25.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:

இனிய குழந்தைகளே, அவ் அப்பொழுது ஞானக்கடலிடம் வாருங்கள். உங்களை ஞான இரத்தினங்கள் என்ற பொருட்களினால் நிரப்பி, பின்னர் சென்று அவற்றை விநியோகியுங்கள். ஞானக்கடலைக் கடைந்து உங்களைச் சேவையில் ஈடுபடுத்துங்கள்.

கேள்வி:
எல்லாவற்றிலும் மிகச்சிறந்த முயற்சி என்ன? தந்தை எக் குழந்தைகளை நேசிக்கின்றார்?

பதில்:
ஒருவரது வாழ்க்கையை உருவாக்குவதே அனைத்திலும் மிகச்சிறந்த முயற்சி. குழந்தைகளாகிய நீங்கள் இம் முயற்சியில் உங்களை ஈடுபடுத்த வேண்டும். எப்பொழுதேனும் தவறு செய்தால், அதனை ஈடுசெய்வதற்காக அதிகளவு சேவை செய்யுங்கள். அல்லது அத் தவறு உங்கள் மனச்சாட்சியைத் தொடர்ந்தும் உறுத்தும். தந்தை ஞானியாகவும் யோகியாகவும் இருக்கும் குழந்தைகளையே பெரிதும் நேசிக்கின்றார்.

பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே ஞான மழை பொழிகிறது!

ஓம்சாந்தி.
முரளியை நேரடியாகச் செவிமடுப்பதற்கும் பதிவுநாடாவில் கேட்பதற்கும், அதனை வாசிப்பதற்கும் இடையில் நிச்சயமாக வேறுபாடு உள்ளது என்பதைக் குழந்தைகளாகிய உங்களால் புரிந்துகொள்ள முடியும். பாடல் கூறுகிறது: அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே ஞான மழை பொழிகிறது. மழை அனைவருக்காகவும் பொழிகின்றதாயினும், தந்தையுடன் இருப்பவர்கள் தந்தையின் முகபாவனைகளைப் புரிந்துகொள்வதாலும், அவரது பல்வேறு வழிகாட்டல்களை அறிந்து கொள்வதாலும் அதிகளவு நன்மையையும் அடைய முடியும். எவ்வாறாயினும், எவரும் இங்கே வெறுமனே அமர முடியும் என்றல்ல. உங்களை நீங்கள் பொருட்களால் நிரப்பி, பின்னர், சென்று சேவை செய்ய வேண்டும். பின்னர் திரும்பவும் வந்து மீண்டும் உங்களைப் பொருட்களால் நிரப்பிக் கொள்ளுங்கள். மக்கள், பொருட்களை விற்பதற்காகவே அவற்றைக் கொள்வனவு செய்கிறார்கள். அவர்கள் அவற்றை விற்ற பின்னர், மேலும் வாங்குவதற்காக மீண்டும் வருகிறார்கள். இவையும் ஞான இரத்தினங்கள் என்ற பொருட்களேயாகும். மென்மேலும் பொருட்களைப் பெறுவதற்காகவே நீங்கள் மீண்டும் வருகிறீர்கள். விநியோகமே செய்யாதிருக்கும் அளவுக்கு விவேகமற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பழைய பொருட்களையே பற்றிக் கொண்டிருக்கிறார்கள்; ஏனெனில் அவர்கள் மேலும் புதிய பொருட்களை வாங்க விரும்புவதில்லை. மக்களே யாத்திரைகளுக்குச் செல்கின்றார்கள்; அவ் யாத்திரைத் தலம் மக்களிடம் வருவதில்லை. ஏனெனில், அவ் விக்கிரகங்கள் உயிரற்றவை. குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இவ் விடயங்களைப் புரிந்துகொள்கிறீர்கள். மக்களோ எதையுமே புரிந்துகொள்வதில்லை. ஸ்ரீ ஸ்ரீ மகாமண்டலேஷ்வரர் போன்ற பெரிய குருமார்கள் தம்மைப் பின்பற்றுகின்றவர்களை யாத்திரையில் அழைத்துச் செல்கிறார்கள். பலரும் திரிவேணிக்குச் செல்கிறார்கள். நதிகளுக்குச் சென்று அங்கே தானதர்மங்கள் செய்வது புண்ணியம் என்று அவர்கள் கருதுகிறார்கள். இங்கே பக்தி செய்தல் என்ற கேள்விக்கு இடமில்லை. இங்கே நீங்கள் தந்தையிடம் வர வேண்டும். ஆகவே, குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொண்டு, பின்னர் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் கண்காட்சிகளுக்கு வருகின்றவர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். குழந்தைகளே, அனைவருமே 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வருவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். இதனை விளங்கப்படுத்துவதற்கு மிக நல்ல வழிமுறை தேவைப்படுகின்றது. மக்கள் குழப்படைவதும் இந்தச் சக்கரத்தை இட்டேயாகும். விருட்சத்தைப் பற்றி எவருக்கும் தெரியவும் மாட்டாது. சமயநூல்களிலும் அவர்கள் சக்கரத்தைக் காட்டுகிறார்கள்; அதற்கான கால எல்லையை காட்டுகிறார்கள். அச் சக்கரத்தில் குழப்பம் உள்ளது. நாங்கள் முழுச் சக்கரத்தையும் சுற்றி வருகிறோம். நாங்கள் 84 பிறவிகளை எடுக்கிறோம். எவ்வாறாயினும், இஸ்லாமியர்களும், பௌத்தர்களும் பின்னரே வருகிறார்கள். நாங்கள் எவ்வாறு சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கின்றோம் என்பது சக்கரத்தின் படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதனையே பிற்காலத்தில் வரும் இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் போன்ற ஏனைய அனைவரையிட்டும் எவ்வாறு காட்ட முடியும்;? அவர்களும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கிறார்கள். நாங்களும் எமது பல்வகை ரூப வடிவத்தைக் காட்டுகின்றோம். சத்தியயுகத்திலிருந்து கலியுகம் வரை, முழுச் சக்கரத்தையும் நாங்கள் சுற்றி வருகிறோம். உச்சிக்குடுமி பிராமணர்களையும், முகம் சத்தியயுகத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது, கைகள் திரேதாயுகத்தையும், வயிறு துவாபரயுகத்தையும் குறிக்கின்றது, கால்கள் கடைசி என்று காட்டப்படுகின்றன. எமது பல்வகை ரூப வடிவத்தை எம்மால் காட்ட முடியும், ஆனால், ஏனைய சமயங்களையிட்டும் இதனை எவ்வாறு காட்ட முடியும்? அவர்களும் ஆரம்பத்தில், சதோபிரதானாகவே இருக்கிறார்கள். பின்பு சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்கிறார்கள். எவருமே நிர்வாணா நிலையை அடையவில்லை என்பதை இதுவே நிரூபிக்ககின்றது. அவர்கள் இச் சக்கரத்தைச் சுற்றி வர வேண்டும். ஒவ்வொருவரும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்தே செல்ல வேண்டும். ஆபிரகாம், புத்தர், கிறிஸ்து போன்றோர் மனிதர்கள் ஆவார்கள். இரவில் பாபா இவற்றையிட்டுப் பல எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார். இந்த எண்ணங்கள் அவரைத் தூங்கிவிழச் செய்வதில்லை. இவற்றினால் அவர் தன் உறக்கத்தையும் இழக்கின்றார். இவற்றை விளங்கப்படுத்துவதற்கு மிக நல்ல வழிமுறைகள் அவசியம். அவர்களுடைய பல்வகை ரூப வடிவம் தயாரிக்கப்பட வேண்டும். அவர்களது பாதங்கள் இறுதி எனக் காட்டப்பட்டு, பின்னர் அவை எழுத்தில் விளங்கப்படுத்தப்பட வேண்டும். கிறிஸ்து வரும்பொழுது, அவரும் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்தே செல்ல வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவர் சத்தியயுகத்தில் வருவதில்லை; அவர் பின்னரே வரவேண்டும். அவர்கள் வினவுவார்கள்: கிறிஸ்து சுவர்க்கத்திற்கு வர மாட்டாரா? இந் நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. கிறிஸ்துவுக்கு முன்பு வேறு சமயங்கள் இருந்தன என்றும், அவை மீண்டும் வர வேண்டும் என்றும் உங்களுக்குத் தெரியும். நாடகத்தின் முக்கியத்துவம் விளங்கப்படுத்தப்பட வேண்டும். அனைத்துக்கும் முதல் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்: தந்தையிடமிருந்து எவ்வாறு நீங்கள் ஒரு விநாடியில் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள்? ‘ஒரு விநாடியில் ஜீவன்முக்தி பெறுகின்றீர்கள்’ என நினைவுகூரப்பட்டுள்ளது. பாருங்கள், பாபா பல எண்ணங்களைக் கொண்டிருக்கின்றார். ஞானக்கடலைக் கடைவது பாபாவின் பாகமாகும். ‘இறை தந்தை கொடுக்கும் பிறப்புரிமை - இப்பொழுது இல்லையேல் எப்பொழுதுமில்லை’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. ‘ஜீவன்முக்தி’ என்ற வார்த்தைகளையும் நீங்கள் எழுத வேண்டும். எழுத்துகள் தெளிவாக இருந்தால், விளங்கப்படுத்துவது இலகுவாக இருக்கும். நீங்கள் ஜீவன்முக்தி எனும் ஆஸ்தியைப் பெற்றீர்கள். அரசர், அரசி, பிரஜைகள் அனைவருமே ஜீவன்முக்தி அடைகின்றார்கள். எனவே, எழுத்துகள் இதனுடன் தெளிவாகப் பொருந்த வேண்டும். படங்கள் இல்லாதும் இவை விளங்கப்படுத்தப்பட முடியும். சமிக்ஞைகளைக் கொண்டே இவற்றை உங்களால் விளங்கப்படுத்த முடியும். இது பாபா, இது ஆஸ்தி. யோக்யுக்தாக இருப்பவர்களால் நன்றாக விளங்கப்படுத்த முடியும். அனைத்தும் யோகத்திலேயே தங்கியுள்ளது. யோகத்தினூடாக உங்கள் புத்தி தூய்மையாகுகின்றது. அதன்பின்னரே உங்களால் கிரகிக்க முடியும். இதற்கு ஆத்ம உணர்வுள்ள ஸ்திதி தேவையாகும். நீங்கள் அனைத்தையும் மறந்து விடல் வேண்டும். உங்கள் சரீரத்தையும் நீங்கள் மறந்து விட வேண்டும்; அவ்வளவே. இப்போது நாங்கள் வீடு திரும்ப வேண்டும். இந்த உலகம் முடிவடையப் போகின்றது. இது இந்த பாபாவிற்கு இலகுவானது, ஏனெனில், இதுவே அவரது தொழிலாகும். நாள் முழுவதும் இவரது புத்தி இதிலேயே ஈடுபட்டிருக்கின்றது. நல்லது, வீட்டில் தங்கள் குடும்பங்களுடன் வாழ்பவர்கள் செயல்களைச் செய்ய வேண்டும். நீங்கள் பௌதீகக் காரியங்களைச் செய்யும்பொழுது, ஏனைய அனைத்தையும் மறந்து விடுகின்றீர்கள். பாபாவின் நினைவில் இருப்பதற்கு நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். பாபா தன் சொந்த அனுபவத்தை உங்களுக்குக் கூறுகின்றார். ‘பாபா இந்த இரதத்திற்கு உணவூட்டுகிறார்’ என நான் பாபாவை நினைவுசெய்வேன். பின்பு, மறந்து விடுகிறேன். ஆகையால் பாபா எண்ணுகின்றார்: நானே மறந்து விடும்பொழுது, அப்பாவிகளான இக் குழந்தைகள் அனைவருக்கும் இது எவ்வளவு சிரமமாக இருக்கும்? அவர்கள் எவ்வாறு தங்கள் அட்டவணையை அதிகரிப்பார்கள்;? இல்லறப் பாதையில் இருப்பவர்களுக்கு இது சிரமமாகவே உள்ளது. அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். பாபா அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறார். முயற்சி செய்கின்றவர்கள் தங்கள் பெறுபேறுகளை பாபாவுக்கு எழுதி அனுப்பி வைக்கலாம். இது உண்மையில் சிரமம் என்பது பாபாவுக்குத் தெரியும். பாபா கூறுகிறார்: இரவில் முயற்சி செய்யுங்கள். நீங்கள் யோக்யுக்தாக இருந்து, தொடர்ந்தும் ஞானக்கடலைக் கடைவீர்களானால், உங்கள் களைப்பெல்லாம் அகன்று விடும். பாபா உங்களுக்குத் தனது அனுபவத்தைக் கூறுகின்றார். சிலவேளைகளில் என் புத்தி பிற விடயங்களில் திசைதிரும்பி விடுவதால், என் தலை பாரமாகிவிடும். அதன்பின்னர், நான் என் புத்தியிலிருந்து அப் புயல்களை அகற்றி, ஞானக்கடலைக் கடைவதில் என்னை ஈடுபடுத்துகின்றேன், அப்பொழுது என் தலை இலேசாகுகின்றது. பலவகையான மாயையின் புயல்களும் வருகின்றன. இதில் உங்கள் புத்தியை ஈடுபடுத்துவதன் மூலம் அக் களைப்பு அனைத்தும் அகன்று, புத்தி புத்துணர்ச்சி பெறுகின்றது. உங்களை பாபாவின் சேவையில் ஈடுபடுத்தும்பொழுது, யோகமும் ஞானமும் என்ற வெண்ணெயைப் பெறுகிறீர்கள். இந்த பாபா உங்களுக்குத் தனது அனுபவத்தைக் கூறுகின்றார். தந்தை தனது குழந்தைகளுக்குக் கூறுவார்: இவ்வாறு நடக்கும், அவ்வாறு நடக்கும். மாயையின் புயல்கள் வரும். அந்த நேரத்தில் நீங்கள் இந்த விடயங்களில் உங்கள் புத்தியை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒரு படத்தைப் பார்த்து அதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தால், மாயையின் புயல்கள் பறந்து விடும். மாயை உங்களைத் தந்தையின் நினைவில் நிலைத்திருக்க அனுமதிப்பதில்லை என்பதை பாபா அறிவார். வெகு சிலரே முழு நேரமும் தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றார்கள். பலர் பெரிதாகப் பேசுகிறார்கள். நீங்கள் பாபாவின் நினைவில் நிலைத்திருந்தால், உங்கள் புத்தி தெளிவாக இருக்க முடியும். தந்தையின் நினைவில் இருப்பதைப் போன்ற வெண்ணெய் வேறெதுவுமே இல்லை. பௌதீகச் சுமை அதிகளவு இருக்கும்பொழுது, உங்கள் நினைவு குறைகின்றது. பாருங்கள், போப்பாண்டவர் பம்பாய்க்கு வந்தார், அனைவரதும் கடவுளே வந்து விட்டதைப் போல் அவர் மிகவும் போற்றப்பட்டார். அவருக்குச் சக்தி உள்ளது, அல்லவா? பாரத மக்களுக்குத் தங்கள் சொந்தத் தர்மத்தைத் தெரியாது. தங்கள் சமயம் இந்து சமயம் என்றே அவர்கள் தொடர்ந்தும் கூறுகிறார்கள். ஆனால், இந்துசமயம் ஒரு சமயமல்ல. அது எங்கிருந்து வந்தது, அது எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டது என்று எவருமே அறிய மாட்டார்கள். ஞானத்தையிட்டு நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். ஞானத்தையிட்டுச் சிவசக்திகள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க வேண்டும். சக்திகள் சிங்கத்தை ஓட்டுவதாக அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அனைத்தும் ஞானத்தையே குறிக்கின்றது. இறுதியில், நீங்கள் சக்திவாய்ந்தவர்கள் ஆகும்பொழுது, சாதுக்களுக்கும், புனிதர்களுக்கும் நீங்கள் விளங்கப்படுத்துவீர்கள். உங்கள் புத்தியில் அந்தளவு ஞானம் இருக்கும்பொழுது, அவ்வாறானதொரு உற்சாகம் ஏற்படும். சக்ரத நகரத்தில், ஓர் ஆசிரியர் விவசாயிகளுக்குக் கல்வி கற்பித்தார், எனினும் அவர்கள் விவசாயம் செய்யவே விரும்பியதால் கல்வி கற்கவில்லை. அதே போல, இன்றைய மக்களுக்கு நீங்கள் ஞானத்தைக் கொடுத்தால், அவர்கள் கூறுகின்றார்கள்: எங்களுக்கு இதில் விருப்பமில்லை. நாங்கள் சமயநூல்களைக் கற்கவே விரும்புகின்றோம். ஆனாலும், கடவுள் மிகத் தெளிவாகக் கூறுகிறார்: கிரியைகள், தவம், தானதர்மங்கள், புண்ணியங்கள் செய்வதாலோ அல்லது சமயநூல்களை வாசிப்பதாலோ என்னை எவராலும் அடைய முடியாது. அவர்களுக்கு நாடகத்தைப் பற்றித் தெரியாது. தாங்கள் நாடகத்தின் நடிகர்கள் என்பதும், தங்கள் பாகங்களை நடிப்பதற்காக ஆடைகளைப் பெற்றிருப்பதையும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இது முட்காடாகும். அவர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து முள்ளாகக் குத்துகிறார்கள், தொடர்ந்து ஒருவரையொருவர் கொள்ளையடித்துக் கொலை செய்கிறார்கள். அவர்கள் மனிதர்கள் போலிருந்தாலும், அவர்களின் குணாதிசயங்கள் அனைத்தும் குரங்குகளைப் போன்றே இருக்கின்றன. தந்தை இங்கிருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். புதியவர் எவராவது இதைக் கேட்டால், அவர் கோபப்படுவார். குழந்தைகளாகிய நீங்களோ கோபப்படுவதில்லை. தந்தை கூறுகிறார்: நான் என் குழந்தைகளுக்கு மட்டுமே விளங்கப்படுத்துகிறேன். தாய், தந்தையர் தமது குழந்தைகளுக்கு எதனையும் கூற முடியும். குழந்தைகளைத் திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை. ஆனாலும், இங்கே அது நியதி அல்ல. நான் செய்யும் செயல்களைப் பார்ப்பவர்கள், அதனையே செய்வார்கள். எனவே, தான் எதைக் கடைந்தேன் என்பதைப் பற்றி பாபா உங்களுக்குக் கூறினார். இவரே முதல் இலக்கத்திற்கு உரியவர். இவர் 84 பிறவிகள் எடுக்க வேண்டும். அவ்வாறாயின், சமய ஸ்தாபகர்களான ஏனைய தலைவர்கள் எவ்வாறு நிர்வாண உலகை அடைந்திருக்க முடியும்? அவர்கள் நிச்சயமாக சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளைக் கடந்து செல்ல வேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனுமே முதல் இலக்கத்தினர். அவர்களே உலக அதிபதிகள். அவர்களும் 84 பிறவிகளை எடுக்க வேண்டும். மனித உலகில், அதியுயர்ந்த புதிய மனிதனுடன் புதிய பெண்ணொருவரும் இருக்க வேண்டும். பெண்கள் இல்லாது படைப்பு எவ்வாறு இடம்பெற முடியும்? சத்தியயுகத்தில் நாராயணரும் இலக்ஷ்மியுமே புதிய மனிதனும் பெண்ணும் ஆவார்கள். அவர்கள் பழையதிலிருந்து புதியவர்களாகுகின்றார்கள். அவர்களே சகலதுறை பாகங்களையும் நடிப்பவர்கள். ஏனைய அனைவரும் சதோ ஸ்திதியிலிருந்து தமோ ஸ்திதிக்குச் செல்கிறார்கள்; அவர்கள் பழையவர்களாகிப் பின்னர், பழையவர்களில் இருந்து புதியவர்களாகுகிறார்கள். அதேபோல, கிறிஸ்து முதலில் புதிதாக வந்தார். பின்பு பழையதாகத் திரும்பிச் சென்றார். பின்னர் அவர் மீண்டும் தனக்குரிய நேரத்தில் புதிதாக வருவார். இவ் விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இதற்கு மிக நல்ல யோகம் தேவை. நீங்கள் முற்றிலும் அர்ப்பணித்தவர்களாகவும் இருக்க வேண்டும்; அப்பொழுதே நீங்கள் ஆஸ்திக்கு உரிமை கோர முடியும். உங்களை அர்ப்பணிக்கும்பொழுது, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று பாபாவால் உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்க முடியும். அர்ப்பணித்த சிலரை அவர்களது குடும்பத்துடனேயே பாபா இருக்கச் சொல்கிறார். அப்பொழுதே அவர்களால் தமது சொந்தப் புத்தியைப் புரிந்துகொள்ள முடியும். வீட்டில் வாழ்;ந்தவாறே ஞானத்தைப் பெற்று, இதைச் செய்து காட்டுங்கள்; சித்தியடைவதால், இதைச் செய்து காட்டுங்கள். நீங்கள் இல்லறத்தில் ஈடுபடக்கூடாது. பிரம்மச்சரியம் காப்பது நல்லது. ஒவ்வொருவருடைய கணக்கையும் பாபா கேட்கிறார். நீங்கள் மம்மாவிடமிருந்தும், பாபாவிடமிருந்தும் பராமரிப்பைப் பெற்றிருப்பதால், நீங்கள் அக் கடனைத் தீர்க்கவும் வேண்டும். அப்பொழுது நீங்கள் சக்தியைப் பெறுவீர்கள். இல்லாவிட்டால், தந்தை கூறுவார்: நான் எவ்வளவோ முயற்சி செய்து உங்களைப் பராமரித்தேன். நீங்களோ என்னை விட்டுச் சென்று விட்டீர்கள். ஒவ்வொருவரது நாடித்துடிப்பும் உணரப்பட வேண்டும். அப்பொழுதே வழிகாட்டல்கள் கொடுக்கப்பட முடியும். உதாரணமாக, இவர் ஏதாவது தவறு செய்தால், தந்தை அத் தவறிலிருந்து அவரை விடுவித்து அதனைச் சரி செய்வார். இவரும் ஒவ்வொரு அடியிலும் தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறார். இழப்பு ஏற்படும்பொழுதெல்லாம் அது நாடகத்தில் இருக்கிறது என்று புரிந்துகொள்ளப்படுகிறது. பின்னர், எதிர்காலத்தில் அது மீண்டும் இடம்பெறக்கூடாது. எந்தத் தவறும் உங்கள் மனச்சாட்சியை உறுத்தச் செய்யும். நீ;ங்கள் ஏதாவது தவறு செய்து விட்டால், அதனை ஈடுசெய்வதற்காக சேவையில் உங்களை அதிகளவு ஈடுபடுத்த வேண்டும். நீங்கள் அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். ஒருவருடைய வாழ்க்கையை உருவாக்குவது என்பது முயற்சியாகும். பாபா கூறுகிறார்: ஞானியாகவும் யோகியாகவும் இருக்கும் குழந்தைகளையே நான் அதிகம் நேசிக்கிறேன். உணவு தயாரிக்கும்பொழுதும் அதனைப் பரிமாறும்பொழுதும் யோகத்தில் நிலைத்திருப்பீர்களானால், அதிகளவு முன்னேற்றம் ஏற்படும். இது சிவபாபாவின் பண்டாரா. எனவே, சிவபாபாவின் குழந்தைகள் நிச்சயமாக யோக்யுக்தாக இருப்பார்கள். படிப்படியாக உங்கள் ஸ்திதி மேன்மையடையும்; அதற்கு நிச்சயமாகக் காலம் எடுக்கின்றது. ஒவ்வொருவரது கர்ம பந்தங்களும் அவரவருக்கே உரியது. குமாரிகள் மீது சுமையேதும் இல்லை. ஆம், குமார்கள் மீது சுமை இருக்கிறது. மகன்மார் வளர்ந்ததும் தங்கள் லௌகீகத் தாய், தந்தையருக்கு ஒரு சுமையாகி விடுகிறார்கள். லௌகீகத் தந்தை உங்களுக்கு எவ்வளவோ விளங்கப்படுத்தியுள்ளார், உங்களை அதிகளவு பராமரித்து வளர்த்ததால், அவர்களை நீங்கள் கவனித்துக்; கொள்ள வேண்டும். நீங்கள் கணக்கைத் தீர்க்க வேண்டும். அப்பொழுதே அவர்களது இதயங்களும் சந்தோஷப்படுகின்றன. தகுதி வாய்ந்த குழந்தைகள் தங்கள் பிரயாணம் முடிந்து திரும்பும்பொழுது, எல்லாவற்றையும் தந்தைக்கு முன்னாலேயே கொண்டு வந்து வைக்கின்றார்கள். நீங்கள் கடன் தீர்க்க வேண்டும், இல்லையா? இவ் விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். உயர்ந்த அந்தஸ்தைப் பெறப் இருப்பவர்கள் மாத்திரமே தொடர்ந்தும் ஒரு சிங்கத்தைப் போன்று பாய்ந்து செல்வார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து, இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. யோகத்தில் நிலைத்திருந்தவாறு உணவு தயாரியுங்கள். யோகத்தில் நிலைத்திருந்தவாறே உணவை உண்டு, மற்றவர்களுக்கும் அதனைப் பரிமாறுங்கள்.

2.பாபா உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ள விடயங்களை மிக நன்றாகக் கடையுங்கள். யோக்யுக்தாக இருந்து,

3.மற்றவர்களுக்கும் அவற்றை விளங்கப்படுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையைப் போன்று மாஸ்டர் கருணைமிக்கவராகி, சகல ஆத்மாக்கள் மீதும் ஆசீர்வாதங்களையும் கருணையையும் கொண்டிருப்பீர்களாக.

தந்தை கருணை மிக்கவராக இருப்பதைப் போன்று குழந்தைகளாகிய நீங்களும் சகல ஆத்மாக்கள் மீதும் ஆசீர்வாதங்களையும் கருணையையும் கொண்டிருக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் தந்தையைப் போன்று கருவிகளாகி விட்டீர்கள். பிராமண ஆத்மாக்களால் ஒருபொழுதுமே ஏனைய ஆத்மாக்கள் மீது வெறுப்பைக் கொண்டிருக்க முடியாது. சிலர் கம்சன் அல்லது ஜராசந்தன் அல்லது இராவணனைப் போன்று இருந்தாலும், அந்த ஆத்மா எவ்வாறிருந்தாலும் கருணைமிக்க தந்தையின் குழந்தைகளால் ஒருபொழுதுமே அவர்களை வெறுக்க முடியாது. நீங்கள் அவர்களை மாற்றுகின்ற நோக்கத்தையும், அவர்களுக்கும் நன்மையளிக்கும் உணர்வையும் கொண்டிருக்கின்றீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களுடைய குடும்பத்தினர், ஆனால் வேறு ஒன்றின் ஆதிக்கத்தில் உள்ளனர், வேறொன்றின் ஆதிக்கத்தில் இருப்பவர்களை உங்களால் ஒருபொழுதுமே வெறுக்க முடியாது.

சுலோகம்:
நீங்கள் ஒரு மாஸ்டர் ஞான சூரியனாக இருந்து, கதிர்களின் சக்தி மூலம் பலவீனம் எனும் குப்பையை எரித்து விடுங்கள்.