18/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் ஆத்மாக்கள் என்றும் அவை உங்களது சரீரம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். இதில், காட்சிகள் என்ற கேள்விக்கே இடமில்லை. மக்கள் ஓர் ஆத்மாவின் காட்சியைப் பெற்றாலும் அவர்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியாது.
கேள்வி:
தந்தையின் எந்த ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் கர்ப்பச் சிறையில் தண்டனை பெறுவதிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்?
பதில்:
தந்தையின் ஸ்ரீமத்: குழந்தைகளே, பற்றை வென்றவர்கள் ஆகுங்கள். வேறெவருக்குமன்றி, தந்தையொருவருக்கே உரியவராகுங்கள். என்னை நினைவுசெய்வதுடன், எப்பாவச் செயல்களையும் செய்யாதீர்கள், நீங்கள் கர்ப்பச் சிறையில் தண்டனை பெறுவதிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள். இங்கே, நீங்கள் பிறவி பிறவியாக சிறைப் பறவைகளாகவே இருந்தீர்கள். தந்தை அந்தத் தண்டனையிலிருந்து உங்களை விடுவிப்பதற்காக இப்பொழுது வந்திருக்கின்றார். சத்தியயுகத்தில் கர்ப்பச்சிறை இருக்கமாட்டாது.
ஓம் சாந்தி.
ஆத்மா என்றால் என்ன என்பதனையும், அவரது தந்தையாகிய பரமாத்மா யார் என்பதனையும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இது தூய்மையற்ற உலகம் என்பதனால், அவர்; மீண்டும் ஒரு தடவை இதனை விளங்கப்படுத்துகின்றார்;. தூய்மையற்றவர்கள் எப்பொழுதும் விவேகமற்றவர்களாகவே இருப்பார்;கள். தூய்மையான உலகமே விவேகமான உலகமாகும். பாரதம் தூய உலகமாக, அதாவது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. அது இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அவர்கள் மிகவும் செல்வந்தர்களாகவும், சந்தோஷமானவர்களாகவும் இருந்தனர். ஆனால், பாரத மக்கள் இவ்விடயங்களைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் படைப்பவராகிய பரம தந்தையை அறியமாட்டார்கள். மனிதர்கள் மாத்திரமே இதனை அறிவார்கள். விலங்குகள் இதனை அறியமாட்டாது. ஓ பரமதந்தை, பரமாத்மாவே என்றும் அவர்கள் நினைவுசெய்கின்றார்கள். அவரே பரலோகத் தந்தையாவார். ஆத்மா பரமாத்மாவாகிய தனது பரமதந்தையை நினைவுசெய்கின்றார். லௌகீகத் தந்தையே இச்சரீரத்திற்குப் பிறப்புக் கொடுக்கின்றார். ஆனால், பரமதந்தை பரமாத்மாவோ ஆத்மாக்களின் தந்தையாகிய பரலோகத் தந்தையாவார். மக்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் பூஜிக்கின்றார்கள். தாங்கள் சத்தியயுகத்தில் இருந்தனர் என்பதையும், இராமரும் சீதையும் திரேதாயுகத்தில் இருந்தனர் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கின்றனர். தந்தை இங்கு வந்து, விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் பிறவி பிறவியாக பரலோகத் தந்தையாகிய என்னை நினைவுசெய்துவந்தீர்கள். தந்தையாகிய கடவுள் நிச்சயமாக அசரீரியானவராகவே இருக்கவேண்டும். ஆத்மாக்களாகிய நாங்களும் அசரீரியானவர்களே. நாங்கள் இங்கு வந்தபின்னரே சரீரதாரிகளாகினோம். இச்சிறிய விடயம் எவரது புத்தியிலும் புகுவதில்லை. உங்களது அந்த எல்லையற்ற தந்தையே படைப்பவராவார். நீங்கள் கூவியழைக்கின்றீர்கள்: நீங்களே தாயும் தந்தையும். நாங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள். எனவே நாங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றோம். பின்னர், நாங்கள் உங்களை மறந்துவிடுவதால், நரகத்தின் அதிபதிகள் ஆகுகின்றோம். அத்தந்தை இப்பொழுது இங்கிருந்து, இவர் மூலமாக விளங்கப்படுத்துகின்றார்: நானே படைப்பவர், இது எனது படைப்பாகும். அதன் இரகசியங்களை நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். இவரும் புரிந்துகொள்கின்றார். எவருமே ஆத்மாவைப் பார்த்ததில்லை, எனவே “நான் ஓர் ஆத்மா” என அவர்கள் ஏன் கூறுகின்றார்கள்? ஆத்மாக்களாகிய நீங்கள் ஒரு சரீரத்தை நீக்கி இன்னொன்றை எடுத்துக்கொள்கின்றீர்கள் என்பதனை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். மகாத்மா, புண்ணியாத்மா எனக் கூறப்படுகின்றது. நான் ஓர் ஆத்மா, இது எனது சரீரம் என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள். சரீரம் அழியக்கூடியது, ஆனால் அழிவற்றதாகிய ஆத்மாவோ பரமதந்தை, பரமாத்மாவின் குழந்தையாவார். இது அத்தகையதோர் இலகுவான விடயமாகும். ஆனால் சிறந்த, விவேகமானவர்களாலும்கூட இதனைப் புரிந்துகொள்ள முடியாமலிருக்கின்றது. மாயை உங்களது புத்தியைப் பூட்டிவிட்டாள். நீங்கள் உங்களது காட்சியை, அதாவது ஆத்மாவின் காட்சியைக் காணமுடியாது. ஆத்மாவே பல பிறவிகளை எடுக்கின்றார். ஒவ்வொரு பிறவியிலும் அவரது தந்தை மாறுகின்றார். நீங்கள் ஓர் ஆத்மா என்ற நம்பிக்கையை நீங்கள் ஏன் கொண்டிருக்கவில்லை? நீங்கள் ஆத்மாவின் காட்சி வேண்டும் எனக் கேட்கின்றீர்கள். பல பிறவிகளாக, உங்களுக்கு ஆத்மாவின் காட்சி வேண்டுமென எவரிடமாவது கேட்டீர்களா? சிலர் ஆத்மாவின் காட்சியைப் பெறுகின்றார்களாயினும், அவர்களால் அதனைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. நீங்கள் தந்தையை அறியமாட்டீர்கள். எல்லையற்ற தந்தையைத் தவிர வேறு எவராலுமே ஆத்மாக்களுக்கு கடவுளின் ஒரு காட்சியைக் கொடுக்க முடியாது. அவர்கள், ஓ கடவுளே எனக் கூறுகின்றனர். எனவே, அவரே தந்தையாவார், இல்லையா? உங்களுக்கு இரு தந்தையர்; இருக்கின்றனர்: ஒருவர் அழியக்கூடிய சரீரத்திற்குப் பிறப்பைக் கொடுக்கின்ற அழியக்கூடிய தந்தை, மற்றவர் அழிவற்ற ஆத்மாக்களின் அழிவற்ற தந்தையாவார். நீங்களே தாயும், தந்தையும் என நீங்கள் பாடி, நீங்கள் அவரை நினைவு செய்வதால், நிச்சயமாக அவர் வந்தாக வேண்டும், இல்லையா? ஜெகதாம்பாவும், ஜெகத் பிதாவும் இங்கே அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் இராஜயோகம் கற்கின்றார்கள். சுவர்க்கத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. அவர்களும் பாரதத்திலேயே இருந்தனர். சுவர்க்கம் என்பது மேலே இருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள், ஆனால் இலக்ஷ்மி, நாராயணனின் ஞாபகார்த்தங்கள் இங்கேயே இருக்கின்றன. எனவே, நிச்சயமாக அவர்கள் தங்களது இராச்சியத்தை இங்கேயே ஆட்சி செய்திருக்க வேண்டும். தில்வாலா ஆலயம் உங்களது தற்கால ஞாபகார்த்தமேயாகும். நீங்கள் இராஜ யோகிகள். அரைக் குமாரிகளும், குமாரிகளும் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். இதன் ஞாபகார்த்தம் பக்தி மார்க்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘தில்வாலா’ என்ற பெயரிலும் அர்த்தம் இருக்கின்றது. உங்களது இதயத்தை வெற்றி கொண்டவர் யார்? இந்த ஆதி தேவனும், ஆதி தேவியும் இராஜயோகம் கற்கின்றார்கள். அவர்களும்கூட அசரீரியான பரமதந்தை, பரமாத்மாவையே நினைவுசெய்வார்கள். அவரே அதி மேலானவரும், ஞானக்கடலுமாவார். அவர் இந்த ஆதி தேவனின் சரீரத்தில் அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார். இவ்வாலயம் எப்போது கட்டப்பட்டது, ஏன் கட்டப்பட்டது, இது யாருடைய ஞாபகார்த்தம் போன்ற எதனையுமே அவர்கள் அறியமாட்டார்கள். அவர்கள் காளி, துர்க்கை, அன்னபூரணா (உணவிற்கான தேவி) போன்ற பல தேவியரின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார்கள். முழு உலகிற்கும் அன்னபூரணாதேவியாக (உணவு வழங்குபவர்) விளங்குபவர் யார்? மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற தேவி யாரென உங்களுக்குத் தெரியுமா? பாரதம் சுவர்க்கமாக இருந்தது. அங்கே பௌதீகமான சௌகரியங்கள் ஏராளமாக இருந்தன. 80 அல்லது 90 வருடங்களுக்கு முன்னர் வரையி;ல் உங்களால் 10 அல்லது 12 அணாக்களுக்கு (முற்கால் ரூபாய்) 85 இறாத்தல் தானியங்களைப் பெறக்கூடியதாக இருந்தது. எனவே, அதற்கு முன்னர் அனைத்தும் மிக மலிவாகவே இருந்தது. சத்தியயுகத்தில், தானியங்கள் போன்றவை மிகவும் சிறந்ததாகவும், மலிவானதாகவும் இருக்கும். எவ்வாறாயினும், எவருமே இதனைக்கூடப் புரிந்துகொள்வதில்லை. தந்தை இங்கு வந்து, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஆத்மாக்கள் இந்த பௌதீக அங்கங்கள் மூலமாகச் செவிமடுக்கின்றார்;கள். ஆத்மா பார்ப்பதற்காக இக்கண்களையும், கேட்பதற்காக இக்காதுகளையும் பெற்றிருக்கின்றார். தந்தை கூறுகிறார்: அசரீரியானவராகிய நான், இவரின் சரீரத்தை ஆதாரமாக எடுக்கின்றேன். நான் எப்பொழுதும் சிவன் என்றே அழைக்கப்படுகின்றேன். மக்கள் எனக்கு உருத்திரன், சிவன், சோமநாதர் போன்ற பல பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்கள். எனினும் எனது ஒரேயொரு பெயர் சிவன் என்பதேயாகும். பக்தர்கள் கடவுளை நினைவு செய்து, ஓம் நமசிவாய எனக் கூறுகின்றனர். அவை உருவாகி 2500 வருடங்களாகிவிட்டன. பக்தி மார்க்கத்தில் முதலில் கலப்படமற்ற வழிபாடு இருந்தது. இப்பொழுது நீங்கள்;;; என்னைக் கற்களிலும், கூழாங்கற்களிலும் இட்டுவிட்டீர்கள். இப்பொழுது இது பக்தி மார்க்கத்தின் இறுதிக்காலமாகும். நான் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றேன். இப்பழைய உலகம் முடிவடையப்போகின்றது. குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அனைவரும் குறுகிய காலத்திற்குள் அழிக்கப்பட்டுவிடுவார்கள். சத்தியயுகத்தில் வெகு சிலரே உள்ளனர், அதாவது 900,000 பேர் மாத்திரமே உள்ளனர். ஏனைய அனைவரும் எங்கே செல்வார்கள்? யுத்தங்கள், பூகம்பங்கள் போன்றன இடம்பெறும். விநாசம் நிச்சயமாக இடம்பெறும். இவர் பிரஜாபிதா ஆவார். பல பிரம்மகுமாரர்களும், குமாரிகளும் உள்ளனர். பிரம்மாவின் தந்தை யார்? அசரீரியான சிவன். நீங்கள் அவரது பேரப் புதல்வர்களும், பேரப் புதல்விகளுமாவீர்கள். நீங்கள் சிவபாபாவிடமிருந்தே உங்களது ஆஸ்தியைப் பெற்றுக்கொள்கின்றீர்கள். எனவே, அவரை மாத்திரமே நீங்கள் நினைவு செய்ய வேண்டும். நினைவின் மூலமாகவே உங்களது பாவச் சுமை அகற்றப்படும். இது விகாரங்கள் நிறைந்த தூய்மையற்ற உலகம் என்பதனை நீங்கள் அறிவீர்கள். சத்தியயுகம் விகாரங்களற்ற உலகமாகும். அங்கே நஞ்சு(விகாரம்) எதுவுமேயில்லை. நியதிப்படி, அனைவரும் ஒரு புதல்வனையே கொண்டிருக்கின்றனர். அங்கே ஒருபோதும் அகால மரணம் நிகழ்வதில்லை. அது சந்தோஷ பூமியாகும். இங்கே, பெருமளவு துன்பமே உள்ளது. எவ்வாறாயினும், எவருமே இவ்விடயங்களை அறியமாட்டார்கள். அவர்கள் கீதையை எடுத்துரைக்கின்றார்கள். இறை வாசகங்களே ஸ்ரீமத் பகவத் கீதையாகும். அச்சா, கடவுள் யார்? அது ஸ்ரீ கிருஷ்ணரே என அவர்கள் கூறுகின்றனர். ஆ, ஆனால், அவர் ஒரு சிறு குழந்தை, எனவே, அவரால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? அந்நேரத்தில் உலகம் தூய்மையற்றதாக இருக்கவில்லை. ஜீவன் முக்திக்காக இராஜயோகத்தைக் கற்பிப்பவர் இங்கேயே இருக்கவேண்டும். உருத்திரனின் கீதை ஞான யாகம் எனக் கீதையில் எழுதப்பட்டிருக்கின்றது. கிருஷ்ணரின் கீதை ஞான யாகம் என்பது கிடையாது. இந்த யாகம் பல வருடங்களாகத் தொடர்கின்றது. எப்பொழுது இது முடிவடையும்? பழைய உலகம் அதில் அர்ப்பணிக்கப்படும்போதேயாகும். யாகமொன்று முடிவடையும்போது, அவர்கள் அனைத்தையும் அதில் அர்ப்பணித்துவிடுகின்றனர். இந்த யாகம் இறுதிவரைக்கும் தொடரும். இப்பழைய உலகம் முடிவடையப் போகின்றது. தந்தை கூறுகின்றார்: நானே மரணங்களுக்கெல்லாம் மரணமாவேன். நான் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றேன். நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக்குவதற்காகக் கற்பிக்கின்றேன். இந்நேரத்தில் அனைத்து மனிதர்களும் சதா பாக்கியமற்றவர்களாகவே உள்ளனர் என்பதனை நீங்கள் அறிவீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் சதா பாக்கியசாலிகளாக இருந்தீர்கள். இவ்வித்தியாசத்தை அனைவருக்கும் விளங்கப்படுத்துங்கள். மக்கள் இங்கே வரும்போது, அவர்கள் மிக நன்றாகப் புரிந்துகொள்கின்றனர். எனினும், அவர்கள் வீடு திரும்பியதும் அனைத்தும் முடிவடைந்து விடுகின்றது. அதேபோன்று, அவர்கள் கர்ப்பச் சிறையில் இருக்கும்போது, தாங்கள் இனிமேலும் பாவங்கள் செய்யமாட்டோம் எனச் சத்தியம் செய்கின்றனர். பின்னர், வெளியில் வந்ததும், அவர்கள் மீண்டும் பாவம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர்: அவர்கள் சிறைப் பறவைகள். இந்நேரத்தில் அனைத்து மனிதர்களும் சிறைப்பறவைகளே. அவர்கள் மீண்டும் மீண்டும் கர்ப்பச் சிறையில் பிரவேசித்து, தண்டனையை அனுபவிக்கின்றனர். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நான் உங்களைக் கர்ப்பத்தில் சிறைப்பறவையாக இருப்பதிலிருந்து விடுவிக்கின்றேன். சத்தியயுகத்தில், கருப்பையானது சிறை என அழைக்கப்படுவதில்லை. நான் அத்தண்டனையிலிருந்து உங்களை விடுவிப்பதற்காக வந்திருக்கின்றேன். இப்பொழுது என்னை நினைவுசெய்யுங்கள். எந்தப் பாவமும் செய்யாதீர்கள். பற்றை வென்றவராகுங்கள். மக்கள் பாடுகின்றார்கள்: என்னுடையவர் ஒருவர் மாத்திரமேயன்றி, வேறு எவருமில்லை. அவர்கள் கிருஷ்ணரைக் குறிப்பிடவில்லை. கிருஷ்ணர் 84 பிறவிகளையெடுத்து, இப்பொழுது பிரம்மா ஆகியுள்ளார். பின்னர், அவரே மீண்டும் கிருஷ்ணராகுவார். இதனாலேயே அவர் இச்சரீரத்தில் பிரவேசித்திருக்கின்றார். இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடவுள் இப்பொழுது சூரிய, சந்திர வம்சங்களை ஸ்தாபிக்கின்றார். அவர் எதிர்காலத்திற்கான உங்களது வெகுமதியை உருவாக்குகின்றார். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்து, சுவர்க்கத்தைப் படைப்பவராகிய எல்லையற்ற தந்தை மூலமாக பல பிறவிகளுக்கான வெகுமதியை உருவாக்குகின்றீர்கள். இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்படவேண்டும். நாடகத்தில் ஒவ்வொரு நடிகரும் தனக்கென ஒரு சொந்தப் பாகத்தைக் கொண்டிருக்கின்றார். இதனையிட்டு நாங்கள் ஏன் அழுது புலம்பவேண்டும்? நாங்கள் உயிர்வாழும்போதே அந்த ஒரேயொரு தந்தையை நினைவுசெய்கின்றோம். நாங்கள் இச்சரீரத்தைப் பற்றிக்கூட அக்கறை கொள்வதில்லை. நாங்கள் இப்பழைய சரீரத்தை நீக்கியதும் பாபாவிடம் செல்வோம். இந்நேரத்தில், நீங்கள் பாரதத்திற்குப் பெருமளவில் சேவை செய்கின்றீர்கள். அன்னபூரணா, துர்க்கை, காளி என உங்களது பெயர்கள் நினைவுகூரப்படுகின்றன. உண்மையில், பயங்கர ரூபத்தில் காளியோ, துதிக்கையுடன் கணேஷரோ இருக்கவில்லை. மனிதர்கள் மனிதர்களே. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களை இலக்ஷ்மி, நாராயணனைப் போன்று ஆக்குகின்றேன். நீங்கள் பாபாவிடமிருந்து உங்களது ஆஸ்தியைப் பெற்றுக்கொள்கின்றீர்கள், பின்னர் எதிர்காலத்தில் இளவரசர், இளவரசிகளாக ஆகுவீர்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். சுவர்க்கத்தைப் படைப்பவராகிய தந்தையை எவருமே அறியமாட்டார்கள். அவர்கள் ஜகதாம்பாவைக்கூட மறந்துவிட்டார்கள். யாருடைய ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றனவோ, அவர்கள் இப்பொழுது இங்கே உயிருடன் அமர்ந்திருக்கிறார்கள். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் வந்தாகவேண்டும். விநாசம் எப்பொழுது இடம்பெறும் என மக்கள் கேட்கின்றனர். எவ்வாறாயினும், முதலில் கற்று, புத்திசாலியாகுங்கள். மகாபாரத யுத்தம் நிச்சயமாக இடம்பெற்றது. அதன் பின்னரே சுவர்க்க வாயில்கள் திறந்துகொண்டன. எனவே, சுவர்க்க வாயில்கள் இத்தாய்மார் மூலமாக இப்பொழுது திறக்கப்படுகின்றன. அவர்கள் பாடுகின்றனர்: தாய்மாருக்கு வந்தனங்கள். தூய்மையானவர்களே புகழப்படுகின்றனர். இரு வகையான தாய்மார் உள்ளனர். ஒரு வகையினர் பௌதீக சமூக சேவையாளர்கள், மற்றைய வகையினர் ஆன்மீக சமூக சேவையாளர்கள். இது உங்களது ஆன்மீக யாத்திரையாகும். நாங்கள் எங்களது சரீரத்தை நீக்கி, வீடு திரும்புவோம் என்பதனை நீங்கள் அறிவீர்கள். கடவுள் பேசுகின்றார்: மன்மனாபவ! தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். குழந்தையாகிய கிருஷ்ணர் இவ்வாறு கூறமாட்டார். அவருக்கென ஒரு தந்தை இருக்கின்றார். “மன்மனாபவ!” என்பதன் அர்த்தத்தை எவருமே புரிந்துகொள்வதில்லை. தந்தை கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்களது பாவங்கள் அழிக்கப்படுவதுடன், பறப்பதற்கான இறக்கைகளையும் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் இப்பொழுது கல்லுப் புத்தியுடையவரிலிருந்து தெய்வீகப் புத்தியுடையவராக மாறுகின்றீர்கள். அனைவரினதும் தந்தையாகிய, படைப்பவர் ஒரேயொருவரே. ஆதி தேவனுக்கும், ஆதி தேவிக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. அவர்களது குழந்தைகளாகிய நீங்கள் இங்கே இராஜயோகம் கற்கின்றீர்கள். இங்கேயே நீங்கள் தபஸ்யா செய்தீர்கள். எனவே, உங்களது ஞாபகார்த்தங்கள் உங்கள் முன்னிலையிலேயே உள்ளன. இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வாறு தங்களது இராச்சியத்தைப் பெற்றுக்கொண்டனர்? அது அவர்களது ஆலயமாகும். நீங்கள் இராஜரிஷிகள். நீங்கள் இப்பொழுது உங்களது இராச்சியத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அதாவது பாரதத்தின் இராச்சிய பாக்கியத்தை மீண்டும் ஒரு தடவை பெற்றுக்கொள்வதற்காக முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் பாரதத்தில் சுவர்க்க இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். நீங்கள் உங்களது சரீரம், மனம், செல்வம் என்பவற்றால் பாரதத்திற்குச் சேவை செய்கின்றீர்கள். நீங்கள் தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இராவணனின் தூய்மையற்ற இராச்சியத்திலிருந்து அனைவரையும் விடுவிக்கின்றீர்கள். தந்தையே விடுதலையளிப்பவரும், துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவருமாவார். அவர் உங்களது துன்பத்;தை நீக்குவதற்காக, பழைய உலகின் விநாசத்தைத் தூண்டுகின்றார். அவர் நீங்கள் மாயையை வென்றவராகவும், உலகை வென்றவராகவும் ஆகுவதற்காக உங்கள் எதிரியை நீங்கள் வெற்றி கொள்ளுமாறு செய்கின்றார். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இராச்சியத்தைப் பெற்று, பின்னர் அதனை இழந்துவிடுகின்றீர்கள். இது உருத்திர சிவனின் ஞான யாகமாகும். இதன் மூலமாக விநாசச் சுவாலை தோன்றுகின்றது. அனைத்தும் அழிக்கப்பட்டு, நீங்கள் சதா சந்தோஷமானவர்களாக ஆகுவீர்கள். துவாபரயுகத்திலேயே துன்பம் ஆரம்பிக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நான் வந்து, நரகவாசிகளை சுவர்க்கவாசிகளாக ஆக்குகின்றேன். கலியுகம் விபச்சார விடுதியும். சத்தியயுகம் சிவாலயமுமாகும். நீங்கள் எல்லையற்ற தந்தையினால் சுவர்க்கத்தின் அதிபதிகளாக ஆக்கப்படுகின்றீர்கள். எனவே, உங்களது சந்தோஷப் பாதரசம் உயர வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் வாழும் காலம் வரைக்கும் தந்தையை நினைவு செய்து, உங்கள் ஆஸ்திக்கான உரிமையைக் கோருங்கள். எதைப் பற்றியும் அக்கறைப்படாதீர்கள்.
2. ஸ்ரீமத்துக்கு ஏற்ப உங்கள் சரீரம், மனம் செல்வத்தைப் பயன்படுத்தி, பாரதத்தை சுவர்க்கமாக மாற்றுகின்ற சேவை செய்து, இராவணனிடமிருந்து விடுதலை அடைவதற்கான வழியை அனைவருக்கும் காட்டுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களுடைய எல்லையற்ற நினைவின் வடிவத்தினால், உங்களுடைய அனைத்து சூழ்நிலைகளையும் முடித்து, அனுபவ சொரூபம் ஆகுவீர்களாக.
மேன்மையான ஆத்மாக்களாகிய நீங்களே விதையுடனும் திருமூர்த்தியாகிய பிரதான இரு இலைகளுடனும் நெருக்கமான உறவுமுறையையும் நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கும் அடிமரமாவீர்கள். இந்த மேன்மையான ஸ்திதியில் ஸ்திரமாக நிலைத்திருங்கள். எல்லையற்ற நினைவு சொரூபம் ஆகும் போது, அனைத்து எல்லைக்குட்பட்ட, வீணான விடயங்கள் அனைத்தும் முடிவடைகின்றன. முதிர்ச்சி என்ற எல்லையற்ற வடிவத்திற்கு நீங்கள் திரும்பி வரும் போது, நீங்கள் சதா அனுபவத்தின் சொரூபங்கள் ஆவீர்கள். நீங்கள் எல்லையற்ற மூதாதையர் என்ற உங்கள் தொழிலின் விழிப்புணர்வில் சதா நிலைத்திருங்கள். இருளில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு இலக்கைக் காட்டுகின்ற அமரத்துவ ஒளியாக இருக்க வேண்டியதே மூதாதையர்களாகிய உங்களின் கடமையாகும்.
சுலோகம்:
எந்த ஒரு சூழ்நிலையினாலும் குழப்பம் அடைவதை விடுத்து, மகிழ்ச்சியை அனுபவம் செய்பவரே போதையுடைய யோகியாவார்.