர்மன் குழுவினருடன் பேசுகிறார்:
நீங்கள் உங்களை எப்போதும் உலக உபகாரி ஆத்மாக்களாக, உலக உபகாரத் தந்தையின் குழந்தைகளாகக் கருதுகிறீர்களா? சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருத்தல் என்பதே இதன் அர்த்தம் ஆகும். நீங்கள் சகல பொக்கிஷங்களால் நிறைந்திருக்கும்போது மட்டுமே, உங்களால் மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும். ஆகவே, நீங்கள் எப்போதும் சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருக்கும் ஆத்மாக்களும் குழந்தைகளும் அதனால் அதிபதிகளும் ஆவீர்கள். நீங்கள் இதை அனுபவம் செய்கிறீர்களா? ‘தந்தை’ என்று கூறுவதெனில், குழந்தையாகவும் அதிபதியாகவும் இருத்தல் என்று அர்த்தம். இந்த விழிப்புணர்வானது இயல்பாகவே உங்களை உலக உபகாரியாக ஆக்குகிறது. இந்த விழிப்புணர்வானது, உங்களை சதா சந்தோஷத்தில் பறக்கச் செய்கிறது. இந்த பிராமண வாழ்க்கை என்றால் நிறைந்தவராக இருத்தல், சந்தோஷத்துடன் பறத்தல், எப்போதும் தந்தையின் பொக்கிஷங்களுக்கான உரிமையின் போதையைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம் ஆகும். நீங்கள் இத்தகைய மேன்மையான பிராமண ஆத்மாக்கள் ஆவீர்கள். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் நடக்கும்போதும் உலாவரும்போதும் உங்களின் ஒவ்வொரு செயலாலும் வார்த்தையாலும் கற்பித்தல்களை வழங்கும் மாஸ்ரர் ஆசிரியர் ஆகுவீர்களாக.
தற்காலத்தில் நடமாடும் நூல்நிலையங்கள் இருப்பதைப் போன்று, நீங்கள் நடக்கும் அசையும் மாஸ்ரர் ஆசிரியர்கள் ஆவீர்கள். எப்போதும் உங்களின் மாணவர்களை உங்கள் முன்னால் பாருங்கள். நீங்கள் தனியே இல்லை. உங்களின் மாணவர்கள் எப்போதும் உங்களின் முன்னே இருக்கிறார்கள். நீங்கள் சதா கற்கிறீர்கள். அத்துடன் கற்பிக்கிறீர்கள். தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ஒருபோதும் தமது மாணவர்களின் முன்னால் கவனக்குறைவாக இருப்பதில்லை. அவர்கள் கவனம் செலுத்துவார்கள். நீங்கள் தூங்கும்போதும், விழித்தெழும்போதும், நடக்கும்போதும் உண்ணும்போதும், ஒவ்வொரு கணமும் நீங்கள் பெரியதொரு கல்லூரியில் இருக்கிறீர்கள் என்றும் உங்களின் மாணவர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் நினையுங்கள்.
சுலோகம்:
சுயத்தில் நம்பிக்கையுடன் உங்களின் சம்ஸ்காரங்களை சம்பூரணமாகத் தூய்மையாக்குதல் மேன்மையான யோகம் ஆகும்.