22.12.18        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்:

இனிய குழந்தைகளே, இப்பாடசாலைக்கு வருவதால், நீங்கள் உடனடிப் பேற்றைப் பெறுகின்றீர்கள். தந்தை கொடுக்கின்ற ஞான இரத்தினம் ஒவ்வொன்றும் நூறாயிரக் கணக்கான பெறுமதியுடைய சொத்தாகும்.

கேள்வி:
பாபா உங்களுக்குக் கொடுக்கின்ற போதை ஏன் குறைவடைகின்றது? போதை எப்பொழுதும் உயர்ந்த நிலையில் இருப்பதற்கான வழிமுறை என்ன?

பதில்:
நீங்கள் வெளியில் சென்று, உங்கள் உறவினர்களின் முகங்களைப் பார்ப்பதாலும், பற்றை வென்றவர்கள் ஆகாததாலும் போதை குறைவடைகின்றது. போதை எப்பொழுதும் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு, தந்தையுடன் இதயபூர்வமான சம்பாஷணையைக் கொண்டிருப்பதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். பாபா, நான் உங்களுக்கு உரியவனாக இருந்தேன். பின்னர் நீங்கள் என்னைச் சுவர்க்கத்திற்கு அனுப்பினீர்கள். நான் 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தை அனுபவித்து, பின்னர் சந்தோஷமற்றவனாகினேன். இப்பொழுது நான் மீண்டும் ஒருமுறை சந்தோஷ ஆஸ்தியைப் பெறுவதற்காக வந்துள்ளேன். பற்றை வென்றவராகுங்கள், உங்கள் போதை எப்பொழுதும் உயர்ந்த நிலையில் இருக்கும்.

பாடல்:
உங்கள் பாதையிலேயே வாழ்ந்து, உங்கள் பாதையிலேயே மடிவேன்....

ஓம்சாந்தி.
நீங்கள் யாருடைய வார்த்தைகளைக் கேட்டீர்கள்? கோப, கோபியருடையதாகும். அவர்கள் யாருக்கு அதனைக் கூறுகின்றார்கள்? பரமாத்மா பரமதந்தை சிவபாபாவிற்காகும். நிச்சயமாக ஒரு பெயர் தேவைப்படுகின்றது. நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களது கழுத்து மாலையில் கோர்க்கப்படுவதற்காக, உயிருடன் இருக்கும்போதே உங்களுக்குச் சொந்தமாகின்றேன். உங்களை மாத்தி;ரம் நினைவுசெய்வதால், நான் உங்களது கழுத்து மாலையில் கோர்க்கப்படுகின்றேன். உருத்திர மாலை மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. ஆத்மாக்கள் அனைவரும் உருத்திர மாலையில் இடம்பெறுவதாகத் தந்தை விளங்கப்படுத்தியிருக்கின்றார். இது ஓர் ஆன்மீக விருட்சமாகும். அது மனிதர்களின் வம்சாவளி விருட்சமாகும். இதுவோ ஆத்மாக்களின் விருட்சமாகும். விருட்சமானது, தேவர்களுக்கான பகுதி, இஸ்லாம் மதத்தவர்களுக்கான பகுதி, பௌத்த மதத்தவர்களுக்கான பகுதி எனப் பல பகுதிகளைக் கொண்டதாகும். வேறு எவராலும் இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. கீதையின் கடவுளே உங்களுக்கு இதனைக் கூறுகிறார். அவர் மாத்திரமே பிறப்பு, இறப்பிற்கு அப்பாற்பட்டவராவார். அவரை ‘ஒருபோதும் பிறப்பு எடுக்காதவர்’ என அழைக்க முடியாது. அவர் பிறப்பு, இறப்புச் சக்கரத்தினுள் வருவதில்லை என்பதனையே அது குறிக்கின்றது. அவருக்குப் பௌதீகச் சரீரமோ அல்லது சூட்சும சரீரமோ இல்லை. ஆலயங்களில் அவர்கள் சிவலிங்கத்தைப் பூஜிக்கின்றார்கள். அவர்கள் அதனை பரமாத்மா என அழைக்கின்றார்கள். அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று, இப்புகழைப் பாடுகின்றனர். பரமாத்மா பிரம்மாவுக்கு வந்தனங்கள் என அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. அவர்கள் எப்பொழுதும் சிவனையே பரமாத்மாவாகக் கருதுகின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: பரமாத்மா சிவனுக்கு வந்தனங்கள். அது அசரீரி உலகமாகும், மற்றையது சூட்சும லோகமாகும், இதுவோ பௌதீக உலகமாகும். இப்பொழுது, இங்கே, கடவுள் சர்வவியாபகர் என்ற ஞானம் கொடுக்கப்படுவதில்லை என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். கடவுள் இவரிலும் இருந்திருந்தால், நீங்கள் இவருக்கும் கூறுவீர்கள்: பரமாத்மாவிற்கு வந்தனங்கள். அவர் ஒரு சரீரத்தில் உள்ளபோது “பரமாத்மாவிற்கு வந்தனங்கள்” என நீங்கள் கூறமாட்டீர்கள். உண்மையில், “மகாத்மா”, “புண்ணியாத்மா”, “பாவாத்மா” என்பனவே பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளாகும். “மகா பரமாத்மா” என ஒருபோதும் கூறப்படுவதில்லை. புண்ணிய பரமாத்மா, அல்லது பாவப் பரமாத்மா ஆகிய பதங்கள்கூட இல்லை. இவ்விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இப்பாடசாலைக்கு வருவதால், பேறானது உடனடிப் பலனாக உங்களுக்குக் கிடைக்கின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். இக்கல்வியின் மூலமாக நாங்கள் எதிர்காலத்தில் தேவர்களாகுகின்றோம். வேறு எவராலுமே இவ்வாறு கூறமுடியாது. நீங்களே மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுபவர்கள். தேவர்களின் மத்தியிலும்கூட, இலக்ஷ்மியும், நாராயணனும் பிரபல்யம் வாய்ந்தவர்கள். இதனாலேயே அவர்கள் சத்திய நாராயணனின் கதையைப் பேசுகின்றனர். அங்கே நிச்சயமாக நாராயணனுடன் இலக்ஷ்மியும் கூடவே இருப்பார். சத்திய இராமரின் கதையைப் பற்றி அவர்கள் கூறுவதில்லை. அவர்கள் கூறுகின்றனர்: இது சத்திய நாராயணனின் கதையாகும். அச்சா, அதன் மூலமாக என்ன நிகழும்? சாதாரண மனிதன் நாராயணனாக மாறுவார். நீங்கள் சட்டநிபுணர் மூலமாக ஒரு சட்டநிபுணரின் கதையைக் கேட்டு, பின்னர் சட்டநிபுணராகுகின்றீர்கள். நீங்கள் உங்களது எதிர்கால 21 பிறவிகளுக்கான பேற்றிற்காக இங்கே வந்திருக்கின்றீர்கள். சங்கமயுகத்திலேயே எதிர்கால 21 பிறவிகளுக்கான பேறு பெறப்படுகின்றது. நீங்கள் உங்களது ஆஸ்தியாகிய சத்தியயுக இராச்சியத்தைத் தந்தையிடமிருந்து பெறுவதற்காகவே இங்கே வந்திருக்கின்றீர்கள் என்பதனை அறிவீர்கள். எவ்வாறாயினும், முதலில், சிவபாபாவே உங்களுடைய பாபா என்பதில் உறுதியான நம்பிக்கை இருக்கவேண்டும். அவர் இந்த பிரம்மாவினதும் பாபா ஆவார். எனவே, அவரே பிரம்மகுமாரர், குமாரிகளின் தாதா (பாட்டனார்) ஆவார். இத்தந்தை (பிரம்மா) கூறுகிறார்: இது எனது சொத்து அல்ல. நீங்கள் பாட்டனாரின் சொத்தையே பெறுகிறீர்கள். சிவபாபாவிடம் ஞான இரத்தினங்கள் என்ற செல்வம் இருக்கின்றது. ஒவ்வொரு இரத்தினமும் நூறாயிரக்கணக்கான பெறுமதியுடைய சொத்தாகும். எவருமே 21 பிறவிகளுக்கான இராச்சிய பாக்கியத்தைக் கனவில்கூட கண்டிருக்காத அளவிற்கு அதன் பெறுமதி மிக உயர்வானதாகும். மக்கள் இலக்ஷ்மி, நாராயணனைப் பூஜிக்கின்றபோதிலும், அவர்கள் தங்களது அந்தஸ்தை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பதனை எவருமே அறியமாட்டார்கள். சத்தியயுகக் காலப்பகுதி நூறாயிரக் கணக்கான வருடங்கள் என அவர்கள் கூறியிருக்கின்றனர். இதனாலேயே அவர்களால் எதனையும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கின்றது. அவர்கள் இராச்சியத்தை ஆட்சிபுரியத் தொடங்கி, இப்பொழுது 5000 வருடங்களாகிவிட்டன என்பதனை நீங்கள் அறிவீர்கள். கதையானது முதலாவது யுகத்திலிருந்து ஆரம்பிப்பதாகக் கூறப்படுகின்றது: வெகு காலத்திற்கு முன்னர், இந்த பாரதத்தில் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது. பாரதம் பாகிஸ்ட் (வைகுந்தம்) என, அதாவது, சுவர்க்கம் என அழைக்கப்படுகின்றது. இது எவரது புத்தியிலும் இல்லை. சக்கரத்தின் காலப்பகுதி 5000 வருடங்கள் என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அச்சமய நூல்களில் எழுதப்பட்டிருந்தவை யாவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைச் செவிமடுப்பதால் எந்தப் பலனுமே இல்லை. அவர்கள் பெருமளவில் கொண்டாடுகிறார்கள். ஒரேயொரு ஜெகதாம்பாளே இருக்கின்றார். எனினும், அவர்கள் அவருக்காகப் பல விக்கிரகங்களை உருவாக்குகின்றார்கள். ஜெகதாம்பாள் சரஸ்வதி பிரம்மாவின் புத்திரியாவார். அவர் 8 அல்லது 10 கரங்களைக் கொண்டிருப்பதில்லை. தந்தை கூறுகின்றார்: அவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் பெரும் சம்பிரதாயங்களாகும். ஞானத்தில் அவையெதுவுமே இல்லை. நீங்கள் மௌனமாக இருந்து, தந்தையை நினைவுசெய்ய வேண்டும். பாபாவை ஒருபோதுமே கண்டிராத பல புத்திரிகள் உள்ளனர். அவர்கள் எழுதுகின்றனர்: பாபா, உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனால் எனக்கு உங்களை மிக நன்றாகத் தெரியும். நீங்கள் அதே பாபா. நான் நிச்சயமாக உங்களிடமிருந்து எனது ஆஸ்தியைப பெறுவேன். பலர் வீட்டிலிருக்கும்போது கூடக் காட்சிகளைப் பெறுகின்றனர். சிலருக்குக் காட்சிகள் கிடைக்காதபோதிலும் அவர்கள் தொடர்ந்தும் எழுதுகின்றனர். நினைவின்போது, அவர்கள் முழுமையாக அன்பில் மூழ்கிவிடுகின்றனர். தந்தை மாத்திரமே ஜீவன்முக்தியை அருள்பவர். நீங்கள் அவர்மீது அதிக அன்பு செலுத்த வேண்டும். பெற்றோர் தமது குழந்தைகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதனால், குழந்தைகள் தமது பெற்றோரிடம் தாவிச் சென்றுவிடுவார்கள். எவ்வாறாயினும், இன்றைய பெற்றோர் சந்தோஷத்தைக் கொடுப்பதில்லை. அவர்கள் குழந்தைகளை மேலும் விகாரத்தில் சிக்க வைக்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: கடந்தது கடந்ததே. இப்பொழுது நீங்கள் வழிகாட்டலைப் பெறுகின்றீர்கள்: குழந்தைகளே, காமவாளுடன் கூடிய விடயங்களை ஒருபுறம் விட்டுவிட்டு, தூய்மையாகுங்கள். ஏனெனில், நீங்கள் இப்பொழுது கிருஷ்ணதாமத்திற்குச் செல்ல வேண்டும். சத்தியயுகத்தில் கிருஷ்ணரின் இராச்சியம் இருக்கின்றது. அவர்கள் கிருஷ்ணரைத் துவாபரயுகத்தில் சித்தரித்திருக்கின்றார்கள். சத்தியயுகத்து இளவரசர் துவாபரயுகத்திற்கு வந்து கீதையைப் பேசுவதில்லை. அவர் ஸ்ரீ நாராயணனாக வந்து, சத்தியயுகத்தை ஆட்சிபுரிய வேண்டும். கடவுள் பேசுகிறார்: இந்நேரத்தில் மனிதர்கள் யாவரும் அசுர சுபாவத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைத் தெய்வீக சுபாவத்தைக் கொண்டவர்களாக ஆக்குவதற்காகவே கீதையின் கடவுள் வருகிறார். தந்தையின் பெயருக்குப் பதிலாக அவர்கள் குழந்தையின் பெயரைப் புகுத்தியதுடன், அக்குழந்தையை துவாபரயுகத்தில் காண்பித்திருக்கின்றார்கள். இதுவும் ஒரு பெரிய தவறேயாகும். எனவே, அந்நேரத்தில் யாதவர்களும், பாண்டவர்களும் இருப்பதை அவர்களால் நிரூபிக்க முடியாது. தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் மேன்மையான தேவ வம்சத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள். எனவே, உங்களது நிலைமை இப்போது ஏன் இப்படியாகி விட்டது? நான் இப்பொழுது மீண்டும் ஒருமுறை உங்களை தேவர்களாக்குகின்றேன். மனிதர்களால் மனிதர்களைச் சுவர்க்கத்தின் அரசர்களாக ஆக்கமுடியாது. மனிதர்கள் சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதில்லை. ஓர் ஆத்மாவைப் பரமாத்மா என அழைப்பது பெரிய தவறாகும். சந்நியாசிகளால் மனிதர்களைத் தேவர்களாக மாற்றமுடியாது. இது தந்தையொருவரின் பணியாகும். ஆரிய சமாஜைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களையும் ஆரிய சமாஜிற்குரியவர்களாகவே ஆக்குவார்கள். கிறிஸ்தவர்கள் மற்றவர்களையும் கிறிஸ்தவர்களாகவே ஆக்குவார்கள். நீங்கள் யாரிடம் சென்றாலும், அவர்கள் தங்களைப் போன்றே உங்களை ஆக்குவார்கள். தேவதர்மம் சத்தியயுகத்திலேயே உள்ளது. எனவே, தந்தை சங்கமயுகத்தில் வரவேண்டியுள்ளது. இது மகாபாரத யுத்தமாகும். இந்த யுத்தத்தின் மூலமாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும். விநாசத்தின் பின்னர் வெற்றி முழக்கம் கேட்கும். விநாசம் நிச்சயமாக இடம்பெறப் போகின்றது என்பதனை நீங்கள் அறிவீர்கள். இன்று ஒருவர் ஆசனத்தில் அமர்ந்துவிட்டால், அவரை அவ்வாசனத்தை விட்டு எழுப்புவதற்கு அவர்களுக்கு அதிக நேரம் எடுக்காது. இதனை நீங்கள் சுவர்க்கம் என அழைப்பீர்களா? இது முற்றிலும் நரகமாகும். இதனைச் சுவர்க்கம் என அழைப்பது தவறாகும். மக்கள் மிகவும் சந்தோஷமற்றவர்களாக இருக்கின்றனர். இன்று ஒருவர் பிறந்துவிட்டால், பெருமளவு களிப்பும், சந்தோஷமும் ஏற்படுகின்றது. எவ்வாறாயினும். ஒருவர் மரணித்துவிட்டால், துன்பமே ஏற்படுகின்றது. இங்கே, நீங்கள் அனைவர் மீதும் கொண்டுள்ள பற்றை வென்றவர்கள் ஆகவேண்டும். இல்லையெனில், பாபா ஒருபோதுமே உங்களை வெளியில் சென்று சேவை செய்யுமாறு கூறமாட்டார். பாபா கூறுகிறார்: நான் பற்றை வென்றுவிட்டேன். நான் ஏன் எதன் மீதாவது பற்றைக் கொண்டிருக்க வேண்டும்? நான் ஓர் இல்லறத்தவரல்ல. இந்த வைக்கோற்போருக்கு உண்மையிலேயே தீ மூட்டப்படப் போகின்றது என்பதனைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். விநாசத்திற்கு நீண்ட காலம் எடுக்காது. நீங்கள் சொற்பொழிவாற்றும்போது, எல்லையற்ற தந்தையிடம் வந்து, அவர்களது ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுங்கள். நீங்கள் உங்களது லௌகீகத் தந்தையிடமிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தியையே பெறுகின்றீர்கள். நீங்கள் நரகத்தில் 63 பிறவிகளை எடுத்துவிட்டீர்கள். நான் 21 பிறவிகளுக்கான உங்களது சுவர்க்க ஆஸ்தியைக் கொடுப்பதற்காக வந்திருக்கின்றேன். எனவே, இராவணனின் ஆஸ்தி சிறந்ததா, அல்லது இராமரின் ஆஸ்தி சிறந்ததா? இராவணனின் ஆஸ்தியே சிறந்ததாயின், நீங்கள் ஏன் அவனது கொடும்பாவியை எரிக்கின்றீர்கள்? நீங்கள் எப்பொழுதாவது சிவபாபாவை எரித்தீர்களா? கிருஷ்ணரின் கொடும்பாவி ஒருபோதுமே எரிக்கப்படுவதில்லை. இது இராவண சமுதாயமாகும். அனைவரும் விகாரத்தின் மூலமாகவே பிறக்கின்றார்கள். இது நச்சுக்கடலாகிய, விபச்சார விடுதியாகும். அதுவோ அமிர்தக் கடலாகிய, விகாரமற்ற சிவாலயமாகும். விஷ்ணு பாற்கடலில் பள்ளிகொள்வதாக அவர்கள் காண்பித்திருக்கின்றார்கள். எனினும், அவ்வாறு பாற்கடலொன்று இருக்க முடியாது. பசுவிலிருந்தே பால் வருகின்றது. அவர்கள் கடவுளைச் சர்வவியாபகர் எனக் கூறிவிட்டு, பின்னர் தாங்கள் தூய்மையாக இருப்பதாகவும் அதனால் “சிவோஹம்” (நானே சிவன்) எனவும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், ‘கடவுள் உங்களில் இருக்கிறார்’ என்றோ, அல்லது ‘நீங்கள் தூய்மையாக இல்லாததால் கடவுள் உங்களில் இல்லை’ என்றோ அவர்கள் மற்றவர்களுக்குக் கூறமாட்டார்கள். ஆத்மா கூறுகின்றார்: நான் இப்பொழுது பரமாத்மா பரமதந்தையால் தூய்மையாக்கப்படுகின்றேன். பின்னர், நான் தூய்மையாகியதும் இராச்சியத்தை ஆட்சிசெய்வேன். நீங்கள் எண்ணற்ற தடவைகள் ஆஸ்தியைப் பெற்றும், இழந்தும் இருக்கின்றீர்கள். நாடகச் சக்கரம் இப்பொழுது உங்கள் புத்தியில் உள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் அனைவரும் பார்வதிகள், நான் சிவன். கதைகள் முதலானவை இங்கு நிகழ்பவற்றையே குறிக்கின்றன. சூட்சுமலோகத்தில் எவ்விதக் கதைகளும் கிடையாது. உங்களை அமரத்துவப் பூமியின் அதிபதிகளாக்குவதற்காக, அமரத்துவக் கதை உங்களுக்குக் கூறப்படுகின்றது. அது அமரத்துவப் பூமியாகும். அங்கே சந்தோஷத்தைத் தவிர வேறு எதுவுமேயில்லை. மரண பூமியிலோ, ஆரம்பம் முதல் மத்தியூடாக இறுதிவரைக்கும் துன்பமே உள்ளது. இவையனைத்தும் உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய கல்பத்தில் தந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொண்டவர்களின் அதே முயற்சிகளே இப்பொழுதும் தொடர்கின்றன. இதுவரைக்கும் சமய சம்பந்தமான பணிகளில் ஈடுபடுபவர்கள் எத்தனை பேர் உள்ளனரோ, அந்தளவு எண்ணிக்கையினரே முன்னரும் இருந்தனர். நீங்கள் சேவையில் மந்தமாக இருப்பதாக பாபா கூறினாலும், நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்த அதே சேவையையே இப்பொழுதும் செய்கின்றீர்கள் எனவும் அவர் கூறுகிறார். இருந்தபோதிலும், நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும். புயல்கள் சிறிய சிட்டி விளக்குகளின் சுவாலையைத் தளம்பலடையச் செய்துவிடுகின்றன. அனைவரதும் படகோட்டி ஒரேயொரு தந்தையே ஆவார். எனது படகை அக்கரைக்குக் கொண்டுசெல்லுங்கள்… என்ற கூற்று உள்ளது. நாடகத்தின் நியதி இவ்வாறே உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் பழைய உலகிற்கே செல்கின்றார்கள். வெகு சிலர் மாத்திரமே இங்கே இருக்கின்றனர். உங்களில் வெகு சிலரே இருக்கின்றீர்கள். இறுதியில் பலர் இருப்பார்களாயினும், பகலிற்கும் இரவிற்குமிடையிலான வேறுபாடுள்ளது. அவர்கள் அனைவரும் இராவண சமுதாயத்தினர். தந்தை உங்களது போதையை மிகவும் உயரச்செய்கின்றார். எவ்வாறாயினும், நீங்கள் உங்களது நண்பர்களினதும், குடும்பத்தவரினதும் முகங்களைப் பார்க்கும்போது, அந்த போதை குறைவடைகின்றது. அவ்வாறு நிகழக்கூடாது. ஆத்மாக்களுக்குக் கூறப்படுகின்றது: தந்தையுடன் இதயபூர்வமான சம்பாஷணையைக் கொண்டிருங்கள். பாபா, நான் உங்களுக்குச் சொந்தமாக இருந்தேன். நீங்கள் என்னைச் சுவர்க்கத்திற்கு அனுப்பினீர்கள். நான் 21 பிறவிகளுக்கு இராச்சியத்தை ஆட்சி செய்துவிட்டு, பின்னர் 63 பிறவிகளுக்குத் துன்பத்தை அனுபவித்தேன். இப்பொழுது நான் நிச்சயமாக எனது ஆஸ்தியை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்வேன். பாபா, நீங்கள் மிகவும் நல்லவர்! நான் அரைக் கல்பத்திற்கு உங்களை மறந்துவிட்டேன். பாபா கூறுகிறார்: இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதாகும். ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, குழந்தைகளாகிய உங்களை மாயையிடமிருந்து விடுவித்து, பிராமணர்களாக்கி, உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை உங்களுக்குக் கூறுவதும் எனது கடமையாகும். நான் சுவர்க்கத்தை உருவாக்கவேண்டியுள்ளபோதே வருகின்றேன். நீங்கள் இப்பொழுது தேவதைகள் ஆகுகின்றீர்கள். உங்களுக்குத் தூய்மையின் காட்சிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் பற்றை வென்றவர்களாகவும் ஆகவேண்டும். ஒருவர் பாபாவிடம், ‘பாபா, நான் சேவைக்குச் செல்ல வேண்டுமா?’ என்று கேட்டால், பாபா கூறுவார்: நீங்கள் பற்றை வென்று விட்டீர்களாயின் நீங்களே அதிபதி, நீங்கள் வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். நீங்கள் ஏன் குழப்பம் அடைகின்றீர்கள்? நீங்கள் ஓர் அதிபதி, நீங்கள் குருடர்களுக்கு வழிகாட்ட வேண்டும். நீங்கள் பற்றை வெல்லாததனாலேயே இவ்வாறு கேட்கின்றீர்கள். பற்றை வென்றிருந்தீர்களாயின், நீங்கள் (சேவைக்காக) ஓடியிருப்பீர்கள், உங்களால் இங்கே இருக்க முடியாதிருந்திருக்கும். இலக்கு மிக உயர்ந்தது. தந்தை சேவாதாரிக் குழந்தைகளிடம் தன்னை அர்ப்பணிக்கின்றார். இந்த பாபாவே முதலாம் இலக்கத்தவராவார். அனைவரும் துறவைக் கொண்டிருந்தார்களாயினும், இவருடையதே முதலாம் இலக்கமாகும். பாபா கூறுகிறார்: ஆத்ம உணர்வுடையவர் ஆகுங்கள். அதாவது, உங்களைச் சரீரமற்றவராகக் கருதுங்கள். எல்லையற்ற தந்தை 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அச்சா, அவர் எவ்வாறு வருகின்றார்? பிரம்மாவின் வாய் மூலமாகவே படைப்பு உருவாக்கப்படுவதால், அவர் நிச்சயமாக பிரம்மாவிலேயே பிரவேசிக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. பிரம்மா மாத்திரமே பிரஜாபிதா என அழைக்கப்படுகின்றார். எனவே, வந்து, எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றுக்கொள்ளுங்கள். இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதில் குழப்பமடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
 

தாரணைக்கான சாராம்சம்:

1. நீங்கள் தந்தை பிரம்மாவைப் போன்று, துறவறத்தில் முன்னால் ஓர் இலக்கத்தைக் கோரிக்கொள்ள வேண்டும்.

2.உருத்திர மாலையில் கோர்க்கப்படுவதற்கு, உயிர் வாழும்போதே உங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

3. சேவாதாரியாகுவதற்கு, பற்றை வென்றவராகுங்கள். குருடர்களுக்கு வழிகாட்டுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஆசீர்வாதத்தினாலும் மருந்தினாலும் சரீர நோயிலிருந்தும், மன நோயிலிருந்தும் விடுபட்டிருந்து எப்பொழுதும் திருப்தியான ஆத்மாவாக இருப்பீர்களாக.

உங்கள் சரீரம் சிலவேளைகளில் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், உங்கள் மனம் எவ்விதமான நோயினாலும் குழப்பமடையாமல் இருக்கட்டும். சதா தொடர்ந்தும் சந்தோஷ நடனமாடுங்கள். உங்கள் சரீரம் நன்றாகி விடும். உங்கள் மனச் சந்தோஷத்தினால் உங்கள் சரீரத்தைத் தொழிற்படச் செய்யும்போது, நீங்கள் இரண்டையும் அப்பியாசம் பண்ணுவீர்கள். ஆசீர்வாதமே சந்தோஷமும், அப்பியாசம் மருந்தும் ஆகும். ஆகவே ஆசீர்வாதம், மருந்து ஆகிய இந்த இரண்டினாலும் நீங்கள் சரீர நோயிலிருந்தும், மன நோயிலிருந்தும் விடுபட்டிருப்பீர்கள். சந்தோஷத்தினால் நீங்கள் உங்கள் வேதனையை மறந்து விடுவீர்கள். உங்கள் சரீரத்தினாலும் மனதினாலும் சதா திருப்தியாக இருப்பதற்கு, அதிகமாகச் சிந்திக்காதீர்கள். அதிகம் சிந்திப்பதால், நேரம் வீணாக்கப்படுவதுடன், உங்கள் சந்தோஷமும் மறைந்து விடுகின்றது.

சுலோகம்:
விஸ்தாரத்தில் சாரத்தைப் பார்ப்பதைப் பயிற்சி செய்யுங்கள், உங்கள் ஸ்திதி எப்பொழுதும் நிலையாகவும் ஸ்திரமாகவும் இருக்கும்.