17/10/18 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் உங்கள் குடும்பங்களுடன் வீட்டில் வாழ்ந்தவாறு அனைவருக்குமான உங்கள் பொறுப்புக்களையும் நிறைவேற்றுங்கள். நீங்கள் எவரையும் வெறுக்கக்கூடாது. ஆனால் நீங்கள் நிச்சயமாகத் தாமரை மலரைப் போல் தூய்மையாக வேண்டும்.
கேள்வி:
வெற்றி மணியோசை எப்பொழுது ஒலிக்கும்? நீங்கள் எப்பொழுது புகழப்படுவீர்கள்?
பதில்:
இறுதியில், மாயையின் தீய சகுனங்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்தும்பொழுதும், உங்கள் இரேகை சதா தெளிவாக இருக்கும்பொழுதும், வெற்றி மணியோசை ஒலிப்பதுடன் குழந்தைகளாகிய நீங்களும் புகழப்படுவீர்கள். இன்னமும், குழந்தைகளாகிய நீங்கள் மாயையின் தீய சகுனங்களை அனுபவம் செய்வதுடன் தடைகளும் தொடர்ந்து வருகின்றன. நீங்கள் சேவை செய்வதற்கு மூன்றடி நிலம் பெறுவதும் உங்களுக்குச் சிரமமாகவே இருக்கின்றது. எவ்வாறாயினும், குழந்தைகளாகிய நீங்கள் முழு உலகினதும் அதிபதிகளாகுகின்ற காலமும் வரும்.
பாடல்:
ஓ மனமே, பொறுமையாக இரு, உனது சந்தோஷ நாட்கள் வரவிருக்கின்றன!
ஓம் சாந்தி.
குழந்தைகள் தாம் செய்கின்ற முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக, இப்பழைய நாடகம் முடிவிற்கு வருவதைப் புரிந்துகொள்கின்றார்கள். இன்;னமும் துன்பத்தின் ஒரு சில கணங்களே மீதமாக இருக்கின்றன, அதன்பின்னர் சந்தோஷம், சந்தோஷம் மாத்திரமே இருக்கும். நீங்கள் சந்தோஷத்தைப் பற்றி அறிந்துகொள்ளும்பொழுது, இது துன்ப பூமி என்பதையும் உங்களால் புரிந்துகொள்ள முடியும். இதில் அதிக வேறுபாடு இருக்கின்றது. நீங்கள் இப்பொழுது சந்தோஷத்திற்காகவே முயற்சி செய்கின்றீர்கள். துன்பத்தைப் பற்றிய இப்பழைய நாடகம் முடிவிற்கு வருகின்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சந்தோஷத்தைப் பெறுவதற்கே பாப்தாதாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்கள். எவருக்கும் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானது. நீங்கள் இப்பொழுது பாபாவுடன் வீடு திரும்ப வேண்டும். பாபா உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வதற்கே வந்துள்ளார். வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்தபொழுதிலும் தாமரை மலர் போல் தூய்மையாக இருங்கள். நீங்கள் நிச்சயமாக உங்கள் இல்லறத்திற்கான பொறுப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் உங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றாவிடின் சந்நியாசிகளைப் போலவே இருப்பீர்கள். அவர்கள் தமது இல்லறத்திற்கான பொறுப்புக்களை நிறைவேற்றாததால், ஹத்தயோகத்தைப் பயிற்சி செய்கின்ற, துறவறப் பாதைக்குரியவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். சந்நியாசிகளால் கற்பிக்கப்படுவது ஹத்தயோகம். ஆனால் நீங்கள் இறைவனால் கற்பிக்கப்படுகின்ற, இராஜயோகத்தையே கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். பாரதத்தின் சமயநூல் கீதையாகும். ஏனையோரின் சமயநூல்களையிட்டு நீங்கள் அக்கறைப்படுவதில்லை. சந்நியாசிகள் இல்லறப் பாதைக்குரியவர்கள் அல்ல. அவர்களின் பாதை ஹத்தயோகம். அவர்கள் தமது குடும்பங்களைக் கைவிட்டு வெளியேறிக் காட்டிற்குச் சென்று வசிக்கின்றார்கள். இதனால் அவர்கள் பிறவிபிறவியாகத் துறவிகளாகவே பிறப்பெடுக்கின்றார்கள். ஆனால் நீங்களோ வீட்டில் உங்கள் இல்லறங்களில் வாழ்ந்து கொண்டு ஒரு பிறவிக்கு அனைத்தையும் துறப்பதன் மூலம் 21 பிறவிகளுக்கு அதன் வெகுமதியைப் பெறுகின்றீர்கள். அவர்களது துறவு எல்லைக்குட்பட்டது. அவர்கள் ஹத்தயோகத்தைப் பயிற்சி செய்கின்றார்கள். உங்கள் துறவறம் எல்லையற்றது, நீங்கள் இராஜயோகத்தைப் பயிற்சி செய்கின்றீர்கள். அவர்கள் தமது இல்லறங்களையும், வியாபாரங்களையும் துறக்கின்றனர். இராஜயோகம் பெருமளவில் புகழப்படுகின்றது. கடவுள்; இராஜயோகத்தைக் கற்பித்தார். ஆகவே அவர் நிச்சயமாக அதிமேலானவர் என அழைக்கப்பட வேண்டும். ஸ்ரீகிருஷ்ணர் கடவுளாக முடியாது. எல்லைற்ற தந்தையே அசரீரியானவர். அவரால் மாத்திரமே உங்களுக்கு எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்க முடியும். இங்கு, நீங்கள் இல்லற வாழ்க்கையை வெறுப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: இவ் இறுதிப் பிறவியில், உங்கள் வீட்டில் இல்லறத்தவர்களுடன் வாழும்பொழுதும் தூய்மையாக இருங்கள். எந்தச் சந்நியாசியையும் தூய்மையாக்குபவர் என அழைக்க முடியாது. சந்நியாசிகள், “ஓ தூய்மையாக்குபவரே!” எனக் கூவி அழைக்கின்றார்கள். அவர்கள் அவரையே நினைவு செய்கின்றார்கள். அவர்களும் ஒரு தூய உலகை விரும்புகின்றார்கள், ஆனால் அவ்வுலகம் முற்றிலும் வேறுபட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இல்லறத்தில் வாழாததால், தேவர்களில் நம்பிக்கையைக் கொண்டிருப்பதில்லை. அவர்களால் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. தந்தை ஹத்தயோகத்தைக் கற்பிப்பதுமில்லை, சந்நியாசிகள் இராஜயோகத்தைக் கற்பிப்பதுமில்லை. இந்த விடயம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். டெல்கியில் ஓர் உலக மாநாடு நடைபெறப் போகின்றது. அவர்களுக்கு விளங்கப்படுத்துவதுடன், அவர்களுக்கு அதனை எழுத்திலும் கொடுங்கள். அங்கு, பல முரண்பாடான கருத்துக்கள் இருக்கின்றன. நீங்கள் எழுதிக் கொடுக்கும்பொழுது உங்கள் இலக்கு என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்வார்கள். நாம் இப்பொழுது மேன்மையான பிராமண குலத்தில் ஒருவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நாம் எவ்வாறு சூத்திர குலத்தின் அங்கத்தவர் ஆக முடியும்? நாம் எவ்வாறு எங்களை விகாரமான குலத்தில் பதிவுசெய்ய முடியும்? இதனாலேயே நாங்கள் பதிவு செய்வதற்கு மறுக்கின்றோம். நாங்கள் ஆஸ்திகர்கள், அவர்கள் நாஸ்திகர்கள். அவர்கள் கடவுளை நம்பாதவர்கள், நாங்களோ கடவுளுடன் யோகம் கொண்டிருப்பவர்கள். இதனாலேயே கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. தந்தையை அறியாதோர் நாஸ்திகர்கள் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, தந்தையால் மாத்திரமே வந்து அவர்களை ஆஸ்திகர்கள் ஆக்க முடியும். தந்தைக்குரியவர்கள் ஆகுவதன் மூலம் நீங்கள் அவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கின்றீர்கள். இது மிகவும் ஆழமான விடயம். அனைத்திற்கும் முதலில், நீங்கள் பரமாத்மாவான பரமதந்தையே கீதையின் கடவுள் என்பதை அவர்களின் புத்தியில் பதிய வைக்க வேண்டும். அவரே ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தைச் ஸ்தாபித்தவர். தேவ தர்மமே பாரதத்தின் பிரதான சமயமாகும்;. பாரத பூமி ஒரு தர்மத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் தர்மத்தை மறந்து விட்டார்கள். நாடகத்திற்கு ஏற்ப பாரத மக்கள் தமது தர்மத்தை மறக்க வேண்டும். அதனால் தந்தையால் வந்து மீண்டும் அதனை ஸ்தாபிக்க முடியும் என்பதை நீங்களும் புரிந்துகொள்கின்றீர்கள். இல்லாவிட்டால் தந்தையால் எவ்வாறு வரமுயும்? அவர் கூறுகின்றார்: தேவ தர்மம் மறைந்து விட்ட பின்னரே நான் வருகின்றேன். அது நிச்சயமாகவே மறைந்து விடவேண்டும். உலகிற்கு ஆதாரமாக இருந்த எருதின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது, அது இப்பொழுது மூன்று கால்களிலேயே தங்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஆகவே நான்கு பிரதான சமயங்கள் இருக்கின்றன. தேவ தர்மத்தின் கால் இப்பொழுது துண்டிக்கப்பட்டு விட்டது, அதாவது, அத்தர்மம் மறைந்து விட்டது. இதனாலேயே ஆலமரத்தின் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கின்றது: இதன் அத்திவாரம் உக்கிவிட்டாலும் இதன் பல கிளைகளும், கொப்புக்களும் இன்னமும் இருக்கின்றன. அதுபோலவே இங்கும், தேவ தர்மத்தின் அத்திவாரம் அற்றுப்; போய்விட்டது. ஆனால் உலகம் முழுவதிலும் பல கிளைகளும் பிரிவுகளும் இருக்கின்றன. இப்பொழுது உங்கள் புத்தி முழுவதும் ஒளியே இருக்கின்றது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இந்நாடகத்தைப் பற்றி அறிந்து கொண்டுள்ளீர்கள். இம்முழு விருட்சமும் இப்பொழுது பழையதாகி விட்டது. கலியுகத்தின் பின்னர் நிச்சயமாகச் சத்தியயுகம் வரும்; சக்கரம் நிச்சயமாகச் சுற்ற வேண்டும். நாடகம் இப்பொழுது முடிவிற்கு வந்துவிட்டது என்றும், நாங்கள் வீடு திரும்புகின்றோம் என்பதையும் நீங்கள் உங்கள் புத்தியில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் நடந்தும், உலாவியும் திரியும்பொழுதும் நினைவுசெய்யுங்கள்: நாங்கள் இப்பொழுது வீட்டிற்குத் திரும்ப வேண்டும். இதுவே “மன்மனாபவ, மத்தியாஜிபவ” என்பவற்றின் உண்மையான அர்த்தம். நீங்கள் பெரிய ஒரு கூட்டத்திற்குச் சொற்பொழிவு ஆற்ற நேரிடின், அவர்களுக்கு பரமாத்மாவான பரமதந்தை இவ்வாறு மீண்டும் ஒருமுறை கூறுகின்றாரென விளங்கப்படுத்துங்கள்: ஓ குழந்தைகளே, உங்கள் சரீர உணர்வையும், அனைத்துச் சரீர சமயங்களின் உணர்வையும் துறந்து, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள்; தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் அழிக்கப்படும். நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றேன். உங்கள் இல்லறங்களில் வாழும்பொழுதிலும் ஒரு தாமரை மலர் போல இருந்து என்னை நினைவுசெய்யுங்கள். தூய்மையாக இருந்து இந்த ஞானத்தைக் கிரகியுங்கள். அனைவரும் இப்பொழுது சீரழிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். சத்திய யுகத்தில் தேவர்கள் சற்கதியில் இருந்தார்கள். தந்தை மீண்டும் ஒருமுறை வந்து சற்கதியை அருள்கின்றார். சற்கதியின் தகைமைகள்: 16 சுவர்க்கக் கலைகளும் முழுமையான தூய்மை மற்றும் அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்திருத்தல் என்பனவாகும். உங்களுக்கு இத்தகைய தகைமைகளைக் கொடுப்பது யார்? தந்தையே. அவரது தகைமைகள் எவை? அவர் ஞானக் கடலும், பேரானந்தக் கடலும் ஆவார். அவரது புகழ் முற்றிலும் வேறுபட்டது. அனைவரும் ஒரேமாதிரியானவர்கள் அல்லர். ஆத்மாக்கள் அனைவரும் ஒரே தந்தையின் குழந்தைகளே. பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளும் இருக்கின்றார்கள். புதிய படைப்பு இப்பொழுது படைக்கப்படுகின்றது. அனைவரும் மனித குலத் தந்தையின் குழந்தைகளே. எவ்வாறாயினும் அம்மக்கள் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். பிராமணக் குலமே அனைத்திலும் உயர்வான குலம். பாரதத்தின் குலங்களும் நினைவுகூரப்படுகின்றன. 84 பிறவிகள் எடுத்தவாறே நீங்கள் இக் குலங்களினூடாகச் செல்ல வேண்டும். பிராமணக் குலம் சங்கமயுகத்திலேயே இருக்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது இனிய மௌனத்தில் இருக்க வேண்டும். இம்மௌனமே அனைத்திலும் சிறந்ததாகும். உண்மையில் அமைதி என்ற அட்டியல் என்பது உங்களது கழுத்தைச் சுற்றியே இருக்கின்றது. அனைவரும் அமைதி என்ற வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்றே விரும்புகின்றார்கள், ஆனால் எவரால் அதற்கான பாதையை அவர்களுக்குக் காட்ட முடியும்? அமைதிக் கடலைத் தவிர, வேறு எவராலும் உங்களுக்கு அந்தப் பாதையைக் காட்ட முடியாது. அவருக்கு மிக நல்ல தலைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன: அமைதிக் கடல், ஞானக் கடல். ஸ்ரீ கிருஷ்ணர் சுவர்க்கத்தின் இளவரசர். பாபாவே மனித உலக விருட்சத்தின் விதையாவார்; இதில் பகலுக்கும் இரவிற்கும் இடையான வித்தியாசம் உள்ளது. கிருஷ்ணரை மனித உலக விருட்சத்தின் விதை என அழைக்க முடியாது. இது சர்வவியாபகர் என்ற ஞானம் பொருத்தமற்றது என்பதையே நிரூபிக்கின்றது. தந்தையும் தனது சொந்தப் புகழைக் கொண்டிருக்கின்றார். அவர் அநாதியாகவே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர். அவர் ஒருபொழுதும் பூஜிப்பவர் ஆகுவதில்லை. மேலிருந்து கீழே முதலில் வருபவர்களே பூஜிக்கத் தகுதி வாய்ந்தவர்களிலிருந்து பூஜிப்பவர்கள் ஆகுகின்றார்கள். உங்களுக்குப் பல கருத்துக்கள் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. கண்காட்சிகளுக்குப் பலர் வந்தபொழுதிலும் மில்லியன் கணக்கானானோரில் ஒரு கைப்பிடியளவினரே வெளிப்படுகிறார்கள். ஏனெனில் இலக்கு மிக உயர்ந்தது. எண்ணற்ற பிரஜைகள் தொடர்ந்தும் உருவாக்கப்படுகிறார்கள். மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடியினரே வெளிப்பட்டு, மாலையின் மணியாகுகிறார்கள். நாரதரின் உதாரணமும் இருக்கின்றது. அவர் இலக்ஷ்மியைத் தனது மணவாட்டியாக அடைவதற்குத் தகுதியானவரா என்று காண்;பதற்கு, அவரைக் கண்ணாடியில் அவரது முகத்தைப் பார்க்குமாறு கூறப்பட்டது. பல பிரஜைகள் உருவாக்கப்படுவார்கள், எனினும் அரசர் என்பவர் அரசரே! ஓர் அரசருக்கு நூறாயிரம் பிரஜைகள் இருப்பர். நீங்கள் மேன்மையான முயற்சியைச் செய்ய வேண்டும். அரசர்களின் மத்தியிலும் சிலர் மகாராஜாக்களாகவும், சிலர் மகத்துவம் இல்லாமலும் இருக்கின்றார்கள். பாரதத்தில் பல அரசர்கள் இருந்தார்கள். சத்தியயுகத்திலும் பல மகாராஜாக்கள் இருக்கின்றார்கள். இது சத்திய யுகத்தின் ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்துள்ளது. மகாராஜாக்கள் அதிகளவு சொத்துக்களையும், அரசர்கள் சிறிதளவு சொத்துக்களையுமே கொண்டிருக்கின்றார்கள். இதுவே ஸ்ரீ இலக்ஷ்மியாகவும் நாராயணனாகவும் ஆகுவதற்கான ஞானம். இதற்காகவே நீங்களும் தொடர்ந்தும் முயற்சி செய்கின்றீர்கள். “நீங்கள் இலக்ஷ்மி நாராயணனது அந்தஸ்தையா அல்லது இராமர் சீதையினது அந்தஸ்தையா பெறுவீர்கள்?” என உங்களிடம் வினவப்பட்டால், “இலக்ஷ்மி நாராயணனின் அந்தஸ்தை மாத்திரமே நாங்கள் பெறுவோம். நாங்கள் எங்களுடைய தாய் தந்தையிடமிருந்து முழு ஆஸ்தியையும் பெறுவோம்” என்று பதிலளிக்கின்;றீர்கள். இவை அத்தகைய அற்புதமான விடயங்கள். அத்தகைய விடயங்கள் வேறு எங்கும் வெளிவருவதில்லை, அவை எந்தவொரு சமயநூல்களிலும் எழுதப்படவும் இல்லை. உங்கள் புத்தியின் பூட்டு இப்பொழுது திறக்கப்பட்டுள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும் நீங்கள் ஒரு நடிகராக இருக்கின்ற உணர்வையும், நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்ற உணர்வையும் பேணுங்கள். இதனை நினைவுசெய்தலே ‘மன்மனாபவ’ என்றும், ‘மத்தியாஜிபவ’ என்றும் அழைக்கப்படுகின்றது. தந்தை மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றார்: நான் உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கே வந்துள்ளேன். இது உங்களது ஆன்மீக யாத்திரையாகும். தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களை இந்த யாத்திரைக்கு அழைத்துச் செல்ல முடியாது. நீங்களே பாரதத்தைப் பெருமளவில் போற்ற வேண்டும். இந்தப் பாரதமே அதி புனிதமான இடம். ஒரேயொரு தந்தை மாத்திரமே துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவரும், அனைவருக்கும் சற்கதியை அருள்பவரும் ஆவார். பாரதமே அவரது பிறப்பிடம். அந்தத் தந்தையே அனைவரையும் விடுவிக்கிறார். இதுவே அவரது அதிமேன்மையான யாத்திரீக ஸ்தலம். பாரத மக்கள் சிவாலயத்திற்குச் சென்றபொழுதிலும் அவர்களுக்கு அவரைத் தெரியாது. அவர்களுக்குக் காந்தியைத் தெரியும், அவர் மிகவும் சிறந்தவராக இருந்தார் என்றும் அவர்கள் நம்புகின்றார்கள்; இதனாலேயே அவர்கள் சென்று அவருக்கு மலர்கள் போன்றவற்றை அர்ப்பணிக்கின்றார்கள். அவர்கள் இதற்காக நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்கின்றார்கள். இது இப்பொழுது அவர்களது அரசாங்கம், ஆகவே, அவர்கள் எதைச் செய்ய விரும்பினாலும், அதனைச் செய்யலாம். தந்தை இங்கமர்ந்திருந்து இந்தத் தர்மத்தை மறைமுகமான முறையில் ஸ்தாபிக்கின்றார். இவ்விராச்சியம் இப்பொழுது முற்றாகவே வேறுபட்டது. பாரதத்தில் ஆரம்பத்தில், தேவர்களின் இராச்சியமே இருந்தது. அவர்கள் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றதாகக் காட்டுகின்றார்கள், ஆனால் அத்தகைய எதுவுமே நடைபெறவில்லை. இங்கு யுத்த களத்திலேயே நீங்கள் மாயையை வெற்றி கொள்கின்றீர்கள். நிச்சயமாக ஒரேயொரு சர்வசக்திவானால் மாத்திரம் உங்களை மாயையை வெற்றிகொள்ளுமாறு செய்ய முடியும். கிருஷ்ணரைச் சர்வசக்திவான் என அழைக்க முடியாது. பாபாவால் மாத்திரமே இராவண இராச்சியத்தில் இருந்து உங்களை விடுவித்து, இராம இராச்சியத்தை ஸ்தாபிக்க முடியும். எவ்வாறாயினும், யுத்தங்கள் போன்ற கேள்விக்கே அங்கு இடமில்லை. நீங்கள் உலகில் பார்த்தீர்களாயின் கிறிஸ்தவர்களே இப்பொழுது “சர்வசக்திவான்கள்” ஆக இருக்கின்றார்கள். அவர்கள் விரும்பினால் அவர்களால் அனைவரையுமே வெற்றிகொள்ள முடியும். எவ்வாறாயினும் அவர்கள் உலகின் அதிபதியாகுவது விதியல்ல. நீங்கள் மாத்திரமே இந்த இரகசியத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். தற்சமயம் கிறிஸ்தவர்களின் இராச்சியமே மிகவும் சக்திவாய்ந்த அதிகாரம் கொண்டதாகும். உண்மையில் அவர்களது சனத்தொகையே குறைந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களே இறுதியாக வந்தார்கள். எவ்வாறாயினும், மூன்று சமயங்களிலும் அவர்களுடையதே அனைத்திலும் வலுவானது. அவர்கள்; தமது கட்டுப்பாட்டினுள் அனைவரையும் வைத்திருக்கின்றார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மூலமே நாங்கள் மீண்டும் எங்கள் இராச்சியத்தைப் பெற்றுக் கொள்வோம். இருபூனைகள் ஒன்றுடன் ஒன்று சண்டை செய்ய, மூன்றாமவர் எவ்வாறு வெண்ணெயைப் பெற்றுக் கொண்டார் என்ற ஒரு கதையும் இருக்கின்றது. அவர்கள் தம்மிடையே சண்டையிடும்பொழுது, பாரத மக்கள் இடையில் வெண்ணெயைப் பெறுவார்கள். அந்தக் கதை சில சதங்களின் பெறுமதியைக் கொண்டதாக இருந்தபொழுதிலும் அதன் அர்த்தம் மிகவும் மகத்துவமானது! மனிதர்கள் மிகவும் விவேகமற்றவர்கள். அவர்கள் நாடகத்தின் நடிகர்களாக இருந்தபொழுதிலும், அவர்கள் நாடகத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் விவேகமற்றவர்களாகி விட்டனர். ஏழைகள் மாத்திரமே இதனை அறிந்துகொள்வார்கள். செல்வந்தர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. தந்தை ஏழைகளின் பிரபு என்றும், தூய்மையாக்குபவர் என்றும் நினைவுகூரப்படுகின்றார். அவர் இப்பொழுது அந்தப் பாகத்தை நடைமுறையில் நடிக்கின்றார். நீங்கள் இவற்றைப் பெருமளவான பார்வையாளர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். சிறிதுசிறிதாக அவரது புகழ் பாடப்;படுவதுடன் இறுதிக் கணங்களில் மணிகள் ஒலிக்கும் என்று பொது அறிவும் கூறுகின்றது. இன்னமும் குழந்தைகள் தீய சகுனங்களின் கிரகணத்தைக் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்களின் இரேகை தெளிவாக இல்லை. தடைகள் தொடர்ந்தும் வருகின்றன. அவை நாடகத்திற்கேற்ப தொடர்ந்தும் வரும். எவ்வளவிற்கு அதிகளவு முயற்சியை நீங்கள் செய்கின்றீர்களோ, அவ்வளவுக்கு உயர்ந்த அந்தஸ்;தை உங்களால் அடைய முடியும். பாண்டவர்கள் மூன்றடி நிலத்தைக் கொண்டிருக்கவில்லை என்பது இந்நேரத்தையிட்டே நினைவுகூரப்படுகின்றது. எவ்வாறாயினும், அவர்களே பின்னர் நடைமுறை வடிவில் உலக அதிபதிகள் ஆகினார்கள் என்பது எவருக்கும் தெரியாது. நீங்கள் இதையிட்டுச் சந்தோஷமற்றவர்களாக ஆக வேண்டியதில்;லை என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீரகள். இதே விடயமே கடந்த கல்பத்திலும் நடைபெற்றது. நீங்கள் நாடகம் எனும் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்க வேண்டும்; நீங்கள் இதில் ஆட்டம் காணக்கூடாது. நாடகம் இப்பொழுது முடிவுறும் நிலையில் உள்ளது, நீங்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்வீர்கள். ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறும்வகையில் நீங்கள் கற்க வேண்டும். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை, தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் நடக்கும்பொழுதும், முன்னேறும்பொழுதும், நீங்கள் ஒரு நடிகர் என்ற உணர்வைப் பேணி நாடகம் என்ற தண்டவாளத்தில் ஸ்திரமாக இருங்கள். நீங்கள் இப்பொழுது ஒரு யாத்திரையில் இருக்கின்றீர்கள் என்பதும், நீங்கள் வீட்டிற்குத் திரும்பிச் செல்கின்றீர்கள் என்பதும் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும்.
2. சற்கதிக்கான அனைத்துக் தகுதிகளையும் உங்களுக்குள் கிரகியுங்கள். அனைத்துத் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும் 16 சுவர்க்கக் கலைகளில் முற்றாகத் தூய்மையானவர்களாகவும் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு மாஸ்டர் அருள்பவராக இருந்து, உங்கள் ஒத்துழைப்பு எனும் நல்லாசிகள் மூலம் ஓர் ஆன்மீகச் சூழலை உருவாக்குவீர்களாக.
உங்களைச் சடப்பொருள் தனது ஆதிக்கத்தைக் காலநிலையில் உணருமாறு செய்கின்றது; சிலசமயங்களில் அது வெப்பமாகவும் சிலசமயங்களில் குளிராகவும் உள்ளது. அதேபோன்று, சடப்பொருளை வெற்றிகொள்கின்ற ஆத்மாக்களாகிய நீங்கள் ஒத்துழைப்பாகவும் (சகயோகி), இலகுயோகிகளாகவும் (சகஜ்யோகி) இருக்கின்றீர்கள். உங்கள் நல்லாசிகள் மூலம் ஓர் ஆன்மீக சூழலை உருவாக்குவதில் நீங்கள் ஒத்துழைப்பாக வேண்டும். “இவர் இவ்வாறானவர்” அல்லது “இவர் இதைச் செய்கின்றார்” என்று எண்ணாதீர்கள். “சூழலோ அல்லது நபரோ எவ்வாறிருந்தாலும், நான் என்னுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று எண்ணுங்கள். அருள்பவரின் குழந்தைகள் சதா வழங்குகின்றார்கள். எனவே, நீங்கள் உங்கள் எண்ணங்கள், உங்கள் வார்த்தைகள், உறவுமுறைகள் அல்லது தொடர்புகளில் ஒத்துழைப்பாக இருந்தாலும், உங்கள் இலக்கு நிச்சயமாக ஒத்துழைப்பதாகவே இருக்க வேண்டும்.
சுலோகம்:
ஆசைகள் அனைத்தையும் அறியாதவராக இருக்கின்ற உங்கள் ஸ்திதி மூலம் அனைவருடைய ஆசைகளையும் பூர்த்திசெய்வதே, ஒரு காமதேனுவாக (அனைவரின் ஆசைகளையும் பூர்த்திசெய்கின்ற பசு) இருப்பதாகும்.